துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.9.16

’’யாதுமாகி’’ குறித்து எழுத்தாளர்கலைச்செல்வி

’’புனைவாகவோ.. அல்லது வாழ்வின் பதிவாகவோ இருக்கலாம். ஆனால் அது சில பாணிகளைக் கடந்திருக்கிறது. முக்கியமாக கிளிஷே.. அதாவது திரும்ப திரும்ப ஒரே உத்திக்குள் நுழைந்து கொள்வதை. ....



அதிலும் எழுத்தாளர்  பெண் என்பதால் சட்டகங்கள் தாராளம். ஆனால் எழுத்தாளரோ.. தேவியோ எங்கும் குரலை உயர்த்தவில்லை. சமுதாயத்தை நோக்கிக் கேள்விகளை கேட்கவில்லை. யாரின் மீதும் பகையில்லை. ஆனால் சொல்ல வந்தவைகள் தெளிவாகப்பட்டுள்ளது. இதை எழுத்தாளரின் வெற்றி என சொல்லலாம்.’’

-கலைச்செல்வி,எழுத்தாளர்

சமுதாயத்தை ஆண்கள் தம்மை நோக்கி வளைத்து.. அதற்கேற்ப தன் சக படைப்பை பயன்படுத்துவதன் ஒரு போக்குதான்.. குழந்தைத் திருமணம்.. நிச்சயமற்ற மனிதனின் வாழ்க்கைக்குள் நிச்சயமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் புகுத்திக்.. கட்டாய வாழ்விற்குள் பெண்களை திணிக்கும் அவலம் தற்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தாலும்  அரை நுாற்றாண்டுக்கு முன்பு மிக சாதாரணமான நிகழ்வாக இருந்தது. அதிலும் சடங்குகளை முன்னிறுத்தும் பிராமண சமுதாயத்தில் இதன் தாக்கம் மிக அதிகம். மருத்துவம் வளராத அந்நாட்களில் பிள்ளைப்பேறும் அதற்கு ஈடாக மரணமும் நிகழ்ந்து கொண்டேயிருந்த நாட்களில் குதிரை ரேஸ் போல ஒரு சிறுவனின் உயிரின் மீது சிறுமியின் வாழ்க்கையை ஏற்றி.. தடம் மாற்றி.. புரட்டி .. நுாதன அடிமையாக்கி.. அடுக்களையை நிரந்தரமாக்கி.. செய்வித்த கொடுமைகள் ஏராளமே.

இலக்கியம் காலத்தையும் அதையொட்டிய சமுதாயத்தையும் தன் வழியில் தானே பதிந்து கொண்டு விடும். அப்படிதான் “யாதுமாகி“யிலும் நேர்கிறது. அறிவுத்திறன் மிக்க பிராமணர் ஒருவரின் மகள் தகப்பனை அடியொற்றி அதே திறனோடு பிறக்கிறாள். ஆனாலும் பெண் என்ற ஒற்றைத் தன்மைக்குள் அவளின் திறன்களனைத்தும் ஒடுங்கி விட, திருமணம் நடக்கிறது. அது உணரப்படும் முன்னரே மறைந்தும் போகிறது. தெரியாத.. புரியாத.. உணராத திருமணத்திற்காக அவளுக்கு நல்லுலகம் மறைக்கப்படுகிறது.. இயல்பாக.. எவ்வித குற்றவுணர்வின்றி. ஆனால் தகப்பனை இது குற்றவுணர்வாக வியாபிக்க, கல்வியால் அதை நிரப்ப முயல்கிறார். அவரும் மறைந்து போக மரபுரீதியான.. பழமைவாதியான தாய் -அந்த மரபின் நீட்சியாக என்று கூடக் கொள்ளலாம்-.. சமுதாய.. பொருளாதார நெருடல்களுக்கிடையே துறுத்தலாக தெரியும் மகளின் கல்வியை உறுத்தலின்றி கற்க உதவுகிறாள். ஆனால் அதேசமயம் மரபுகளை மீறுவதில் சிறிதும் விருப்பமில்லை அவருக்கு. அழகான யௌவனத்தில் கன்னிகாஸ்திரியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது அந்தப் பெண் தேவிக்கு. இளங்குருத்து என்பதால் புறக்காற்றுக்கு நாணலாக வளைந்து கொடுக்க முடிவதில்லை. தொடர் உதாசீனங்கள்.. கல்வி தந்த விழிப்புணர்வு.. தோழியின் கனிவு.. போன்ற காரணிகளால் அகம் மெல்ல வளரத் தொடங்குகிறது.. இரும்பாக. சூழல்கள் எத்தனை இடறினாலும் தட்டி விட்டுக் கொண்டு நிமிரும் அகமனம்.. மறுமணத்திற்கு தயாராகிறது. இயல்பான வாழ்வு.. ஒரே மகள்.. அவளின் வாழ்க்கையில் ஏற்படும் பிளவு.. பிறகு முதுமை.. அது தரும் நோய்மை.. என நாவல் பயணிக்கிறது.

நாவலை முடித்தவுடன் நம் மனதில் தேவி விசுவரூபம் எடுக்கிறாள். இதுதான் இலக்கியத்தின் வெற்றி போல. அவளின் ஆளுமை.. அதற்கெதிராக அணி திரளும் புற வாழ்க்கையமைப்புகள்.. அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களை சொல்லாமலேயே சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். உதாரணமாக பழைய புகைப்படங்களில் முகத்திலறையும் வெண்மையை சாருவின் வழியே பேசுகிறார்.  பின்னாட்களில் தேவி அவர் அணியும் புடவைகளால் அடையாளப்படுத்தப்படுவது.. அடர் நிறங்களின் மீதான அவரின் ஈர்ப்பு.. இவற்றிற்கான உளவியல் காரணங்களைக் கூறாமல் கூறுவது, காலம் பெண் மீது.. அவளது ஆசைகளின் மீது செலுத்தும் வக்கிரங்களை மௌனமாக.. ஆனால் ஆழமாக உணர்த்துகிறது.

நான்கு தலைமுறைப் பெண்கள் இதில் கடந்து செல்கிறார்கள். அன்னம்.. தேவி.. சாரு.. நீனா.. என. எல்லாப் பாத்திரங்களும் அதனதன் நியாயங்களுடன் ஓசையின்றி பொருந்திக் கொள்கின்றன.. தேவியை தவிர்த்து. சமுதாயத்தின் மீது.. அதன் கொள்கைகளின் மீது.. நடப்புகளின் மீது மூர்க்கமில்லை.. வன்மமில்லை.. கோபமில்லை.. அதே சமயத்தில் ஆதரிப்பதுமில்லை.. இதுவல்லவோ ஆளுமை. தேவி என்னமாதிரியான உணர்வையும் கொண்டிருக்கலாம்.. ஆனால் அதை வார்த்தைகளின் வழியே மிகச் சரியாக நம்மிடம் கடத்தி விடுகிறார் எழுத்தாளர். அதற்கேற்ப புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தேவியின் புகைப்படத்துக்குள் ஊடுருவி.. ஊடுருவி.. அவரைக் கண்டுக்கொண்ட பாணியில் புன்னகைக்கும் போது பதிலாக அழகாக நம்மை ஏந்திக் கொள்கிறார் தேவி.. அல்ல எழுத்தாளர் சுசிலாம்மா.

புனைவாகவோ.. அல்லது வாழ்வின் பதிவாகவோ இருக்கலாம். ஆனால் அது சில பாணிகளைக் கடந்திருக்கிறது. முக்கியமாக கிளிஷே.. அதாவது திரும்ப திரும்ப ஒரே உத்திக்குள் நுழைந்துக் கொள்வதை. தேவியின் பாத்திரப்படைப்பு பொது வெளியில் அவர் குடும்பத்தாருக்கு விரோதமாகவும்.. சமுதாயத்துக்கு நியாயமாகவும் படுமாறு ஒரு வித குழப்ப மனப்பான்மைக்குள் கதாசிரியர் மூழ்கிப் போவதற்கான வாய்ப்புகள் ஏராளம். அதிலும் எழுத்தாளர்  பெண் என்பதால் சட்டகங்கள் தாராளம். ஆனால் எழுத்தாளரோ.. தேவியோ எங்கும் குரலை உயர்த்தவில்லை. சமுதாயத்ததை நோக்கிக் கேள்விகளை கேட்கவில்லை. யாரின் மீதும் பகையில்லை. ஆனால் சொல்ல வந்தவைகள் தெளிவாகப்பட்டுள்ளது. இதை எழுத்தாளரின் வெற்றி என சொல்லலாம்.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....