துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.2.15

சிக்கிமை நோக்கி-2 [கொல்கத்தா]


சிக்கிமை நோக்கி-1 இன் தொடர்ச்சி


விக்டோரியா நினைவகத்தின் முன்பு
பயணம் என்றாலே மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் ஒருசேர அளிப்பதுதான்.
இம்முறை சிக்கிம் பயணத்தில் அது சற்றுக்கூடுதலாகவே இருந்தது;காரணம் என் மனதுக்கு மிகவும் அணுக்கமான இலக்கியம்,பயணம் என இரண்டும் ஒருசேரப்பொருந்தி- இலக்கியத்துக்கான பயணமாக இது அமைந்து விட்டதுதான்.

பொதுவாகப் பயணம் என்பது அதன் ஆயத்தத்துக்கான பரபரப்பையும் கொண்டிருக்கும்; ஆனால் இம்முறை இது சாகித்திய அகாதமி ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி என்பதால் -போக,வர என இருவழிப்பயணங்களுக்குமான விமானச் சீட்டுக்கள்,இடையே கொல்கத்தாவில் இருமுறை இறங்கும்போதும் தங்குவதற்கான விருந்தினர் விடுதி குறித்த தகவல் எல்லாம் 10 நாட்களுக்கு முன்பே கச்சிதமாக வந்து சேர்ந்து விட்டதால் பெட்டி அடுக்குவதையும் இணையத்தில் சிக்கிம்-காங்டாக் பற்றிய தகவல் சேகரிப்பதும் என் கதையை இந்தியில் வழங்க ஒத்திகை பார்த்துக்கொள்வதையும்  தவிர வேறு முன்னேற்பாடு எதுவும் தேவையாக இல்லை.

பயணநாள் -ஃபிப்.5 காலை பத்து மணிக்கு கோவையிலிருந்து கொல்கத்தா செல்லும் விமானம். 8 மணிக்கே விமானநிலையம் வந்து சேர்ந்து விட்டதாலும், கூட்டம் அதிகம் இல்லாததாலும் பயணச்சோதனை பிறசோதனை அனைத்தும் முடிந்து 8 30க்கே  இலகுவாகி விட்ட நான் சும்மா வலம் வந்து கொண்டிருந்தேன்; சிற்றுண்டி வழங்காத [தண்ணீரும் கூடத்தான்!!] கருமி விமான சேவையில் செல்வதால் நான் கொண்டு வந்திருந்த சிற்றுண்டி[இட்டலிப்பொட்டலம்]கொஞ்சம் கொஞ்சமாய்க் காலியாகிக் கொண்டிருந்தது.

காலை 10 மணிக்குச்சரியாகக்கிளம்பி விட்ட அந்த இண்டிகோ விமானம், 10 45க்குச் சென்னையை அடைந்து அங்கே இறக்குமதி,ஏற்றுமதி செய்தபின் 11 15க்குக்கிளம்பி மதியம் 1 45 மணிக்குக் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இந்தியாவின் வடபகுதிகளில் பலமுறை விரிவான பயணங்கள் பலவற்றை மேற்கொண்டிருந்தாலும் வடகிழக்குப்பகுதிக்கு நான் செல்வது இதுவே முதல் முறை.

மேற்கு வங்கம் செல்வதும் முதல் முறைதான்.
கொல்கத்தாவில் கால் பதித்தபோது அதன் கலை,இலக்கிய,ஆன்மீக, மற்றும் நாட்டுவிடுதலைப்போராட்டப்பங்களிப்புக்கள்  ஒவ்வொன்றாய் நினைவில் எழுந்து உடலுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

இது ரவீந்திர நாத் தாகூரின் .....சரத் சந்திரரின் ...ஆஷாபூர்ணாதேவியின் மஹாஸ்வேதா தேவியின் மண்.

அரவிந்தரும் இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் நிவேதிதாவும் ஆன்மீகப்புரட்சி நிகழ்த்திய நிலம்.

சத்யஜித்ரேயும்..மிருணாள்சென்னும் முத்திரை பதித்த பூமி.

அன்னைதெரசாவின் அன்பில் நனைந்த ஊர்.

கலவையான இந்த உணர்வுகள் தந்த பரவசத்தோடு எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சௌத்ரி விருந்தினர் விடுதி நோக்கி வாடகைக்காரில் விரைந்து கொண்டிருந்தேன்.

விமானநிலையப் பகுதியிலிருந்து கொல்கத்தாவின் மையப்பகுதிக்கு வந்து சேர்வது வரை வழக்கமான பெருநகர விரிவாக்கம்தான்....
நவீன கட்டிடடங்கள்,அடுக்குமாடிக்குடியிருப்புக்கள்,கணினித் தொழிற்கூடங்கள்.

தொன்மையான உள்நகரத்துக்கு வந்ததும் காட்சிகள் மாறத் தொடங்கின.
எந்த ஒரு மாநகரத்திலும் பெருநகரத்திலும் முதன்மையான பெரிய தெருக்களில் அதிகம் பார்க்க முடியாத ஒருகாட்சி அது.

ஒன்றோடொன்றுஒட்டிக்கொண்டிருக்கும் கடைகள்,வணிக வளாகங்கள், வீடுகள் என எதுவானாலும் அவற்றுக்கு இடையே இடைச்செருகல் போலத் தலையை நீட்டியபடி காரை பூச்சு எல்லாம் உதிர்ந்து சில பாகங்களும்கூட சிதிலமடைந்து இடிந்து விழுவதற்குத் தயார் நிலையில் இருப்பது போலப் பயமுறுத்தும் கரிப்புகை அப்பியிருக்கும் மிகப்பழைய கட்டிடங்கள்.


கீழே நவீனம்
மேலே!?
இங்கே புகைப்படத்திலிருக்கும் கட்டிடங்களிலாவது மரங்கள் ஒட்டி உரசிக்கொண்டு நிற்பதைத்தான் பார்க்க முடிகிறது. உள்ளிருந்து மரங்களே முளைத்து வரும் கட்டிடங்களைக்கூட சென்னை அண்ணாசாலை போன்ற பிரதானமான மைய வீதிகளிலும் கூட  வெகு சாதாரணமாகப்பார்க்க முடியும். நான் காங்க்டாக் செல்லும்போது வழியில் என்னோடு உடன் பயணம் செய்த கொல்கத்தாவைச்சேர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம் இந்தக்கட்டிடங்கள் ஏன் புதுப்பிக்கப்படாமலும் அகற்றப்படாமலும் இருகின்றன என்று கேட்டபோது’கொல்கத்தா 300,350 ஆண்டு பழமையானநகரம்;அந்தப் பழமையைப்பேணுவதற்காக அவற்றை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்’’என்றார் அவர்.
ஆனால்..எனக்கென்னவோ குறிப்பிட்ட இந்தக்கட்டிடங்களைப்பொறுத்தவரை அவரது கூற்றுபொருத்தமானதாகப்படவில்லை. சரி..

மேடம் மம்தாதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்!


கொல்கத்தாவில் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பை கூளங்கள் கொல்கத்தாவின் புகழை மாசுபடுத்தும் அடுத்த முக்கியமான அம்சம்; உ பி மாநிலப்பயணங்களில் காசி,மதுரா,விருந்தாவன் எனப் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களும் கூடக் குப்பை மண்டிக் கிடக்கும் காட்சியைக்கண்டிருக்கிறேன் என்றபோதும் கொல்கத்தா போன்ற ஒரு பெருநகரின் இதயம் போன்ற இடங்களையும் கூட இத்தனை மோசமாக விட்டு வைத்திருக்கும் அவலம் நெஞ்சை நெருடியது. பெருமைக்காக இல்லையென்றாலும் தமிழ்நாட்டின் ஒரு சிற்றூர் அல்லது ஒரு சிறுநகரத்தைக்கூட இத்தனை மோசமான குப்பைக்கிடங்காகக்காண முடியாது என்பதென்னவோ உண்மைதான்.

இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் அரசு மற்றும் தனியார் துறைகளால் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப்பலகைகள் ‘இது தாகூரின் நிவேதிதாவின் சரத் சந்திரரின் ஊர்.இதைச்சுத்தமாய் வையுங்கள்’என அறைகூவிக்கொண்டிருந்தது வேடிக்கைக்காகக்கிச்சு கிச்சு மூட்டுவதைப்போலிருந்தது.





முதன்மையான தெருக்களின் நிலையே இப்பாடி என்றால் அதிலிருந்து கிளை பிரியும் தெருக்கள்,சந்துகள்,சேரிகள் இவற்றின் நிலை பற்றிச்சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம்.அந்த இடங்களில்புழுப்போல நெளியும் மனிதர்களைப்பார்க்கப்பொறுக்காமல் அல்லவா இந்த மண்ணுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் அன்னை தெரஸா!

ஆனாலும் ஆயிரம்தான் இருந்தாலும் கொல்கத்தாவை வெறுக்கத் தோன்றவில்லை; இது கல்வியின் இலக்கியத்தில் இணையற்ற உறைவிடம்;அதை இங்கே வாழும் மக்களும் ஒவ்வொரு நொடியும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

கொல்கத்தா விமான நிலையத்தின் உட்கூரை விதானம் முழுக்க வங்க மொழி எழுத்துக்களாலேயே அழகுபடுத்தப்பட்டிருப்பதும்



பேருந்து நிறுத்த நிழல்குடைத் தட்டியில் சரத் சந்திரரின் படத்தோடு கூடிய குறிப்பு இடம் பெற்றிருப்பதும் 


திரை நிழல்களை மட்டுமே கொண்டாடிப் பூப்போடும் நம்மால்கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாதவை.

வாடகைக்கார் விடுதியை நோக்கிச்சென்றபோது கொல்கத்தாவின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டனுடன் ரைட்டர்ஸ் பில்டிங் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர்களுக்கான கட்டிடமும் கண்ணில் பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரக்கார்ப்பயணத்தில் சௌரங்கி தெருவில் அமைந்திருந்த சௌத்ரி விடுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது  [  எண் 36 சௌரங்கி சந்து என்னும் அபர்ணாசென்னின் வங்கப்படம் [36 Chowringhee Lane - 1981 film written and directed by Aparna Sen] நினைவில் எழுந்தது 

சௌத்ரி விடுதியும் ஒரு பழங்காலக் கட்டிடம்தான். 

பெரிய வீதியிலிருந்து சற்று உள்ளடங்கினாற்போல இருந்த அதன்முன்புறம் மகாராஜா உணவகம் என்ற நவீன பாணி உணவு விடுதி ஒன்று இருந்தது. பிற்பகல் 3 45க்கு விடுதியை அடைந்து எனக்கு அறை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்த சாகித்திய அகாதமி கடிதத்தைக்காட்டியபோது வரவேற்பிலிருந்தவர்களின் தர்மசங்கடப்பார்வையிலிருந்தே தகவல் பரிமாற்றத்தில் ஏதோ குளறுபடி நேர்ந்து விட்டது என்பதைப்புரிந்துகொண்டேன்; கொல்கத்தாவில் தங்குவதற்கான வேறு மாற்று ஏற்பாடு கூட செய்யவில்லையே என்று எண்ணி முடிப்பதற்குள் எனக்கான  அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சிப்பந்தி ஒருவர் என் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு என்னை வழிநடத்திச்சென்றார். வயதில் மூத்தவர்களை…பெண்களை சிக்கலில்லாமல் எதிர்கொண்டு வங்காளிகள் அளித்த விருந்தோம்பலும் வரவேற்பும் என்னை நெகிழச்செய்தன.[ என்னை அறைக்கு அனுப்பிய பிறகு சாகித்திய அகாதமி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு என்னைப்பற்றிய விவரங்களை அவர்கள் உறுதிப்படுத்திக்கொண்டார்கள் என்ற நயத்தக்க நாகரிகப்பண்பைப் பின்புஅறிந்து கொண்டேன்]


மாலை 4 மணிதான் ஆகியிருந்தது. கொல்கத்தாவைச்சுற்றிப்பார்க்க நிறைய நேரம் மிச்சமிருந்ததது. மறுநாள் காலை 10 45க்கு விமானம் என்பதால் காலை 8 மணிக்கே சென்றாக வேண்டும்; அதனால் அன்று மாலையே ஊர்சுற்றலாம் என்ற எண்ணத்தில் என்னை அழைத்து வந்த வாடகைக்கார் ஓட்டுநரிடம் கொல்கத்தாவின் ஒரு சில இடங்களை மட்டும் 3, 4 மணி நேரம் காட்ட முடியுமா என்று விமானநிலையத்திலிருந்து வரும் வழியிலேயே கேட்டிருந்தேன். நம்பிக்கைக்குரியவராகவும்,இனிமையான இயல்புகள் கொண்டவராகவும் தோன்றிய ராஜ்குமார் தாகுர் என்ற அந்த இளைஞர் என் கோரிக்கையை உடனே ஏற்றுக்கொண்டார்;அறையில் பயண மூட்டையைப்போட்டு விட்டு முகம் மட்டும் கழுவிக்கொண்டு கைப்பையுடன் வண்டியில் ஏறினேன். விக்டோரியா நினைவகம்,ஹௌரா பாலம்,காளி கோயில் ஆகிய இடங்களுக்குச்செல்வதாய்த் திட்டம்

முதலில் விக்டோரியா நினைவகம்....



கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....