துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.10.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 5

உலக அரங்கில் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த பெண்ணியக் கருத்துக்களின் தாக்கங்களை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிலும் காண முடிந்தாலும்,இங்கு நிகழ்ந்த சமூக மாற்றங்கள் முழுவதுமே அயலகப் பாதிப்பினால் நேர்ந்தவை என்று கூறி விட முடியாது.உரிமை எழுச்சிக்கான தூண்டுதலை
மேலை நாட்டிலிருந்து பெற்றபோதும்,இங்குநிலவியஅரசியல்,சமூக,பண்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்பவும்,அவற்றால் பாதிக்கப்பட்டபெண்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டும் அந்த அடிப்படையிலேயே இவ்வியக்கம் இந்தியாவில் வேர் பிடித்து வளர்ந்திருக்கிறது.


கீழை நாடுகளைப் பொறுத்தவரை பெண்ணுரிமைப் பிரச்சினைகளில் ஆண் சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்ததற்கும் காரணம்- ,கல்வி முதலியவற்றைப் பெறாது வீட்டுக் கைதியாகமட்டுமே பெண் இருந்த சூழல்தான் என்பதை எளிதாகப் புரிந்து கொண்டு விடமுடியும்.


சமய,சமூக.அரசியல் சீர்திருத்தங்களில் முனைப்புக் காட்டிய ராஜாராம் மோகன்ராய்,ஈசுவர சந்திர வித்தியாசாகர்,மகரிஷி கார்வே,காந்தியடிகள் ஆகியோர் பெண் மறுமலர்ச்சியையும் இந்தியாவில் முன்னெடுத்துச் சென்றனர்.
தேசிய இயக்கத்தில் மிதவாதியாக விளங்கிய எம்.ஜி.ரானடே 1887ஆம் ஆண்டில் தோற்றுவித்த தேசிய சமூக மாநாடு(The National Social Conference)    என்னும் அமைப்பு, மகளிர் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை விவாதிக்க ஓர் அரங்கினை ஏற்படுத்திக் கொடுத்தது.


மார்கரெட்கசின்ஸ்
இந்தியப் பெண்ணுரிமை இயக்கத்தின் உருவாக்கத்தில் ஐரிஷ்நாட்டுப் பெண்களான மார்க்கிரெட் கஸின்ஸ் ,அன்னி பெஸண்ட் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.
அன்னிபெஸண்ட்
1917ஆம் ஆண்டில் இவர்களது முயற்சியால் உருப்பெற்ற இந்தியப் பெண்கள் கழகமும்(Women's Indian Association ),அனைத்திந்தியப் பெண்கள் மாநாடும்( All India Women's Conference )இளமை மண எதிர்ப்பு,சார்தா சட்ட உருவாக்கம்,சொத்துரிமை பேணல்,திருமணச் சட்டங்கள் முதலிய பல முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டின.


இந்தியப் பெண்கள் கழகத்தின் தலைவரான அன்னிபெஸண்ட் ,சென்னையைத் தன் தலைமை இடமாகக் கொண்டிருந்ததால் அக் கழகத்தின் செயல்பாடுகள் பலவும் சென்னையை மையமிட்டதாகவே அமைந்திருந்தன.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதிலும்,சட்ட மன்ற,பாராளுமன்ற உரிமைகள் வழங்குவதிலும் அப்போது சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகமே முன்னின்றது.
தேவதாசி முறை ஒழிப்பிற்குப் பாடுபட்ட முத்துலட்சுமி ரெட்டியும்,விதவைப் பெண்களின் மறு வாழ்வுக்காக உழைத்த சகோதரி சுப்புலட்சுமியும் தமிழ்நாட்டிலேயே தங்கள் பணிகளை ஆற்றினர்.
தமிழின் இலக்கியப் படைப்பாளிகளாகவும் சீர்திருத்தவாதிகளாகவும் விளங்கிய மாயூரம் வேதநாயகம்பிள்ளை,மாதவையா,பாரதி,பாரதிதாசன்,
திரு .வி .க,பெரியார்,ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆகிய பலரும் பெண்விடுதலைக்கான பொறிகளை மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருந்தனர்.

இந்தியப் பெண்களின் நிலை எழுச்சியடைய இவ்வாறு பல்வேறு தரப்பினரும் பல்வேறு முனைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்தபோதும்,அந்த முயற்சிகள் அனைத்தும் அவளது அடிப்படை உரிமைகள் சிலவற்றை மீட்கவும்,ஓரளவு சமத்துவத்தைப் பெற்றுத் தரவும் மட்டுமே உதவியிருக்கின்றன.
மரபுவழிப்பட்ட இந்திய சமூகத்தில் பெண்களை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு இன்னும் கூட நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
வழி வழி வந்த பண்பாட்டு வேர்களிலிருந்தும் துண்டித்துக் கொள்ள முடியாமல் - அதே வேளையில் தன் தனித் தன்மையையும் காத்துக் கொள்ள இன்று வரை இந்தியப் பெண் பெரியதொரு போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள் என்பதே யதார்த்த நிஜம்.
’’அநாதைக்குத்தான் தெரியும்
   அன்பின் தேவை
   வறிஞனுக்குத்தான் இருக்கும்
   செல்வத்தில் மோகம்
   அடிமைக்குத்தான் இருக்கும்
   சுதந்திரதாகம்
   பெண்ணுக்குத்தான் புரியும்
   விடுதலையின் அருமை’’ - திலகவதி 
                                                                                                   
                                                              (அடுத்த பதிவில் மேலும்...)

காண்க...
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் -1.
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் -2..
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் -3..
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் -4..
.

3 கருத்துகள் :

பவள சங்கரி சொன்னது…

மிக அழகான, எளிமையான விளக்கங்கள்.....வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

என்னது நானு யாரா? சொன்னது…

என்ன அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! அடுத்தடுத்தப் பதிவுகளில் பெண் ஏன் இன்னமும் தன்னுடைய அடிமைத்தனத்தினைப் புரிந்துக்கொள்ளாமலேயே இருக்கிறாள். அவளை அடிமைப்படுத்தும் கலாச்சார அமைப்புகளை ஏன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறாள் என்று எழுதுங்கள் அக்கா! உதாரணத்திற்கு டீவியில் வரும் பல தொடர் நாடகங்கள் அவளின் அடிமை நிலையை மேலும் நிலைநாட்டும் விதத்திலேயே இருக்கிறதே அன்றி அவளது முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாக இல்லை. அதைப்பற்றியும் மற்ற பல விஷயங்கள் பற்றியும் எழுதுங்கள். எல்லோருடைய சிந்தனைகளுக்கும் உங்களின் பதிவுகள் பயனாக இருக்கும்!

பெண்ணுக்கு பெண்ணே அடிமை சங்களி இடுகின்ற கொடுமையைப் பற்றியும் எழுதுங்கள். பெண்கள் உயர்ந்த கல்வியினைப் பெற்றபோதும் அவர்களின் நிலை உயராமல் இருப்பதற்குக் காரணம் என்ன வென்றும் ஆராய்ந்து எழுதுங்கள். உண்மையான பெண்விடுதலைக்கு பெண்ணும் ஆணும் என்னன்ன செய்யவேண்டும் என்றும் எழுதுங்கள். வாழ்த்துக்கள் அக்கா!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....