துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.1.12

மகளாய்..மாணவியாய்.....

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு.!.
’’அம்மா..என்னை நினைவிருக்கிறதா. நான்தான் தேனம்மை..’’என்றது அந்தக் குரல்.  ஏதோ அந்நிய தேசத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் தில்லியில் இருந்து கொண்டிருக்கும் என்னைத் தமிழ்நாட்டிலிருந்துவரும் முகம் தெரியாத அழைப்புக்களும் கூட ஆனந்தப்படுத்தும்...அப்படியிருக்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவி - ..அதுவும் கல்லூரியை விட்டுப் போன பிறகு தொடர்பே இல்லாமல் இருந்து விட்டு இப்போது எதிர்பாராத ஒரு நேரத்தில் விளித்தது என்னை உண்மையாகவே பரவசப்படுத்தியது..
.ஆசிரியப் பணியில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருந்தாலும் பெயர்களையும்,முகங்களையும் நினைவில் தக்க வைத்துக் கொள்ளும் கலையில் மட்டும் எப்போதுமே நான் சற்று சுமார்தான்...ஆனால் தேனம்மை விஷயத்தில் அப்படி நேரவில்லை;நேரவும் வாய்பில்லை..காரணம் மாணவப் பருவத்திலேயே தேனம்மை என் மீது கொண்டிருந்த கள்ளமற்ற பாசம்..பிடிப்பு...அதற்கெல்லாம் மேலாகத் தான் ஒரு வேதியல் மாணவியாக இருந்த போதும் தமிழ் வகுப்புக்களில் காட்டிய அதீத ஆர்வம்.(வேறு வழியில்லாமல் தமிழிலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப்  படிப்பவர்களை விட வேதியல்,இயற்பியல்,விலங்கியல்,வணிகம் போன்ற துறைகளில் பயில்பவர்கள் தமிழை ஆர்வத்தோடு அணுகுவது நான் கண்டிருக்கும் அனுபவ உண்மை.)..
’80களில் என் மாணவியாய்-ஒரு பொங்கல் விழாவன்று.என்னுடன்......
சின்னச் சின்னத் தாள்களிலும் கையேடுகளிலும் கவிதைகளை எழுதி எழுதி என்னிடம் தந்தபடி.... என் ஒப்புதலை,விமரிசனத்தைப் பெறுவதற்காக சிறுபிள்ளை போலக் காத்திருக்கும் வற்றாத படைப்பிலக்கிய தாகம்...கல்லூரி நூலகம் போதாதென்று என்னிடம் பல சமகாலப் படைப்புக்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம்...இவை அனைத்தும் தேனம்மையை ஒரு விசேடமான மாணவியாக்கி என் நெஞ்சில் நிறுத்தி வைத்திருந்ததால் நினைவுகளுக்குள் துழாவிக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இல்லாமல் போயிற்று...
'’தேனம்மையா... எப்படி இருக்கிறாய்....எங்கே இருக்கிறாய்....என் தொலைபேசி எண்ணை எப்படிக் கண்டுபிடித்தாய்..’’என்று கே.பி.சுந்தராம்பாள் பாணியில் கேள்விகளாய் அடுக்கிக் கொண்டு போனேன். மதுரையில் அப்போது வசித்து வந்த தேனம்மை, பாரதி புத்தக நிலையம் சென்றதும் அங்கே இருந்த குற்றமும் தண்டனையும் மொழியாக்க நூலில் என் பெயரைக் கண்டு பதிப்பாளரிடம் கைபேசி எண்ணை வாங்கி உடனே என்னைத் தொடர்பு கொண்டதும் அப்போதுதான் தெரிந்தது .

கதை...அதோடு முடிந்துவிடவில்லை ..அந்த நூலை வாங்கி முழுவதும் படித்து விட்டுப் பெரியதொரு விமரிசனக் கடிதத்தையும் எழுதி எனக்குத் தபாலில் அனுப்புமளவுக்குத் தேனம்மையின் ஆர்வம்..கொப்பளித்துக் கொண்டிருந்தது.அந்தக் கடிதத்தை நானே தட்டச்சு செய்து இந்த வலைத் தளத்திலும் ஏற்றியிருக்கிறேன்..http://www.masusila.com/2009/04/blog-post.html

அவையெல்லாம் கடந்த காலங்கள்...! .இந்த மூன்று ஆண்டுகளுக்குள் தன் தணியாத ஆர்வத்தால் இணையத்துக்குள் நுழைந்த என் மாணவி-தேனம்மை லெட்சுமணனாகி... வலையுலகில் தனி முத்திரை பதித்தபடி,பல இதழ்களில் கவிஞராய் கதையாளியாய்...கட்டுரையாளராய்..மிகச் சிறந்த ஒரு வலைப் பதிவராய்ப்(சும்மா.)பாராட்டுக்களைக் குவித்து வருவது கண்டு ’’உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி..’’என்று அகம் சிலிர்த்து நிற்கிறேன்...’’
புத்தகக் கண்காட்சியில் தன் சாதனை அரசிகளை வெளியிட்டபின்
கணவருடன்
அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘சாதனை அரசிகள்’என்ற தன் முதல் நூலையும் வெளிட்டுச் சாதனை படைத்திருக்கும் தேனம்மை...இல்லக் கடமைகளோடு நிறைவடைந்து விடாமல் தன் அகத் தேடல்களையும் ஒரு பெண் நிறைவு செய்து கொள்ள வேண்டுமென்பதையும்,அவ்வாறு செய்து கொள்வது அவளுக்குச் சாத்தியமே என்பதையும் தன் அயராத உழைப்பாலும் வற்றாறாத ஆர்வத்தாலும் நிறுவிக் காட்டியிருப்பது எனக்கு உவப்பை அளிக்கிறது...ஒரு மனைவியாய்....இரண்டு மகன்களின் அருமைத் தாயாய்....அவர்களின் தேவைகளையும் குறை வைக்காமல் முடித்து விட்டு....அதே நேரத்தில்..தன் உள்ளத்தின் படைப்புக் கனலும் அணைந்து விடாதபடி அடைகாத்து - .தனக்கென்று ஒரு தருணம் வாய்த்த வேளையில் அதைச் சிக்கெனப் பற்றியபடி தன் வாழ்வின் இரண்டாவது ஆட்டத்தை(கட்டத்தை)த் தன் படைப்புக்களின் ஆட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கும் தேனம்மையும் கூட ஒரு சாதனைப் பெண்மணிதான்....தன் முதல் நூலுக்கு என்னிடம் வாழ்த்துரை நாடி என் மேலுள்ள தன் அன்பை எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கும் தேனம்மைக்கு என் அன்பான வாழ்த்துக்களும் நல்லாசிகளும்...
புத்தகக் கண்காட்சியில் என் ‘அசட’னுடன்..

பி.கு;
திடீரென்று எழுந்த உந்துதலால் இந்தப் பதிவை எழுதி விட்டுப் படங்களைப் பிரதி எடுத்துக் கொள்வதற்காகத் தேனம்மையின் தளத்தைத் திறந்து பார்த்தால்.அதிலும் இதே போல் ஒரு பதிவு..ஒரே அலைவரிசை...டெலிபதி என்பது இதுதானோ என ஒரு கணம் உண்மையாகவே ஆடித்தான் போய்விட்டேன்.....எப்போதோ ‘80களில் நான் எழுதிய கடிதம் ஒன்றையும் அதில் பத்திரப்படுத்திப் போட்டிருக்கிறது அந்தப் பாசக்காரப்பெண்..http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_14.html.
‘’இங்கிவளை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..’’.

எனது அசடன் நாவலின் பின் இணைப்பில் குற்றமும் தண்டனையும் பற்றித் தேனம்மை எழுதிய கட்டுரை-கடிதம்-பிரசுரமாகியிருக்கிறது.


17 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

அம்மா.. என்ன சொல்வது வார்த்தைகள் இந்த வருடங்களையும் வெற்றிடத்தையும் நிரப்பி விடுமா என்ன..?

எனக்கும் உங்களுக்கும் அறுக்கப்படாத தொப்புள் கொடி உறவாய் நம் தமிழ் அமைந்திருப்பது சிறப்பு அம்மா..

புத்தகம் மிக அருமை.. படிக்க பல மாதங்கள் ஆகும்போல.

ஜெயமோகனின் முன்னுரையையே சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எதையும் ஆராய்ச்சிக்கட்டுரைபோல சிறப்பாக வழங்குவதில் வல்லவர்.

உங்கள் கதைமொழிபெயர்ப்பில் நம் ஃபாத்திமா அம்மாவின் விமர்சனமும் பார்த்தேன்.

இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும் இருக்கும் இடத்தில் என்னுடைய விமர்சனத்தையும் சேர்த்தது உங்களுடைய பெருந்தன்மை அம்மா..

இன்னும் உங்கள் அடுத்த முயற்சிகளையும் எனக்கான தூண்டுதலாய் சுயநல நோக்கோடு உங்களின் அடுத்த புத்தகங்களையும் எதிர்பார்க்கிறேன் அம்மா.

பபாசி என்னும் தேரில் பல தெய்வங்கள். உங்கள் புத்தகங்கள் இருந்த இடத்தில் நான் எழுதிய ஒன்றும் அச்சிலேறி உற்சவமூர்த்தியானது குறித்து மகிழ்ந்தேன்.

எப்போது வருவீர்கள் உங்களை நேரில்காணலாம் என்ற ஆவலில் இருக்கிறேன்.

மாணவிகள் தன் ஆசிரியரை ஞாபகம் வைத்திருப்பது புதிதல்ல.. ஆனால் ஆசிரியை தன் மாணவியை நாபகம் வைத்து அடையாளம் காண்பிப்பதும் எளிதல்ல.

இது போராடிய ஜெயித்த பெண்களின் கதைகள்தான். உங்கள் அன்பை அருந்திய பாக்கியத்துடன் இன்னும் எனக்கான மற்றும் எல்லாருக்குமான இலக்கியம் படைக்கும் உறுதியையும் எனக்கு ஆசியாய் வழங்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் அம்மா.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

’’தம்மிற் தம் மக்கள் அறிவுடமை’’யே ஒரு ஆசிரியரை ஆனந்தம் கொள்ளச் செய்வது...என் படைப்பில் நேரும் பரவசம் என் மணவிகளின் சாதனைகளிலும் எனக்குக் கிடைக்கிறது....குறிப்பாக இத்தனை குறுகிய காலத்தில் உன் வளர்ச்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.உன்னை எண்ணிப் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன் தேனம்மை..என்றென்றும் தமிழ் நம்மிடயே ஓர் இணைப்புப் பாலமாகத் திகழும்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஆசிரியப் பணியின் மகத்தான சந்தோஷம்..உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு மாணவரை எதிர்ப்பட நேருவதே...அதிலும் தமிழாசிரியராக இருந்து விட்டால் போதும்...’அம்மா’ என்னும் அழைப்பு எந்த திசையிலிருந்தாவது கேட்டபடி காதில் தேன் பாய்ச்சிக்கொண்டே இருக்கும்

பெயரில்லா சொன்னது…

மிக அருமையான இணைவு இது. எல்லோருக்கும் வாய்க்காது. வாழ்க நீடு வளமோடு. வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

NARAYAN சொன்னது…

வாழ்க வளமுடன்
அன்புள்ள அம்மா,
ஒரு ஆசிரியைக்கும் மாணவிக்கும் உள்ள உறவை படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது.
இங்கே இணைப்பு பாலமாக பாசத்துடன் நம்மளுடைய பைந்தமிழும் செயல்பட்டிருக்கிறது.
வாழ்த்துக்கள் அம்மா இருவருக்கும்.
தேனம்மை அவர்களின் இந்த கன்னி முயற்சி (சாதனை அரசிகள்) மென்மேலும் வளர
இறைஅருள் துணை புரியட்டும்.

வாழ்க வளமுடன்
நாராயணசாமி.ம

மதுரை சரவணன் சொன்னது…

ithu thaan aasiriyarukku kidaiththa verri... vaalththukkal iruvarukkum. aasiriya panikku kidaiththa verri.

Suresh Subramanian சொன்னது…

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக நல்ல பதிவு ! மனம் நெகிழ்ந்தது ! விரும்பிப் படித்தேன் ! வாழ்த்துக்கள் ! நன்றி அம்மா!

அப்பாதுரை சொன்னது…

பதிவும் பின்னூட்டங்களும் நெகிழச் செய்தன.

ADHI VENKAT சொன்னது…

மனதை நெகிழ வைத்த பதிவு. தொடரட்டும் உங்கள் பந்தம்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சுசீலா

ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்ற வாக்கிற்கிணங்க - ஆசிரியப் பெருமக்கள் பணியாற்றும்பொழுது அடையும் மகிழ்ச்சிக்கும் - பணி நிறைவு செய்த பின்னர் - பல ஆண்டுகட்கு முன்னர் தங்களிடம் படித்த மாணவச் செல்வங்கள் வளர்ந்த பிறகு - வந்து பார்த்து நலம் விசாரித்து உறவாடும் பொழுது அடையும் சொல்லணா மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. இச்சந்திப்பும் - தொடரும் அன்பும் ஆசிரியப் பெருமக்களுக்கு மட்டுமே கிடைக்கும். நல்ல்தொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

மறுமொழிகள் பின் தொடரவதற்காக இம்மறுமொழி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்க நன்றி திரு சீனா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தன் வாழ்வின் இரண்டாவது ஆட்டத்தை(கட்டத்தை)த் தன் படைப்புக்களின் ஆட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கும் தேனம்மையும் கூட ஒரு சாதனைப் பெண்மணிதான்...

ஆசிரியரையும் மாணவியையும் ஒருங்கே காணப்பெற்றது பேரின்பம்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//ஒரு மனைவியாய்....இரண்டு மகன்களின் அருமைத் தாயாய்....அவர்களின் தேவைகளையும் குறை வைக்காமல் முடித்து விட்டு....அதே நேரத்தில்..தன் உள்ளத்தின் படைப்புக் கனலும் அணைந்து விடாதபடி அடைகாத்து - .தனக்கென்று ஒரு தருணம் வாய்த்த வேளையில் அதைச் சிக்கெனப் பற்றியபடி தன் வாழ்வின் இரண்டாவது ஆட்டத்தை(கட்டத்தை)த் தன் படைப்புக்களின் ஆட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கும் தேனம்மையும் கூட ஒரு சாதனைப் பெண்மணிதான்....//

//ஒரே அலைவரிசை...டெலிபதி என்பது இதுதானோ என ஒரு கணம் உண்மையாகவே ஆடித்தான் போய்விட்டேன்.....எப்போதோ ‘80களில் நான் எழுதிய கடிதம் ஒன்றையும் அதில் பத்திரப்படுத்திப் போட்டிருக்கிறது அந்தப் பாசக்காரப்பெண்..http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_14.html.

‘’இங்கிவளை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..’’.//

மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்.

குரு + சிஷ்யை [சாதனைப்பெண்மணி] இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

arul சொன்னது…

inspiring post

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி அம்மா.:)

நன்றி வேதா. இலங்காதிலகம்

நன்றி ம.நாராயணசாமி

நன்றி மதுரை சரவணன்

நன்றி ரிஷ்வன்

நன்றி திண்டுக்கல் தனபாலன்

நன்றி அப்பாதுரை

நன்றி கோவை2தில்லி

நன்றி சீனா சார்

நன்றி ராஜி

நன்றி கோபால் சார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....