துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.3.10

கரு

ஒரு பெண்ணின் இருப்பு , அவளது மறு உற்பத்தித் திறனைக் கொண்டே சமூகத்தால் கணிக்கப்படுவதையும், ‘ஜனன உற்பத்தி சாலை’யாக மட்டுமே அவள் குறித்த நோக்கு நிலை சுருங்கிப் போவதையும் ஆழமாக உள்வாங்கிக் கொண்டு புனையப்பட்டுள்ள நீள் கதை உமாமஹேஸ்வரியின் ‘கரு’.
(கணையாழி இதழில் பரிசு பெற்ற குறுநாவலாகிய  இப் படைப்பு,’மரப்பாச்சி’ என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது)

கதையைக் கூறும் முறை இரு தள நகர்வுப் போக்கில் அமைந்திருப்பது, இப் புனைவுக்குக் கூடுதல் பரிமாணத்தையும்,கனத்தையும் சேர்க்கிறது.

கதை ஒன்றைக் கருக் கொண்ட ஒரு பெண்படைப்பாளி, தாய்மைக் கருவுறாத பெண்ணைப் பற்றி எழுதத் தொடங்குகிறாள்.
எழுத்தையும்,கற்பனையையும் சூல் கொண்டு பிரசவ வேதனையாய் அவற்றை இறக்கி வைக்கத் தவிக்கும் அவளுக்கு அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகள்.
கைக் குழந்தைக்குப் பாலூட்டல்,மூத்த குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பல்,கணவனுக்கும்,அத்தைக்குமான பணிவிடைகள்...என அனைத்தும் ஓய்ந்து பேனாவும்,அவளுமாய்த் தனித்திருக்கக் கிடைத்த வாய்ப்பிலும் தொடர்ச்சியாகக் கதையை நகர்த்திச் செல்ல இயலாமல் குடும்ப நெருக்கடிகள்....
மேலும்’’எழுதுகிறேன்,படிக்கிறேன் என்று குழந்தையைச் சரியாய்க் கவனிக்கலியோ’’என்ற குற்ற உணர்வின் குறுகுறுப்புக்கள்.

இவற்றுக்கிடையே அவள் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் வரும் பெண் ,கருத் தரிக்காத காரணத்தால் உறவுப் பழிக்கும்,ஊர்ப் பேச்சுக்கும் ஆளானவள்.
வெவ்வேறு மருத்துவச் சோதனைகளுக்கு வெள்ளெலியாக்கப்பட்டவள்.
உறவு வட்டங்களின் எள்ளலுக்கும்,நிராகரிப்புக்கும் ஆளானவள்.
‘உள் அறையில் தொட்டில் ஆடவில்லை’
என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு இந்தக் கதையை முதல் பெண் துண்டு துண்டாக எழுதிச் சேர்க்கிறாள்.
அதன் இறுதிக் கட்டத்தில் கதை,தன்னைத்தானே இவ்வாறு முடித்துக் கொள்கிறது.

‘’என் தலை கழன்று அறையின் மூலைக்கு உருண்டு போனது ; கை கால்கள் பக்கங்களில் பிய்ந்து விழுந்தன. இருதயம் உலர்ந்து சருகாகி நொறுங்கியது ; நான் ஒரு சிறிய பேரிக்காய் வடிவ - கிட்டத்தட்ட மூன்றங்குல நீளமும்,இரண்டங்குல அகலமும் உள்ள வெற்றுப் பையாக மட்டும் மாறித் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்’’

இந்நீள் கதையின் இருதளக் கதை நகர்த்தலுக்கும் பொதுவானதாகப் பின் நவீனத் தன்மை கொண்ட இம் முடிவு அமைந்திருக்கிறது.
பெண்ணின் மூளையிலும்,இதயத்திலும் கருவாகி மலரும் சிந்தனைகள் ,விருப்பங்கள்,கலைத் திறன்கள் பற்றிக் கவலை கொள்ளாத சமூக அமைப்பு,மனிதக் கருவை வளர்த்தெடுப்பது பற்றிய எதிர்பார்ப்பை மட்டுமே அவளிடம் கொண்டிருக்கிறது.

இச் சூழலில்,இரு பெண்களும் வெறும் கருப்பையாக மட்டுமே மாறி முகமிழந்து போவதை நவீன உத்திகளோடு இணைந்த யதார்த்தச் சித்தரிப்பாக இப்புனைவு எடுத்துக் காட்டுகிறது.

பெண்ணின் படைப்பாக்க ஆர்வம் , அவளது பணிச் சுமையால் நடப்பியல் வாழ்வில் சாத்தியமற்றுப் போய் அரைகுறையாய்க் கருக்கலைப்பு செய்யப்படும் அவலத்தை மேற்குறித்த புனைகதை போன்றே வேறொரு கோணத்தில் நீலா என்பவர் எழுதிய பின்வரும் கவிதை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறது.

’பேனாவிற்குப் பதிலாய்க்
   கரண்டி பிடித்திருந்த
   காலைப் பொழுதின்
   கையறு நிலையில் அது தோன்றியது
   ‘அம்மா பால்’காரனில் துவங்கி
   ‘இன்னொரு கப்’பெரியவரின்
    ஆசையை நிறைவேற்றிப்
    பேனாவைத் தொட்டபோது...எங்கே அது?
    கருவுற்ற நொடியிலேயே கலைந்து போனதா?
    கண்ணாமூச்சி ஆசை கொண்டு ஒளிந்து கொண்டதா?
    என் மனக் கிடங்கிலா...இடுக்கிலா..
    ஆழத்தின் அடியிலா...எங்கே தேடுவேன்..?’’

(ஒரு பின் குறிப்பு;
இந்தக் கவிதையை எப்போதோ ஏதோ ஒரு இதழில் பார்த்துக் குறித்து வைத்திருந்தேன்.ஆனால் அதை எழுதிய ‘நீலா’ என்ற படைப்பாளியை...கவிஞரை அப்புறம் எழுத்துவழி எதிர்ப்படவே இல்லை.
தொலைத்து விட்ட தன் கற்பனைக் கருவைத் தேடும்  அவரது கவிதையைப் போலத் தொலைந்துவிட்ட அவரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இப்படி வாழ்க்கை ஓட்டத்தில் தொலைந்து போன ஆயிரம் ஆயிரம் பெண்படைப்பாளிகளுக்கு இந்த மகளிர்தினப் பதிவு சமர்ப்பணம்.

4 கருத்துகள் :

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வாழ்த்துக்கள் சுசீலாம்மா..

பின்குறிப்பில் நெகிழவைத்திருக்கிறீகள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா!

chandramohan சொன்னது…

வணக்கம் அம்மா
இந்த கவிதை புதுகையை சேர்ந்த தோழர் நீலா எழுதியது. அவ்வளவு பேசப்படாத பெண் கவிஞரான அவரிடம் உங்கள் பதிவு கண்டு நீண்ட நாட்களுக்கு பின் தொலைபேசியில் பேசினேன். எனது மாவட்டத்தை சார்ந்த பல கவிஞர்கள் இன்னும் பேசப்படாமல் உள்ளனர்.
அவரது தொலைபேசி எண்ணை மெயிலில் அனுப்பி இருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சுசீலாம்மா..

பின்குறிப்பில் நெகிழவைத்திருக்கிறீகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....