துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.3.10

வஞ்சமகளும், குழந்தைக் குகனும்

முருகனின் திருநாளாகிய பங்குனி உத்தரம், இலக்கியஆர்வலர்களுக்குக் கம்பனின் திருநாள்.


தமிழின் மகத்தான இலக்கிய ஆளுமை கம்பன்.
கற்றவர் இதயங்களைத் தன் பொருள் வளத்தால் கனிய வைக்கும் கம்பநாடன் கவிதைகளின் சொல்வளம் வியக்கவும்,மலைக்கவும் வைக்கும் அளவுக்கு நயமும்,திறமும் வாய்ந்தது.
‘தேர்ந்தெடுத்த சொற்களின் தேர்ந்தெடுத்த வரிசையே கவிதை’
என்பது,
கவிதைக்குப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம்.

சொல்லவரும் கவிதைக்கேற்ற  சரியான ஒரு சொல் சிக்குவதற்காக மணிக்கணக்கில்.நாள்கணக்கில் தவமிருக்கும் கவிஞர்கள் பலர் இருக்கக் கம்பனின் கவிதைகளில் மடை திறந்த வெள்ளமாகச் சொல் பிரவாகமெடுக்கிறது.
தமிழ்மொழியின் சந்த அழகுகள்(ஓசை நயம்) அத்தனையும் அள்ளிக் கொண்டு ...செய்யுளே இசையாகவும்,நாட்டியமாகவும் மாறிக் கோலம் காட்டி நம்மைச் சுகமான  இலக்கிய போதையில் ஆழ்த்துகிறது.

சித்திரகூடத்திலிருக்கும் இராமன் மீது காதல் மோகம் கொண்ட சூர்ப்பனகை அவனை நோக்கி மென்னடை புரிந்து வரும் கீழ்க்காணும் பாடல் பலருக்கும் அறிமுகமானதுதான்.

’பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
   செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி
   அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
   வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்’’

(தாமரைப் பூப் போனற செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட தன் மெல்லிய பாதங்களைக் கொண்டு சின்னச் சின்னதாக அடி வைத்து,இளமையான மயிலைப் போல..அன்னத்தைப் போல அழகான வடிவு பூண்டு நஞ்ச மகளான சூர்ப்பனகை வந்தாள்)

வஞ்சத்தை நெஞ்சில் வைத்திருப்பவர்கள் ..பதுங்கிப் பாய்வதுதான் வாடிக்கை. 
இந்தப் பாடலின் சந்தமும் பூனையைப் போல மென்மையாக அடி வைத்து , மயில் போல ஒயில் காட்டிச் சாகசத்தோடு அவள் ஒசிந்துவரும் அழகைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட மென் தளிர் போன்ற பாதங்கள்....,சிவந்த தாமரை போன்ற சிற்றடிகள் ...,மயிலின் சாயல்....,அன்னத்தின் அழகு இத்தனையும் இருந்தபோதும் அவளது உள்ளத்தில் மென்மையில்லை !
அவள் மனத் தடாகத்தில் தூய்மையில்லை !
மயிலின் மடமைக் குண்மோ...,நல்லதை மட்டுமே கொள்ளும் அன்னத்தின் நற்பண்போ சிறிதும் இல்லை அவளிடம்.
அவள் நஞ்சே உருவான வஞ்ச மகள் என்று முத்தாய்ப்பாக முடிப்பதற்காகவே
தமிழின் மெல்லின எழுத்தாகிய ’ஞ’கரத்தை அதன் இன வல்லெழுத்தாகிய ‘ச’கரத்துடன் இணைத்து ’ஞ்ச்’என்ற எதுகையாக்கி ( இரண்டாம் எழுத்து ஒரே வகையில் ஒன்றி வரல்)
வஞ்சனை என்ற பண்புக்கு ஒரு வடிவம் இருக்குமானால் அதுவே நம் கண்முன்பு நிதரிசனமாகத்  தோற்றமளிக்கிற அளவுக்குச் சொல்லடுக்குகளால் இக் கவிதையில் ஓவியம் தீட்டுகிறான் கம்பன்.

பதுங்கி வரும் சூர்ப்பனகையைப் போலப் பாய்ந்து வரும் குகனின் வீர ஆவேசத்தை வெளிப்படுத்துவதற்கும் மேலே சொன்ன அதே எதுகையை (ஞ்ச்) வேறொரு ஓசை நயத்தில்..சந்த லயத்தில் கையாளுகிறான் கம்பன்.

காட்டில் இருக்கும் இராமனைக் காண வேறொரு நோக்கத்தில் வரும் பரதனைப் பிறழப் புரிந்து கொண்ட குகன் அவன் போர் தொடுக்க வந்திருப்பதாக எண்ணி ஆவேசம் கொண்டு வஞ்சினமிடுகிறான்.

‘’அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
   வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே
   வெஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
   உஞ்சிவர் போய்விடின் நாய்க் குகன் என்றெனைஓதாரோ’’
(எனது தலைவனாகிய இராமன் அரச பதவி பெறாமல் வஞ்சனையால் தடுத்தவன் , எனது இருப்பிடமாகிய இந்தக் காட்டுக்கும் வந்து விட்ட தருணத்தில் அவன் பிழைத்துப் போகுமாறு நான் விட்டு விட்டால் உலகம் என்னை நாய் எனப் பழிக்குமே எனத் துடிக்கிறான் குகன் என்பதே இப் பாடல்)

சூர்ப்பனகையின் வஞ்சத்தை எடுத்துக் காட்ட உதவிய அதே எதுகை , இங்கே குகனின் வன்மையை ...இராமன் மீது அவன் கொண்ட பாசப் பெருக்கைப் படம் பிடித்துக் காட்ட அற்புதமாக உதவுகிறது.

தீமையை...மெல்லியலான தன் தோற்றத்தில் மறைத்துக் கொண்டாள் சூர்ப்பனகை !
இங்கோ...குழந்தை போன்ற குகனின் மனதிற்குக் கவிஞனின் சந்த நயத்தால் கற்பாறை போன்ற வன் போர்வை போர்த்தப்படுகிறது!

இடம்,பொருள்,ஏவலுக்கேற்ப.....
பாத்திரங்களின் பண்புகளுக்கேற்பத்
தேர்ந்த சொல்லைத் தெரிந்து பயன்படுத்தியவன் கம்பன்.

அவனது கவி முற்றத்தில்
அவனது கடைப்பார்வை விழாதா என்று ஏங்கித் தவமிருந்து சொற்கள் காத்திருக்கும் !
சொற்களைத் தேடி அவன் என்றுமே சுற்றுலா சென்றதில்லை!
 கவிச் சக்கரவர்த்தியாகக் கம்பன் கொண்டாடப் படுவது,இந்தக் காரணத்தினாலேதான் !

கம்பன் வாழ்க!
கம்பன் புகழ் வாழ்க!
கன்னித் தமிழ் வாழ்க!
(நன்றி;காரைக்குடி கம்பன் கழகத்தின் முழக்கத்துக்கு)

5 கருத்துகள் :

Kandumany Veluppillai Rudra சொன்னது…

தொடருங்கள்,உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) சொன்னது…

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் அல்லவா?

கம்பன் சம்பந்தமாக நான் இட்ட வேறு பதிவுகள்:
http://dondu.blogspot.com/2009/02/blog-post_04.html
http://dondu.blogspot.com/2008/07/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பனித்துளி சங்கர் சொன்னது…

{{{{அவனது கவி முற்றத்தில்
அவனது கடைப்பார்வை விழாதா என்று ஏங்கித் தவமிருந்து சொற்கள் காத்திருக்கும் !
சொற்களைத் தேடி அவன் என்றுமே சுற்றுலா சென்றதில்லை!}}}}

உண்மைதான் !! பகிர்வுக்கு நன்றி!!

Pandian R சொன்னது…

Anbin amma,
kamban vizhavai patri ezhuthiyamaikku nandri. It is very good to hear anything about native place when we are away from that. very many thanks.

பெயரில்லா சொன்னது…

//சுகமான இலக்கிய போதையில் ஆழ்த்துகிறது.//

சரியாக சொன்னீர்கள் போங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....