துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.11.08

"வியத்தலும் இலமே....."

Posted by Picasa



புறநானூற்றுப்பாடல்களின் அற்புதமான வரிகள் சில,திரும்பத்திரும்ப எடுத்தாளப்படுவதனாலேயே,அவற்றின் அர்த்தச்செறிவை இழந்து நீர்த்துப்போய் விடுகின்றன.வரிகளை மேலோட்டமாக மேற்கோள் காட்டுவதிலுள்ள ஆர்வம்,அவற்றுள் பொதிந்து கிடக்கும் ஆழமான உட்பொருளை நாடிச்சென்று கண்டடையும் தேட்டத்தை மட்டுப்படுத்தி விடுகிறது.தமிழ் ஆர்வலர்கள் தங்கள் இலக்கியவழக்கில்,அடிக்கடி பயன்படுத்துவதால்,சொற்கள் பழகிப்போயிருந்தாலும்கூடப் பொருள் புதிதாய்..., எந்தக்காலத்திற்கும் உரித்தான வாழ்வியல் கருத்தாக்கம் ஒன்றனை உள்ளடக்கி இலங்குவது,
"பெரியோரை வியத்தலும் இலமே ,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்னும் கணியன் பூங்குன்றனாரின் அரிய வாசகம்.


மனிதப்பண்புகளில்,வியப்புக்கு ஒரு தனி இடம் உண்டு.எண் வகைச்சுவைகளில் ஒன்றாக-"'மருட்கை''என்ற பெயரில் வியப்பைக்குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.முற்றும்புதியது,ஆகப்பெரியது,மிகவும் சிறியது,முன்பு இருந்திராமல் புதிதாக ஏற்பட்டுள்ள ஒரு வளர்ச்சி நிலை(ஆக்கம்)ஆகிய நான்கும் வியப்புக்கு நிலைக்களங்கள் என்று விளக்கம் தருகிறார் தொல்காப்பியர்.
மலர்ச்செடியில் அப்போதுதான் அரும்பியிருக்கும் ஒரு புது மொட்டு,பிரபஞ்ச பிரமாண்டத்தை உள்ளடக்கி ஆர்ப்பரிக்கும் அலைகடல்,நுணுக்கமான சிற்ப சித்திர வேலைப்பாடு,நேற்று வரை பொட்டல் காடாய் இருந்த பூமியில் இன்று முளைத்திருக்கும் விண் முட்டும் கட்டிடங்கள் என இவற்றைஎல்லாம் காண நேர்கையில் எவருக்கும் வியப்புத்தோன்றுவது இயற்கை.


இயற்கை எழிலில் உள்ளம் பறிகொடுக்கும் ரசனைகளும் கூட வியப்பைச்சார்ந்தவைதான்.
'புல்லைநகையுறுத்திப்பூவை வியப்பாக்கி' என்பான் பாரதி.
'அருவிகள் வயிரத்தொங்கல்
அடர்கொடி பச்சைப்பட்டே
குருவிகள் தங்கக்கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை'
என்று 'அழகின் சிரிப்பு'க்கண்டு விந்தை கொள்வான் பாரதிதாசன்.
இத்தகையவியப்புக்கள்,இயல்பானவை;ஆரோக்கியமானவை;தனிமனித ஆளுமைக்குக்குந்தகம் ஏற்படுத்தாதவை;அவர்களது அழகியல் ரசனைகளை மெருகேற்றி,அவர்களைச்செப்பனிடுபவை..அதனாலேயே அவற்றை விடுத்து,
சக மனிதர்கள் மீது சில நேரங்களில் விளையும் பிரமிப்பை..,ஆச்சரியத்தை..,அதிசயத்தை மட்டுமே விமரிசனம் செய்கிறது புறநானூறு.

தான் அடைய விரும்பியதும்,தன்னிடம் இல்லாமல் போனதுமான ஆற்றல்கள்,அழகுகள் ஆகியவற்றை அடுத்தவரிடம் காணும்போது வியப்பு மேலிடுவது இயல்புதான்.சக மனிதர்களின் ஆளுமையை,அழகை,அவர்களின் பாணியை,கலைத்திறனை ,படைப்பாக்க ஆற்றல்களை,செயல் வேகத்தை....இன்னும் இது போல் பிறவற்றை ஒரு எல்லைக்குள் நின்று ரசித்துவிட்டுப்போவதிலும் கூடப்பெரிய பிழை எதுவும் இல்லைதான்.ஆனால் ரசனையின் எல்லைக்கோடுகள் தகர்ந்துபோய்,ரசனை என்பது வியப்பாய்ப்பரிணமித்து ...,பிறகு,அந்த வியப்பும் கூடக்கட்டுத்தறிக்குள் அடங்க மறுக்கும் மதயானையைப்போல மூர்க்கம் காட்டி மிகையாகப்பெருகும்போதுதான் விரும்பத்தகாத விளைவுகள் சம்பவித்து விடுகின்றன.அதிலும் குறிப்பாக வியப்புக்கு இலக்காகும் அந்த நபர்,பிரபலமான ஒரு பீடத்தில்,புகழின் கண் கூச வைக்கும் வெளிச்சத்தில் இருப்பவராக அமைந்து விடும்போது,மலிவான வியப்புக்கு இரையாகி மருண்டு போகும் சாமானிய
மனிதர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக்கூடிவிடுகிறது.

வெள்ளித்திரை நாயகர்களின் 'கட் அவுட்'களுக்குப்பால்அபிஷேகம் (பீரபிஷேகமும்கூடத்தான்!)செய்து ஆனந்தித்தபடி,குறிப்பிட்ட கதாநாயகனின் படம் வெளியாகும் நாளில்விடிந்தது முதல்,அடரிருள் பரவும் நேரம் வரை திரை அரங்க வாயிலிலேயே கூடி இருந்து கூக்குரலும் கோஷமும் எழுப்பியபடி விரயமாகும் மனித சக்திகள்.......
தான் வழிபடும் அரசியல் தலைவன்,நியாயமான காரணத்திற்காகக்கைது செய்யப்படும்பொழுதோ அல்லது இயற்கையான மரணம் அடையும்போதோ கூட -
ஆவேசமான உக்கிரத்துடன் தங்களையேகளபலியாக்கி-அக்கினிக்கு இரையாய் ஆக்கி மடிந்துபோகும் மனித சக்திகள்......
இனிய வாழ்க்கைத்துணை என்பதை நெஞ்சறிய உணர்ந்திருந்தபோதும்,அழகாலும்,பிற கவர்ச்சிகளாலும் தூண்டப்பட்டுப் பிறன் மனை(பிறள்மனையும் கூடத்தான்)நயக்க முந்தும் தவறான உந்துதல்கள்.....
இவை அனைத்துமே ஒரு வகையில் வியப்பின் அழிவு பூர்வமான விளைவுகள்தான். வழிபாடாகப்பரிணமித்து விடும் வியப்பு, மனிதனின் ஆககத்திறனுக்குச் சேதாரம் விளைவித்து,அவனது தனிமனித மேம்பாட்டை,வளர்ச்சியை முடக்கிப்போட்டு விடுகிறது.தான் வியக்கும் ஒருவனுக்குப்பூப்போடுவதிலேயே அவனது காலம் முழுவதும் கழிந்து போய் விடுகிறது.


வியத்தல், மற்றொரு மோசமான விளைவை எதிர்காணும் சந்தர்ப்பத்தையும் கூட சில நேரங்களில் உருவாக்கி விடுவதுண்டு.மாதக்கணக்கில் ..,ஆண்டுக்கணக்கில் தான்வழிபட்டுவந்த ஒருவரைச்சற்று அண்மையில் நெருங்கிப்பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிட்டுகையில்-.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவரது குரூரமான மற்றொரு பக்கத்தை ஒளிவு மறைவுகள் இன்றி நிதரிசனமாக எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.தன் ஆயுளை,கல்வியை,செல்வத்தை,செயல்திறனை-எல்லாவற்றையும் இப்படி அடுத்தவனுக்குப்பூப்போட மட்டுமே செலவழித்துப்பழகிப்போன அந்த மனிதனின் வழிபாட்டு பிம்பம் சிதைவுண்டு போக,கசப்பான நிஜங்களின் கோரத்தாக்குதலுக்கு ஆட்பட்டுத்தத்தளித்துப்போகிறான் அவன்;வியப்புக்கு நேர்மாறான வெறுப்புணர்ச்சி அப்பொழுது அவனை ஆட்கொள்ளத்துவங்க அவன்,சமநிலை இழந்தவனாகிறான்

வியப்பு,ஓர் அழிவு சக்தி மட்டுமல்ல;அது ஒரு ஆக்கசக்தியும்கூடத்தான்.
'அகலாது,அணுகாது தீக்காய்பவர்'போல நம் வியப்புக்குரிய எல்லா நபர்களையும்,சற்றே விலகி நின்று-உணர்ச்சியை ஒதுக்கி வைத்து-அறிவு பூர்வமாக அலசிப்பார்த்து,ஒவ்வொருவரிடமும் நாம் வியக்கும் பண்புகளை மட்டும்பட்டியலிட்டு,.அவற்றுள் நம்மால் இயலக்கூடிய நல்லவற்றை மட்டும் சுவீகரித்தபடி,நம்மை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்;ஒரு குறிப்பிட்ட ஆளுமையின் புகைப்பட நகலாக மட்டும் அல்லாமல்,பலரின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக்கொண்டு-அதே நேரத்தில் தன்னுடைய சுயத்தை,தனித்தன்மையை இழந்து விடாத-ஒரு
மனிதனை அப்போது நம்மிலிருந்து பிறப்பித்துவிட முடியும்.

.

மனித முயற்சிகள் தேங்கிப்போய் விடாமல் தடுப்பதற்கும்,இவ்வுலகில்நிறை மனிதன் என எவருமே இல்லை என்பதைப்புரிய வைப்பதற்கும்
"பெரியோரை வியத்தலும் இலமே"
என்று சொல்லி வைத்த புறநானூற்றுப்புலவன்,
"சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்று கூடவே இன்னொரு வரியையும் இணைத்துக்கொள்கிறான்.



வயதில்,வாழ்க்கை நிலையில்,அறிவில்,அனுபவத்தில் சிறியவர்கள் என நாம் அற்பமாக எண்ணும் எத்தனையோபேரிடம் நாம் கண்டடைவதற்கானபல செய்திகள்,கருவூலமாகச்செறிந்து கிடக்கின்றன.
மணிக்கொடி முன்னோடிகளில்குறிப்பிடத்தக்கவரான பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக்குழந்தைகள்' ,புகழ் பெற்ற ஒரு சிறுகதை.அப்படைப்பில் இடம்பெறும்ஒரு சிறுமி -'நட்சத்திரம் எப்படிப்பிறக்கிறது?'என்று கேட்க அவளது வினாவுக்கு,"ஒவ்வொரு தடவை உண்மை பேசும்போதும் ஒரு நட்சத்திரம் பிறக்கிறது"என்று பதிலளிக்கிறார் அவள் தந்தை.ஒரு நாள் இரவு வானத்தை நோக்கியிருக்கும் அவள் கண்களுக்கு ஒரு நட்சத்திரம்(அல்லது,எரிகல்)வீழ்வது,கண்ணில் பட ''யாரோ பொய் சொல்லி விட்டதால்தான் நட்சத்திரம் விழுந்து விட்டது"என்று விளக்கமளிப்பதன்வழி,தன் தந்தையையே திகைக்கவும்,வியக்கவும் செய்து விடுகிறாள் அந்தக்குட்டிப்பெண்.

ஒரு நாள் கீரை விற்கும் பெண்ணிடம் பொத்தல் கீரைகளைக்குறை கூறி,நான்அவற்றைஒதுக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப்பெண் அனாயாசமாக இப்படி பதில் அளித்தாள்
'ஆமா...வீட்டுக்குள்ளே நல்லாப்போத்திப்படுக்கிற நமக்கே கொசு பிடுங்கி எடுக்குது. இது..பாவம் அத்துவானக்காட்டிலே அனாதையாய்க்கெடக்கிற களுததானே?'
'வாடிய பயிரை..'முதலிய வரிகளையெல்லாம்படிக்காமலே அவள் வாயிலிருந்து உதிர்ந்த அந்தச்சொற்கள், ஆன்மநேயத்தை வாழ்ந்து மட்டுமே காட்டும் அவளது எளிமை,
என் நெஞ்சுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தி அக தரிசனம் அளிக்க அங்கிருந்து அகன்று சென்றேன்

பெருமை,சிறுமை என்ற அளவுகோல்கள்,மனிதன்,தானாக ஏற்படுத்திக்கொள்பவை மட்டுமே."நீர் வழிப்படூஉம் புணை போல"-நீரோட்டத்தின் வழியே அடித்துச்செல்லப்படுகிற மரக்கட்டைகளைப்போல, உயிர்களும் கூட இயற்கையின் விதிப்படி இயங்குவது மட்டுமே உண்மை என்பதைப்புரிய வைப்பதற்காகவே
'வியத்தலும்,இகழ்தலும் தவிர்க்க' என்ற செய்தியை முன் வைக்கிறது சங்கஇலக்கியம்.



கருத்துரைகள்:
மிகவும் அருமையான பதிவு.ரசித்துப்படித்தேன்.
விஜய்(lablaeruken). 27.11.08

3 கருத்துகள் :

lablaeruken சொன்னது…

migavum arumayaana padhivu rasithu padithen.

It was a real pleasant surprise when you had earlier published my translated comment and I have to say that your translation was way better than my comment.

A few days back in The Hindu, there was an article by M.A.Baby, a minister from Kerala advocating to grant classical language status to Malayalam as Kannada and Telugu have been accorded the same. I thought the response to that letter by Dr.Sheldon Pollock was even more interesting and thought provoking. It was closely reflecting your thoughts on your previous post. I guess you may be interested in it if you did not have a chance to read it,

http://www.hindu.com/2008/11/27/stories/
2008112753100900.htm

I look forward to your wonderfully refreshing posts,

-Vijay

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அருமையான கட்டுரை .. வியத்தலின் ஆக்க சக்தியும் அழிவு சக்தியும் அழகாக விளக்கி இருக்கீங்கம்மா..

பெயரில்லா சொன்னது…

//ஒரு நாள் கீரை விற்கும் பெண்ணிடம் பொத்தல் கீரைகளைக்குறை கூறி,நான்அவற்றைஒதுக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப்பெண் அனாயாசமாக இப்படி பதில் அளித்தாள்
'ஆமா...வீட்டுக்குள்ளே நல்லாப்போத்திப்படுக்கிற நமக்கே கொசு பிடுங்கி எடுக்குது. இது..பாவம் அத்துவானக்காட்டிலே அனாதையாய்க்கெடக்கிற களுததானே?'
'வாடிய பயிரை..'முதலிய வரிகளையெல்லாம்படிக்காமலே அவள் வாயிலிருந்து உதிர்ந்த அந்தச்சொற்கள், ஆன்மநேயத்தை வாழ்ந்து மட்டுமே காட்டும் அவளது எளிமை,//

அடடே அசந்து போனேன் அருமை ! அருமை !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....