துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.5.13

இந்தியாவில் ஒரு நெடிய பயணம்…1-[குவாலியர்]


குவாலியர் கோட்டை
தில்லியிலிருந்து கோவைக்குப் பெயர்ந்து செல்லப்போவது ஏறத்தாழ முடிவான 2012 நவம்பரிலேயே அந்த இடப் பெயர்வை ஒரு நெடிய இந்தியப் பயணமாக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுக்கத் தொடங்கி விட்டோம். பொருட்களை முதலில் ஏற்றி அனுப்பி விட்டு எங்கள் காரிலேயே மத்திய மற்றும் மேற்கிந்தியா வழி குடும்பத்தோடு கோவை வரை வந்து சேரும் திட்டம் அது.

அரசு தங்கும் விடுதிகள் எங்கெல்லாம் கிடைக்கிறதோ [உரிய கட்டணம் செலுத்தித்தான்] அவற்றை ஒட்டிய இன்றியமையாத இடங்களைப்பார்த்தபடியே கிட்டத்தட்ட 20 நாட்கள் நீளும் பயணம்…
ஒருவழியாக பயணத் திட்டத்தை வகுத்து விட்டாலும் மே மாத வெயில் கடுமையும், என் உடல்நலம் எந்த அளவு ஒத்துழைக்கும் என்ற ஐயமும், இத்தனை நெடிய பயணத்தைக் குழந்தைகளால் தாக்குப்பிடிக்க முடியுமா என்னும் ஐயமும் இறுதிவரையிலும் கூட எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தன. ஒரு வழியாக அவற்றையெல்லாம் புறந்தள்ளியபடி 25 மே சனிக்கிழமை காலை ஆறு முப்பது மணியளவில் தில்லியிலிருந்து கிளம்பினோம். நான்,மகள்,மருமகன் [வண்டி ஓட்டுநரும் அவரே], பேரக்குழந்தைகள் இருவர் என எங்கள் மொத்தக்குடும்பமும் இந்தியப் பயணத்தைத் தொடங்க,புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் யமுனை அதிவிரைவுச் சாலையில் எங்கள் வண்டி வழுக்கிக் கொண்டு சென்றது. மேலை நாடுகளைப் போன்ற அகலமான- அதிக போக்குவரத்துக்கள் அற்ற அந்தச்சாலை  எங்கள் பயணத்தை விரைவாக்க காலை 10 மணியை ஒட்டியே ஆக்ராவைத் தாண்டி விட முடிந்தது. பலமுறை பார்த்த ஆக்ராவைப் பயணப் பட்டியலிலிருந்து ஒதுக்கியபடி குவாலியர் நோக்கி விரைந்தோம். 

குளிரூட்டப்பட்ட காரும் கூட 45 டிகிரிக்கு மேல் அடித்துக் கொண்டிருந்த வெயிலிலிருந்து பாதுகாப்புத் தர முடியவில்லை.
உ.பி, ஹரியானா, ஆகிய மாநிலங்களைத் தொட்டுக் கொண்டு மத்தியப்பிரதேசத்தில் நுழைந்தோம். குவாலியர் செல்லும் பாதை நெடுகிலும் வறட்சியின் கொடுமை, பட்ட மரங்கள், பாலை நிலங்கள்!!, பூலான் தேவியின் இருப்பிடமான சம்பலின் ஒரு பகுதியும் கண்ணில் பட்டது.


வழியில்....சம்பலின் ஒரு பகுதி....

பிற்பகல் 1 15 மணியளவில் குவாலியர் தங்கும் விடுதிக்குச் சென்றபோது அங்கிருந்த படுக்கை தலையணையும் கூடக் கொதித்துக் கொண்டிருந்தது. மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு 15 கி.மீ. தள்ளியிருந்த மிகப்பழமையான குவாலியர் கோட்டையில் நிகழும் ஒலி-ஒளிக்காட்சியைக் காணச்சென்றோம்.
மத்தியப்பிரதேசத்தின் இதயமாகக் கருதப்படும் குவாலியர் நகரம் விசாலமான சாலைகள் கொண்ட பெரிய நகரம்தானென்றாலும் வெயிலின் வறட்சிக்கொடுமையால் நகரமும் கடைத் தெருக்களும் வெறிச்சோடிக் கிடந்தன. இராணுவ முகாம்களையும், தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் அகாதமியையும் 
தேசிய மாணவர் படைப் பயிற்சி அகாதமி


கொண்டிருக்கும் குவாலியரிலேதான் புகழ்பெற்ற இசைக்கலைஞர் தான்சேன் பயின்ற இசைப்பள்ளி இருக்கிறது.
குவாலியரில் ஒரு புராதனக்கட்டிடம்

நகரிலிருந்து விலகியிருந்த கோட்டை அரணை நெருங்கும்போதே தொன்மையின் தொட்டிலுக்குள் காலடி எடுத்து வைப்பதான உணர்வு…
இரவு நேரத்துக் கோட்டைக்காட்சியில் குடும்பத்தாருடன்....





[பயணம் தொடரும்…..]

25.5.13

தில்லியிலிருந்து கோவைக்கு...


பணிமாற்றம்,இடப்பெயர்வுகள் இவை இல்லாத கல்லூரிப் பேராசிரியப்பணியில் - ஒரே கல்லூரியில் -ஒரே ஊரான மதுரையில் - 36 ஆண்டுகள் நிலைப்பட்டுப்போயிருந்த எனக்கு அடுத்த தலைமுறையின் பணிச்சூழலால் 7 ஆண்டுக்காலம் தில்லியில் வாழும் வாய்ப்பு வாய்த்தது.

இப்போது அடுத்த பணி மாற்றம் தமிழகத்தில் கோவையில் அமைந்திருக்கிறது..தில்லியிலிருந்து கோவைக்குப் பெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் இந்தக்கட்டத்தில் தில்லி வாழ்வை அசை போட்டு அது தந்த அனுபவங்கள் சிலவற்றை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.

வைகையிலிருந்து யமுனைக்கு..என்ற கட்டுரை ஒன்றில் ஏற்கனவே தில்லி வாழ்க்கையின் அனுபவங்கள் சிலவற்றைப்பகிர்ந்து கொண்டிருக்கிறேன்...


தற்போது இங்கிருந்து விடைபெற்றுச் செல்லும் தருணத்தில் இன்னும் சில...

தில்லியின் கடுமையான வெயிலையும், நடுக்கும் குளிரையும் -ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்- உடல் ஏற்பது கடினமாக இருந்தபோதும் அதையெல்லாம் மீறி இங்குள்ள மக்கள் செலுத்திய அன்பும் நெருக்கமுமே அதைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தியை அளித்தது என்று சொல்லி விடலாம்..இங்கு வாழும் தமிழர்கள் மட்டுமன்றி...அடிக்கடி சென்று பழகிய கடைக்காரர்கள் முதல்...வீட்டில் தினமலர் போடும் வடநாட்டு இளைஞன் வரை - தில்லியை விட்டு நீங்கும் எங்களுக்கு உண்மையான பாசத்தோடு வழி கூட்டி அனுப்பி வைத்தது நெகிழச் செய்யும் ஓர் அனுபவம்.

சாகித்திய அகாதமி கருத்தரங்குகள், கதா போன்ற இலக்கிய அமைப்புகள், தேசிய நாடகப்பள்ளி நாடகங்கள், சர்வதேசத் திரை விழாக்கள் என்று தீவிர தளம் சார்ந்த நிகழ்வுகள்...

தில்லியிலிருந்து அதை ஒட்டியும் சற்றே விலகியும் இருக்கும் பல ஊர்களுக்கு [ சிம்லா, டேராடூன் , மஸூரி, நைனிடால்,பின்சார், ரிஷிகேஷ், ஹரித்வார், மதுரா, ஆக்ரா, குருட்சேத்திரம், பரத்பூர், பித்தோரகர், டல்ஹவுசி, அல்மோடா, ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், சண்டிகர், அமிர்தசரஸ்,வாரணாசி, பத்ரிநாத் ] அவ்வப்போது பலமுறை மேற்கொண்ட பயணங்கள்..

தில்லி நகருக்கும், தமிழ்ச்சங்கத்துக்கும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் எழுத்தாளர்கள் பலரோடும் , இங்குள்ள எழுத்தாளர்களோடும் அதிக நேரம் ஊடாடி உரையாடும் வாய்ப்பு.....

அவர்களில் தேர்ந்தெடுத்த மிகச் சிலரோடு விளைந்திருக்கும் வாழ்நாள் நட்பு...

தில்லியில் என் இலக்கிய வாசலுக்கு இன்னுமொரு பொற்கதவு திறந்து வைத்து என் சிறுகதைகளையும், நூல்மதிப்புரைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு என்னை ஊக்குவித்த வடக்குவாசல் ...

 ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்த் துறையோடு கொண்டிருந்த தொடர்புகள், அங்குள்ள நிகழ்ச்சிகளில் உரையாற்றிக்கருத்துப் பகிர்வு செய்து கொள்ளக் கிடைத்த வாய்ப்புக்கள்..அங்குள்ள பேராசிரியர்களும்,மாணவர்களும் காட்டிய அன்பு..

தில்லியின் தமிழ் வலைப்பதிவர்களான இளைஞர்கள் பலரும் வயது மறந்து என்னிடம் காட்டிய நெருக்கம்..நேசம்...என்னிடம் ஆலோசனை பெறக் காட்டிய ஆர்வம் துடிப்பு...

தில்லியின் அருங்காட்சியகங்களிலும், விண்கோள் அரங்கத்திலும் செலவிட்ட பொழுதுகள்....

தில்லியின் மறக்க முடியாத நினவுச் சின்னங்களில்- குறிப்பாக காந்தியடிகள் சுடப்பட்ட தீஸ் ஜனவரி மார்க்கிலிருக்கும் பிர்லா மாளிகை தந்த சிலிர்ப்பு...

26 ஜனவரியின் குடியரசு அணிவகுப்புக்கூட்டத்தில் நசுங்கிக் குலைந்தாலும் கூடியிருந்த மக்களின் நாட்டுப்பற்றைக்கண்டு பெருமிதம் கொண்ட பொழுது....
அதை ஒட்டிய ’’படைகள் பாசறைக்குத் திரும்பும்’’ BEATING THE RETREAT என்ற அற்புத நிகழ்வை கம்பீரமான விஜய் சௌக்கின்  ராஜ பாட்டையிலிருந்து- மிக நெருக்கமாகக் கண்டு மகிழ்ந்த நேரம்...

ராஷ்ட்ரபதி பவனத்தின் பூத்துக் குலுங்கும் முகலாயத் தோட்டம்...2007இல் அங்கே சென்றபோது உள்ளிருந்து சட்டென வெளிப்பட்டு மக்களோடு மக்களாய் இணைந்து கைகுலுக்கிச் சென்ற அப்போதைய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாமின் எளிமை....

தில்லி கடைத்தெருக்களில் - கோடைக்குத் தனியே..குளிருக்குத் தனியே எனத் தலை தெறிக்கப் பொருள் வாங்கிக் குவிக்கும் மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி இலக்கற்றுச் சுற்றியலைந்த நாட்கள்...

தர்மபுரி,சேலம்,திருச்செங்கோடு,ஈரோடு ,தலைக்காவிரி என்று பலதரப்பட்ட தமிழக ஊர்களிலிருந்து பிழைப்பு நாடி தில்லியில்தஞ்சம் புகுந்திருக்கும் பல்வேறு பொருளாதார மட்டங்களிலான புலம்பெயர்ந்த தமிழர்களோடு பழகும் வாய்ப்பு....

ஆழியாறு யோகக்கலையை தில்லியில்வந்து கற்றுக் கொண்ட நாட்கள்...

பார்வையாளராகப் போன பொழுதுகளிலெல்லாம் கூடப்பங்கேற்பாளராக்கிப் பல முறை சொற்பொழிவாற்றவும் , தமிழ் 2010ன் கருத்தரங்கத் தலைமை ஏற்கவும் வைத்து இறுதியாக அமரர் சுஜாதா விருதையும் அளித்து அழகு பார்த்த தில்லி தமிழ்ச்சங்கம்..

தில்லியிலிருந்து தென்கோடி வாழ் தமிழர்களுக்காகப் பதிவு செய்து ஒலிபரப்பாகும் ’’திரைகடலாடி வரும் தமிழ்நாதம்’’ வானொலி நிகழ்வு வழி பல இலக்கிய உரைகளை ஆற்ற முடிந்தததும், இங்கு வரும் எழுத்தாளர்களை நேர்காணவுமாய்க் கிடைத்த  வாய்ப்பு....

என  தில்லி வாழ்க்கை தந்த கொடைகளையும் - கற்றுத் தந்த அனுபவங்களையும் சுமந்தபடி  இங்கிருந்து செல்கிறேன்....

 தில்லியில் கழித்த நாட்களில் குற்றமும் தண்டனையும் ,அசடன் என்ற இரு பெரும் மொழியாக்கங்களைச் செய்து முடித்திருக்கிறேன்…சில சிறுகதைகளையும்,கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களுக்கு எழுதியிருக்கிறேன்; என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது இங்குதான்! தற்போது ஒரு நாவலின் முதல் வடிவத்தை எழுதி முடித்து செம்மையாக்கும் நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இணையம் பழகி வலைப்பூ எழுதத் தொடங்கி என் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது இந்த தில்லி மண்ணிலேதான்!

கிடைத்த இடைவெளியில்....யோகக்கலையிலும் பாரதியார் பல்கலையின் தொலைநிலைக்கல்வி வழி ஒரு முதுகலைப்பட்டம் பெற வாய்ப்பு விளைந்ததும் இங்கேதான்...

தில்லியில் என் பொழுதுகள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமாகவுமே கழிந்திருக்கின்றன  என்னும் மன நிறைவோடு....இங்கிருந்து விடைபெற்றுக்  கோவைக்குப் பெயர்கிறேன்....

தில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய வழியனுப்பு விழா...
19/05/2013









LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....