துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.11.08

கருப்பையும்,ஏவாளும்...


கருப்பை என்பது,காலம் காலமாகப் பெண்ணின் வயிற்றில் இருந்தபோதும்,அவள்
வசத்தில் இருப்பதில்லை
.சுமப்பது,பெறுவது,கலைப்பது ஆகியவை,பல நேரங்களில் பிறரால் தீர்மானிக்கப்பட்டு,அவள் மீது திணிக்கப்படுவனவாகவே உள்ளன.அவள்
மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறைகள்,பண்பாட்டு ஒடுக்கு முறைகள் ஆகிய
அனைத்தும் கருப்பையாக மட்டுமே அவள் நோக்கப்படுவதன் விளைவுகளே.
இவ்வாறான ஒரு சமூக அமைப்பில்-கருத்தரிக்கவும்,சுமக்கவும் மறுக்கும் அதீதமான ஒரு நிலைப்பாட்டை ஒட்டு மொத்தப் பெண்இனமும் மேற்கொள்ளுமாயின்,
மறு உற்பத்தி முடங்கிப்போய்விடுவதால் ஏற்படும் பாதிப்பு,சமூகத்தில் ஏற்படுத்தும்
அதிர்வலைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை மாறுபட்ட கதையாடலின்வழி
முன்வைத்திருப்பதால்,பெண்ணிய வாசிப்பில் கவனம் பெறும் படைப்பு,பாவண்ணனின்'ஏவாளின் இரண்டாவது முடிவு' என்னும் குறிப்பிடத்தக்க சிறுகதை.
"நவீனத்துவம் வேறுவகையில் பரிணாமம் கொள்கையில்,....செவ்வியலோடும்,
நாட்டுப்புறவியலோடும் தன் உறவுகளை சீரமைத்துக்கொள்ளவேண்டும்;சீரமைத்துக்கொள்வதென்பது,அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தி விடை தேடுவதே"என்று கூறும் பாவண்ணன்,நாட்டுப்புறக் கதையாடல் உத்தியுடன் நவீன வாழ்வியலைப்
பிணைத்து,'அதி'தன்மை கொண்டதாக எழுதியுள்ள சற்றே நீண்ட புனைகதைதான் 'ஏவாளின் இரண்டாவது முடிவு'.
காட்டுவாசிப்பெண்கள் சிலர்,தங்கள் பேறு காலத்தைத்தாமதப்படுத்தவும்,தங்களுக்கு விருப்பமில்லாத கருக்களைக்கலைக்கவும் ஒரு மந்திரச்சொல்லைப்பயன்படுத்தி
வந்திருக்கின்றனர் என்பதும்,துஷ்யந்தனின் நிராகரிப்புக்கு ஆளான சகுந்தலையின் கருவை,மாதக்கணக்கில் வெளிவராமல் கருவறையில் அடைத்து வைக்க அவர்கள் உதவினார்கள் என்பதும் நாட்டுப்புறக்கதைப்போக்கிலான ஓர் அதீதப்புனைவு.இப்புனைவை அடித்தளமாகக்கொண்டு, யதார்த்த வாழ்வுத்தளத்தில் நேரும் சிக்கலைக்காட்சிப்படுத்துகிறது,அச்சிறுகதை.
காட்டில் வாழும் ஆதிவாசிப்பெண்களின் பரம்பரையைச்சேர்ந்த-அந்தத்தொடர்ச்சியில் வந்தவர்களான பெண்கள் சிலர்,ஏதோ ஒரு கண நேரச்சலிப்பில், தங்களுக்குத்தெரிந்த
அந்த மந்திரச்சொல்லைக்காற்றில் மிதக்க விட்டு விடுகிறார்கள்.அச்சொல்,நாட்டை
வந்தடைகிறது.அப்பொழுது தொடங்கி,நாற்பது ஆண்டுக்காலம்,அந்த
நாட்டில் குழந்தைப்பேறு என்பதே இல்லாமல் போய்விட,மறு உற்பத்தி தேங்கிப்போகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கடைசிக்குழந்தைகளில் ஒருவனான ராஜ் என்பவனைத்தேடிக்கண்டுபிடித்து, அவன் உதவியை நாடுகிறார் பிரதமர்.அவன்,தன் தாயின் மூலமாகவும்,அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நாவலின்
வழியாகவும்-காட்டுவாசிகள் மிதக்கவிட்ட மந்திரச்சொல்லே அப்புதிரின் மூலம் என்பதைக் கண்டறிகிறான். அச்சொல்லுக்கு மாற்றுச்சொல் தேடிக்காட்டை நோக்கி
அவன் பயணப்படுகையில்,காட்டின் நடுவில் இருந்த அணு உலை வெடித்துச்சிதற,
காடே சாம்பல் மேடாகி விடுகிறது.ஆதிவாசிகள் அனைவரும் அழிந்துபோக,மாற்றுச்சொல் கிடைக்கும் வழியும் ஒரேயடியாக அடைபட்டுப்போய்விடுகிறது.
'அதி'புனைவுப்போக்கிலான இப்படைப்பு,பெண்ணிய அரசியலைத் தன் உள்ளீடாகச்செறித்திருப்பதை இதன் தலைப்பே வெளிப்படுத்திவிடுகிறது.
'ஏவாள்'எடுத்த முதல் முடிவு,குடும்பம் என்ற தளையில் அவளைப்பிணைத்தது.
இரண்டாவது முடிவோ,தாய்மையைக்கண்ணியாக்கி,அவளைச்சுரண்டும்
தந்திரத்திலிருந்து அவளைத்தப்புவிக்கிறது.மந்திரச்சொல்லுக்கு மாற்றுச்சொல் கிடைக்காமல் அணுக்கதிர் வீச்சால் காடு அழியும் கடைசி நிகழ்வு,ஆணாதிக்க
வன்முறைகள் கட்டற்றுப் பெருகும் நிலையில்,குடும்ப அமைப்பு என்ற ஒன்றே
தகர்ந்து போய்,மனித இனம் என்பதே பூண்டற்றுப்போக நேரலாம் என்ற
அபாய எச்சரிக்கையாக-அதன் குறியீடாகவே அமைந்திருக்கிறது.
(சிறுகதையை முழுமையாக வாசிக்க விரும்புவோருக்காக....
'ஏவாளின் இரண்டாவது முடிவு'சிறுகதைத்தொகுப்பு, பாவண்ணன்,தமிழினி வெளியீடு,2002 )


கடிதம்:

உங்கள் வலைப்பதிவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். புத்தகங்களைப்பற்றிய உங்கள் வாசிப்பனுபவங்கள், பெண்ணியநோக்கில் கட்டுரைகள் என நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக எழுதப்பட்டிருக்கும் பல கட்டுரைகளையும் படித்தேன். உங்கள் உழைப்புவேகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படித்ததைப்பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற உங்கள் ஆர்வமும் எனக்குப் பிடித்திருக்கிறது. இனிமேல், உங்கள் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பேன். தொடர்ந்து உற்சாகத்தோடு எழுதுங்கள். . ஏவாளின் இரண்டாவது முடிவு தொகுதியையொட்டிய உங்கள் கருத்துகள் எனக்கு மிகவும் ஊக்கமளித்தன.. என் மகிழ்ச்சியை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பாவண்ணன்,(எழுத்தாளர்),5.12.08

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....