துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.5.11

’விலை போட்டு வாங்கவா முடியும்..?’


.
’விலை போட்டு வாங்கவா முடியும்..?’என்று கல்வியைப் பற்றிப் பாடினார் பாரதிதாசன்.
தங்கள் வாக்குகளையும் அப்படி ஒன்றும் சாமானியமாக விலை போட்டு வாங்கி விட முடியாது என்பதை 
விரலின் சிறு துளி மையால் மெய்ப்பித்து விட்டுக் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக...உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் !!


குற்றம் செய்யாத கோவலனைக் கொன்ற தவறுக்காகத் தன் உயிரையே விலையாய்த் தந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன்.
‘’வல்வினை வளைத்த கோலை
மன்னவன் செல்லுயிர் நிமிர்த்திச் செங்கோலாக்கியது’’
என்பார் இளங்கோ.
17600 இலட்சம் கோடி ஊழலால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே கூசிக் குறுகிக் கொண்டிருந்த 
கேவலத்தை..
சிறுமையை...
வலுவில் நாடிவந்த பணக் கற்றைகளை மறுதலித்ததன் வழி மாற்றித் தமிழ் இனத்தின் மீதே படிந்து போன தீராத களங்கத்தைத் துடைத்தெறிந்திருக்கிறார்கள் தமிழ் மக்கள்.


 தாய் வரம் கேட்டுத் தந்தை அதை ஏற்ற நிலையிலும் 
இராமனுக்கு வர வேண்டிய அரசப் பதவி தனக்கு வேண்டாம் ..
அது ,‘’தீவினையால் வந்த செல்வம்’’
என்று புறங்கையால் விலக்கித் தள்ளியதால் உயர்ந்தான் பரதன்.
‘’ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ’’
என்று குகன் அவனைப் பாராட்டுவது அதன் பொருட்டே.
இன்று எம் தமிழரும்...தீவினையால் வந்த செல்வத்தை - 
ஓட்டுப் போடுவதற்காகக் கொடுக்க வந்த கையூட்டுப் பணத்தைப் புறந்தள்ளிக் குன்றென உயர்ந்து நிற்பதைக் காணுகையில் நெஞ்சு விம்மிதமடைகிறது.


நேரிய முறையில் செயல்பட்ட தேர்தல் ஆணையமும்,
நெஞ்சு நிமிர்த்தி ‘எம் வாக்கு விற்பனைக்கல்ல’என முழங்கிய தமிழகச் சாமானியர்களுமே நம் முதல் வணக்கத்திற்குரியவர்கள்.

ஊழலும் பணநாயகமும் வெகுநாள் விலை போகாது என்பதை 
வருங்கால ஆட்சியாளர்களாவது உணர்ந்து பாடம் பெறுவார்களா...?
பாடம் பெறாவிட்டால் தக்க பாடத்தைப் புகட்ட ....இருக்கவே இருக்கிறது அடுத்த வாக்குச் சீட்டு!
அவ்வாறு நிகழாமல்..
கடந்த காலத் தவறுகளிலிருந்து தான் பெற்ற படிப்பினைகள் வழியே..
மாறி வரும் மக்களின் அரசியல்சமூக விழிப்புணர்வுப் போக்குகளை உணர்ந்தவராய்...,
தான் குடிமக்களின் ஓர் ஊழியை மட்டுமே என்ற புரிதலோடு....
தன் புதிய ஆட்சியை நல்லாட்சியாக செல்வி ஜெயலலிதா அமைத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு,விழைவு!
அந்தக் கனவு பலித்திடட்டும்!
வாழ்த்துக்கள்!


14/5/11 தேதியிட்ட தினமணி தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்...

தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.
யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா?

முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.
பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!
நன்றி; தினமணி.காம்
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=417954&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

காண்க;
வழிகாட்டும் மதுரை..


6 கருத்துகள் :

மதுரை சரவணன் சொன்னது…

அருமையான கருத்து.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

மகிழ்வுதரும் மாற்றம் தான் அம்மா.....ஆனால் தேர்தல் முடிவுகள் வெறும் "மாற்றத்திற்காகத்தான்" என்றே எண்ணத் தோன்றுகிறது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

காசு வாங்கி ஓட்டளிக்காமல் - பணத்திற்கு விலை போகாத மக்களின் மன உறுதியை மட்டும்தான் நான் என் பதிவில் முன் வைத்திருக்கிறேன் கலாநேசன்..
எவர் சார்பிலும் இல்லை..
மற்றபடி இப்போது நேர்ந்துள்ள மாற்றம் நன்மையா தீமையா என்பதைக் காலம்தான் சொல்ல முடியும்.

அப்பாதுரை சொன்னது…

டிவிஎஸ்50 பெற்றுக்கொள்ளாதவர்களைப் பாராட்டுவதா பரிதாபப்படுவதா என்று கொஞ்சம் குழம்புகிறேன். இது மன உறுதியா? முழுமையாக ஏற்க முடியவில்லை. இருந்தாலும் மாற்றம் தேவைதான். ஊழலை எதிர்த்து அளித்த வாக்கு என்ற நிலையில் தலை நிமிர தோன்றுகிறது தான். (பத்து காசாக இருந்தாலும் பூஜ்யங்கள் எத்தனை என்றே தெரியாத தொகையாக இருந்தாலும் ஊழல் ஊழலே). வந்திருக்கும் கூட்டம் ஒன்றும் வித்தியாசமானதில்லையே? அது தான் தலை நிமிரத் தயக்கம். இலவசமாக ஆடு கோழி கொடுப்போம் என்று கூவிக் கோட்டையைப் பிடித்த கூட்டம் என்கிறார்களே?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வந்திருக்கும் கூட்டம் வித்தியாசமானது என்றோ...லஞ்ச ஊழலுக்கு அந்நியமானது என்றோ நான் கூறவே இல்லை அப்பாதுரை.
ஓட்டுக்காகக் காசை அதுவும் தீட்டுப்பட்ட காசை மறுத்த சாமானிய மக்களின் மன உறுதியை மட்டுமே பதிவில் பாராட்டியிருக்கிறேன்.
மாற்றத்தை விரும்பியதால் மட்டுமே நிகழ்ந்த தேர்வு இது என்பது எல்லோருக்குமே விளங்காமல் இல்லை.
ஆனால்..என்ன செய்வது? தமிழகத்தின் தலைவிதி அந்த இரண்டு சக்திகளால் மட்டும்தானே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது?
நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருந்து வழி நடத்த வேண்டும் என்று வேண்டுவதையும்,எதிர்பார்ப்பதையும் தவிர வேறு என்ன செய்ய முடியும்?ஏற்பட்டிருக்கும் ஆட்சி நல்லாட்சியாக இல்லாமல் போனால் தக்க படிப்பினை கிட்டும் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறேனே..?
இலவசங்களை மிகுதியாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் , தோற்றுப் போன கட்சியின் தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக ஏற்பட்ட ஒன்றாக அமைந்து விட்டபோதும் அது தவறுதான்.
ஆனாலும் மக்கள் இலவசங்களில் மயங்கி வாக்களித்தார்கள் என்பதை விட ஊழலுக்கும் , குடும்ப அதிகார மையங்களுக்கும் எதிராக வாக்குப் பதிவு செய்தார்கள் என்பதே தமிழகச் சூழலை அவதானிக்கையில் புலப்படும் உண்மை;அதுவே நிதரிசனம்.

அப்பாதுரை சொன்னது…

புரிகிறது; பொதுவில் வைத்த கருத்தே என்னுடையதும். நீங்கள் சொல்வது போல் இரண்டு கட்சிகளின் இடுக்கிப் பிடியில் சிக்கிய தமிழகம் தான் பரிதாபம். 'சேனாதிபதி வேறென்னாலும் சேனை பழசு தானே?' என்பார் என் பாட்டி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....