துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.8.13

திசைஎட்டும் விருதுநிகழ்வு


18.8.2013 அன்று கடலூரில் நடைபெற்ற நல்லி - திசை எட்டும் ’’பாஷா பூஷண்’’ மொழியாக்க விருதுகள் வழங்கும் விழாவில்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பரிசு பெற்றோருக்கு விருதுகளை வழங்கினார்.


என் மொழியாக்கத்தில் பாரதி புத்தக வெளியீடாக வந்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவல் மொழிபெயர்ப்பும் விருது பெற்றது.

விழாவில் நான் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாததால்  என் சார்பில்  மதுரை பாரதி புத்தக உரிமையாளரும், பதிப்பாளருமான திரு துரைப்பாண்டி அவர்கள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்த விருதைக்காட்டிலும் கூட எனக்கு மகிழ்வும் நிறைவும் அளிப்பது நான் பங்கு கொண்டிருக்கும் ஜெயமோகன் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த என் இனிய நண்பர் திரு கே .பி .வினோத் அவர்களின்  8 வயதே நிறைந்த மகள் சைதன்யாவுக்குக் கிடைத்த சிறப்புப்பரிசுதான்!

  

திரு எஸ் ரா மற்றும் குறிஞ்சிவேலனுடன்
சைதன்யா

எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதிய ''கால் முளைத்த கதைகள் '' என்னும் நூலை அந்தக்குட்டிப் பெண் மொழியாக்கம் செய்திருப்பதோடு 'நத்திங் பட் வாட்டர் ''எனும் தலைப்பில் வம்சி வெளியீடாகவும் அந்தப்படைப்பு  நூல்வடிவம் பெற்றிருக்கிறது. அதை உரிய முறையில்  இனம் கண்டு கொண்ட திசை எட்டும் இதழின் ஆசிரியர் திரு குறிஞ்சி வேலன் அவர்கள் மொழியாக்கத்துக்கான சிறப்புப் பரிசையும் அதற்கு வழங்க முன்வந்திருப்பது வளரும் தலைமுறைக்கு ஊக்கமூட்டும் செயல்பாடு. 


திரு குறிஞ்சி வேலன் அவர்களுக்கும்,

குட்டிப்பாப்பா சைதன்யாவுக்கும்,
அவளை இலக்கிய தாகத்தோடும்,ஆர்வத்தோடும் வளர்த்தெடுக்கும் வினோத் தம்பதியர்க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....


இணைப்பு;

கதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது - கடலூர் சீனு

அசடனுக்கு திசை எட்டும் விருது

செய்தி
By dn, கடலூர்
First Published : 20 August 2013 11:39 AM IST
எந்த மொழி அதிகளவில் மொழிபெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியே சிறப்பான வளர்ச்சியை அடைகிறது என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தெரிவித்தார்.
கடலூரில் "நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருதுகள்' வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:  உலகிலேயே மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படும் பிட்ஜெரால்டின் சில மொழிபெயர்ப்புகள் அதிகம் பிழையுள்ளவை என தெரியவந்துள்ளது.  எனவே மொழிபெயர்ப்பாளர்கள், மூலநூலில் உள்ள வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்துகொண்டு மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டால், சிறந்த மொழிபெயர்ப்பாளராக உருவாக முடியும்.  மொழிபெயர்ப்புகள் வளரும் போதுதான், ஓர் மொழி சிறப்படைகிறது.
இந்தியாவின் ஒற்றுமையையும், பெருமையையும் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பவை மொழிபெயர்ப்பு நூல்கள்.  வட மாநிலங்களில் உள்ள முக்கிய எழுத்தாளர்கள், தமிழகத்தில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை அறிந்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் உள்ள முக்கிய எழுத்தாளர்களை, வட மாநில இலக்கிய ஆர்வலர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டுமெனில், தமிழ் மொழி படைப்புகள் வட மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது அதிகரிக்க வேண்டும்.
பிற மொழிகளில் உள்ள சிறந்த நூல்கள், நூல்கள் வந்து சில மாதங்களிலேயே மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகின்றன. ஆனால் இதே நூல்கள், தமிழ் மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகே மொழிபெயர்க்கப்படுகின்றன. ÷இந்தியாவில் உள்ள வேறு மொழி நூல்கள் கூட ஆங்கிலம் வாயிலாகவே தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள், சிறப்பு வாய்ந்ததாக இருக்க முடியாது.
மொழிபெயர்ப்பு என்பது மிக அரிய கலை ஆகும். தமிழகத்தில் இந்த கலை வளர, புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வர வேண்டும்.
மாணவர்களிடையே மொழிபெயர்ப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் போது புதிய மொழிபெயர்ப்பாளர்ளை அதிகளவில் உருவாக்க முடியும் என்றார் அவர்.
விருதுகள்: ÷விழாவில் டாக்டர் கா.செல்லப்பனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.எம்.ஏ.சுசீலா,போப்பு புருஷோத்தமன், மா.கோவிந்தராஜன், ந.சுப்பிரமணியன், ந.மனோகரன், வைதேகி ஹெர்பர்ட் ஆகியோருக்கு மொழியாக்க விருதுகள் வழங்கப்பட்டன.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்' சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சென்னையைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி வி.சைதன்யாவுக்கு சிறப்பு பரிசு மற்றும் மொழியாக்க விருது வழங்கப்பட்டன.
பள்ளி-கல்லூரி அளவில்...
÷மொழிபெயர்ப்புப் போட்டியில் பள்ளி அளவில் என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி முதல் பரிசையும், கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவர் சரத் இரண்டாம் பரிசையும், கிருஷ்ணசாமி பள்ளி மாணவர் பிரசன்னா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
கல்லூரிகள் அளவில் புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் முதுகலைப் பட்டமேற்படிப்பு மைய மாணவிகள் அன்புமலர் முதல் பரிசையும், ரேவதி இரண்டாம் பரிசையும், நிலாதேவி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
இந்த மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் கி.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினார்.

1 கருத்து :

Yaathoramani.blogspot.com சொன்னது…

மகிழ்வூட்டும் செய்தி
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....