துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.2.10

பயணத் துணையாய்ச் சில மின்னல்கள்...

’’மனிதனுக்கு ஆனந்தத்தை நேரடியாக அனுபவிப்பதைவிட முன்னம் அனுபவித்ததை மீண்டும் நினைத்துப் பார்ப்பது இன்னும் ருசிகரமாக இருக்கிறது’’
என்று ‘அமிர்தம்’ நாவலில் தி.ஜானகிராமன் குறிப்பிடுவது போலப் பழைய கணங்களை,அவை தந்த படிப்பினைகளை - இனிமைகளை - ரசனைகளை-பரவசத்தை -குறிப்பிட்ட அந்த நேரத்தில் கிளர்ந்த  மன அசைவுகளை அசை போடுவது ஓர் ஆனந்தம்தான்.

இலக்கியத்தில் உட்கலந்து போவதிலுள்ள ஒரு நன்மை அல்லது விசித்திரம் என்னவென்றால்,வாழ்வின் எந்தத் தருணத்திலும் - அது மிக மிக நெருக்கடியானதாக இருக்கும்போதும் கூட - நம்மை அறியாமலே அந்த இலக்கிய வரிகள் நம் மூளைக்குள் மின்னலடிப்பதுதான்.
சில வேளைகளில் வாய்தவறி அவை வெளிப்படவும் செய்யும்போது பிறரால் நகைப்பிற்காளாகும் நிலை கூட நேர்வதுண்டு.
ஆனாலும் பழகிய வாய்க்கும்,யோசிக்கும் மனதிற்கும் பூட்டுப் போட முடிவதில்லை.
துணையே இல்லாத வேளைகளில் அதுவே அருந்துணையாகவும் கூட ஆகி விடுவதுண்டு.


என் பயணத்தில் துணை வந்த சில இலக்கிய (நவீன சமகால இலக்கியம் உட்பட) வரிகள் இப் பதிவில்....

’தீதும் நன்றும் பிறர் தர வாரா’’ -புறநானூறு.


‘’எத் திசைச் செலினும் அத் திசைச் சோறே’’-புறநானூறு


‘’நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’’-அப்பர்


‘’போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’’-ஆண்டாள்

’’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
  மாளாத காதல் நோயாளன் போல..’’-குலசேகர ஆழ்வார்


‘’யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’’-கம்பன்

’’ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்றுள்ளதேல்
  அதனுடைப் பொருள் நாளை விளைந்திடும்’’-பாரதி


‘’செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை’’ -பாரதிதாசன்

’சூரியன் மறைந்து விட்டதே என்று அழாதே..
  நிலவானது உன் வாழ்விலும் ஒளிரும்..
 நிலவும் மறைந்து விடுமே என்று கலங்காதே
 அங்கே..
  நட்சத்திரங்களாவது மின்னிக் கொண்டிருக்கும்’’ -தாகூர்(மொழிபெயர்ப்பு)

’’சிறைகள் பூட்டப்படுவதற்கு மட்டுமல்ல;அவை திறக்கப்படவும்   வேண்டும்.  
இல்லையென்றால் அவை தகர்க்கப்படும் - ஜெயகாந்தன்

’கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும்,அதிகமாகத் தெரிந்து கொள்ள முற்படும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக்கோட்டை இது.அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.அப்படியானால் இதற்கு முடிவு என்ன.
திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா?’’
                                                       -’ஜெ.ஜெ.சில குறிப்புக்களில் சுந்தரராமசாமி

‘’நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டவ் திரியை இழுத்துவிட வேண்டும்;மண்ணெண்ணெய் கிடைக்கும்போது வாங்க வேண்டும்;மழைக்காலத்தின் கவலை அரிசி;...மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்;வெயில் காலத்தில் அப்பளம்;பழங்கள் வரும் காலத்தை ஒட்டி ஷர்பத்,ஜூஸ்,ஜாம்......
மண்டையெல்லாம் பூச்சி,ஊறுகாய்,சுண்ணாம்பு என்று அடைத்திருக்காவிட்டால்...
மூளையின் இழுப்பறைகளை இவற்றை எல்லாம் போட்டு அடைத்திருக்காவிட்டால்...
ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்.
தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம்.
புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம்.
கைலாச பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம்.
குகைகளுக்குள் ஓவியம் தீட்டி இருக்கலாம்.
.....போர்கள்,சிறைகள்,தூக்குமரங்கள்,ரசாயனயுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கி இருக்கலாம்.
நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்....
சரியான அளவில் எல்லாம் இடப்பட்ட சமையலில்...
காதிலும்,கழுத்திலும்,நுதலிலும் உறுத்திய நகையில்
பலம் என்று எப்படி நினைத்துக் கொண்டீர்கள்.
முங்குங்கள் இன்னும் ஆழமாக.
அடியை எட்டியதும் உலகளந்த நீரைத் தொடுவீர்கள்.
சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு கொள்வீர்கள்.

உங்கள் யோனியும்,ஸ்தனங்களும்,கருப்பையும் கழன்று விழும்.
சமையல் மணம் தூரப் போய்விடும்.

பால் தன்மை அற்ற நீங்கள்...

அதில் சிக்காத நீங்கள்,

அதில் குறுகாத நீங்கள்,

அதனினின்றும் விடுபட்ட நீங்கள்

அதைத் தொடுங்கள்.
தொட்டு எழுங்கள்
அதுதான் பலம் ; அதனின்றுதான் அதிகாரம்’’                                  
-வீட்டின் மூலையில் ஒரு  சமையலறை 
நெடுங்கதையில்  ’அம்பை’

’வாழ்கையில் பாசம்,தியாகம்,உறவுகள் என்பதற்கெல்லாம் என்ன பொருள்?
 அதை நம்பி வாழும் வாழ்க்கை முழுமை கொண்டதாகுமா?
 ஆகாது என்றே நம் மரபு நமக்குச் சொல்லியுள்ளது.
 உறவுகள் மாயை என்றும்,அதில் ஈடுபடுகையிலேயே அது மாயை என்ற உணர்வு தேவை என்றும் அது மீள மீளக் கூறுகிறது.
அதற்கு அப்பால் செல்லும் தேடலும்,பிடிப்பும் மனிதனுக்குத் தேவை.
உறவுகளைப் பற்றுதல் போலவே விடுதலும் முக்கியமானது என்று நம் மரபு ஆணை இடுகிறது.
விடாதவனுக்கு வீடுபேறு இல்லை என்று அது சொல்கிறது.
ஒற்றை இலக்கையே வாழ்வின் சாரமாகக் கொண்டு உழைக்கும் மனிதர்கள் அந்த இலக்கு எய்தப்பட்டு ‘உரிய வெற்றிக் கொண்டாட்டம்’முடிந்ததும் ஆழமான வெறுமையைச் சென்றடைகிறார்கள்.
அது லௌகீகமான இலக்காக இருக்கும்போது வெறுமை மேலும் மேலும் பெரிதாகிறது.
இது ஒரு முக்கியமான மானுட அவலம்.  - ஜெயமோகன்(ஒரு கட்டுரையில்)

இத்தனையும் சொல்லிக் குறள் சொல்லாமலா?

‘’யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’’


.

21.2.10

’நினைக்கப்படும்’ ஜெயந்தன்

ஜெயமோகன்,சுரேஷ் கண்ணன், கார்த்திகா வாசுதேவன் ஆகியோரின் பதிவுகளிலிருந்து திரு ஜெயந்தன் அவர்கள் காலமான செய்தியைத் தாமதமாகவே தெரிந்து கொண்டதால்,இது சற்றுக் காலம் தாழ்ந்த அஞ்சலிதான் என்றபோதும்,   நினைவுகூர்ந்தே ஆக வேண்டிய  தரமான எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர்   ஜெயந்தன் என்பது நிராகரிக்கப்பட முடியாத உண்மை.




 இவரது படைப்புக்கள் பலவும் வெகுஜன இதழ்களிலேயே மிகுதியாக வெளிவந்திருந்தபோதும் ,ஜெயகாந்தனைப்போலவே இதழ்களின் போக்குக்காகப்  படைப்பின் தரத்தைக் குறைத்துக் கொள்ள ஒப்பாதவர் ஜெயந்தன்.

’இத்தனை வெள்ளத்தை இந்த மேகம் எத்தனை நாள் சூல் கொண்டிருந்ததோ’என்று வியக்க வைக்கும் வகையில் அடைமழை கொட்டித் தீர்ப்பது போலத் தன் உள்ளத்தில் கருக் கொண்ட செய்திகளைக் கதை வெள்ளமாகப் பொழிந்து தீர்த்தவர் என்று,ஜெயகாந்தனைப் பற்றி ஒரு முறை ஜெயந்தன் குறிப்பிட்டது அடிக்கடி நினைவுக்கு வருவதுண்டு.
எண்ணிக்கை அளவில்  அப்படிக் கொட்டித் தீர்த்தவரில்லை ஜெயந்தன் என்றாலும் கூடத் தமிழ்க் கதை வெளியில் அவரும்  குறிப்பிட்ட சில முத்திரைகளைப் பதித்துவிட்டே சென்றிருக்கிறார்.
நினைக்கப்படும்’என்ற அவரது நாடகத்தை என் கல்லூரிப் பணிக்காலத்தில் மாணவியரை வைத்து  அரங்கேற்றியதும்,
 ‘80களின் நடுவில்,மதுரையில் ஒரு முறை அவரைச் சந்தித்து உரையாடியதும்,
அவர் செய்து வைத்த அறிமுகத்தின் வழியாகவே, என் முதல் சிறுகதைத் தொகுப்பு நர்மதா வெளியீடாக வெளிவந்ததும்  ,
‘கிளி’ என்ற அவரது குறுநாவலைப் படித்துவிட்டு அவருக்கு எழுதிய விமரிசனம் கண்டு - பெண் பற்றிய ஒரு படைப்புக்கு அது குறித்த சரியான புரிதலுடன் ஒரு பெண்ணிடமிருந்தே வந்த எதிர்வினைக்கு மகிழ்ந்து அவர் கடிதத்தின் மூலம் அளித்த மறுமொழியும்-
ஜெயந்தன் சார்ந்த தனிப்பட்ட அனுபவங்களாய் உள்ளத்தில் என்றும் உறைந்திருப்பவை.
ஜெயந்தனின் கதைகளில் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்றவைகளும்(’அவள்’-1981,’நினைக்கப்படும்’நாடகமும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றதே) ,பாலுமகேந்திராவால் குறும்படமாக்கப்பட்டவைகளும் (’பாஷை’)உண்டு.

மனிதத்தின் குறைநிறைகளைப் புறவயமான பார்வையோடு கூடிய சமூக சிந்தனைகளோடு கலைப்படைப்புக்களாக ஆக்கித் தந்த ஜெயந்தனின் எழுத்துக்கள் அவர் பெயரை என்றென்றும் சொல்லிக் கொண்டிருக்கும்.
பி.கு;ஜெயந்தனைப் படிக்க....
 ‘நிராயுத பாணியின் ஆயுதங்கள்’என்ற தலைப்பில்,
ஜெயந்தனின் படைப்புக்கள் வம்சி புத்தக நிலையத்தால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. வம்சி புக்ஸ்,19,டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை,
606 601
 
"இந்தச் சக்கரங்கள்”, குறுநாவல், ஜெயந்தன், விலை ரூ.70/- தோழமை வெளியீடு, 5-டி, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78.
 
ஜெயந்தன் கதைகள் (பகுதி – 2)  ராஜராஜன் பதிப்பகம்.
 
’சம்மதங்கள்’-சிறுகதைத் தொகுப்பு,நர்மதா வெளியீடு
 
கதை அரங்கம் மணிக் கதைகள்(2),மீனாட்சி புத்தக நிலைய வெளியீட்டில் ‘குணாலட்சுமி’என்ற ஜெயந்தனின் சிறுகதை இடம் பெற்றுள்ளது.
 
திரு விட்டல்ராவ் தொகுத்திருக்கும்’இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்’(3)இல் ஜெயந்தனின் ‘மொட்டை’ சிறுகதை சேர்க்கப்பட்டிருக்கிறது.

நேர்காணல் - பகுதி 3 (பொது)

(வடக்குவாசல் இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி)

சொற்பொழிவு மேடைகளில் கிட்டிய ஏதாவது குறிப்பிட்ட அனுபவத்தைப் பகிரலாமா? பட்டி மன்றங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

ஒரு வகையில் சொல்லப் போனால், தரமான இலக்கியச் சொற்பொழிவுகள் தான் இளங்கலை வேதியியல் மாணவியாக இருந்த என்னை, இலக்கியக் கல்வியின்பால் ஈர்த்துச் சென்றிருக்கின்றன.
பட்டிமன்றம் என்ற வடிவம், தமிழகத்தில் அரும்பு விட்ட இடங்களில் மிகக் குறிப்பானது காரைக்குடி கம்பன் கழக மேடை.
60களில் நிகழ்ந்த காரைக்குடி கம்பன் விழாச் சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள் ஆகியவை நுட்பமான பல ஆய்வுகளுக்கு நிகராக மதிப்பிடக்
கூடிய செறிவும், உள்ளடக்கமும் கொண்டவையாக இருந்தவை. அந்தச் சூழலில் வளர்ந்து... அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன், திருச்சிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், இடதுசாரிச் சிந்தனை கொண்ட பேராசிரியர் எஸ்.ஆர்.கே எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் (கம்பனும், மில்டனும் நூலாசிரியர்), பாஸ்கரத் தொண்டைமான், கம்யூனிஸ்ட் தலைவர் திரு ஜீவா, நீதியரசர் மு.மு.இஸ்மாயில் ஆகியோரின் செறிவான தமிழ்ப் பேச்சுக்களைக் கேட்டுப் பழகியே முதுகலை தமிழுக்கு வந்து சேர்ந்தேன் நான்.
 
ஆனால், பிற்பாடு மேடைத் தமிழ் நீர்த்துப் போய்விட்டது கண்டு... குறிப்பாகப் பட்டி மன்றங்கள் வெறும் பொழுதுபோக்கு கேளிக்கை அரங்கங்கள் போல மாறிப்போய் விட்டது கண்டு மிகவும் மனம் வெதும்பிப் போனேன். அது பற்றி வெளிப்படையாக விமரிசனங்கள் கூறி அவற்றில் பங்கேற்போரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு.
 
கூடியவரை கருத்துக்கு முதன்மை அளிக்கும் இலக்கிய, சமூக - தனிச் சொற்பொழிவு மேடைகளையும் - பெரும்பாலும் கல்வி நிலையங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களையும் மட்டுமே என் பங்கெடுப்புக்கு நான் தேர்வு செய்து கொள்கிறேன்.
 
நல்ல கருத்துக்களைத் தேவையற்ற துணுக்குத் தோரணங்கள் இன்றிச் சுவையாக - செறிவாகத் தரும்போது அவற்றையும் பார்வையாளர்கள் ஆழமாகவே உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதையே என் மேடை அனுபவங்கள் எனக்குப் புரிய வைத்திருக்கின்றன. மேடைப் பேச்சினால் யாரையும் மாற்றிவிட முடியாதென்ற போதும் வலுவான வாதங்கள், ஒரு சில மனங்களிலேனும் சின்னச் சின்ன அசைவுகளையாவது ஏற்படுத்திவிடக் கூடியவைதானே?
 
பல்கலைக் கழகங்களில் தற்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பற்றியும் ஆய்வு மாணவ மாணவியர் படும் துயரங்கள் பற்றியும், பல்கலைக்கழகங்களில் நிலவி வரும் சரியற்ற தன்மையையும் நீங்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகிறீர்கள். இது குறித்து சில இடங்களில் எழுதியும் இருக்கிறீர்கள். இது குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஆய்தல்' என்ற சொல்லுக்கு "உள்ளதன் நுணுக்கம்' என்று விளக்கம் தருகிறது தொல்காப்பியம்.
அப்படி நுணுகிப் போகாவிட்டாலும் கூடச் சரியான புரிதல் கூட இல்லாமல், எடுத்துக் கொண்ட பொருளை நுனிப் புல் மேய்ந்தபடி பட்டம் பெற முனையும் முனைவர்களும், அந்தப் படுபாதகத்துக்குத் துணைபோகும் வழிகாட்டிகளும் என்னைக் கோபப் படுத்துகிறார்கள். பதவி உயர்வுக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் தமிழாய்வு தரம்குன்றிப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாத என் மன உளைச்சலின் வடிகால்களே அக் கட்டுரைகள்.

மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?
கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு....

சொந்தத் தரப்பின் மீதே கல் வீசுவதாக ஒரு சிலர் கோபப்பட்டாலும், நேர்மையான பல பேராசிரியர்கள் என் கருத்துக்களைத் தயக்கமின்றி ஏற்று வழி மொழிகிறார்கள் என்பதே எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கல்வித் துறையிலிருப்போரின் மனச்சாட்சியை இலேசாகச் சென்று தைத்தாலும் அதுவே அவற்றின் வெற்றியாக அமையும். 

 வேதாத்ரி மகரிஷி அவர்களின் யோகக்கலையில் ஆர்வம் செலுத்துகிறீர்கள். டெல்லியில் உள்ள சமுதாய சேவை மையத்திலும் ஆர்வத்துடன் பங்காற்றி வருகிறீர்கள். யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி? யோகாசனப் பயிற்சிகள் மூலம் உடலைப் பேண எண்ணித்  
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் சனி, ஞாயிறுகளில் நடக்கும் சமுதாய சேவை மையத்தின் மனவளக்கலை வகுப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தேன். இந்த அமைப்பு வழங்கும் SKY-SIMPLIFIED KUNDALINI YOGA - எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி முறை என் வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்றபடி அமைந்திருந்தது; மேலும் வேதாத்திரியத் தத்துவங்கள் சமயம் சாராதவையாகவும், முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படை கொண்டவையாகவும் இருப்பதைக் கண்டு அவற்றில் என் ஈடுபாடு அதிகரித்தது. பாரதியார் பல்கலைக்கழகமும், ஆழியாறு அறிவுத் திருக்கோயிலும் இணைந்து நடத்தும் "யோகமும், மனித மாண்பும்' என்ற முதுகலைப் படிப்பில் (தொலை நிலைக்கல்வி) சேர்ந்து யோகக்கலையைக் கல்வியாகப் பயிலும் நிலை வரை அந்த ஆர்வம், என்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

வாழ்க்கை குறித்த உங்கள் பார்வை என்ன?


"நீர்வழிப் படூஉம் புணை போல ஆருயிர் முறைவழிப் படூஉம்''
என்ற புறநானூற்று வரிகள் வாழ்வின் சித்தாந்தத்தை எனக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கின்றன.
"வாழ்ந்தே தான் தீரணும் வாழ்க்கை' என்ற ஞானக் கூத்தனின் வரிகள் மெய்தான் என்ற போதும், வாழும் காலம் வரை அதைப் பயனும், பொருளும் மிகுந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் இயலும் காலம் வரை வாழ்வின் எந்தக் கட்டத்திலும் தேடலை நிறுத்தி விடாமல், தேக்கத்தை அனுமதித்து விடாமல் தொடர்ந்து உற்சாகமாக... சுறுசுறுப்பாக ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.
 
நன்றி;
http://www.vadakkuvaasal.com/

18.2.10

நேர்காணல் - பகுதி 2 (பெண்ணியம்)

(வடக்குவாசல் இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி)

பெண்ணியக் கோட்பாடுகளின் ஆக்கபூர்வமான தன்மையாக எதைக் கருதுகிறீர்கள்?

பெண்ணின் வாழ்க்கைத் தரம் - கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய பலதுறைகளிலும் இன்று மேம்பட்டிருக்கலாம். பெண் குறித்த சமூக நிலைகளிலும் சில வரவேற்கத் தக்க மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம். ஆனால் ஆணுக்கு நிகரான கல்வி, பொருளாதாரத் தற்சார்பு முதலியவற்றைப் பெற்ற பிறகும் கூடப் பெண்ணை இரண்டாந்தரமாகவே கருதும் மனப்போக்கு இன்றளவும் கூட நமது சமூக அமைப்பில் நிலவி வருகிறது என்பதைப் பாசாங்குகள் இன்றி - திறந்த மனதுடன் நேர்மையாக யோசிக்கும் எவராலும் புரிந்து கொண்டுவிட முடியும்.
பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத்தடைகள், இறுக்கங்கள், மரபுவழிக் கடமைகள் ஆகியவை இன்னமும் கூட அவளைத் தளைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆயிரம் சட்டங்கள் வகுக்கப்பட்டாலும் அவற்றால் பயன் கொள்ள முடியாத பெண்கள், அடிப்படை உரிமைகளுக்குக் கூட அல்லலுறும் பெண்கள் சாதி, இனம், மொழி, வர்க்கம் ஆகிய எல்லைக் கோடுகளையெல்லாம் கடந்து எல்லா மட்டங்களிலும் இன்றும் கூட இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேற்குறித்தவற்றைப் பொறுப்பு உணர்வோடு சிந்தித்துப் பெண்ணுக்கு அந்நிலையிலிருந்து மீட்சி அளிக்கக்கூடிய வழிமுறைகளைக் காண்பதும், மனித சமத்துவம் மலினப்படாத - பால் பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயல்வதும், பெண் என்பவள் ஒரு தனிப்பட்ட மனித உயிர் என்ற கருத்தை இரு பாலாரின் நெஞ்சிலும் ஆழமாகப் பதியச் செய்வதும் இச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நகர்வுகளுமே ஆக்க பூர்வமான பெண்ணிய நிலைப்பாடாக இருக்க முடியும் என்பது என் திடமான கருத்து.
என் சிறுகதைகள் பலவும் பெண் சிக்கலை மையப்படுத்தியவையே.

பெண்மொழி உருவாக்கம் என்ற புதிய சொல்லாடல் தற்போது படைப்புலகில் அதிகமான பயன்பாட்டில் உள்ளது. பெண் அல்லது ஆண் பாலுறுப்புக்கள் குறித்த சொற் பிரயோகங்களைத் தங்கள் படைப்புக்களில் சில பெண் படைப்பாளிகள் கலகத்தின் குரலாக வெளிப்படுத்துவதாகச் சொல்வது குறித்து உங்கள் கருத்து என்ன?

இயற்கையான உடற்கூற்று வேறுபாட்டையும், பாலின வேறுபாட்டையும் புரிந்து கொள்ளத் தவறியதனாலேயே உடல் சார்ந்த ஒடுக்குதல்களுக்கும், வன்முறைகளுக்கும் பெண் ஆளாக நேர்ந்திருக்கிறது.

பெண்ணை,

உடல் சார்ந்தே பார்க்கும் பார்வை,

உடலாக மட்டுமே பார்க்கும் பார்வை,

உடலை வைத்தே அவளை மதிப்பீடு செய்யும் பார்வை

இவையெல்லாம் அறிவுத் தெளிவும் சிந்தனை உரமும் பெற்றுவிட்ட ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு அலுப்பூட்டுவதாக - மனக் கொதிப்பை ஏற்படுத்துவதாக - அவளால் பொறுத்துக் கொள்ள இயலாததாகப் போனதன் விளைவாகவே பின் நவீனக் காலத்தின் எதிர் வினையாகப் பெண்மொழி பீறிட்டெழுந்திருக்கிறது.

பொதுவாக மொழியைக் கையாளும் அதிகாரம் எவர் வசத்தில் உள்ளதோ அதை ஒட்டியே மொழியும் வடிவமைக்கப்படுவது இயல்பு;
ஆணாதிக்க சமூகத்தில் ஆண் வயப்பட்டதாக இருந்த மொழியைப் பெண் தன் வசப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியே பெண்மொழி.
அது, ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிரான ஒரு மாற்று அரசியல்.
தானனுபவித்துள்ள துன்பங்களைச் சொல்லத் தன் மொழியைத் தானே தேர்ந்தெடுக்கும் தலித் படைப்புக்களைப் போலப் பெண்ணும் தன் தளைகளை, வேதனைகளை, அவலங்களை, ஆற்றாமைகளைச் சொல்ல ஒரு தனிப்பட்ட மொழியை உருவாக்க வேண்டும் என்பதே பெண்மொழி குறித்த நேர்மையான புரிதலாக இருக்க முடியும்.
 "பெண் இருப்பைப் பற்றியும், பெண் உடலைப் பற்றியும் சமூக, குடும்ப, நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவளுக்கெதிரான கருத்தாக்கங்களையும், மதிப்பீடுகளையும் சிதைப்பதும் - அவற்றின் வன்முறைக்கு எதிராகக் குரல் எழுப்புவதும் தான் மாற்று அரசியல்'' என்று குறிப்பிட்டுள்ள முன்னணிப் பெண் கவிஞராகிய மாலதி மைத்ரி மற்றுமோரிடத்தில் "பெண் பாலுறுப்புக்களைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்மொழி உருவாகி விடாது'' என்று கூறியிருப்பதையும் இன்றைய நவீன, பின் நவீனப் பெண்ணியப் படைப்பாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நான் வைக்க விழையும் பணிவான ஒரு வேண்டுகோள்.

பெண் அரசியல், பெண்மறுப்பு அரசியல் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

வரதட்சிணை, பெண் மீதான குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, தனித்த இருப்பு மறுக்கப்படுவதன் மீதான கழிவிரக்கம் ஆகிய கருப்பொருள்களைத் தாங்கி வந்த கவிதைகளையும், சிறுகதைகளையும் பெண்ணின் அந்தரங்க டயரிக் குறிப்புக்களாகவும், சோகப் புலம்பல்களாகவும் புறந்தள்ளி வந்த அறிவுஜீவி ஆண்கள் கூட்டம் இப்படிப்பட்ட பெண் கவிதைகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பதன் பின்னணியிலுள்ள நுட்பமான அரசியலைப் பெண் எழுத்தாளர்கள் காலம் தாழ்த்தாமல் புரிந்து கொண்டாக வேண்டும்.

பெண்ணின் சுயத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆண் மனோபாவம் பெண் எழுத்தைப் பல வகைகளில் கேலியும் கிண்டலும் செய்யவே முனைகிறது என்பதைப் பெண் படைப்பாளிகள் நினைவில் கொண்டாக வேண்டும்.

பெண் பற்றிய சமூகக் கருத்து ஆக்கங்களுக்கு எதிராகப் பெண்மொழி கட்டமைக்கப்பட வேண்டுமென்பதே பெண்ணிய நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

வாராது போல் வந்த மாமணியாய் வாய்த்துக் கொண்டிருக்கும் பெண்ணியப் புரிதல்கள் பலவற்றையும் உடைத்துப் போடுவதைப் போல, அவற்றுக்கு நேர் எதிரான போக்கிலேயே இன்றைய பெண் கவிதைகள் பலவும் இயங்கிக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

படைப்பின் தேவைக்கும், சமூகத்தின் தேவைக்கும் அப்பாற்பட்ட வகையில் பாலியல் வெளிப்பாடுகள் மிகுதியாகக் கையாளப் படுகையில், பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையான ஆத்மார்த்தமான நோக்கம் நீர்த்துப் போய்விடுவதுடன் கவிதையில் இடம் பெறும் பிறசெய்திகள் மட்டுமே மலிவான ரசனையுடன் எதிர்கொள்ளப்படுகின்றன.

இன்னும் கூட வெளிப்படையாகச் சொல்லப் போனால் இத்தனை நாள், தான் எழுதி வெளிச்சப்படுத்திய பெண்ணுடலை, வேட்கையை அவளே வெளிச்சப்படுத்த முன்வருகையில் அவனுக்கு அது இன்னுமல்லவா தீனி போடுவதாக ஆகி விடுகிறது?

அதிர்ச்சி மதிப்பிற்காகவும், பிரமிப்பை ஏற்படுத்துவதற்காகவும் மட்டுமே கையாளப்படும் பாலியல் படிமங்கள் இலக்கிய வளர்ச்சி, பெண்ணிய முன்னேற்றம் இரண்டுக்குமே ஊறு விளைக்கும் நச்சுத் தன்மை கொண்டவை.

மதுரையில் பணியாற்றிய போது பெண்ணிய அமைப்புக்கள், பேரணிகள் போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டு இயங்கி இருக்கிறீர்கள். எழுதுவது, பேசுவது என்கிற விஷயங்களை விட களங்களில் பெறும் அனுபவங்கள் நேரடித்தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட குறிப்பிடத் தகுந்த அனுபவங்கள் எதையாவது எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணி ஆற்றியதால், பெரும்பாலான நேரங்களில் பாடங்களோடு ஒருங்கிணைத்துப் பெண்ணியக் கோட்பாடுகளைச் சரியான புரிதலுடன் முன் வைப்பதற்கு ஏற்ற களமாக என் வகுப்பறையே எனக்கு அமைந்து போனது;
அவற்றைச் சரியான கோணத்தில் உள் வாங்கிக் கொண்டு பல பெண்ணியச் சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும், இயக்கப் போராளிகளும் கூட என் மாணவிகளிலிலிருந்து உருவாகி இருக்கிறார்கள் என்பதைப் பெண்ணியம் சார்ந்த என் முக்கியமான பங்களிப்பாக நான் எண்ணுகிறேன்.

திரைப்படங்களும், திரைப்பாடல்களும் புனைகதைகளும் தரும் பெண் பிம்பம் என்பது எவ்வளவு பொய்யானது, மாயையானது என்பது அவர்களுக்குப் புரியத் தொடங்கியதும் அவர்களே எனக்கும் ஒரு படி மேலே சென்று அவற்றை மறுதலிக்கத் தொடங்கினார்கள்,
ஒரு முறை நகைச்சுவை என்ற போர்வையில் பெண்ணைக் கொச்சைப்படுத்தத் தொடங்கிய பேச்சாளர் ஒருவரைத் துரத்தித் துரத்திக் கேள்விகள் கேட்டு மடக்கி "இனி இந்தக் கல்லூரிப் பக்கமே நான் காலடி வைக்க மாட்டேன்' என்று சொல்லும் நிலைக்கு என்னுடைய மாணவிகள் அவரை இட்டுச் சென்றார்கள் - சுற்றிச் சூழ்ந்த பல விமரிசனக் கணைகளுக்கு அஞ்சாமல் (சக பேராசிரியர்கள் கூட மாணவிகளை நான் பாழடிப்பதாகக் குற்றம் சாட்டி, "உங்கள் பெண்ணியம்' என்று என்னிடம் கேலி பேசியதுண்டு) என் பணியைத் தொடர்ந்தேன்.

வகுப்பறை தவிர, மதுரையில் இயங்கி வந்த சில தன்னார்வப் பெண் அமைப்புக்களிலும் நான் ஆலோசகராகவும், இயக்கவாதியாகவும் பங்காற்றியிருக்கிறேன்.

குறிப்பிட்ட ஒரு சூழலில் - மிக நெருங்கிய வட்டத்தில் பாதிப்புக்காளாகி இறந்து போன ஒரு பெண்ணுக்காக நியாயம் கோரிப் புற நெருக்குதல்கள், அபாயங்கள் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் நானும் என் நண்பர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் வரை கூடச் செல்ல நேர்ந்திருக்கிறது; மதுரைத் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபடி, அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன் வைத்த அந்தக் கணங்கள் வாழ் நாளில் மறக்க முடியாதவை; அத்தனை கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் பெற்றோரே பயந்து போய் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டது எதிர்பாராத ஒரு திருப்பம் தான் என்றாலும் தொடர்ந்து சோர்வு இல்லாமல் முடிந்தவரை பெண் மீதான வன்முறைகளுக்கு எதிராக என்னால் முடிந்ததை எழுத்தால் மட்டுமன்றிச் செயலாலும் செய்திருக்கிறேன் என்ற ஆன்ம நிறைவு இருக்கிறது.

காண்க;
நேர்காணல் - பகுதி - 1

15.2.10

நேர்காணல் - பகுதி 1(படைப்பாக்கம்,இலக்கியம்)

முன் குறிப்பு:
புது தில்லியிலிருந்து வெளியாகும் ‘வடக்கு வாசல்’  ஜனவரி (2010) இதழில்,
இலக்குகளை நோக்கிய ஒரு பயணம்
என்ற தலைப்பில் எனது நேர்காணல் வெளியாகியிருக்கிறது.
வடக்கு வாசல் இணைய தளத்திலும் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
http://vadakkuvaasal.com/article.php?id=479&issue=66&category=2
அந் நேர்காணலைக் குறிப்பிட்ட சில தலைப்புக்களாகப் பகுத்து இவ் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யவிருக்கிறேன்.
(படைப்பு,சமகால இலக்கியம்,பெண்ணியம்,வாழ்க்கை ஆகியவை குறித்த என் கண்ணோட்டங்களை நேர்காணல் வழி வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பளித்த இதழாசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றி)

தொடர்ந்து..நேர்காணல்;(படைப்பாக்கம்,இலக்கியம்)



 படைப்புலகில் சிறுகதை வடிவத்தில் இயங்கிக் கொண்டிருந்த நீங்கள் இப்போது மொழி பெயர்ப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள். உதாரணத்துக்கு தஸ்தயவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் போன்ற செவ்வியல் படைப்பு. இப்போது நீங்கள் செய்து வரும் 'இடியட்' புதினத்தின் மொழிபெயர்ப்பு. படைப்பாக்கம் குறித்த உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

மொழிபெயர்ப்புத் துறைக்கு நான் வந்தது மிக மிகத் தற்செயலான ஒரு நிகழ்வுதான். பணி ஓய்வு பெற்று, மதுரையிலிருந்து தில்லிக்கு இடம் பெயரவும் நான் ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு சூழலில் - மதுரை, பாரதி புத்தக நிலையத்தின் உரிமையாளர்  தஸ்தாயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்ப்புச் செய்து தருமாறு என்னை அணுகினார். மொழியாக்கத் துறையில் அதுவரையில் முனைந்ததில்லை என்பதாலும், நாவலின் நீட்சி கருதியும் முதலில் நான் சற்றுத் தயங்கியது உண்மைதான். ஆனாலும் அப்போதைய சூழலில்-36 ஆண்டுகள் என் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்து வந்த ஆசிரியப் பணியிலிருந்து நான் விடை பெறும் ஒரு தருணத்தில், அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஆக்க பூர்வமாக இட்டு நிரப்பும் ஒரு பிடிமானமாக - பற்றுக்கோடாக, அந்த மொழிபெயர்ப்புப் பணியை நான் ஏற்றுக் கொண்டேன்.
மேலும் வேறு சில முக்கியமான பொறுப்புக்களும் எனக்காகக் காத்திருந்த அந்தச் சூழலில், சொந்தப் படைப்பாக்கத்துக்குப் போதிய நேரம் ஒதுக்க முடியாத ஒரு நிலையில், எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொடர்ந்து எழுத்துடனும், இலக்கியத்துடனும் ஊடாடவும் அந்த மொழியாக்கப் பணி எனக்கு வாயில்களைத் திறந்து வைத்தது.
அதற்குள் ஆழ்ந்து ஈடுபடத் தொடங்கிய பின், அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளவும் தொடங்கியது; அயல் மொழி நாவலொன்றை வெறுமே படித்துவிட்டுப் போவது போலல்லாமல் வார்த்தை வார்த்தையாக மொழிபெயர்ப்புச் செய்து கொண்டு போகும்போது மூலநூலாசிரியனுக்கு மிக நெருக்கமாகச் சென்றுவிடும் அனுபூதி நிலை - ஒரு மகத்தான தரிசனம் - காட்சியாவதை நான் உணர நேரிட்டது.

மொழிபெயர்ப்பு வெளியானபோது, நான் எண்ணியதை விட இலக்கிய வட்டத்தில் அது பெற்ற வரவேற்பும் எனக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. அதன் காரணமாகவே தொடர்ந்து தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட்’ நாவலை மொழியாக்கும் பணியையும் ஏற்றுக் கொண்டேன்.இப்பொழுது அது கிட்டத்தட்ட நிறைவுறும் நிலை.

ஆனாலும் மொழியாக்கப் பணி என்பது மட்டுமே என் எழுத்தின் முடிவான இலக்கல்ல.
சிறுகதைகள் - குறிப்பாக இலக்கிய, இதிகாச, புராணங்களை மீட்டுருவாக்கம் செய்யும் சிறுகதைகள் பலவற்றுக்கான கருப்பொருள் என் இதயத்தில் உறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிச்சத்துக்கு இட்டு வந்தாக வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டில் இந்தியப் பெண்கள் சுமக்க நேர்ந்த பல சிலுவைகளை ஒட்டு மொத்தமாகச் சுமந்து, ஆனாலும் நிமிர்ந்தே நின்ற என் தாயின் கதையை எல்லோரும் படிக்கக் கூடிய வகையில் ஒரு நீண்ட நாவலாக அளிக்க வேண்டும். பலமுறை தொடங்கிப் பாதியில் நிற்கும் அதை முழுமை செய்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியப் பெண்கள் சுமக்க நேர்ந்த பல சிலுவைகளை ஒட்டு மொத்தமாகச் சுமந்து, ஆனாலும் நிமிர்ந்தே நின்ற என் தாயின் கதையை எல்லோரும் படிக்கக் கூடிய வகையில் ஒரு நீண்ட நாவலாக அளிக்க வேண்டும். பலமுறை தொடங்கிப் பாதியில் நிற்கும் அதை முழுமை செய்து முடிப்பதே என் எழுத்தின் குறிக்கோள்.

நீண்டகால ஆசிரியப் பணி வாழ்வில் நான் எதிர்ப்பட்டிருக்கும் வெவ்வேறு குணாதிசயம் கொண்ட பல்வேறுபட்ட மனிதர்கள் அவ்வப்போது என் நெஞ்சில் கும்மி கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒரே கண்ணியில் இணைத்து ஒரு நாவலை எழுத வேண்டும்.

தமிழ் நவீன இலக்கியம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டு வருகிறதா? செவ்வியல் இலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் பரிச்சயம் கொண்ட ஒரு பேராசிரியராக, முனைவராக உங்கள் பார்வை மற்றும் கருத்து என்ன?

இந்தக் கேள்விக்கு ஒரு பேராசிரியர் அல்லது முனைவர் என்ற நிலையிலிருந்து பதில் கூறாமல் '60 களிலிருந்து கடந்த நாற்பது ஆண்டுகளாக  வாசிப்பைத் தொடர்ந்து வரும் ஒரு வாசக நிலையிலிருந்து விடையளிக்க விரும்புகிறேன்.
உவமை என்ற ஒரே அணி, வெவ்வேறு அணிகளாக வேடம் புனைந்தபடிவெளிப்பாடு கொள்வதைப் போலவே இலக்கியமும் கால மாற்றத்துக்கு ஏற்றபடி பல்வகைக் கோலங்களைப் பாங்குறப் புனைந்து கொண்டு வருகிறது. அவற்றின் போக்கைக் கவனமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதே தீவிர வாசகக் கடமை; அவற்றுள் எது நிலைக்கும் என்பதை முடிவு செய்வது காலத்தின் பொறுப்பு.
வெகுஜன இதழ்களைப் பொறுத்தவரை - இன்றைய சூழலில் இலக்கியத்திற்கு அங்கே சிறிதும் இடமில்லை என்பது வெளிப்படையாகப் புலப்படுவதால் ஓரளவு தரமான இலக்கிய முயற்சிகளுக்கு நாம் இலக்கிய, சிற்றிதழ்களையே நாட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அவற்றின் பெருக்கம் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதே என்ற போதும் வெவ்வேறு இலக்கியக்குழு அரசியல்களின் நெடியே அவற்றிலும் தூக்கலாக வெளிப்படும்போது நல்ல எழுத்தைத் தேடி வரும் வாசக மனம் சோர்வுக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகும் நிலையும் சம்பவித்து விடுகிறது.இன்றைய நவீன, பின் நவீனப் படைப்புக்கள் பலவும் கோட்பாட்டுச் சிறையில் அதிகமாகச் சிக்கியிருப்பதால் எழுத்தின் சாரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளப் பொறுமையற்ற வாசக வட்டம் அவற்றை அன்னியமாக உணர்ந்தபடி ஒதுங்க ஆரம்பித்து விடுகிறது. இந்தப் போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு ஆபத்தானது; இலக்கியம் நீர்த்து விடவும் கூடாது, அதே வேளையில் ஒரேயடியாக மாயவித்தை காட்டி ஒரு புதிரைப் போல ஆகிவிடக் கூடாது என்றே நான் கருதுகிறேன்.

இன்றைய படைப்புக்கள், அழகியலுக்கு இடமளிக்கும் அதே வேளையில் கருத்து வெளிப்பாட்டுக்கும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

2.2.10

தலைநகரின் தமிழ்ப் பதிவர்களுடன்....

                                                                                   
தில்லியில் வசிக்கத் தொடங்கி மூன்று ஆண்டுகளானபோதும், இந்த நகரம் எனக்கு இன்னும் கூடப் புதியதாகவும்....சில விஷயங்களில் மிரட்சியும்,தயக்கமும் ஊட்டுவதுமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
என் அலைவரிசையில் எனக்குக் கிடைத்த அறிமுகங்களும் இங்கே குறைவுதான்.

தில்லி தமிழ்ச்சங்கம்,வடக்குவாசல் இதழ்,மனவளக்கலை மன்றங்கள் ஆகியவற்றால் வாய்த்த தொடர்புகளும்,நட்புக்களுமே தமிழ்நாட்டிலிருந்து நெடுந்தூரம் விலகியிருக்கும் தாகத்தை,ஏக்கத்தை அவ்வப்போது தீர்த்து வைத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் இப்போது புதிதாகச் சேர்ந்திருப்பது ,
தில்லி வலைப் பதிவர் வட்டம்.

வடக்குவாசல் இணைய தளத்தையும்,
முன்பு சனிமூலை என்ற பெயரில் வடக்குவாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் எழுதிக் கொண்டிருந்த வலைப்பூவையும் தவிர,(அது,இப்பொழுது ராகவன் தம்பி பக்கங்களாக வடக்குவாசல் இணையத்துடனேயே இடம் பெற்று வருகிறது)
வேறு தமிழ்ப்பதிவர்கள் எவரையும் தில்லியில் நான் அறிந்ததில்லை.

முத்துலட்சுமி என்ற வலைப் பதிவரிடமிருந்து எதிர்பாராத ஒரு தருணத்தில் வந்த மின் அஞ்சல் வழியாகத்தான் பல தமிழ்ப்பதிவர்கள் தில்லியில் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.(நம்மை அறிந்தவர்களை நாம் அறியாமல் இருந்திருப்பது கொஞ்சம் கூச்சமாகக்கூட இருந்தது.)
மிகவும் சுறுசுறுப்பாகவும்,ஆர்வத்துடனும் செயல்பட்ட முத்துலட்சுமி, பத்தே நாட்களுக்குள் தில்லித் தமிழ்ப்பதிவர்கள் பலரை ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்து விட்டது,உண்மையிலேயே ஒரு சாதனைதான்.அதற்காக,அவருக்கு முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.

சந்திப்புக்கான களமாகத் தனது ‘வடக்குவாசல்’இதழ் அலுவலகத்தைப் பெருந்தன்மையோடு அமைத்துத் தந்ததோடு சிற்றுண்டி,தேநீர் முதலிய ஏற்பாடுகளைச் செய்து தந்து, இறுதியில்,இதழ்கள்,நூல்கள் என அன்புப் பரிசுகளையும் கொடுத்து நெகிழ்த்திய ஆசிரியர் பென்னேஸ்வரன்,இச் சந்திப்பின் தொடக்கமாகத் தனது இதழியல்,வலை அனுபவங்களை வந்திருந்த நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்.

தரமான பதிவுகளின் தேவை குறித்துத் திரு பென்னேஸ்வரனும்,நானும் எங்கள் கருத்துக்களை முன் வைத்தோம்.
எழுதப் பயிலும் ஆரம்பக் களமாக வலையை வைத்துக் கொள்ளாமல்...ஓரளவாவது வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்டு பிறகு எழுதுவதே உகந்ததாக இருக்கும்,அதுவே ஒட்டுமொத்தத் தமிழ் வலைகளின் தரத்தை மேம்படுத்தும் என்பது எங்களின் எண்ணமாக இருந்தது.

இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம், தனிமனித வசை பாடுவதிலும்,துதி பாடுவதிலும் மட்டுமே வீணாகிவிடக் கூடாது என்ற நியாயமான கவலையும் எங்கள் உரையாடலின்போது வெளிப்பட்டது.

வலைகளில் இடம் பெறும் பின்னூட்டங்கள் பற்றிய அவரவர் அனுபவப் பகிர்வுகள் சந்திப்பைச் சுவாரசியமானதாக ஆக்க உதவின.

சந்தித்துக் கொண்ட பதிவர்களை உண்மையிலேயே விரல் விட்டு எண்ணிவிடலாம்(ஒருகைவிரல்!!).ஆனாலும் குறைவானவர்கள் இருந்ததால் ஒரு வசதி.... மனம் விட்டு அவரவர் கருத்துக்களைச் சொல்ல,அறிமுகம் கொள்ள,தங்களின் வலைகளை அங்கிருந்த கணினியில் காட்ட நிறைய நேரம் வாய்த்தது.

சிறுமுயற்சி
என்ற வலைப்பூவில் பல்வேறுபட்ட தன் சிந்தனைகளைப் பகிரும்
முத்துலட்சுமி,(http://click1click.blogspot.com// என்பதும் இவரது வலையே).

கவிதையும்,கவிதை சார்ந்தும்
உயிரோடை யாய்ப் பொழியும் லாவண்யா சுந்தரராஜன்,(அகநாழிகை,உயிரெழுத்து,உயிரோசை போன்ற இலக்கிய,மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருபவர் இவர்)

சந்தித்ததும்,சிந்தித்ததும் குறித்த தனது கருத்துப் பகிர்வுகளை முன் வைக்கும் வெங்கட் நாகராஜ்,

குறிப்பிட்ட துறைசார் பதிவாக நவீன பாணி ஆடை அலங்காரக்கலை குறித்துத் தன் வலையில் கருத்துச் செலுத்திவரும் விக்னேஷ்வரி

பெரும்பாலும் புகைப்படங்களால் மட்டுமே தன் வலையை அணி செய்யும் மோகன்குமார்,

ஆகியோர்(நானும்,திரு பென்னேஸ்வரனும் நீங்கலாக)அன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்.
(தில்லியில் இன்னும் கூடச் சில தமிழ்ப் பதிவர்கள் இருப்பதையும் அன்று அறிந்து கொள்ள முடிந்தது)

இளம் தலைமுறைக்கே உரிய உற்சாகத் துடிப்போடு கூடிய மேற்குறித்த பதிவர்களை  நேரில் கண்டு அளவளாவியதும்,அவர்களின் தளங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததும் அன்றைய பொன் மாலையின் பயன்கள்.
தொடர்ந்து அடுத்தடுத்த சந்திப்புக்களுக்கான வாய்ப்பு நேர்கையில் ஆக்க பூர்வமான,கூடுதல் பரிமாற்றங்களுக்கான சாத்தியங்கள் நிகழுமென்ற நம்பிக்கையோடு அந்தச் சந்திப்பை இனிமையாக நிறைவு செய்து கொண்டோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....