துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.6.09

அறிவிப்பும்,அழைப்பும்

மதுரை , பாத்திமாக் கல்லூரித் தமிழ் உயர் ஆய்வு மையத்தில் என் நெறிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்ட(Ph.D.,) ஆய்வை மேற்கொண்டு -
தலைப்பு : ஈழக் கவிதைகளில் இருப்பியல் சிக்கல்கள் - சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்திருந்த செல்வி சு.ர.பூங்கொடியின் இறுதிக் கட்ட வாய்மொழித் தேர்வு 22.06.09 முற்பகல் 11 மணி அளவில் , பாத்திமாக் கல்லூரி வளாகத்தில் (அறை எண்:A2) நடைபெற இருக்கிறது.

ஆய்வேட்டை மதிப்பீடு செய்த மூன்று புற நிலைத் தேர்வாளர்களும் ஆய்வேடு , முனைவர் பட்டம் பெறத் தகுதியானதே என அறிக்கை அளித்துள்ளபோதும் பொது வாய்மொழித் தேர்வில் பலராலும் எழுப்பப்படும் வினாக்களுக்கு ஏற்ற வகையில் விடையளித்துத் தன் தகுதிப்பாட்டை மெய்ப்பித்துக்காட்டிய பிறகே முனைவர் பட்டம் உறுதி செய்யப்பட வேண்டுமென்ற நடைமுறைக்கேற்ப இத் தேர்வும் நடைபெற உள்ளது.

இலக்கிய ஆர்வலர்கள்,படைப்பாளிகள், ஆய்வு மாணவர்கள் என அனைவரும் இவ் வாய் மொழித் தேர்வில் கலந்து கொண்டு வினாத் தொடுக்கலாம். மதுரை பாத்திமாக் கல்லூரி நூலகத்தில் 16.06.09 முதல் ஆய்வேடு பார்வைக்கு வைக்கப்படுகிறது.அதைப் படித்துப்பார்த்தும் கேள்விகளைக் கேட்கலாம். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் வெறும் சடங்கு- சம்பிரதாயமாக மாறிவிடாமல் தடுக்க வேண்டுமென்றால் தரமான பார்வையாளர்கள் - உண்மையாகவே ஆய்வுப் பொருளில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிக அளவில் பங்கேற்று , உரிய - பொருத்தமான விடைகளை ஆய்வு செய்தவரிடமிருந்து வரவழைக்க வேண்டும்.அப்போதுதான் தரமான ஆய்வேடு என்ற சரியான முத்திரை அதற்குக் கிடைக்கும்.

ஆய்வேட்டை மதிப்பீடு செய்திருக்கும் புறநிலைத் தேர்வாளர்களில் ஒருவரான முனைவர் நசீம்தீன் (பெஸ்கி ஆய்வு மையம் , திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம், ஆந்திரப்பிரதேசம்) அவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு வருகை புரிந்து மதிப்பீடு செய்த தேர்வாளர்களின் சார்பில் வினாக்களைக் கேட்டுத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள்.நெறியாளர் என்ற முறையில் வாய்மொழித் தேர்வைப் பொறுப்பேற்று நடத்துவது என் கடமையாகிறது.

கவிதைகளிலும்- குறிப்பாக ஈழக் கவிதைகளிலும் ஆர்வம் கொண்ட தமிழ் ஆர்வலர்களும் , திறனாய்வாளர்களும் , ஆய்வு மாணவர்களும் ,எழுத்தாள நண்பர்களும் மேலும் மதுரையிலுள்ள என் நண்பர்கள் என அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு தரமானதொரு ஆய்வு அமர்வாக இதை ஆக்கித் தர வேண்டுமென , இவ் வலை வழி அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....