துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.11.16

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-8




செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நாங்கள் தங்கியிருந்த மூன்றாம் நாள்! அன்றைய எங்கள் பயணத் திட்டம் அங்கிருந்த மாளிகைகளுக்கானது. பீட்டர்ஸ்பர்க் நகரம், ஆலயங்கள் மற்றும் அழகான கட்டிடங்களின் இருப்பிடம் மட்டுமல்ல. எழில் வாய்ந்த மாளிகைகள் பலவற்றின் நகரமும் கூடத்தான். ஜார் மன்னர்களும் அவர்களின் சந்ததியரும் அரசாண்ட பல்வேறு காலகட்டங்களில் அவரவர் ரசனைக்கும் , கண்ணோட்டத்துக்கும் ஏற்றபடி - அந்தந்தப் பருவநிலை மாற்றங்களுக்கேற்பப் பல மாளிகைகளை உருவாக்கி அவற்றில் சுகபோகமான பகட்டான வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் பல இன்றளவும் நினைவுச்சின்னங்களாகவும் அருங்காட்சியகங்களாகவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 
 
மிக்கேலாவ்ஸ்கி மாளிகை, ஸ்டோகனோவ் மாளிகை, யுசுபோவ் மாளிகை, நிகோலெவ்ஸ்கி மாளிகை, மகா பீட்டரின் கோடைகால அரண்மனை, குளிர்கால அரண்மனை என்று நகருக்கு உள்ளேயும் அருகாமையிலும் நிறைந்து கிடக்கும் மாளிகைகளில், நகர்ப்புறத்திலிருந்த கோடைகால மாளிகை ஒன்றும் நகரின் மையப்பகுதியில் அரண்மனைச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் குளிர்கால மாளிகை ஒன்றும் நாங்கள் காண்பதற்காகத் தேர்வு செய்யபட்டிருந்தன.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து அரை மணிநேரப் பயணத்தில் புறநகர்ப்பகுதி ஒன்றில் இருப்பவை பீட்டர்ஹாஃப் கோடை மாளிகைகளும் அதை ஒட்டிய அரண்மனைத் தோட்டங்களும். முதலில் அதைக் காண்பதற்காகச் சென்றோம்…

பெட்ரோட்வோரெட்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விஸ்தாரமான பகுதி இங்குள்ள அரசமாளிகைகளுக்கெல்லாம் உச்சமாய் அமைந்திருப்பது; கடல்மட்டத்திலிருந்து சற்றே உயரத்தில் செங்குத்தான மேட்டின் மீது கம்பீரமாக நின்றிருக்கும் ‘கிராண்ட் பேலஸ்’, அதற்குக் கீழே அடுக்கடுக்கடுக்காய்ச் சரிந்து செல்லும் மேடுகளிலும் கீழே உள்ள சமதரைகளிலும் இருக்கும் நேர்த்தியான வடிமைப்புடன் கூடிய புல்வெளிகள், வகை வகையான பூந்தோட்டங்கள்… கண்கவரும் நீரூற்றுக்கள், சின்னச் சின்ன நீர்வீழ்ச்சிகள்… அற்புதமான பல குட்டிக்குட்டி மாளிகைகள்..., தங்க முலாம் பூசப்பட்டுத் தகதகக்கும் பல சிலைவடிவங்கள்… இவற்றோடு காட்சி தரும் பீட்டர்ஹாஃப், ஃபிரான்ஸ் நாட்டிலிருக்கும் வர்செயில்ஸ் மாளிகைக்கு நிகரானதாக… ‘ரஷ்யாவின் வர்செயில்ஸ்’ என்றே வழங்கப்படுகிறது. கலை எழில் கொஞ்சும் இந்த இடம் யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சாரச்சின்னங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பெற்றிருக்கிறது.
பீட்டர்ஸ்பர்கின் நகர்ப்புறத்தில் வர்செயில்ஸ் போன்ற மாபெரும் அரசத் தோட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று சக்கரவர்த்தி பீட்டர் கொண்டிருந்த  குன்றாத ஆர்வத்தாலும் அவரது இடையறாத உற்சாகத்தாலும் தொடங்கப்பட்ட இந்த மாளிகை அமைப்புக்களின் கட்டுமானப்பணி 1725இல் அவர் மரணமடந்ததற்குப் பிறகு நின்று போய் விட, கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குச் சென்றுவிட்ட பீட்டர்ஹாஃப், அவரது மகளான எலிஸபெத் ஆட்சிக்கு வந்த பிறகே [1740] புத்துயிர் பெறத் தொடங்கியது. 18,19ஆம் நூற்றாண்டுகளில் மேன்மேலும் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட இந்தப்பகுதி, காதரீன் பேரரசியின் ஆட்சிக்காலத்தில் அவரது ரசனைக்கேற்ற முத்திரைகளைத் தனதாக்கிக் கொண்டது. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மானியத் துருப்புக்களால் சூறையாடப்பட்ட நகரின் பிற புறநகர்ப்பகுதிகளைப்போலவே பீட்டர்ஹாஃபும் சீர்குலைக்கப்பட்டபோதும் இராணுவப்பொறியாளர்களின் அயராத உழைப்பால் வெகு விரைவாகவே சீரமைக்கப்பட்டு 1945க்குள் இயல்புநிலைக்குத் திரும்பி விட்டது ஓர் அதிசயம் என்றே கூற வேண்டும்.

பீட்டஹாஃபின் பிற மாளிகைகளுக்கெல்லாம் நடுநாயகமாக அதன் இதயம் போன்றிருக்கும் ‘கிராண்ட் பேலஸை’ப் பார்த்தபின்பு வேறு இடங்களைப் பார்க்கலாம் என எங்கள் வழிகாட்டி கூறியபடி, முதலில் அந்த மாளிகைக்குள் நுழைந்தோம். மகாபீட்டரின் காலத்தில் நீளமும் குறுகலுமாய் அமைந்திருந்த அந்த அரண்மனையின் பழைய கட்டிடக்கலை அமைப்பை அதிகம் மாற்றாமல் தன் கலைநுட்பத்தேர்ச்சியால் அதற்கு அழகும் மெருகும் ஊட்டியவர் பார்டோலோமியோ ரஸ்ட்ரெல்லி என்னும் கட்டிடக்கலை நிபுணர்.
பீட்டர் சக்கரவர்த்தியின் மகள் எலிஸபெத்தின் வேண்டுகோளுக்கு இணங்க  அந்தப்பணியை மேற்கொண்ட அவர் மூலக்கட்டிடத்தின் சிறகுகள் போல அதன் இரு புறமும் தங்க முலாமிட்ட அரங்குகளை அமைத்து அதற்கொரு கம்பீர வடிவம் அளித்தார். அதை ரசித்தபடியே மாளிகைக்குள் பிரவேசித்தால்…. ஜார் மன்னர்கள் நடத்தியிருக்கும் பகட்டும் படாடோபமுமான மித மிஞ்சிய செல்வச்செழிப்போடு கூடிய வாழ்க்கைக்கு சாட்சியாகவே க்ரேண்ட் பேலஸின் ஒவ்வொரு அறையும் அமைந்திருந்ததைக் காண முடிந்தது. 
ரஸ்ட்ரெல்லியின் கைவண்ணத்தில் அலங்காரமான தோற்றப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளைவான மாடிப்படிகளே தொடர்ந்து நாம் காண இருக்கும் ஆடம்பரமான காட்சி அமைப்புக்களுக்குக் கட்டியம் கூறி விடும். படிகளில் மேலேறிச்சென்றதுமே நம்மை மலைப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்துவது ‘பால்’ நடனம்  [ballroom dance]  ஆடுவதற்கான மிகப்பெரிய கூடம். தங்கத்தின் மீது மிகப்பெரும் பித்துக்கொண்டிருந்தவளாகச் சொல்லப்படும் மகாபீட்டரின் மகள் எலிஸபெத், பொன்னாலேயே இழைத்து இழைத்து உருவாக்க வைத்திருக்கும் அந்த அறையைக் கடந்தால், வெண்மை கலந்த மயிற்கழுத்து நிறத்தோடு கூடிய ஆட்சிகட்டில் உள்ள  அரங்கம், சீனப்பட்டில் செய்த திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் வரவேற்பறை, ஓக் மரத்தால் இழைத்துச் செய்யப்பட்ட இருக்கைகளும் சுவரலமாரிகளும் கொண்ட படிக்கும் அறை, மன்னர்கள்…அரசியர் ஆகியோரின் படுக்கை அறைகள் என்று காட்சிகள் தொடர்ந்து கொண்டேசெல்கின்றன. ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே நிகழ்ந்த  கடற்போரைச் சித்தரிக்கும் ஓவியங்கள் பல ’செஸ்மா’ அரங்கை நிறைத்திருக்கின்றன. இவான் ஐவஸோவ்ஸ்கியால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. ’ஓவியக்கூடம்’[picture hall] என்றே பெயர் பெற்றிருக்கும் ஓர் அரங்கம் முழுவதும் விதம் விதமான வண்ண உடையணிந்து வெவ்வேறு கோலங்களில் காட்சி தரும் 368 பெண்களின் வண்ண ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. அத்தனை ஓவியங்களுக்கும் ‘மாதிரி’யாக [model] இருந்தவர் ஒரே ஒரு பெண்தான் என்பதை அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.

பீட்டர் சக்கரவர்த்தியின் மகள் எலிஸபெத்தின் வேண்டுகோளுக்கு இணங்க  அந்தப்பணியை மேற்கொண்ட அவர் மூலக்கட்டிடத்தின் சிறகுகள் போல அதன் இரு புறமும் தங்க முலாமிட்ட அரங்குகளை அமைத்து அதற்கொரு கம்பீர வடிவம் அளித்தார். அதை ரசித்தபடியே மாளிகைக்குள் பிரவேசித்தால்…. ஜார் மன்னர்கள் நடத்தியிருக்கும் பகட்டும் படாடோபமுமான மித மிஞ்சிய செல்வச்செழிப்போடு கூடிய வாழ்க்கைக்கு சாட்சியாகவே க்ரேண்ட் பேலஸின் ஒவ்வொரு அறையும் அமைந்திருந்ததைக் காண முடிந்தது. 
ரஸ்ட்ரெல்லியின் கைவண்ணத்தில் அலங்காரமான தோற்றப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளைவான மாடிப்படிகளே தொடர்ந்து நாம் காண இருக்கும் ஆடம்பரமான காட்சி அமைப்புக்களுக்குக் கட்டியம் கூறி விடும். படிகளில் மேலேறிச்சென்றதுமே நம்மை மலைப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்துவது ‘பால்’ நடனம்  [ballroom dance]  ஆடுவதற்கான மிகப்பெரிய கூடம். 

தங்கத்தின் மீது மிகப்பெரும் பித்துக்கொண்டிருந்தவளாகச் சொல்லப்படும் மகாபீட்டரின் மகள் எலிஸபெத், பொன்னாலேயே இழைத்து இழைத்து உருவாக்க வைத்திருக்கும் அந்த அறையைக் கடந்தால், வெண்மை கலந்த மயிற்கழுத்து நிறத்தோடு கூடிய ஆட்சிகட்டில் உள்ள  அரங்கம், சீனப்பட்டில் செய்த திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் வரவேற்பறை, ஓக் மரத்தால் இழைத்துச் செய்யப்பட்ட இருக்கைகளும் சுவரலமாரிகளும் கொண்ட படிக்கும் அறை, மன்னர்கள்…அரசியர் ஆகியோரின் படுக்கை அறைகள் என்று காட்சிகள் தொடர்ந்து கொண்டேசெல்கின்றன. ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே நிகழ்ந்த  கடற்போரைச் சித்தரிக்கும் ஓவியங்கள் பல ’செஸ்மா’ அரங்கை நிறைத்திருக்கின்றன. இவான் ஐவஸோவ்ஸ்கியால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. ’ஓவியக்கூடம்’[picture hall] என்றே பெயர் பெற்றிருக்கும் ஓர் அரங்கம் முழுவதும் விதம் விதமான வண்ண உடையணிந்து வெவ்வேறு கோலங்களில் காட்சி தரும் 368 பெண்களின் வண்ண ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. அத்தனை ஓவியங்களுக்கும் ‘மாதிரி’யாக [model] இருந்தவர் ஒரே ஒரு பெண்தான் என்பதை அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.
பீட்டர் பேரரசர் தொடங்கி அவரது மகள் எலிஸபெத், பிறகு வந்த பேரரசி காதரீன் எனப் பல்வேறு ஆட்சியாளர்களின் உருவப்படங்களும் ஓர் அரங்கில் இருந்தன… அவற்றைக் காட்டியபடியே அரச பரம்பரைக்குள் ஆட்சி பீடத்துக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கும் பதவிப்போட்டிகள்…அவற்றின் தொடர்ச்சியாக நிகழ்ந்த படுகொலைகள்..வேறுவகையான அவலங்கள் என்று வரலாற்றுச்சம்பவங்கள் பலவற்றையும் கதை போல சுவாரசியமாக விவரித்துக்கொண்டேசென்றுகொண்டிருந்தார் எங்கள் வழிகாட்டி….
மாளிகையிலிருந்து படி இறங்கி வெளிவந்தபோது என் உள்ளம் கலவையான உணர்வுகளால் நிரம்பிக்கிடந்தது… கலை…. அதன் எழிலார்ந்த வெளிப்பாடு இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் திகட்டும் செல்வச்செருக்கோடும் மிகையான படாடோபங்களோடும் அகந்தையான ஆடம்பரங்களோடும் அது வெளிப்படும்போது அதோடு ஒட்ட மனம் மறுக்கிறது  என்று நினைத்துக்கொண்டேன்….
நடுப்பகல் வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்க, பீட்டர்ஹாஃபில் நாங்கள் கட்டாயம் பார்த்தாக வேண்டிய தோட்டங்களும் நீரூற்றுக்களும் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. நகரத்துக்குச்சென்று சேரவே நேரமாகும் என்பதால் பகல் உணவு நேரம் தவறுவதற்குள் நாங்கள் அவற்றைப் பார்க்காமல் கிளம்பி விடுவதே நல்லது என்று வழிகாட்டி சொல்ல அவருக்கும் சென்னையிலிருந்து உடன் வந்திருந்த எங்கள் சுற்றுலாக்குழுத் தலைவருக்கும் இடையே சிறியதாய் ஒரு வாக்கு வாதம் நிகழ்ந்தேறியது… பீட்டர்ஹாஃப் வரை வந்து விட்டு அங்கே தவறவிடாமல் பார்த்தாகவேண்டிய தோட்டங்களையும் நீரூற்று, நீர்வீழ்ச்சி முதலியவற்றையும் பார்க்காமல் எங்களைத் திரும்ப அழைத்துச்செல்ல எங்கள் குழுத் தலைவருக்குச் சற்றும் மனம் இல்லை; விடாப்பிடியாக உள்ளூர் வழிகாட்டி காதரீனாவிடம் அதற்காக வாதாடி எங்களுக்கு நாற்பது நிமிடங்களைப் பெற்றுத் தந்தார் அவர்… அந்த நாற்பது நிமிடங்களை மட்டும் நாங்கள் பெறத் தவறியிருந்தால் மிகச்சிறந்த காட்சி இன்பங்களை இழந்திருப்போம் என்பது மாளிகையிலிருந்து சரிந்து செல்லும் பாதைக்குள் கால் பதித்ததுமே புலனாகி விட்டது… 

மைசூரிலுள்ள பிருந்தாவனத் தோட்டத்திலும் வேறு பல சுற்றுலாப் பகுதிகளிலும் வழக்கமாக நாம் பார்க்கும் நீரூற்றுக்களுக்கும், க்ரேண்ட் பேலசிலிருந்து கீழே தரைப்பரப்பு வரை பல்வேறு மட்டங்களில் பொங்கிப்பெருகிக்கொண்டிருக்கும் நீரூற்றுக்களுக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. பீட்டர்ஹாஃபின் மிகச்சிறந்த தனித்துவம் என்றே குறிப்பிடும் அளவுக்குப் பல வகைகளிலும் படைப்புத் திறனின் வெளிப்பாடுகளாகவே இந்த நீரூற்றுக்கள் அமைந்திருக்கின்றன. நீரை மேல்நோக்கி எழச்செய்யும் செயற்கையான விசைக் குழாய்கள், அழுத்தும் பொறிகள் என ஏதும் இன்றி, எந்த உயரத்தில் - எந்த மட்டத்தில் ஒரு நீரூற்று உள்ளதோ அந்த உயரத்தின் ஏற்றத் தாழ்வு காரணமாக ஏற்படும் ஈர்ப்பு விசையால் மட்டுமே அந்த நீரூற்று தானாக  இயங்குவதென்பது  மிகவும் விந்தையானது. இங்குள்ள பெரும்பாலான நீரூற்றுக்களும் வடிவமைக்கப்பட்டிருப்பது அந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேதான். வினோதமான வடிவங்களில் அமைந்து பார்வையாளர்களை வியப்பில் மட்டும் அல்லாமல் நீர்க்குளியலிலும் ஆழ்த்தி விடும் ஊற்றுக்களும் இங்கே நிறையவே உண்டு.
செங்குத்தான அச்சில் வட்டவடிமாகச் சுழலும் தகட்டின் விளிம்புகளிலிருந்து தெறிக்கும் நீர்த் திவலைகள் சூரியக்கதிர் போலத் தோற்றமளிப்பதால் ‘சூரியன்’ என்ற பெயர் கொண்ட நீரூற்று, ’ஆதாம்’, ‘ஏவாள்’ பெயர்களைத் தாங்கியபடி தோட்டத்தின் இரு ஓரங்களிலும் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் நீரூற்றுக்கள், சிங்கத்தின் வாயை சாம்சன் பிளப்பது போன்ற தோற்றத்துடனிருக்கும் சாம்சன் நீரூற்று ஆகியவை நம்மை மலைக்கச் செய்பவை. ரஷ்யா ஸ்வீடனை வெற்றி கொண்டதன் அடையாளமாக நிறுவப்பட்டிருக்கும் சாம்சன் நீரூற்றில் பிளந்த சிங்கத்தின் வாயிலிருந்து இருபது மீட்டர் தொலைவு வரை நீர் செங்குத்தாகப் பீய்ச்சியடிக்கிறது…
மரங்களின் வடிவத்திலும் குடை போலவும் அமைக்கப்பட்டிருக்கும் சில நீரூற்றுக்கள் அவற்றை நெருங்கிய அளவிலேயே நம் மீது நீரை அள்ளிச்சொரிந்தபடி நம்மை மகிழ்வில் ஆழ்த்துபவை. பழக்கூடை தாங்கிய மேசை போன்ற ஒரு அமைப்பு……அதிலுள்ள பழத்தை எடுக்க முற்பட்டால் போதும்….உடனே ஒரு குட்டி நீர்வீழ்ச்சி நம்மை நனைத்துவிட்டுப்போகும்…
இவற்றையெல்லாம் விட இறுதியாக சம தளப்பகுதிக்கு வந்து சேர்ந்தபோது நாங்கள் கண்ட நீரூற்று மிக மிக விசித்திரமானது…சிறிதும் பெரிதுமாய்க் கூழாங்கற்கள் பாவியிருக்கும் சதுரவடிவமான ஒரு தரைப்பகுதி…அந்தக்கற்களின் மீது நாம் கால் பதித்த மாத்திரத்தில் – அந்த அழுத்தம் ஒன்றினாலேயே கீழிருந்து மேல்நோக்கிப் பீறிட்டு வரும் நீர் நம்மை முழுமையாக நனைத்து விட்டுப்போகும்.அந்த நீர்விளையாட்டில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்த காட்சி கண்டு என் வயதை மறந்து நானும் கூடக் குழந்தையாகிப் போனேன்… ஈரம் படிந்த கல்லில் நான் வழுக்கிக்கொண்டு விடக்கூடாதே என்று எங்கள் குழு நண்பர்கள் கவலையோடு தடுத்தும் கேட்காமல் அந்த சதுரத்தரைக்கற்களில் கால் வைத்துப் பொங்கி வரும் நீரில் நனைந்து திளைத்தேன்… அப்போது அங்கே அடித்துக்கொண்டிருந்த கடும் வெயிலுக்கு அது வெகு சுகமாய் இருந்ததோடு……திரும்ப நெடுந்தூரம் நடந்து ஏறி மேற்பரப்பில் நின்றுகொண்டிருந்த எங்கள் பேருந்தை எட்டுவதற்குள் உடைகளும் கூட அதில் காய்ந்து போயிருந்தன. 
தோட்டங்களும் நீரூற்றுக்களும் முடிவு பெறும் இடத்தில் கடலோடு கலக்கும் கால்வாய் பரந்து விரிந்த நீர்ப்பரப்போடு மிகப்பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது… ஃபின்லாந்து நாட்டுக்கு அதன் வழி எளிதாய்ச்சென்றுவிட முடியும் என்றார் வழிகாட்டி.  
திட்டமிட்டதை விடவும் கூடுதலான நேரத்தை பீட்டர்ஹாஃஃப் எடுத்துக்கொண்டு விட்டதால் பேருந்தில் ஏறி பீட்டர்ஸ்பர்க் வந்தடைந்து அங்கு விரைவாக மதிய உணவை முடித்துக்கொண்டு குளிர்கால அரண்மனையைப் பார்க்கக் கிளம்பினோம். செல்லும் வழியில் பேருந்திலிருந்தே பீட்டர்-பால் கோட்டை அரண் கண்ணில் பட அது பற்றிப் படித்திருந்த செய்திகள் மனதுக்குள் விரிந்தன.
ரஷ்யாவின் மீது ஸ்வீடன் நிகழ்த்திய தரை மற்றும் கடல்வழிப் படைத் தாக்குதல்களிலிருந்து காத்துக்கொள்ள பீட்டர்பேரரசரால் கட்டப்பட்ட இந்த அரணின் ஒருபகுதியில்தான் அரசியல் கைதிகளுக்கான சிறைக்கூடமும் அமைந்திருந்தது. புரட்சிக்காரனாக விளங்கிய பீட்டர் பேரரசரின் மகன் அலெக்ஸியே இதில் முதன்முதலாகச் சிறை இருந்தவன் என்பது வியப்பூட்டும் செய்தி….படைப்பாளிகளான மாக்ஸிம் கார்க்கி, தஸ்தயெவ்ஸ்கி லெனின் மூத்த சகோதரரான அலெக்ஸாண்டர் ஆகியோரும் கூட இந்தச்சிறையில் இருந்திருக்கிறார்களென்ற தகவலை நான் அசைபோட்டபடி இருந்தபோது நகரின் மையப்பகுதியில் உள்ள அரண்மனைச் சதுக்கத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம்.
சதுக்கத்தின் மையப்பகுதியில் பிரம்மாண்டமான குதிரை வீரன் வடிவில் நின்று கொண்டிருந்த பீட்டர் பேரரசரின் வெண்கலச்சிலை, ரஷ்ய இலக்கியத்தில் சிறப்பாகப் பேசப்படும் அலெக்ஸாண்டர் புஷ்கினின் ‘வெண்கலக்குதிரை வீரன்’ (The Bronze Horseman) என்னும் கவிதையை நினைவூட்டியது.
 மிகவும் கனம் வாய்ந்ததும் கடினமானதுமான  கற்பாறைப் பீடத்தின் மீது காதரீன் பேரரசியால் நிறுவப்பட்ட இந்தச்சிலை, அந்தக் கவிதையின் பெயராலேயே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. நேவா ஆற்றில் வந்த வெள்ளத்தால் தன் காதலி அடித்துச்செல்லப்பட்டு விட… அவ்வாறான ஓரிடத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரை நிறுவியதற்காக அந்தச் சிலைக்கு முன் நின்று புலம்பியபடி அரசனைச் சபிக்கிறான் அந்தக்காதலன்… உயிர் பெற்றெழுந்து விட்ட அந்தச்சிலையின் குதிரை வீரன், காதலனைத் துரத்திக்கொண்டு ஓட… இறுதியில் ஆற்றோரமாய் உள்ள பாழடைந்த குடிசைப்பகுதி ஒன்றின் அருகே மிதக்கிறது அந்த அப்பாவியின் உடல். அரசாள்பவர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை… எப்போதும்  நிலவும் சாஸ்வதமான போராட்டத்தைப் பதிவு செய்திருக்கும் இந்தக் கவிதை பீட்டர்ஸ்பர்க் நகரின் அழகு… மேன்மை இவற்றோடு அதன் மறு பக்கத்தையும் கூட மறக்கவிடாமல் நமக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறது… 
தொடரும்...

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....