துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.6.11

தென்மேற்கின் சாரல்...

எளிமையான , குழப்பமில்லாத - ஓரிரு வரிகளில் முடிந்து விடும் மிகச் சாதாரணமான கதை.
தொழில்நுட்ப சாகசங்களோ..,பிற நாட்டுப் பின்புல வண்ண ஜோடனைகளோ சிறிதுமில்லை.
ஆனாலும் ஒரு தமிழ்ப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது.
அதில் தாய் வேடம் தாங்கிய சரண்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற வழி செய்து தந்திருக்கிறது.
(பாடலாசிரியரும் விருது பெற்றுள்ளபோதும் அது அவருக்குப் புதிதில்லை).

தாய்மையின் சிறப்பைப் போற்றும் -  தியாகத்தை உயர்த்தும் பல படங்கள் இம் மண்ணில் முகிழ்த்திருக்கின்றன.
ஆனால்..சாதி,உறவுக் கட்டுமானங்களின் கடுமையான நெருக்குதல்களும்,பழி தீர்க்கும் வன்மங்களும் நிரம்பிக் கிடக்கும் ஒரு பூமியில், அவற்றையெல்லாம் தாய்மை என்ற ஒன்றால் மட்டுமே புறந்தள்ளித் தகர்த்துவிட்டுத் தன் மகனின் காதலைக் காக்கச் சாவைச் சுமக்கும் தாயை இப் படம் முதன்முறையாக நெகிழ்வோடு முன்னிறுத்தியிருக்கிறது.

’தென்மேற்குப் பருவக்காற்று’என்னும் இந்தப் படத்தின் கதைக்குத் தூணாகும் தாய் பாத்திரத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது சரண்யாவின் இயல்பான,அலட்டல் இல்லாத நடிப்பு!

ஒரு கிராமத்துத் தாய்க்கே உரிய மூர்க்க வெறியோடு கூடிய மகன் மீதான பாசத்தை - அந்த மண்ணுக்கே உரிய குணாம்சங்களுடன் அருமையாக உள் வாங்கிக் கொண்டு அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா...
மகன் வெற்றி பெற்றுக் கொண்டு வரும் கோப்பையை மீட்பதிலிருந்து,மகனின் காதலுக்காகக் கத்திக் குத்து ஏற்பது வரை மையச் சுருதியின் இழை பிசகாமல் பாத்திரத் தன்மையை உணர்ந்து அதுவாகவே ஆகி விட்டிருக்கும் அவருக்கு நல் வாழ்த்துக்கள்!

நாயகனில் தொடங்கிய அவரது நடிப்புப் பயணம் , சிறந்த இந்திய நடிகைக்கான கட்டம் வரை அவரைக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பாக ஒரு இலக்கிய விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் மணிரத்னம் அவர்களோடு ஒரு குழுவாக உரையாடிக் கொண்டிருந்தபோது ‘நாயக’னைப்பற்றியும் அதில் சரண்யாவின் நடிப்பைப் பற்றியும் கூடப் பேச்சு வந்தபோது,பலர் சரண்யாவின் நடிப்பைச் சிலாகிக்க...அவரை அதில் நடிக்க வைக்கத் தான் பட்ட பாட்டைத் தனக்கே உரிய ‘குறுகத் தரித்த’மொழிகளால் எங்களுடன் பகிர்ந்து கொண்டார் மணிரத்னம்.
தன்னை அறிமுகம் செய்த அந்த மோதிரக் கைக்குத் தான் பெற்ற விருதால் பெருமை சேர்த்திருக்கும் சரண்யாவின் வெற்றி தொடர் வெற்றியாகட்டும்!

அண்மையில் சரண்யா தந்திருக்கும் பேட்டி ஒன்றில் தனது இரண்டாவது இன்னிங்ஸ்தான் தனக்கு மனநிறைவளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சுஜாதா,சரிதா,ரேவதி,சுகாசினி போன்ற பண்பட்ட நடிகையர்கள் விட்டுப் போன குணசித்திர வெற்றிடத்தைத் தனது தேர்ந்த நடிப்பாற்றலால் ஈடுகட்டிக் கொண்டிருக்கும் சரண்யா,மேலும் பல சாதனைகள் புரிந்து சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

4 கருத்துகள் :

கே. பி. ஜனா... சொன்னது…

முதல் படத்தில் கூட அந்தப் பாத்திரத்தை மனங்கவரும் விதமாக பண்ணியிருந்தார் சரண்யா. இப்ப மிகப் பிரமாதமாக...

அப்பாதுரை சொன்னது…

நாயகன் படம் மறந்தே விட்டது - மறக்கக்கூடிய படத்தில் நடித்தவர் மறக்க முடியாத பாத்திரமாக மீண்டு வந்திருக்கிறாரா? பலே! சென்னை லிஸ்டில் சேர்க்க வேண்டியது தான். அறிமுகத்துக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு திருமதி சுசீலா,

சரண்யாவைக் கவுரவப் படுத்தி மனதை மகிழ்வித்து விட்டீர்கள். அவர்களின் நடிப்பு எனக்கு எங்கள் காலக் கண்ணாம்பாவை

நினைவுறுத்தும்.நல்ல தமிழ்ப் பேச்சுக்குச் சொந்தம் கொண்டாடும் முகம்.

VELU.G சொன்னது…

சரண்யா பற்றி நல்ல கருத்துக்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....