துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.5.18

தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க்குரல்-இந்திரா பார்த்தசாரதியின் தலைமை உரை

சென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில்  ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை
திரு ஜெயமோகன் அவர்களின் பதிவிலிருந்து

inthira

ரஷ்யக் கலாசார மையமும். விஷ்னுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து, பேராசிரியர் எம்.ஏ.சுசீலா வின் இலக்கியப் பணியையும், குறிப்பாக, அவருடைய மொழியாக்கத் திறனையும் பாராட்ட எடுத்திருக்கும் இவ்விழாவில்  பங்கு பெறுவது குறித்து மகிழ்கிறேன்.
சுசீலா அவர்களின் இலக்கியப் பணியைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும் அவரைச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் நான் தில்லியில் சந்தித்தேன். தமிழ்ப் பேராசிரியர்ர் என்பதோடு மட்டுமல்லாமல், அவருக்கு சர்வ தேசீய நவீன இலக்கியங்களில் இருந்த ஈடுபாடு என்னை வியக்க வைத்தது.
அவர் உலக இலக்கியங்களை ஆழமாகப் படித்திருக்கிறார் என்பதோடு மட்டுமன்றி, அவர் அவற்றை உள்வாங்கி எப்படி உருவாகியிருக்கிறார் என்பதற்கு அவர் தஸ்தொவெஸ்கியின் மூன்று நாவல்களை மொழி ஆக்கம் செய்திருக்கிறார் என்பதே சான்று.
‘மொழி ஆக்கம்’ என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகிய ‘Translation’ என்பதின் லத்தீன் வேர்ச்சொல், ‘அக்கரைக்கு அழைத்துச் செல்லுதல்’ ,என்று பொருள்படும். அதாவது, நாம் இக்கரையில் இருந்துகொண்டே அக்கரையின் வளங்களைப் பயண அலுப்பின்றி ரஸித்தல் என்று பொருள்படும்.
சென்னையில் இருந்து கொண்டே, நாம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர்ப் புறக் காட்சிகளையும், நிகழ்வுகளையும், பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யச் சமூக மாந்தர்களையும், அக்காலத்தியப் பண்பாட்டுச் சூழ்நிலையையும் சொற் சித்திரங்களாக நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் பேராசிரியர் சுசீலா. ‘குற்ரமும் தண்டனையும்’ என்ற இந்நாவல் மூலம். தஸ்தொவெஸ்கியின் ரஷ்ய மொழி மூலம்அநேகமாக, உலக மொழிகள் பெரும்பான்மையானவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலதிலேயே நான்கு மொழி பெயர்ப்புகள் இருக்கின்றன. சுசீலா கார்னெட் மொழி பெயர்ப்பைப் பின்பற்றித் தமிழில் ஆக்கியிருக்கிறார்.
உலகத்துச் செவ்வியல் நூல்களின் அடிப்படை இலக்கணம் அவை அந்தந்தக் காலத்து மதிப்பீடுகளுக்கேற்பப் பொருள் கொள்பவை என்பதுதான். உலகத்து முதல் நாவல் நவீன நாவலாகக் கருதப்படும் ‘செர்வாண்டீஸ் எழுதிய ‘டான் குக்ஸாட்’டுக்கு அவர் காலத்திய தாமஸ் ஷெல்டன் மொழிபெயர்ப்போடு மட்டுமல்லாமல், ஏழு மொழிபெயர்ப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. எடித் க்ராஸ்மென்னின் இக்காலத்திய மொழி பெயர்ப்பைப் படிக்கும்போதுதான், மூலத்தின் காலத்தால் சாகாத அர்த்தத்தின் மேன்மையை அறிந்து கொள்ள முடிகிறது.
அது போல், சுசீலாவின் மொழி ஆக்கத்தின் மூலம், எப்படி தஸ்தொவெஸ்கி எனக்குச் சம காலத்தவர் ஆகிறார் என்பதை நம்மால் உணர முடியும். ஏனெனில், மொழியாக்கம் செய்கின்றவரின் அடிமனப் பிரக்ஞையே யாருக்காக மொழிபெயர்க்கின்றோமென்ற எண்ணத்தைச் சார்ந்திருக்கிறது. அதே சமயத்தில், சுசீலா மூலத்தை மட்டுமன்றித் தம் மொழி ஆக்கத்தையும் அநுபவித்துச் செய்திருக்கிறார். ஒரு பாடகர் தாம் பாடுவதை அநுபவித்துப் பாடினால்தான் கச்சேரி சோபிக்கும். சான்றாக, அமரர் மதுரை மணி அவர்களைச் சொல்லலாம். ஆசையினால் அறையலுறும் மொழி ஆக்கங்கள் மட்டுமே மூலமொழி தரும் இன்பத்தை நல்க வல்லன. இதனால்தான், எனக்கு மொழிபெயர்ப்புப் பட்டறைகளில் நம்பிக்கை இல்லை.
ரஷ்ய நாவல்களை மொழி ஆக்கம் செய்வது பெரிய சவால். குறிப்பாக, தஸ்தொவெஸ்கியின் நாவல்கள். உளவியல் நாவல்களின் பிதாமகன் தஸ்தொவெஸ்கி. எண்ணங்கள், குறுக்கு வெட்டுச் சிந்தனைகள், கேள்விகள், விடைகள், விடைகள் எழுப்பும் கேள்விகள் என்று சங்கிலித் தொடர் போல் விரியும் மன நிகழ்வின் வரைபடத்தை, அவர் மூல மொழியில் காட்டிருப்பது போல்,கலாசார ரீதியாக முற்றிலும் வேறுபட்ட இன்னொரு மொழியில், மூலத்துக்குச் சேதாரம் இல்லாமல்,அதே சமயத்தில் படிக்கின்றவர்களின் சுவாரஸ்யத்துக்குப் பழுதின்றி ஆக்கித் தருவது என்பது ஒரு பெரிய சாதனை.
நான் முதன் முதலில் படித்தது. தஸ்தொவெஸ்கியின் ‘ Possessed’. அது வெவ்வேறு தலைப்புகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ‘Demons’ என்றும்,’Devils’என்றும். அதுவரை என் அநுபவத்துக்கு உட்படாத முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய உலகத்துக்குள் பிரவேசிப்பது போல் எனக்கு இருந்தது. எனக்கு வயது அப்பொழுது 19. எனக்கு ஏற்கனவே டால்ஸ்டாயுடன் அறிமுகம் ஏற்பட்டிருந்தது.. ‘டால்ஸ்டாயின் 23 சிறுகதைகள்’ என்ற நூலைப் படித்திருந்தேன். டால்ஸ்டாயும். தஸ்தொவெஸ்கியும் வெவ்வேறு துருவங்கள் என்று மேலெழுந்த வாரியாக எனக்குப் புரிந்ததே தவிர, நான் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் பருவத்தில் இல்லை.
‘குற்றமும் தண்டனையும்’ என்ற இந்நாவலில் ரஸ்கோல்னிகோவ் குற்றம் செய்வதே தன்னைதானே தண்டித்துக் கொள்ளத்தான். அவனுடைய டாக்டர் நண்பன் கூறுவது போல (‘Monomania’) அவன் தன்னைத்தானே மனத்தளவில் விசுவ ரூபமாக்கிக் கொண்டு பார்த்து, அதனினின்றும் முற்றிலும் முரண்பட்ட நிலையில் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் முயல்கிறான்.அதன் விளைவுதான் அந்தக் கொலை.
ஒரு வகையில் பார்க்கப் போனால் அவனுடைய மாறிக்கொண்டே இருக்கும் அவனுடைய பல்வேறு விதமான மனப் பிம்பங்களின் பிரதிபலிப்புகளே மற்றைய கதாபாத்திரங்கள். அவன் செய்யும் தவறுகளும் அவ்னே தேர்ந்தெடுத்துச் செய்யும் தவறுகள்தாம். ‘To go wrong in ones’’s own way is better to go right in someone else’s. என்பது அவனை அடையாளம காட்டுகின்றது. ‘God and Devil are fighting there and the battle-fild is the heart of man’ என்று ‘அவர் இன்னொரு நாவலில் கூறுகிறார். பார்க்கப்போனால் அவருடைய எல்லா நாவல்களின் அடிநாதம் இதுதான்.
சுசீலாவின் இம்மொழியாக்கத்தை மூன்று நாட்களில் படித்து முடித்தேன். ஏற்கனவே ஆங்கிலத்தில்(மூன்று மொழிபெயர்ப்பில்) படித்த நூல்தான். இருந்தும் திரும்பத் திரும்ப அலுப்பு சலிப்பின்றிப் படிக்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம் சுசீலாவின் சுவாரஸ்யம் குன்றாத தமிழ் நடைதான். என் வாழ்த்துக்கள்.




கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....