துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.11.09

உழைப்பின் தன்வரலாறு



ஒரு முன் குறிப்பு:
கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி என்று இலக்கிய வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டுள்ள திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,வங்க இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க பல படைப்புக்களை- குறிப்பாக மஹாசுவேதாதேவி,ஆஷா பூர்ணாதேவி ஆகியோரின் படைப்புக்களைத் தமிழாக்கம் செய்திருப்பதன் வழி ,வங்க இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பவர்;அரசுப் பணியில் இருந்து கொண்டு...தீராத உடற்குறையுடனும் போராடியபடி,36 நூல்களை வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்திருப்பதோடு,ஆங்கிலம் ,இந்தி மொழிகளிலிருந்தும் பல மொழிபெயர்ப்புக்களைச் செய்திருப்பவர்.மொழியாக்கத் துறையோடு நின்றுவிடாமல் பல அருமையான சிறுகதைகளையும்,வாழ்க்கை வரலாற்று நூல்களையும் தந்திருப்பவர்.

1084இன் அம்மாஎன்னும் அற்புதமான நாவலையும்(மஹாசுவேதாதேவி),
கருப்பு சூரியன் என்ற ஆஷா பூர்ணாதேவியின் சிறுகதைத் தொகுப்பையும்(அண்மையில் அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு சிறுகதை பற்றி என் வலையில் ஒரு பதிவு எழுதியிருந்தேன் - ரீபில் தீர்ந்து போன பால்பேனா)அவரது மொழியாக்கம் மட்டும் இல்லையென்றால்,வங்காள மொழி அறியாத இலக்கிய ஆர்வலர்கள் படித்திருக்க முடியாது.அவை இரண்டும் எவரும் தவற விடாமல் படித்தாக வேண்டிய படைப்புக்கள்.
தற்பொழுது பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்று நூலை,வடக்கு வாசல் இதழுக்காக மதிப்புரை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது;
தன் வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கிக் கொள்ள சற்றும் அயராது உழைத்த ஒரு மனித ஜீவியின் அற்புதமான வரலாறு அது...


மதிப்புரை
மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து, அதை அர்த்தச் செறிவுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கும் சான்றோர்களின் "தன் வரலாறு'’களே வாசிப்பதற்கேற்ற தகுதி படைத்தவை; படிப்பவர் உள்ளங்களில் புதிய உள்ளொளிகளைப் பாய்ச்சவும், ஆக்க பூர்வமான மன எழுச்சிகள் பலவற்றைக் கிளர்த்தி விடவும் வல்லமை பெற்றவை அவை. அத்தகையதொரு படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, பன்மொழி எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான கொல்கத்தா திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "நான் கடந்து வந்த பாதை’' என்னும் தன் வரலாற்று நூல்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும், வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்துள்ள போதும், திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களது அழுத்தமான சிறப்பான முத்திரை பதிந்திருப்பது, மொழிபெயர்ப்புத் துறையின் மீதுதான்!

"இயன்ற அளவு பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்ந்துள்ளேன்.... தமிழிலக்கியத்தையும் பிறமொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ளேன்.''
என்று நூலின் நிறைவுரையில் அவரே குறிப்பிடுவது போலத் தமிழ் இலக்கிய உலகில், இறவாப் புகழோடு அவரை என்றென்றும் நினைவு கூரச் செய்பவை, இந்தி, ஆங்கிலம், வங்க மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலம், வங்கம் ஆகிய மொழிகளுக்குமாக அவர் மொழி பெயர்ப்புச் செய்து வழங்கியிருக்கும் பெருங் கொடைகளான அரிய பல நூல்களே!

சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், குறளை வங்காளத்திலும் மொழி பெயர்த்து - இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப் புனல்' நாவலை வங்கத்தில் கொண்டு சென்றமைக்காக சாகித்திய அகாதமி விருதையும் வென்றிருக்கும் திரு. சு.கிருஷ்ணமூர்த்தியின் மொத்த நூலாக்கங்களையும், அவற்றுக்காக ’இலக்கியச் சிந்தனை' முதலிய அமைப்புக்கள் பலவற்றிலிருந்து அவர் பெற்றுள்ள அங்கீகாரப் பரிசுகளையும் நூலின் பின்னிணைப்பில் பார்வையிடும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

"எங்கள் வாழ்க்கையில் சராசரி நடுத்தரக் குடும்பத்தில் நேர்வதைவிட அதிகத் துன்பங்கள் நேர்ந்தன. இளம் பிராயத்தில் பணத் தட்டுப்பாடு, நடு வயதில் குழந்தைகளின் உடல் நிலையை, அதன் பிறகு மகளின் குடும்ப வாழ்வில் பிரச்சினைகள்...'' என்றும்,
"அலுவலகப் பணிகளை, குடும்பத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தொடர்ந்து படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு கழைக் கூத்தாடியின் திறன் தேவைப்பட்டது''
என்றும் தான் எதிர்ப்பட நேர்ந்த வாழ்க்கை நெருக்கடிகளைத் தனது வரலாற்றில் ஆங்காங்கே பதிவு செய்து கொண்டு போகிறார் கிருஷ்ணமூர்த்தி; ஆனாலும் கூட இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு முன் குறிப்பிட்ட வெற்றி இலக்குகளை அவரால் எவ்வாறு எட்ட முடிந்தது என்பதற்கான விடையையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. அவரது நூல்.

மிக இளம் வயதிலேயே தன்னுள் பதிந்து, ஊறி, உட்கலந்து விட்ட இலக்கிய வாசிப்பையும், தொடர்ந்ததொரு சாதகமாக எழுத்தைப் பயிலும் முயற்சியையும் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் - நெருக்குதலான சூழல்களுக்கு நடுவிலும் - ஒரு போதும் கைவிடாமல், ஏதாவது ஒரு வகையில் அவர் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதே அவரது தன் வரலாற்றிலிருந்து நாம் பெறும் மையச் செய்தி.

தான் வசிப்பது அன்னவாசலோ..., புதுக்கோட்டையோ..., விஜய வாடாவோ..., கொல்கத்தாவோ - அது எதுவாக இருந்தாலும் அங்குள்ள பள்ளி நூலகத்தையோ, பஞ்சாயத்து நூலகத்தையோ, தேசிய நூலகத்தையோ தேடிப் போய்க் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அச்சகத்தில் வேலைபார்க்கும் சகோதரன், சுடச்சுடக் கொண்டு வரும் மெய்ப்புப் பிரதிகளாலும் கூடத் தன் அறிவுப்பசியை ஆற்றிக் கொள்கிறார் அவர்.

"இயற்கையாகவே மொழி களிலும், இலக்கியத்திலும் ஆர்வம்'' கொண்டவராக - அவற்றின் "தீராக் காதல'னாகவே வாழ்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி, இளமையில் பயின்ற இந்தியோடும், சமஸ்கிருதத்தோடும் நின்று விடாமல் - வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனது பன்மொழி பயிலும் ஆர்வத்தை நிறைவு செய்து கொண்டிருக்கிறார். பணி நிமித்தம் கொல்கத்தாவில் வாழும் சூழலில் வங்கமொழியைத் தீவிரமான நாட்டத்துடன் கற்றுத் தேர்ச்சி பெற்றதனாலேயே வங்கமொழி சார்ந்த இலக்கிய மொழிபெயர்ப்புப் பங்களிப்பில் அவரால் தனித்ததொரு இடத்தைப் பெறமுடிந்திருக்கிறது. ஜெர்மன், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்கும் முயற்சியிலும் கூட அவர் ஈடுபட்டதை அவரது தன் வரலாறு முன்வைக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை ஒருபுறமிருக்க - அவை ஒவ்வொன்றையும் இழைத்து, இழைத்து உருவாக்கவும், அவற்றை வெளியிடவும் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போடு கூடிய முனைப்பும் நம்மை மலைப்பில் ஆழ்த்துகின்றன.

வங்காளப் போராளிகளின் - வங்கப் போராட்டங்களின் வரலாறுகளை எழுதும் போது - தனக்குக் கிடைத்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு மேலோட்டமாக அவற்றை எழுதுவது அவருக்கு உகப்பானதாக இல்லை. பனை ஓலைகளைத் தேடிப் பயணப்பட்ட உ.வே.சா.வைப் போல இவரும், அந்தச் செய்திகளின் மூலவேர்களை இனம் காண்பதற்காக அந்தப் போராளிகளின் நண்பர்களை..., உறவுகளை.... வாரிசுகளைத் தேடிப் பயணப்படுகிறார்.
"மொழி பெயர்ப்பைப் படிக்கும் வாசகன், மூலப் படைப்பைப் பற்றி, அதன் படைப்பாளியைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ள வாய்ப்பு''த் தராதபடி - மஹாசுவேதா தேவியைத் தமிழில் தரமுற்படும் வேளையில், அவரையே நேரில் சென்று பார்த்துப் பல இடங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிறார்;
"குறுகத் தரித்த குற'ளை, அதன் சீர்மை குலையாமல் அதே போன்ற கவித்துவத்துடன் வங்காளத்தில் அளிக்க - வங்கமொழி மோனையைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்.
தான் மேற்கொண்டிருக்கும் இலக்கியப் பணியை நுனிப்புல் மேய்ந்து, நீர்த்துப் போக விட்டு விடாதபடி - உண்மையான தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளும் திரு. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை இன்றைய இலக்கியவாதிகள் ஒரு பாடமாகக் கொண்டால் தமிழிலக்கிய வளர்ச்சியின் முன்னகர்வுகள் மேலும் கூடுதலாக வழி பிறக்கும்.

எழுத்தாளனின் கடின உழைப்பு விரயமாவதையும், பத்திரிகைகளாலும், பதிப்பகங்களாலும் அது சுரண்டப்படுவதையும் திரு.கிருஷ்ணமூர்த்தி, தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்திருப்பதையும் அவரது நூலின் பல பகுதிகள் எடுத்துக் காட்டுகின்றன.

தனது படைப்பு பிரசுரமாகாத போது எழுத்தாளனுக்கு ஏற்பட்டு விடும் கடுமையான மனச்சோர்வுக்கு மாற்றாக - அதைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் - ஒரு நூலைத் தொடங்குவதற்கு முன்பே - அதை வெளியிடக் கூடிய பதிப்பாளர்களை உறுதி செய்து கொண்ட பிறகே அந்த முயற்சியில் இறங்குகிறார் இவர்; சில வேளைகளில் அதையும் மீறிச் சில குறிப்பிட்ட நூல்களை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற மன எழுச்சி மேலோங்குகையில் தானே செலவழித்து அவற்றை வெளியிட்டு விடவும் செய்கிறார்.

தனது சிறுகதைகளுக்கான சன்மானத்தை நினைவுப்படுத்தப்போய், அதன் பிறகு அந்த இதழில் பிரசுரிப்புக்கான வாய்ப்பையே முற்றாக இழந்ததையும், அனைத்திந்தியத் தொகுப்பு ஒன்றில் தன் சிறுகதையைச் சேர்த்து விட்டு, அது குறித்த விவரத்தைக் கூட அறிவிக்காமல் - புத்தகப் பிரதிகளோ, சன்மானமோ எதுவும் அளிக்காமல் விட்டு விட்ட பதிப்பகத்தை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியதால் தொகுப்பாளரின் நட்பையே இழக்க நேர்ந்த சம்பவத்தையும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் இவற்றாலெல்லாம் "நேர்படப்' பேசும் தனது இயல்பை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

பிரசுரிக்கப்படாத தனது கட்டுரையைத் திரும்பத் தராததற்காகத் தான் பெருமதிப்பு வைத்திருக்கும் திரு. கி.வா.ஜ. அவர்களுக்குக் கூடக் கடுமையாகக் கடிதம் எழுதியிருக்கிறார் இவர்.

பாரதியின் படைப்புக்களில் தோய்ந்து கலந்தவராயினும் - தாகூரை அரைகுறையாக அறிந்த சிலர், பாரதிக்கு ஏற்றம் தருவதான எண்ணத்துடன் தாகூரைக் குறைத்துப் பேச முற்படுகையில் அதை எதிர்த்து "ரவீந்திரரின் படைப்பில் வீச்சு அதிகம்'’ என்று பேட்டி அளிக்கிறார்; அதற்குக் கண்டனக் கணைகள் எழும் போது "பாரதியும் ரவீந்திரரும்' என்று நீண்ட கட்டுரை எழுதி விளக்கமளிக்கிறார்.

குறுகிய மொழி, இனச் சார்புகளிலும் சிக்கி உண்மையை மழுப்புவதிலும், அறிவுக் கலப்படம் செய்வதிலும் சம்மதம் இல்லாதவராய் - எந்த நிலையிலும் - எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத திண்மை கொண்டவராக விளங்கியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் - தன் "சிறுசெந்நாபொய் கூறாது' என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறிய சங்கப் புலவனின் இன்றைய பதிப்பாகவே காட்சியளிக்கிறார்.

பரந்த வாசிப்பும், பழுத்த வாழ்க்கை அனுபவமும் - தன்னைத் தானே ஒரு புறநிலைப் பார்வையாளனாக விலகி நின்று பார்க்கும் பார்வையைத் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஏற்படுத்தி விட்டிருப்பதை அவரது நூலின் பல இடங்களில் காண முடிகிறது.

மூன்று வயதில் பெரியம்மை நோய் தாக்க, மரணப் படுக்கையில் கிடக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவர் இறந்து போவது நிச்சயம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்ட - ஆசாரத்தில் ஊறிய அவரது தந்தை வழிப்பாட்டி, குழந்தைக்கு மேலே உலர்ந்து கொண்டிருக்கும் துணிகளில் சாவுத் தீட்டுப்பட்டு விடாமல் அவற்றை எடுக்கச் சொல்கிறாள்; அதைக் கேட்டு எரிச்சலடைந்து கத்துகிறார் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை.

"நல்ல வேளை துணிகள் தீட்டுப்படவில்லை; நான் பிழைத்து விட்டேன்''என்று, தான் உயிர் தப்பிய நிகழ்வை, வெகு இயல்பாக - வியாக்கியான மற்ற எளிமையுடன் "சட்'டென்று முடித்து விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி. "நீர்வழிப்படடூஉம் புணை' போல, மனிதர்களையும், வாழ்க்கையையும் உள்ளபடி ஏற்றுக் கொள்ள மனதைப் படிக்கப் பழக்கப்படுத்தி விட்டதாலோ என்னவோ..., சொந்த வாழ்வின் நெருக்கடியான தருணங்களைக் கூட அதிக உணர்வுக் கலப்பின்றிச் சொல்லிக் கொண்டு போவது அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

வார்த்தை சாகசங்கள் அற்றமிக எளிமையான நேரடியான நடையில், செட்டான சொற்களோடும், சிறு சிறு வாக்கிய அமைப்புக்களோடும் தனது வரலாற்றைப் படிப்பதற்கு எளிதாக்கி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

கதைகளையும், பிற படைப்புக் களையும் உருவாக்குவது கூட ஒரு வகையில் எளிதானது தான். ஆனால், தன்னிடமிருந்து ஜனித்த ஒவ்வொரு படைப்பிற்கான பொறியும் எங்கிருந்து கிடைத்ததென்ற விரிவான விளக்கங்கள்..., அவற்றுக்கான எதிர்வினைகள், பல மொழி இலக்கியவாதிகளுடனும், பத்திரிகையாளர்களுடனும் தான் கொண்டிருந்த தொடர்புக்கும், நட்புக்கும் சான்றாகப் பல கடிதங்கள் என அளவற்ற பல ஆவணங்களைத் தன் ஆயுள் முழுவதும் பொன்போலப் பாதுகாத்து, இந்தத் தன் வரலாற்றில் அவர் பயன்படுத்தியுள்ள முறை அசாதாரணமானது; சராசரி மனித முயற்சிகள் எட்டக்கூடிய உயரங்களை விடப் பல மடங்கு மேலானது.

திரு.கிருஷ்ணமூர்த்தி தன் வரலாறு, வெறும் டைரிக் குறிப்புக்களால் மட்டும் நிரம்பியதாக இல்லை. ஒரு கர்மயோகியைப் போன்ற சலியாத உழைப்பு, இலக்கியத் துறையின் மீது குன்றாத ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட அவரது வாழ்வை, அவர் "கடந்து வந்த பாதை'யின் மூலம் அறிந்து கொள்வது, இலக்கியத்தை மட்டுமே சுவாசித்து... அதில் மட்டுமே ஜீவித்திருக்கும் அற்புதமான ஓர் ஆத்மாவின் தேடலை அறிந்து கொள்ளும் பரவசப் பேரானந்தத்தையே கிளர்த்துகிறது.

நன்றி:
மதிப்புரையை வெளியிட்டு இணையத்திலும் ஏற்றியவடக்கு வாசல் இதழுக்கு.
http://www.vadakkuvaasal.com/

'நான் கடந்து வந்த பாதை'
சு.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை
தேனாம்பேட்டை, சென்னை-600 018.
போன்: 044-24332424
விலை ரூ.100/-

13.11.09

கசங்கும் ரோஜாக்கள்



’’உமது குழந்தைகள் உம்முடையவை அல்ல
வாழ்க்கையை விரும்பி வரவேற்கும் வண்ணக் களஞ்சியங்கள்

அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்...உங்கள் பாதுகாப்பிலும் இருக்கலாம்
ஆனாலும் உங்களுக்குச் சொந்தமல்ல அவர்கள்...

உங்கள் அன்பைப் பொழிய முடியும் அவர்களிடம்...
ஆனாலும் உங்கள் சிந்தனைகளைப் புகுத்த முடியாது

உங்களை இருப்பிடமாகக் கொண்டது அவர்களின் உடல்தான்...உள்ளங்கள் அல்ல

நாளை என்ற வீட்டில் வாழ்பவை அந்த உள்ளங்கள்

உங்களைப் போல அவர்களை மாற்றாதீர்கள்...
அவர்களைப்போலிருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்..

ஏனெனில்..
வாழ்க்கை என்றும் பின்னோக்கிப் போவதில்லை
நேற்றுடனும் ஒன்றி இணைவதில்லை

-கலீல் கிப்ரான்

சிறுவர் இலக்கியம் என்ற துறையே படிப்படியாக வீழ்ச்சி பெற்று,ஊடக ஆக்கிரமிப்புக்களாகிய கார்ட்டூன் தொலைக்காட்சிகளும்,கணினி விளையாட்டுக்களுமே சிறுவர் உலகில் முதன்மை பெற்று வரும் இன்றைய சூழலிலும் கூடத் குழந்தைகளையும்,சிறுவர்களையும் கரிசனத்தோடு புரிந்து கொண்டு அவர்களைப் பற்றியும்...அவர்களுக்காகவும் எழுதும் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரேயடியாக இல்லாமல் போய்விடவில்லை என்பது,சற்று ஆறுதலளிக்கிறது.

அந்த வரிசையில்...இன்றைய சூழலில் தனித்த கவனம் பெறுவதற்குரிய ஒரு படைப்பாளி,ஆயிஷா என்ற அற்புதமான தனது குறுநாவலால் இன்றைய சிறுவர் இலக்கியத்தின் போக்குக்குத் திசைகாட்டியாக அமைந்து ஆயிஷாநடராசன் என்றே பெயர் பெற்றிருக்கும் திரு.இரா.நடராசன் அவர்கள்.

சிறந்த கல்வியாளரும்,டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுத் தலைமை ஆசிரியராகப் பணி புரிபவருமான திரு நடராசன் அவர்கள் ஒரு சிறந்த படைப்பாளி;
மனித வாழ்வின் அக,புறச் சிக்கல்கள்,மனித மனத்தின் ஆழங்காண முடியாத சுழல்கள் ஆகியவை குறித்துப் புதிய உத்திகளைக் கையாண்டு நவீன புனைவு மொழியில் எண்ணற்ற சிறுகதைகளையும்,நாவல்களையும்(மொழிபெயர்ப்பு நூல்களையும்,அறிவியல் கட்டுரை நூல்கள் மற்றும் புனைகதைகளையும் கூட)உருவாக்கியவர் அவர்.அவற்றையெல்லாம் விட ஒரு நவீனத் தமிழ் எழுத்தாளராகச் சிறுவர் இலக்கியத்திற்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு அபாரமானது.

இன்றைய காலகட்டத்தின் உலகமயமாதல் சூழலில் குழந்தைகளுக்கும்,மாணவர்களுக்கும் நேரும் பன்முகச் சிதைவுகளை உள்ளார்ந்த அக்கறையுடன் அவதானித்துத் தமது ‘ஆயிஷா’,’ரோஸ்’ ஆகிய குறுநாவல்களில் பொறுப்போடு பதிவு செய்திருக்கிறார் அவர்.
எதையோ விடுத்து எதையோ துரத்தும் இக்கால நவீன வாழ்வியலை அவ்விரு புனைவுகளுமே கேள்விக்குள்ளாக்குகின்றன.

கல்வி வணிகமயமாக்கப்படும் சூழ்நிலையில்,
’’புத்தகங்களே கவனமாய் இருங்கள்,குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்’’
என்ற அப்துல் ரகுமானின் கவிதையைப் போலப் பலிக்கூடங்கள் போல ஆகும் பள்ளிக்கூடங்கள், சிறு குழந்தைகளின் அறிவை மட்டுமன்றி,அவர்களையே வேட்டையாடி விடுவதை வெளிச்சத்துக்குக் கொணர்ந்து மனித மனச் சாட்சியை உலுக்கும் நீள்கதை,’ஆயிஷா’.


'ஆயிஷா’ குறும்படத்திலிருந்து ஒரு காட்சி

குறும்படமாகவும் ஆக்கம் பெற்றுள்ள இப் புனைவு,வகுப்பறைகள் குறித்தும்,ஆசிரியர்கள் குறித்தும் காலங்காலமாக நிலவிவரும் சில தெய்வீக பிரமைகளையும்,புனிதங்களையும் கட்டுடைத்துப் போடுகிறது.வகுப்பறை வன்முறை குறித்த பிரக்ஞையும்,அது குறித்த விவாதங்களும் மிகுதியாகிக் கொண்டு வரும் சமகாலச் சூழலில்,வகுப்பறைக் களங்களில் பிஞ்சு மாணவர்களுக்கு நேரும் மனக் காயங்களைக் கசப்பான நிதரிசனங்களாக இப் படைப்பு முன் வைக்கிறது.
புதியனவற்றைக் கற்பதிலும்,தேடுவதிலும் ஆர்வமின்றி எப்போதோ தயாரிக்கப்பட்ட குறிப்புகளையும்,மலிவான சந்தை நோட்ஸுகளையும் இயந்திர கதியில் எடுத்துரைக்கும் ஆசிரியர்கள்.....
வகுப்பு எண்,வரிசை எண் ,தேர்வு எண்,அதில் பெறும் மதிப்பெண் என எண்களாக மட்டுமே உரு மாறிப் போன மாணவர்கள்...
என்ற செக்குமாட்டுச் சூழலின் நெடுநாள் நெட்டை உறக்கத்தை அறிவுத் தாகம் கொண்ட ஆயிஷா எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள் கலைத்துப் போடுகின்றன.
மாணவர்களின் ‘சுய அறிவு’ என்பது மறுக்கப்பட்டே வந்திருக்கும் நிறுவனமாக்கப்பட்ட கல்வி அமைப்பில்,ஆசிரியர்களின் அதிகாரம் தகர்க்கப்பட...சராசரியான ஆசிரியர்களுக்கு ஆயிஷா ஒரு அச்சுறுத்தலாகவே மாறிப் போகிறாள்.
உடல்,உள்ள ரீதியான வன்முறைகள் அவள் மீது ஒருசேரத் தொடுக்கப்பட,அடியின் வலியை மரக்கடிக்க விஞ்ஞானப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆயிஷா அதற்கே பலியாகிப் போகிறாள்.
உண்மையான அறிவுத் தேடல் என்பது பள்ளிகளுக்கு வெளியிலேதான் இருக்கிறது என்பதை உணர்த்தித் துருப்பிடித்துப்போன இன்றைய கல்விமுறை ,அறிவு மரத்துப்போன இயந்திர மனிதர்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்பதைப் பொட்டில் அடித்துப் புரிய வைக்கிறாள் ஆயிஷா.

நாளும் புதுப்புது அறிவுத் துறைகள் முளைத்துப் பெருகிக்கொண்டுபோகும் போட்டிகள் மலிந்த நவீன யுகத்தில்,தங்களையும் வருத்திக் கொண்டு குழந்தைகளின் இயல்பான ஆளுமை வளர்ச்சிக்கும் இடம் தராமல் அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் பெற்றோரை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது இரா.நடராசனின் ‘ரோஸ்’என்னும் குறுநாவல்.

சமைப்பதும்,சாப்பிடுவதும்,உடுப்பதும்,ஓடுவதுமாய் ஓர் ஓட்டப்பந்தயத்தில் முனைந்திருக்கும் பெற்றோர், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் காலையில் மலர்ந்திருக்கும் ரோஜாவின் அழகைத் தாங்களும் ரசிப்பதில்லை;தங்கள் குழந்தையையும் ரசிக்க விடுவதில்லை.
பள்ளிக்குச் சென்ற பிறகும் வகுப்பறையில் அன்று நடக்கும் மொழிப்பாடம்,அறிவியல்,ஓவிய வரலாற்று வகுப்புக்கள் என அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ரோஜாவை நினைவூட்டுவதாகவே அந்தக் குழந்தைக்கு அமைந்து விடுகின்றன; ஆனாலும் அது எழுப்பும் அடிப்படையான சில கேள்விகளுக்கும்,ரசனை வெளிப்பாடுகளுக்கும் உரிய வடிகால் கிடைக்க வழியே இல்லாமல் போய் விடுகிறது.
பள்ளி முடிந்த பிறகும் தனிப் பயிற்சி வகுப்பு,கராத்தே,கணினிப் பயிற்சி என்று எல்லாம் முடிந்து தாய் தந்தையருடன் உணவு விடுதிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புகையில் காலையில் புது மலர்ச்சியுடன் பார்த்த ரோஜா வாடியிருப்பதைக் கண்ட குழந்தையின் முகமும் கூம்பிப் போகிறது.

குழந்தை உளவியலின் குறியீடாக’ரோஜா’வைக் கதை நெடுகிலும் பயன்படுத்தியுள்ள கதாசிரியர்,நுகர்வுக் கலாசாரமும்,அது சார்ந்த வெறியும் மனிதனிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்ட நிதானத்தையும்,நிம்மதியையும் -முழுக்க முழுக்கக் காட்சித் துணுக்குகள் வழியாகவும்,அவற்றில் நிகழும் உரையாடல் வழியாகவுமே சொல்லியபடி கதையை நகர்த்திச் செல்கிறார்.

’அன்றாட வாழ்க்கை என்னும் முரட்டு இயந்திரம்,குழந்தைகளின் மேல் கதறக்கதற ஏறி அரைக்கும் அவல’மும்.’அது குறித்து எழுந்த பதற்றமு’மே தன்னை இவ்வாறான நீள்கதைகளை எழுதத் தூண்டியதாகக் குறிப்பிடும் இப் படைப்பாளி,வெறும் புனைகதைக் கலைஞராக மட்டும் இருந்து விடாமல் ஒரு நல்லாசிரியராகவும் இருந்த காரணத்தினாலேயே
கசங்கிக் கொண்டிருக்கும் இந்த ரோஜாக்களை அவரால் இனங்கண்டு கொள்ள முடிந்திருக்கிறது.


ஆயிஷா பற்றி மேலும் சில குறிப்புக்கள்;
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு.
குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை.
கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல்.
ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவைப் பாடமாக வைத்துள்ளன.
ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(காண்க:http://eranatarasan.com/
பி.கு;
எங்கள் தன்னாட்சிக் கல்லூரியின் பாடத் திட்டக்குழுவிலும்,மதுரை காமராசர் பல்கலைக்கழக இளங்கலை-பி.ஏ.-பாடத் திட்டக் குழுவிலும் நான் பங்கேற்றிருந்த காலகட்டத்தில்,அந்தப் பாடத் திட்டங்களில் ஆயிஷா குறுநாவலைச் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வெற்றியடைந்திருக்கிறேன்.
தில்லி தமிழ்ப் பள்ளிகளில்,ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அளிப்பதற்காக அண்மையில்(ஜூலை’09) அழைக்கப்பட்டபோது,ஆயிஷா,ரோஸ் ஆகிய இரு நாவல்களையும் அவர்களை வாசிக்க வைத்ததோடு,ஆயிஷா குறும்படத்தையும் திரையிட்டுக் காட்டினேன்.அவர்களில் பலருக்கும் ஆயிஷா பற்றிய முதல் அறிமுகம் அதுதான் என அறிய நேர்ந்தபோது வாசிப்புப்பழக்கத்திலிருந்து ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அந்நியமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான நிஜம் என் நெஞ்சைச் சுட்டது.

8.11.09

18நாட்கள்,10நாடுகள்..(6)

நாட்கள்2,3,4-பிரான்ஸ்-பாரீஸ்(தொடர்ச்சி)

சீன் நதி ஓரத்தில்.....





பாரீஸ் நகரத்தை ஒரு பாம்பைப் போலச் சுற்றி வளைத்தபடி ஓடுவது சீன் நதி.
2000 ஆண்டுகளுக்கு முன் பாரிஸீயன்கள் என்னும் பழங்குடிமக்களின் குடியேற்றம் சீன் ஆற்றின் கரையில் நிகழ்ந்ததால் அவர்களது பெயரைக் கொண்டே அந்த நகரமும் பாரீஸ் என்று பெயர் பெற்றிருக்கிறது .
(இலத்தீன் மொழியில் சீன் என்ற சொல்லுக்குப் பாம்பு என்று பொருள் இருப்பதாக எங்கள் வழிகாட்டி சொல்ல,வேறு சில கலைக் களஞ்சியங்களின் வழியே அதற்குப் புனிதம் என்ற பொருளும் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்)

சீன் நதியில் மேற்கொண்ட உல்லாசப் படகுப் பயணத்தோடு எங்கள் பாரீஸ் சுற்றுலா தொடங்கியது.
சுற்றுலாப் பயணிகளுக்கான இவ்வாறான படகுப் பயணத்தைப் பல ஐரோப்பிய நகரங்களிலும் காண முடிகிறது.(சிங்கப்பூரிலும் கூட இது உண்டு).
நெதர்லாண்ட்ஸின்(ஹாலந்து)ஆம்ஸ்டர்டாம் நகரிலும்,லண்டனின் தேம்ஸிலும் கூட இவ்வாறான படகுப் பயணங்கள் மிக நேர்த்தியாக ஊரைச் சுற்றிக் காட்டி விடுகின்றன.


River Cruise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்படிப்பட்ட படகு சவாரிகளின் மூலம் நகரை வேறொரு கோணத்தில் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது;ஒரு நகரத்தைப் பற்றிய தொடக்க கட்டச் செய்திகளை....,அங்குள்ள முதன்மையான இடங்களை ,முன்னோட்டம் போல ஓரளவுக்குத் தெரிந்து கொண்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த நகரத்தில் எதையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற தெளிவான பார்வை கிடைத்து விடுகிறது.சென்னையின் குறிப்பிட்ட சில இடங்களைப் பார்க்கக் கூவத்திலும் கூட (-நாற்றமில்லாமல்தான்-) ஒரு River Cruise மேற்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் நெஞ்சின் ஒரு மூலையில்.......!
(சில நகரங்களில் அப்படிப்பட்ட படகு சவாரியுடன் மட்டுமே ஊரைச் சுற்றிக் காட்டி விட்டதாக முடித்து விடுவதும் உண்டு.
எங்களுக்கு நல்ல காலமாக அப்படிப்பட்ட சுற்றுலா நிறுவனம் வாய்க்கவில்லை).

மதியம் இரண்டு மணிக்கு மிதமான குளிரில்...இலேசான மழைச் சாரல் பன்னீர் தூவிக் கொண்டிருக்க,எங்கள் படகுப் பயணம் தொடங்கியது.படகினுள்ளேயே ஒலிபெருக்கி வழியாக நாம் கடந்து செல்லும் இடங்கள்,அவற்றின் வரலாற்றுச் சிறப்புக்கள் ஆகிய எல்லா விவரங்களையும் தொடர்ந்து நேர்முக வருணனை போலச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.ஒரே ஒரு சிக்கல்..,அவர்கள் பேசும் ஆங்கிலம் நமக்கு விளங்க வேண்டும்...அவ்வளவுதான்!

படகுத் துறையை ஒட்டியே ஈபில் கோபுரம் அமைந்து விட்டதால் அதை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டோம். படகு தொடர்ந்து செல்லச் செல்லப்..பாரீஸின் முக்கியமான இடங்களாகிய லூவர் அருங்காட்சியகம்,நோட்ரடாம் ஆலயம்,இன்வேலிட்ஸ் நினைவுச் சின்னம்,பிரெஞ்சுப் புரட்சியின்போது மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்(சிரச் சேதத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு முன் மேரி அண்டாய்நெட் போன்றவர்கள்)சிறை வைக்கப்பட்டிருந்த பழைய அரண்மனை , பாதாளச் சிறை வடிவிலான சில சிறைக்கூடங்கள் ,
பாரீஸ் பல்கலைக்கழகம் ஆகியவை ஆங்காங்கே எங்களுக்கு இலேசாகத் தரிசனம் தந்து மறைந்து கொண்டிருந்தன.
நதிக் கரை ஓரத்தில் பழைய அரண்மனை..தொலைவில் ஈபில்..


பாதாளச் சிறைக்கூடங்கள்

பலப் பல நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிகப் பழமையான பாலங்களுக்கு அடியில் எங்கள் படகு சென்று கொண்டிருந்தபோது....அந்தந்தக் காலத்தின் உணர்வுகள், உள்ள வேட்கைகள்,ஆற்றாமைகள்,ஆதங்கப்பெருமூச்சுக்கள்,குமைச்சல்கள்,குதூகலங்கள் ஆகியற்றுக்கிடையே ஊர்ந்து செல்வது போன்றதொரு சிலிர்ப்பு......!

பயண வழியில் வியப்படையச் செய்த குறிப்பிட்ட ஒரு காட்சி, நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையைப் போலச் சற்றும் மாறாமல்- அதே வடிவத்தில் அதே போலக் கொஞ்சம் சிறியதாகக் காட்சியளித்த சிலைதான்!பாரீஸுக்குப் பதிலாக நியூயார்க்குக்கு வந்து சேர்ந்து விட்டோமோ என்று மலைப்புத் தட்ட வைக்கும் வகையில் இருந்தது அந்தச் சிலையின் தோற்றம்.

அந்தச் சிலை பற்றிய கதை சற்றுச் சுவாரசியமானது.
நியூயார்க்கின் சுதந்திரதேவி சிலையை உருவாக்கிய சிற்பி,பிரடெரிக் அகஸ்டி பர்தோல்டி,பாரீஸச் சேர்ந்தவர்;
காப்பரில் உருவாக்கப்பட்ட அந்தச் சிலை, சிறுசிறு துண்டு வடிவங்களில் செய்யப்பட்டுப் பாரீஸிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில்
அனுப்பப்பட்டுப் பிறகு அங்கே ஒருங்கிணக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் அடையாளமான அந்தச் சிலையைத் தங்களுக்குத் தந்த(1886இல்)பிரெஞ்சுக்காரர்களுக்குச் செலுத்தும்
நன்றிக் கடனாக,மூலச் சிலையில் பத்தில் ஒரு பங்கு அளவில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட அதே போன்றதொரு சுதந்திர தேவியின் சிலை,இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நட்புப் பிணைப்பின் குறியீடாக,பாரீஸ் வாழ் அமெரிக்கர்களால் பாரீஸுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.ஈபில் கோபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ.தொலைவில் அமெரிக்கா இருக்கும் திசையை நோக்கியபடி நிறுவப்பட்டிருக்கும் இந்த 35 அடி உயரச் சிலை சுதந்திரத்தின் செய்தியை மட்டுமல்லாமல் உலக நாடுகள் நேசத்தால் நெருங்கி வாழவேண்டும் என்ற உண்மயையும் உரத்து முழங்கியபடி சீன் நதிக் கரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.


பாரிஸுக்குள் நாங்கள் நுழைந்ததுமே எங்கள் வழிகாட்டியாக வந்த பெண்மணி,இது கிறுக்குத்தனமான ஒரு நகரம்(It is a crazy city)என்று குறிப்பிட்டார்.அவர் எதை மனதில் கொண்டு எந்தப் பொருளில் அவ்வாறு சொன்னாரோ தெரியாது;
வேக வரையறை எதுவுமின்றி விரைந்தோடும் வாகனங்கள்,விரும்பியதை..விரும்பிய நேரத்தில் எந்த மனத்தடையுமின்றிச் செய்து கொண்டிருக்கும் சுதந்திரமான மக்கள் கூட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு அவர் ஒருவேளை அவ்வாறு சொல்லியிருக்கலாம்.
ஆனால் என் பார்வையில் பட்டதெல்லாம்...அந்த ஊர் மக்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்....ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ரசித்தபடி.... சொட்டுச் சொட்டாகப் பருகிக் கொண்டிருக்கும் காட்சிதான்.

நம்மூர் ரோட்டோரக் கடைகளைப் போலத் தெரு நடைபாதைகளிலுள்ள கபேக்கள் அங்கே பிரபலம்;

நாங்கள் சென்ற பல ஐரோப்பிய நாடுகளிலும்,இப்படிப்பட்ட தெருவோரக் கபேக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைக் காண முடிந்தது.
(ஆனால் இங்கே மொய்க்கும் ஈ,கொசுக்களையோ,கசக்கிப் போட்டுவிட்டுப் போகும் காகிதப் பொட்டலங்கள் மற்றும் பாலிதீன் குப்பைகளையோ அங்கே மருந்துக்கும் கூடப் பார்த்துவிட முடியாது)
ஓட்டலின் உள்ளே கூட இடம் கிடைத்து விடலாம்;ஆனால் அந்தத் தெரு நடைபாதைகளின் இருக்கைகள் சுலபமாகக் கிடைத்து விடாது;மிடறு மிடறாகப் பானங்களை உள்ளிறக்கியபடி...,விதவிதமான உணவு வகைகளை ரசனையோடு மெதுவாக உண்டபடி...நேரப்பிரக்ஞையின்றி உரையாடிக் கொண்டிருப்பதே அவர்களின்பாணி.
பிரெஞ்சுக்காரர்கள் யாராவது நம்மை விருந்துக்கு அழைத்து ,நாமும் போக நேர்ந்து விட்டால் அவசரத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு போகும் கதையெல்லாம் அங்கே நடக்காது;மதியம் 11 மணி விருந்து மாலை 4,5 மணி வரையிலும் கூட நீளுவதுண்டாம்

இளைப்பாறல்(Relaxation )என்ற சொல்லுக்குச் சரியான உதாரணம் பிரெஞ்சுக்காரர்கள்தான் என்பதைப் படகுப் பயணம் சென்றபோதும் எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
சீன் நதியின் இருபுறக் கரைகளிலும் நின்றும்,இருந்தும்,கிடந்தும் அவர்கள் உல்லாசமாக இளைப்பாறிக் கொண்டிருந்த அந்தக் கோலம்!
குடும்பம் குடும்பமாக,ஜோடி ஜோடியாக-அங்கேயே சாய்வு நாற்காலிகளையும்,பிற வசதியான இருக்கைகளையும் அமைத்துக் கொண்டபடி,கணவனும்,மனைவியும் பத்திரிகையிலோ,புத்தகத்திலோ மூழ்கிக் கிடக்க ஆற்றின் கரையோரம் அவர்களுக்கு முன்பாக விளையாடும் குழந்தைகள்;தங்கள் அன்பை அறுதியிட்டு உறுதி செய்தபடி இருக்கும் காதலர்கள்! இதமான குளிரை ரசித்தபடி ஓய்வெடுக்கும் முதியவர்கள்...!
நின்றும்...இருந்தும்...கிடந்தும்....



பாரீஸில் கடற்கரை இல்லாததால் சீன் நதிக் கரையில்,செயற்கையாக மணலைக் கொட்டிக் குவித்து,அதையே ஒரு கடற்கரை போலப் பாவித்துச் சூரியக் குளியல் போன்றவை நடத்தி செய்து அந்த நதியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கரையோரமாகப் பின்பு பேருந்தில் சென்றபோது,நதிக் கரையில் பச்சை நிறப்பெட்டிகள் பலவும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.’அவை என்ன தெரியுமா?’என்று புதிர் போட்ட எங்கள் வழிகாட்டி அதற்கு விடை சொல்லவும் தவறவில்லை.பாரீஸ் நகரின் புத்தகக் காதலர்கள் பலரும் தங்கள் சொந்த சேமிப்புக்களான விலை மதிப்பற்ற பல புத்தகங்களை அவற்றில் சேமித்துப் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்களாம்;நேரம் கிடைக்குபோது இனிமையான சீன் நதிச் சூழலில் அமர்ந்தபடி புத்தகங்களை ரசிப்பார்களாம்;அவை இது வரை கொள்ளை போனதும் இல்லையாம்....(எல்லாம் சரிதான்...ஆனால் அந்தக் குளிருக்கும்,மழைக்கும் அவை எப்படித்தான் அங்கே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ?)

சீன் நதியை விடவும் கூட அற்புதமான,ஆர்ப்பரிப்பான கொள்ளை அழகான கணக்கற்ற ஆறுகள் நமக்கும் உண்டு.....’மேவிய ஆறு பல ஓடி மேனி செழித்த’ நம் தாய்த் திருநாட்டில் அவற்றைக் கொண்டாடுவதாக எண்ணிக் கொண்டு....மேலும் மேலும் குப்பைகூளங்களையும் கழிவுகளையும் கொட்டிக் குவித்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்ற ஏக்கம்,
அங்கே பளிங்கு போல் ஓடிய சீன் நதியையும்,
ஜனத் திரள் கூடிக் குவிந்திருந்தாலும் தூய்மை கெடாத அதன் சுற்றுப்புறங்களையும் கரைகளையும் பார்க்கப் பார்க்க என்னுள் கிளர்ந்தது.

5.11.09

'வாழ்க வளமுடன்..!'

புது தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் ஆழியாறு மனவளக்கலை சிறப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு:

வேதாத்திரி மகரிஷிகள் அருளிய மனவளக்கலை வழிமுறைகளில்
-தவம்,அகத்தாய்வு,எளிய குண்டலினி முறை உடற்பயிற்சிகள் -
ஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்களும்,அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விழையும் நண்பர்களும் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பிக்கலாம்.


நிகழ்ச்சி விவரம்;

நாள்;08.11.2009,மாலை மணி 5.30
இடம்;தில்லி தமிழ்ச் சங்கம்-திருவள்ளுவர் கலையரங்கம்

’தியானம்’என்ற ஆவணப்படம் முதலில் திரையிடப்பட இருக்கிறது.
தொடர்ந்து நிகழ்ச்சிகள்....
சிறப்புரை
‘’வாழ்வில் வளமை...சிந்தையில் இனிமை’’
உரையாற்றுபவர்;திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன்
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்

தலைமை
திரு.டி.ஆர்.கார்த்திகேயன்,
முன்னாள் இயக்குநர்,மையப் புலனாய்வுத்துறை

அனைவரும் வருக...மன வளம் பெறுக என உலக சமுதாய சேவா சங்கத்தின் தில்லி மண்டலக்கிளை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது....
வாழ்க வையகம்..!வாழ்க வளமுடன்...!
இணைப்பு;
ஆழியாறு தந்த அமுதம்

2.11.09

ஓராண்டின் முடிவில்...

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

இந்த வலைப்பூ தொடங்கி இன்றோடு சரியாக ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

இணையம் பற்றியோ ,அதில் தமிழில் எழுதும் முறை பற்றியோ ,வலைப்பூ தொடங்கி அதில் இடுகை இடுவது பற்றியோ எதுவுமே அத்தனை தெளிவாகத் தெரியாமல் ஏதோ குருட்டுத் துணிச்சலில் ஒரு ஆசைக்காகத் தொடங்கிய இந்த முயற்சியில் படிப்படியாக ஒவ்வொரு கதவாகத் திறந்து கொண்டே போனதும் ...வலைப்பூ எழுதுவதாலேயே அவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நான் பெற முடிந்ததும் வாழ்வில் கிடைத்த அரிய அனுபவங்கள்;கற்றலும்,தேடலும் நமக்குள் கிளர்த்தும் சுவாரசியமான தரிசனங்களைப் பெறுவது எந்த நாளிலும் இதமூட்டும் ஒன்றுதானே?

இன்று...இந்த வலைப்பூ,ஓராண்டை எட்டும் இந்த நிலையில், பெரிதாக எதையும் நான் சாதித்துவிடவில்லையென்றாலும்,நான் அறிந்த தமிழை..நான் அறிந்த சமூகத்தை...நான் ரசிக்கும் தகவல்களை உலகெங்கும் உள்ள பல தமிழ் அன்பர்களோடும்,இலக்கிய ஆர்வலர்களோடும் இணையத்தின் வழி பகிர்ந்து கொள்ள முடிந்திருப்பது எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.வலைப்பூவின் வழி சில வேளைகளில் உடனுக்குடன் கிடைக்கும் எதிர்வினைகளும்,நட்புமுறைக்கடிதங்களும் மேலும் மிகுதியான ஊக்கத்தோடும்,உற்சாகத்தோடும் செயல்பட என் உந்து சக்திக்கு எரிபொருளாகின்றன.

இந்த வலைப்பூ,உலகத்தோடும்....முகம் தெரியாத பல மனிதர்களோடும் எனக்கு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது;

நேசமான பல அரிய நட்புக்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.

இது வரை...50க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து பலவகை எதிர்பார்ப்புக்களோடும்....ஆர்வங்களோடும்,என் வலையின் பல ஆக்கங்களுக்கும் வருகை புரிந்த வாசகர்களுக்கும்....இத் தளத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் இத் தருணத்தில் மனம் நெகிழ்ந்த நன்றி.....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....