துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.5.12

இமயத்தின் மடியில்-5



பயணம் தொடர்கிறது...


சீன எல்லைப் பகுதியில்....
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியை அமிர்தசரஸ் அருகிலுள்ள வாகாவிலும் இந்திய நேபாள எல்லைப் பகுதியை காளி நதி ஆற்றின் கரையில் பிதோரகர் பயணத்திலும் நான் முன்பே கண்டதுண்டு.இந்திய சீன எல்லைப் பகுதியாகிய மானா நான் செல்லும் மூன்றாவது எல்லைப்பகுதி. 

இந்தியாவின் கடைசிக் கிராமம் என்னும் குறிப்பைத் தாங்கியபடி தென்பட்ட மானாவின் பெயர்ப்பலகை எங்களை வரவேற்றது. .
மானா..
இராணுவப் பாசறைகளும்ஸ்கௌட் மற்றும் தேசிய மாணவர் படை முகாம்களும் ஆங்காங்கே அந்தப் பகுதியிலிருந்து தென்பட்ட மலைக்காட்சிகளும் இமயத்தின் எழிலான முகங்கள் பலவற்றைக் காட்டியபடியே இருந்தன

மானாவிலிருந்து மலைப்பாதைகளிலும் படிக்கட்டுகளிலும் ஓரிரு கிலோ மீட்டர் மேலேறிச் சென்றால் வியாசர்,கணேஷ் குகைகளைக் காணலாம் என்றும்,நிலத்துக்கு அடியிலேயே முகம் மறைத்து ஓடும் சரஸ்வதி ஆற்றின் சிறிய தரிசனம் ஒன்று கிடைக்கும் என்றும் கேள்விப்பட்டிருந்ததால் மேலே ஏறத் தொடங்கினோம். ஆனால் கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்துக்கும் மேல் அமைந்திருக்கும் அந்த மலைப் பகுதியில் பிராணவாயு, போகப்போகக் குறைந்து விடுவதால் எனக்கும் என் தோழிக்கும் இன்னும் சிலருக்கும் மேலே ஏறிச் செல்வது அசாத்தியமானதாகத் தோன்ற அங்கிருந்த தேநீர்க்கடை ஒன்றிலேயே அமர்ந்து கொண்டோம். 10,15 பேர் மட்டும் கால்நடையாகவும் டோலிகளில் ஏறியும் மேலே சென்றனர்.
டோலி சுமக்கும் வாலிபன்...
 கூடை நாற்காலி போன்ற டோலிகளில் யாத்திரிகர்களை அமர வைத்துத் தூக்கிச் செல்வது மிக உயரமான மலைப்பிரதேசங்களிலுள்ள புனிதத் தலங்களில் பல இளைஞர்களாலும் ஒரு அன்றாடத் தொழிலாகவே கைக் கொள்ளப்பட்டு வருவதும் அவர்களது வாழ்க்கை ஓடுவதே இந்த வருமானத்திலேதான் என்பதும் உண்மைதான்என்றாலும் நம் உடற்சுமையை இன்னொருவர் தோள் மீது ஏற்ற எனக்கும் என் தோழிக்கும் தயக்கமாகத்தான் இருந்தது. அதனால் அவ்வறு செல்வதைத் தவிர்த்து விட்டு அங்கே கொட்டிக் கிடந்த அழகுக் குவியல்களை நிதானமாக அசை போட்டு ரசிக்கத் தொடங்கினோம்

.
இந்திய சீன எல்லையில் நான்...

வியாசர் குகை நோக்கி....
வியாசர் குகை மற்றும்சரஸ்வதி ஆற்றைக் கண்டு திரும்பியவர்கள் கூறிய எழுச்சியூட்டும் அனுபவங்களில் மகிழ்வோடு பங்கு கொண்டோம். குறிப்பிட்ட அந்த இடம் மகாபாரதத்துடன் பல வகைகளிலும் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட அந்த குகையிலே அமர்ந்தபடியே வியாசர் மகாபாரதத்தை உருவாக்கினார் என்னும் கருத்தும் நிலவுகிறது. 
வியாசர் குகை...( இன்றைய நவீன முகப்புக்களுடன்..)
மிக அதிகமான திருப்பங்களும் சிண்டும் சிடுக்குமான முடிச்சுகளும் சிக்கலான பகுதிகளும் நிறைந்த அந்த மாபெரும் இதிகாசத்தை மனித ஆரவாரங்களின் குறுக்கீடு எதுவும் இல்லாத அப்படிப்பட்ட மலைக் குகை ஒன்றில் அமர்ந்துதான் வியாசரால் சாதித்திருக்க முடியும் என்றே தோன்றியது.
பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சுவர்க்கம் நோக்கிச் சென்ற இடமும் கூட அதை ஒட்டியே அமைந்திருப்பதாக எண்ணப்படுகிறது.
சரஸ்வதி ஆற்றின் அரியதொரு சிறு காட்சி...[தோழியர் தந்த புகைப்படம்]
பீம் புல் எனப்படும் இந்த இடத்தில் ஆற்றுநீரோட்டத்தைத் தடுத்துத்
தாங்கள் சுவர்க்கம் செல்ல பீமன் வழி ஏற்படுத்தித் தந்ததாகச் சொல்லப்படுகிறது.
..
மானாவிலிருந்து விடுதிக்குத் திரும்பியதும் பனிக்குளிரின் கடுமை கூடுதல் வீரியத்துடன் தாக்குதல் தொடுக்க இரவு உணவை முடித்துக் கொண்டு போர்வைகளுக்குள் சுருண்டு கொண்டோம்.


மறுநாள்- மே 9ஆம் தேதி,காலைச் சூரியன் விடிகாலை நான்கரை மணிக்கே முகம் காட்டத்தொடங்கி விட்டான். வட நாட்டில் கோடை காலங்களில் சூரிய உதயம் மிகச் சீக்கிரமாகவே நிகழ்ந்து விடுவது வழக்கம்தான்.எனினும் குளிரும் கூடவே இருந்ததால் காலை ஆறு மணிக்கு மேலேயே கண் விழித்தோம். ஒரு சிலர் தப்த குண்ட வெந்நீர் ஊற்றுக்களில் நீராடச்செல்ல…..நான்,மலைச் சரிவுகளுக்குள் காலாற நடந்து சென்று இமயத்தின் எழிலுக்குள் சற்றுநேரம் திளைத்துவிட்டு வந்தேன்.
சிற்றுண்டிக்குப் பிறகு பிரியவே மனமின்றி அந்த இமய முகடுகளிலிருந்து விடை பெற்றோம்.
திரும்ப ஹனுமான் சட்டி,விஷ்ணுப்பிரயாகை,கோவிந்த்காட் என நாங்கள் வந்த பாதியிலேயே எங்கள் பயணம் கீழ்நோக்கித் தொடர்ந்தது.
கருடகங்கா...
கருடகங்கா என்னும் இடத்தில் சற்றுக் கீழிறங்கிச் சென்று சலசலத்து ஓடும் ஆற்றுநீரில் கால்  நனைத்தபடி கருடனைக் கண்டோம்.வட நாட்டு ஆலயங்களில் அரிதாகவே காணக் கிடைக்கும் நேர்த்தியான கல்சிற்பமாக கருடனின் உருவம் வடிவமைக்கப்பட்டிருந்த்து.
கருடகங்காவில் நான்...
 இந்த இமயப் பயணத்தில் ‘மலர்ப்பள்ளத்தாக்கு’ என்பதும் தவற விடக் கூடாத ஓர் இடம்தான்…அது நாங்கள் சென்று கொண்டிருந்த வழியில் இருந்த கோவிந்த்காட்டிலிருந்து சற்று அருகாமையிலேதான் இருக்கவும் செய்தது; எனினும் பயணத் திட்டத்தில் அது இடம் பெறாததால் அதைத் தவற விட வேண்டியதாயிற்று.
பகல் 12 மணிக்கு மேல் மலைப்பாதையின் தகிப்பு மிகுதியாகியது…குளிரும் வெயிலும் ஒரே நாளில் தாக்குதல் தொடுத்திருந்ததால் சற்றே சோர்ந்து போயிருந்த நாங்கள் மாலை 6 மணி அளவில் ஸ்ரீநகரிலுள்ள சுபகாம்னா தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்து ஓய்வு கொண்டோம்.

நதியோடு கை கோர்த்து மலையோடு கை குலுக்கி நாங்கள் செய்த இந்தப் பயணத்தின் இறுதிக் கட்டப் பரவசம் எங்களுக்காக தேவப்பிரயாகையில் காத்திருந்தது.
(மேலும் அடுத்த இறுதித் தொடர்ப்பதிவில்..)

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....