துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.3.09

குற்றமும் தண்டனையும்:கடிதங்கள்.



என்னுரை:

'குற்றமும் தண்டனையும்' மொழியாக்கப்பணி முடிந்து நூல் வடிவில் அதைப் பார்த்தபோது ,மகிழ்ச்சியுடன் கூடவே வேறோர் உணர்வும் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. வாசிப்புப்பழக்கம் என்பதே படிப்படியாகக் குறைந்துவரும் இன்றைய கால கட்டத்தில்- இத்தனை பெரிய ஒரு புத்தகத்தை (அதிலும் ஒரு மொழியாக்கப்படைப்பைப்)பொறுமையாகப்படிக்கும் வாசகர்கள் எனக்கு வாய்ப்பார்களா என்ற மிகப்பெரிய சந்தேகம்தான் அது. என் உழைப்பு உரிய வகையில் போய்ச்சேராதோ என்ற ஆயாசமும், வெறுமையும் என்னை ஆட்கொள்ளத்தொடங்கியிருந்தன.

படைப்பாளியும்
தேர்ந்த விமரிசகருமான திரு சி. மோகன் அவர்களிடமிருந்து செல்பேசி வழி அனுப்பப்பட்ட முதல் பாராட்டுச்செய்தி...என்னைச்சற்றே ஆறுதல் கொள்ள வைத்து நம்பிக்கை ஊட்டியது. தொடர்ந்து திரு ஜெயமோகன், திரு ராமகிருஷ்ணன் முதலிய உலக இலக்கிய வாசிப்புக் கொண்ட படைப்பாளிகள், குறிப்பிட்ட அந்த மொழியாக்கம் பற்றிய கருத்துக்களைத் தங்கள் வலையில் பதிவு செய்து என்னை மேலும் சிறிது நம்பிக்கை கொள்ளச் செய்தனர். எழுத்தாளர்கள், திரு.கு.சின்னப்ப பாரதி, திரு கோணங்கி ஆகியோரும் தனிப்பட்ட முறையில் எனக்குக்கடிதம் எழுதிப் பாராட்டுத் தெரிவித்தனர்.

இவற்றோடு....வாசக வட்டத்திலிருந்து வந்துள்ள கடிதங்களில் சில, அந்த வாசகர்களின் ஆழ்ந்த வாசிப்பையும்,தீவிரமான உள்வாங்கலையும் வெளிப்படுத்தி என்னைப் பிரமிக்க வைக்கின்றன. 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பதைப் போல அந்த நூலால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டதற்கு முழுமுதற்காரணம் தஸ்தாயெவ்ஸ்கி என்ற மாமேதையின் வல்லமை மட்டுமே என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்; ஆனாலும் கூட அந்த மேதையின் எழுத்து இப்படிப்பட்ட தரமான தமிழ் வாசகர்களைச் சென்றடைய நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்ற நிறைவு,பிற பரிசுகளையும்,பாராட்டுக்களையும் விட எனக்கு உகப்பானதாக இருக்கிறது.அருமையான அந்த வாசக அவதானிப்புக்களையும், எழுத்தாளர்களின் கடிதங்களையும் வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
முனைவர் திருமதி ஜே.பாத்திமா,
மதுரை, 18.10.08
(பாத்திமா அவர்கள்,மதுரை பாத்திமாக் கல்லூரித் தமிழ்த்துறையில் முப்பது ஆண்டுக்காலத்திற்கும் மேலாக-என்னுடன் ஒருங்கே பணியாற்றித் ( துறைத் தலைவராகவும்) தற்பொழுது பணி நிறைவு பெற்றிருப்பவர்.என் உற்ற தோழி.தீராத இலக்கிய ஆர்வம் கொண்ட மிகச் சிறந்த வாசகி; தேர்ந்த- நுணுக்கமான திறனாய்வுப்பார்வை கொண்டிருப்பவர்.
லா.ச.ராமாமிருதத்தின் சிறுகதைகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் 'லா.ச.ரா.கதைகளில் கருவும், உருவும்' என அதனை நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்.
சிறுகதைப் படைப்பாளியுமான பாத்திமாவின் சில கதைகள்,குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தனித்துவம் வாய்ந்தவை.
வெளி நாட்டில் தத்துக்கொடுக்கப்பட்ட அனாதைச் சிறுமி ஒருத்தி,சற்றுப்பெரியவளாக வளர்ச்சி பெற்ற பின், இந்தியாவில் தன் வேர்களைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றிய ''ஜூலியின் வேர்களைத் தேடி...''என்ற அவரது மொழியாக்க நூல் சிறப்பான ஒரு படைப்பு.
தன் பணி நெருக்குதல்களுக்கு இடையில் மிகுந்த ஆர்வத்தோடு நேரம் ஒதுக்கி என் மொழியாக்கம் பற்றிய விரிவான ஒரு திறனாய்வுக்கடிதத்தை(எந்த மதிப்புரைக்காகவோ, என் வேண்டுகோளுக்காகவோ அல்லாமல் தன் சுய உந்துதலால்மட்டுமே) எழுதியிருக்கும் அவர்களின் ஆர்வத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.
இக் கடிதத்தைப் படிப்பவர்கள், என் மீது கொண்ட நட்பின் வெளிப்பாட்டை விடவும், தஸ்தாயெவ்ஸ்கி என்ற மாமேதையின் பால், இப்படைப்பால் விளைந்திருக்கும் பிரமிப்பையே அவர்கள் மிகுதியாக வெளிப்படுத்தியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
வெற்றுப் புகழ்ச்சிகளை விடவும் எனக்கு இதுவே உகப்பானதாக இருக்கிறது.)

தொடர்ந்து...கடிதம்.

அன்புள்ள சுசீ,
இரு பகல்களும், ஒரு இரவுமாகக் 'குற்றமும் தண்டனையும்' என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. நூலின் பிரம்மாண்டம்தான்முதலில் கருத்தை ஈர்க்கிறது; ஆனால், உள் நுழைந்து ஓரிரு பக்கங்களைப்படித்த உடனேயே இப்படைப்பு
சாதாரணமானதல்ல என்பது புரியத் தொடங்குகிறது.

ஒரு மனநிலைச்சித்திரிப்பு ,உடனேயே அதற்கு எதிர்நிலையான மனநிலைச் சித்திரிப்பு, எல்லையற்ற விவாதங்கள், ஆகிய எல்லாவற்றயும் குற்றத்தோடு (கொலைச்செயல் நிகழ்வோடு) சம்பந்தப்படுத்தி விடுவது...,அதன் வழி கதையின் மைய இழை தொடக்கம் முதல் பாதை விலகாமல் பார்த்துக் கொள்வது...,கூடவே உளவியல் விளக்கங்கள் என்று அறாத முப்புரி நூல் போலக்கதைப் பின்னல் செல்கிறது.

நிகழ்ச்சிகளின் பொருத்தமான அடுக்காக முழுப்புதினமும் இருந்தாலும், உள் அடுக்குகள், மனநிலைச் சித்திரிப்புக்களாகவோ,மனநிலை விளக்கங்களாகவோ உள்ளன.

'குற்றமும் தண்டனையும்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப் புதினம், குற்றத்தை எளிதாகச் செய்யத் தூண்டும் மன நிலைக்கும், அதைத் தடுக்க உந்தும் உள்ளுணர்வுக்கும், குற்றம் செய்யப்பட்ட பின் அதை ஒத்துக் கொள்ள எழும் அவாவுக்கும்,குற்றத்தை மறைக்க முயலும் முயற்சிக்குமிடையேயான தொடர் போராட்டத்தை அற்புதமாய்ச் சித்திரிக்கிறது.தராசு முள்ளின் வேகமான இரு பக்க அசைவு போல் ,ஒரு பகுதி தரும் விரிவான மனநிலைச் சித்திரிப்பு அதற்கடுத்த பகுதியிலேயே தீவிரமாய் மறுக்கவும், மறுதலிக்கவும் பட்டு அடுத்து என்ன என்ற கேள்வியால் நம் ஆவலைத் தூண்டுகிறது; பக்கங்களைப் புரட்டி முடிவை அறிந்து கொண்டாலும்கூட,இந்த முடிவுக்கு ,இந்த மனிதன் எப்படி வந்தான் என்ற கேள்வி இராத் தூக்கத்தைக் கலைத்து மீண்டும் பொறுமையாய்க் கதையைத் தொடரச் செய்கிறது.

இரட்டைக் கொலைகளச் செய்யும் ரஸ்கோல்நிகோவ் நம்மைப்போன்ற சாதாரண மனிதன்
தான்; எந்த பயங்கரவாத இயக்கத்தையும் சார்ந்தவனல்ல என்பது நம்மைப் பாதிக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அன்றாடம் சந்திக்கும் படிப்பறிவும், சிந்தனையும் உள்ள ஒரு மனிதன் ,அடகுக்கடை நடத்தி சாமானியரைக் கொள்ளையடிக்கும் ஒரு வயதான பெண் மேல் கொள்ளும் வெறுப்பால்,அவளைக் கொலை செய்வதை நியாயமானதாகவும், நீதியானதாகவும் எண்ணிக் கொள்கிறான்.ஒரு பேனை நசுக்குவது போல அவளை நசுக்கி விட்டதாக அவன் நினைத்துக் கொள்கிறான். ஆனால்..செயல் முடிந்த சில கணங்களிலேயே உண்மையை வெளிப்படுத்தும் உந்துதல் அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது.அதே நேரத்தில் அதன் விளைவுகளை உணர்த்தி அவன் அறிவு அவனை எச்சரிக்கிறது.
அறிவுக்கும், ஆன்மாவுக்கும்(ஆழ்மனதிற்கும்)இடையேயான போராட்டமாக நாவல் விரிகிறது.

அடிப்படையில் அவன் நல்லவனாக இருப்பதால்...சமூகத்தால் குற்றவாளியாய்த் தீர்க்கப்பட்டவளும், பொருள் வளமோ, உடல் வலிமையோ.., சமூகப் பாதுகாப்போ இல்லாதவளும், வயதில் சிறியவளுமான சோனியா,தன் உள்ளத்தின் உண்மை ஒளியால் ,பலர் அறிய அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என்று திட்டமாக அறிவுறுத்தும்போது ,அவன் அதை ஏற்றுக் கொள்கிறான். அவள் வார்த்தைகள் அவனை ஆச்சரியப்படுத்துகின்றன; அந்த வார்த்தைகளை விடவும்- கொலைக்குற்றவாளிகள் கொண்டு செல்லப்படும் சைபீரியாவுக்கு அவனோடு வர அவளும் தயார் என்பதை வெளிப்படுத்தும் அவளுடைய அன்பும், கடினமான போராட்டத்தை இத்தனை காலம் தாங்கிக் கொண்டிருக்கிறானே என்று அவனுக்காக உருகும் அவளது மன உருக்கமும்தான் உண்மையின் பாகையில் அவன் காலடி எடுத்து வைக்கக் காரணங்களாய் உள்ளன.அவள் அன்பால் மீண்டும் ஒரு வாழ்வு தனக்குண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளத்தான் விவிலியத்திலிருந்து 'லாசரஸ் உயிர்த்தெழுதல்' பகுதியை அவளை வாசிக்கச் சொல்கிறான்.

ஆனாலும்...உண்மையை ஒத்துக்கொண்டதோடு எல்லாம் சரியாய்ப் போய் விடவில்லை.
''ரஸ்கோல்நிகோவ், தன் வாக்குமூலத்தை மீண்டும் ஒரு முறை கூறத் தொடங்கினான்'' என்ற மையக்கதையின் இறுதி வரி, கொலை பற்றிய ஒரு நாவலுக்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையை ,அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் ஆழ்ந்து நோக்க முடிந்த தஸ்தாயெவ்ஸ்கியால் அதைத் தன் புதினத்தின் இறுதியாகக் கொள்ள முடியவில்லை. அதனால் 'பின் கதை' என்று தலைப்பிட்டு இரு அத்தியாயங்கள் எழுதுகிறார்அந்தப் பின்கதையும் மிகத் தேவையாகவே உள்ளது.அவன் என்ன ஆனான் என்று ஆவலோடு தொடர்ந்து படிக்கிறோம். கதை என்ற உணர்வு இல்லாமலே அதைப்படித்தேன்..

தான் செய்த கொலை நியாயமானது என்றும், ஒரு பலவீனமான கணத்திலேயே தான் உண்மையை ஒத்துக்கொண்டு தண் டனையை வரவழைத்துக் கொண்டதாகவும் கருதி, அந்த எண்ணத்தால் அலைக்கழிக்கப்பட்டதும், அவன் தண்டனைக்கு உட்படக் காரணாமாய் இருந்த சோனியாவை அவன் கடுமையாகப் புறக்கணித்து ,அவளுடனான சில கண சந்திப்புக்களைப் புறகணிப்பின் கணங்களாய் மாற்றி அவளுக்கு வேதனை தந்ததும் அப்பின் கதையில் எந்த மறைவும் இன்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னைப் பற்றியே அவன் சிந்தனை சுழன்று கொண்டிருந்தவரை, அவனுக்கு விடுதலை இல்லை.

தன் சக கைதிகள் சிறைப் பறவகளாய் இருந்தாலும், வாழ்க்கையை அவர்கள் நேசிப்பதை உணர்ந்தபோதும், கண நேரம் வந்து போகும் சோனியாவின்பால் அவர்கள் வைத்திருந்த மதிப்புக்கான காரணம் என்ன என்று எண்ணிப் பார்த்தபோதும், தன் மீதும் தன் நம்பிக்கைகளின் மீதும் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்ற அந்தராத்மாவின் மென்மையான உணர்த்துதலை ஏற்றுக்கொள்கிறான் அவன்.

காலமும், சோனியாவின் அன்பும் சிந்தனை வலைகளிலிருந்து விடுபட்டு அன்புக்கு முன் அவனை மண்டியிடச் செய்கின்றன. இங்கும்கூட ''இது ஒரு புதிய கதையின் தொடக்கம் மட்டும்தான்.....கற்பனை உலகிலிருந்து கனவில் கூடத் தான் கண்டறியாத யதார்த்த உலகத்திற்குள் அவன் எவ்வாறு அடியெடுத்து வைத்தான் என்பதும் ஒரு புதுக் கதைக்கான விஷயங்கள்'' என்றுதான் தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.

புதினம் என்பது...ஒரு சிக்கலின் தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் மட்டுமல்ல; அது...வாழ்க்கையின் விரிவு என்பதான புரிதலை இப்புதின வாசிப்பு நமக்குத் தருகிறது.

தமிழ் வாசகர்களை ஆச்சரியப்பட வைக்கும், திரும்பப் படித்துச் சரிபார்க்க வைக்கும் பல விஷயங்கள் ,இப்புதினத்தில் உள்ளன.

கொலையை ஆராய வந்த போர்பிரி, தன் கூர்த்த மதியால் கொலையாளி யார் என்பதை அறிந்த பிறகும் ,தான் அறிந்த செய்திகள் எவற்றையும் காவல் துறையில் வெளிப்படுத்தாமல்- ரஸ்கோல்நிகோவ், தானாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளவும், அதன் மூலம் அவன் தண்டனைக்காலம் குறையவும் வாய்ப்பளிக்கிறார். குற்றவாளி, தன் கையிலிருந்து தப்பித் தற்கொலை செய்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அறிந்திருந்தும், துப்பறியும் நிபுணனாகத் தன்னைக் காட்டிக் கொள்வதை விட, மனிதனாய்ச் செயல்படுவதையே தேர்ந்து கொள்கிறார்.

பெண் பித்தனாய் அறியப்பட்ட ஸ்விட்ரிகைலோவ் ,தன் மரணத்தின் முன் சோனியாவை விபச்சாரத் தொழிலிலிருந்து மீட்கக் கணிசமான தொகையைத் தருகிறார்.

கனவானாக அறியப்பட்டவரும், மதிக்கப்பட்டவருமான லூசின், சோனியாவைத் திருடி என்று எண்பிக்க முயன்று கேவலமாய்த் தோற்றுப் போன பின்னும், அதைக்குறித்த கவலையின்றிஇருக்கிறார்.

தன் வாழ்க்கையையும், மனைவி, மக்கள் வாழ்க்கையையும் குடிப்பழக்கத்தால் சீரழித்த மர்மெலாதோவை அவன் மனைவி காதரீனா நம்பிக்கையோடு நேசிக்கிறாள்.

தன் மகனின் கசப்பான நிகழ் காலத்தை உள்ளுணர்வில் அறிந்திருந்தாலும், அவனைக் குறித்த சிறப்புக்களை மட்டுமெ பேசும் மாற்றுத் தேடல் மூலம், தன் உயிரைத் தாங்கிக்கொண்டிருக்கிறாள், ரஸ்கோல்நிகோவின் தாய்; ஒரு எல்லைக்கு மேல் அதைத் தொடர முடியாமல் மரித்துப் போகிறாள்.

துனியா, சோனியா இருவரும்- அதிலும் சோனியா கொஞ்சம் அதிகமாகவே- மனதில் நிலைக்கின்றனர்.சோனியாவின் மீது திருட்டுப் பழி சுமத்த முயலும் பீட்டர் பெத்ரோவிசை விட நிச்சயம் ஸ்விட்ரிகைலோவ் நல்லவன்
.
நீங்கள் முன்னுரையில்குறிப்பிட்டது போல மிக நல்லவர்கள், மிகக் கெட்டவர்கள், குடிகாரர்கள், டிப்ளமேட்டுகள் என்று பல நிலையினரையும் இந்நாவல் வெற்றிகரமாகச் சித்திரிக்கிறது.

தொடக்கத்தில் ரஷ்யாவின் குளிர் மட்டுமே இது நம் நாட்டு நாவல் இல்லை என்பதை நினைவுபடுத்தியது; மற்றபடி, தஸ்தாயெவ்ஸ்கி இதைத் தமிழில் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் என்றே தோன்றியது. படிக்கும் வாசகர்களைப் பாதிக்கும் அவரது சிந்தனை, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அவரோடு ஊடாடிய உங்களை,,,உங்கள் மொழியை,,,சிந்தனையை எவ்வளவு பாதித்திருக்கும் என்று புரிகிறது.''தமிழில் தன்னைத் தானே அவர் எழுதிக் கொண்டு போவதான மன மயக்கம்..''என்று நீங்கள் எழுதியிருப்பது என்னவென்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த அடர்த்தியான சிந்தனையை உள்ளே வைத்துக்கொண்டு, அவற்றுக்கான மொழி மாற்றத்தை யோசித்துக்கொண்டு, அன்றாடக் கடமைகளில் எப்படி இயங்கினீர்கள்? அல்லது....அன்றாட வாழ்வின் அர்த்தமற்ற பல அபத்தங்களைத் தள்ளியிருந்து பார்த்து, சமநிலை மாறாதிருக்க ,இந்த எழுத்துத் தவம்தான் உங்களுக்கு உதவியதோ?
பகீரதப் பிரயத்தனம் செய்துள்ளீர்கள் என்பதைத் தவிர உங்களை எப்படிப் பாராட்டுவது என்று புரியவில்லை.

உங்கள் மொழிபெயர்ப்பு, தமிழுக்கு ஒரு வரவு என்பது அறியப்படக் கொஞ்ச காலம் ஆகலாம்.ஆனால் அதற்கு முன்னதாகவே-பதற்றத்தில் செய்யும் செயலின் விளைவுகளைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் சுட்டிக் காட்டுவது மட்டுமன்றிக் கல்லில் எழுத்தாய், உள்மனதில் பதிய வைக்கும் அருமையான காரியம் இந்த நூலால் சாத்தியமாகி உள்ளது.

உங்களுக்கும், தஸ்தாயெவ்ஸ்கிக்கும், பாரதி புத்தக நிலையத்தாருக்கும் என் உளமார்ந்த நன்றியும், வாழ்த்தும்!

நூலை வாங்க..
தொடர்பு முகவரி;
திரு,துரைப்பாண்டியன்,
பாரதி புத்தக நிலையம்,
D- 28,கார்ப்பரேஷன் வணிக வளாகம்,
பெரியார் பேருந்து நிலையம் எதிரில்,
மதுரை- 625 001
தமிழ் நாடு
bharathibooks@yahoo.co.in

சென்னையில் கிடைக்குமிடங்கள்:
எனி இந்தியன் பதிப்பகம்,
ஹிக்கின்பாதம்ஸ்

இணைப்புக்கள்:
திரு ஜெயமோகன்
http://jeyamohan.in/?p=559
http://jeyamohan.in/?p=1780
திரு எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=142&page=3

18.3.09

சங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு




















நுழையுமுன்....
.
'சங்கிலி' என்ற தலைப்பில் 'புதிய பார்வை(டிச1-15,'05 )இதழில் வெளியான இந்தச் சிறுகதைக்கு நான் சூட்டியிருந்த தலைப்பு....'தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு' என்பதே. அதுவே மிகவும் பொருத்தமானது என நான் கருதுவதால் அந்தப்பெயரையே வலையில் பயன்படுத்தி இருக்கிறேன்.

படைப்பைப் பேசவிட்டுப் படைப்பாளி ஒதுங்கிவிட வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடானதுதான்; எனினும்...பெரிய புராணப்பின்னணியை அடிப்படையாக வைத்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக்கதை, புராணப்பின்புலத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பற்ற வாசகர்களுக்குச்சரிவரப்போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்,அது குறித்த ஒரு சிறு விளக்கம்....

தேவார மூவர்களில் ஒருவரான சுந்தரர்,கயிலையில் இருந்தபோது,அங்கிருந்த தேவ மாதர்களான கமலினி, அநிந்திதை ஆகிய இருவர் மீதும் காதல்கொள்கிறார்; அவர்கள் மூவரையும் மண்ணுலகிற்கு அனுப்பி வைக்கும் ஈசன், இக வாழ்வின் இன்பங்களை அங்கே துய்த்து முடித்துவிட்டுத் திரும்பி வருமாறு அவர்களைப் பணிக்கிறான்.
பூவுலகில் நம்பி ஆரூரராகவும், பரவை, சங்கிலியாகவும் பிறக்கும் அவர்கள், தங்களுக்குள் மணமுடிக்கும் முன், மற்றொரு குறுக்கீடு நேர்ந்து விடுகிறது. சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளோடு நம்பி ஆரூரரின் திருமணம் ஏற்பாடாக,முதியவர் வேடத்தில் அங்கு வரும் ஈசன், சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு (பரவை,சங்கிலியை மணக்க உதவியாக)அந்தத்திருமணத்தைத்தடுத்து நிறுத்துகிறான்.

பெரியபுராணம் சொல்லும் இந்தக்கதையில்....மண மேடையில் சுந்தரரோடு உடனமர்ந்த அந்த முகம் தெரியாத..., ..பெயர் மறைக்கப்பட்ட(பெரிய புராணம் அவள் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை) பெண்ணின் நிலை மிகவும் அவலம் தோய்ந்தது. ஆண் மையச்சமூக அமைப்பால் இருட்டடிப்புச்செய்யப்பட்ட அவள் வாழ்வு என்ன ஆயிற்று,அல்லது அது என்ன ஆக வேண்டும் என்ற சிந்தனை எவருக்குமே எழவில்லை.இலக்கியம்....அங்கே மௌனமாக இருந்து விடுகிறது.
(தொடர்ந்து அவள் கதி என்ன ஆயிற்று என்பதை அறியப்பெரிய புராணத்திற்குள் போனால்...ஒரு சில பாடல்களிலேயே 'இறைச்சிந்தனையோடு வாழ்ந்து விரைவிலேயே இறந்து போனாள் 'என்பதோடு அவள் கதை முடிக்கப்பட்டு விடுகிறது.)
அந்த மௌனத்தைக்கட்டுடைத்து...அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் முயற்சியே இச்சிறுகதை.
-------------------------------------------------------------------------------------
நடு இரவுப்பொழுதின் தனிமை தரும் இதத்தில் தோய்ந்து கரைந்தபடி, மேன்மாடத்தில் நின்றிருந்தாள் சங்கிலி.மனக் குழப்பங்களை, எண்ணச் சிடுக்குகளைச் சாவதானமாகக் கோதிவிடுவதற்கும், இழை பிரித்துப் பார்ப்பதற்கும் கூட அவகாசமின்றிக் கேலியும், கிண்டலுமாய்ச் சூழ்ந்து நெருக்கிய தோழியர் கூட்டத்திலிருந்து கிடைத்த தற்காலிக விடுதலை, சற்றே நிம்மதி அளித்தது. சொல்லப்போனால்... அவர்களைக் குறை சொல்வதற்கும் என்ன இருக்கிறது?கல்யாணமே வேண்டாம் என்று கன்னி மாடத்தைப் புகலாக்கிக் கொண்டுவிட்ட அவர்களின் தோழி, சிவ பக்தன் என்ற தர முத்திரையுடன் அகிலம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் ஆலால சுந்தரனின் கைத்தலம் பற்றப் போகும் நாளல்லவா நாளை? அதை அவர்கள் கொண்டாடாமல் வேறென்ன செய்வார்கள்?

சங்கிலிக்கு உடம்பு ஒரு கணம் உதறிப்போட்டது. உள்ளுணர்வில் ஏதோ ஓர் இடைஞ்சல்.சுவையான பதார்த்தத்தில் குறுக்கீடாகிற கல் போல் ஒரு நெருடல். தன் எதிர்காலம் செல்லப்போகிற திசை..சரியானதுதானா? ..அந்தப்பாதை நிர்ணயமானதில் தன் பங்கு என்ன?..அதில் தன் பொறுப்பு சரியாக ஆற்றப்பட்டிருக்கிறதா?


பருவமடைந்த நாள் முதல் எதிரே வருவதற்கும், பேசுவதற்கும் கூடத் தயக்கம் காட்டிக் கொண்டிருந்த தந்தை, சென்ற வாரம் கன்னிமாடத்திற்கே வந்து தன் ஆற்றாமையைக்கொட்டிவிட்டுத் தான் எடுத்திருக்கும் முடிவையும் உறுதியாகக் கோடு கிழித்துக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.. மகளின் திருமணத்தைக் கழுத்தை இறுக்கும் கல்லாக நினைக்கும் தந்தைமார்கள் ,வேறு எப்படித்தான் நடந்து கொண்டுவிட முடியும்?

''அம்மா சங்கிலி, ..நீ வயதுக்கு வந்த உடனேயே உன் அத்தை உன்னைப் பெண் கேட்டு வந்தாள். அத்தை மகன் வேண்டாம் என்றாய்...புரிந்து கொண்டேன். குடும்பப் பகையையும் தேடிக் கொண்டேன். கன்னிமாடத்தில் தங்கியிருந்து சிவ பூஜை செய்ய வேண்டுமென்றாய். அதையும் நான் தடுக்கவில்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தானம்மா உன் திருமணத்தை ஒத்திப்போட்டு ஊர்ப் பழியைச் சுமப்பது? இப்பொழுது வலிய வந்திருக்கும் இந்த வரன் ஒரு வரமல்லவா? உன் அழகில் மயங்கி உன்னை ஆளவந்திருப்பவன்...அந்த ஆண்டவனே தடுத்தாட்கொண்ட ஆலால சுந்தரனல்லவா? கொஞ்சம் நினத்துப்பாரம்மா! உன் தாய்க்கும் ,எனக்கும் ஏறிக்கொண்டுபோகும் வயதை எண்ணியாவது எங்கள் நெஞ்சிலுள்ள பாரத்தை நீ இறக்கி வைக்கக் கூடாதா சங்கிலி?''

அதே உணர்வு பூர்வமான தாக்குதல்...அதே பாச வன்முறை...,அவள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தக் கட்டத்தில், தவிர்க்கக்கூடாத ஒரு வினாவை மட்டும் தவற விடாமல் கேட்டாள் அவள்.
''அதெல்லாம் இருக்கட்டும் அப்பா! ஆனால் அந்தப் பரவையோடு அவர் கொண்டிருக்கும் உறவென்னவோ உண்மைதானே?''
சற்றே இறுகிப்போன தந்தை ஒரு நொடியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவராய்த் தொடர்ந்தார்.

''அதையெல்லாம் நீ பெரிதுபடுத்தக்கூடாதம்மா! நாங்கள் பெரியவர்கள் எதற்காக இருக்கிறோம்?அப்படியெல்லாம் உன் வாழ்வு வீணாக விட்டு விடுவோமா என்ன? வேண்டுமானால் உன் பயத்தை அவரிடம்சொல்லி ,அந்தப் பரவையிடம் இனிமேல் செல்வதில்லைஎன்று கோயிலில் வைத்து வாக்குத்தத்தம் செய்து கொடுக்கச் சொன்னால் போயிற்று...''
வாக்குத்தத்தம் செய்பவர்களெல்லாம் வாய்மையின் பாதுகாவலர்களாகவா வாழ்ந்து விட்டார்கள்? பாறையாக இருந்த தன் மனம், தந்தையின் பாசச்சூட்டில் இளகிப்போனது எப்படி? ஒருவேளை...சுந்தரனின் இளமைப்பொலிவும், அழகிய தோற்றமும் தன்னையும் கூட வேறு வகையில் கிளர்த்தி விட்டதோ?
நிலை கொள்ள முடியாத குழப்பத்தில் சங்கிலிக்குத் தலை கிறங்கிய தருணத்தில் வாசலில் ஏதோ அரவம் கேட்க....புயலென உள்ளே நுழைந்தாள் ஒரு சேடிப்பெண்.

''கடந்த ஒரு நாழிகையாக உங்களை உடனடியாகப் பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு பெண் அடம்பிடித்து அழும்பு செய்து கொண்டிருக்கிறாளம்மா...பார்த்தால்..நம் ஊர், நம் மக்கள் போலத் தோன்றவில்லை. நாளைக்குத் திருமணம் என்பதையும், நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதையும் எத்தனை முறை சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை....! பொழுது விடிவதற்குள் உங்களைப்பார்க்க அனுமதிக்கவில்லையென்றால், உயிர்த்தியாகம் செய்து கொண்டுவிடப் போவதாகவும் கூட அச்சுறுத்துகிறாளம்மா.''

முந்தைய சிக்கல் முடிச்சுக்களே அவிழ்ந்திராத நிலையில் இன்னுமொரு புதுப்புதிரா?
..ஆனாலும் அடிமன ஆர்வம் அனிச்சையாக இயக்க, அந்தப் பெண்ணை உள்ளே வரச் சொல்லும் உத்தரவு, சங்கிலியிடமிருந்து பிறந்தது.உண்ணும் சோறும், பருகும் நீருமின்றி...வெறும் காற்றையே உட்செலுத்தி உலவிக்கொண்டிருக்கும் உயிரியைப் போன்றதொரு தோற்றத்துடன்...கறுத்து, மெலிந்து, சிறுத்துப்போன பெண் உருவம் ஒன்று வந்து அவளெதிரே நின்றது.

''நீ..நீங்கள்..?''

''பெண்ணே நாம் சற்றுத் தனியாகப் பேச வேண்டும்''

சங்கிலியின் கண்ணசைவைப் புரிந்து கொண்டவர்களாய்ப் பணிப்பெண்களும் ,பிற தோழிமார்களும் அகன்று செல்ல , சில வினாடிகளுக்கு அங்கே ஒரு மௌன இடைவேளை நிகழ்ந்தது. அச்சமூட்டிய அந்த அமைதிக்கணத்தைய்த் தன் கிசுகிசுப்பான குரலால் வகிர்ந்தபடி, தன் அடுத்த உரையாடலைத் தொடங்கி வைத்தாள் அவள்.

''என் அன்புத் தோழியே...நான் உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்திருக்கிறேன்.''

அறத்துன்பமான ஒரு சூழலில் ...சுழலில் மாட்டிக்கொண்டு விட்டதான உணர்வு..சங்கிலிக்கு...! இவளுக்குக் மூளைக்குழப்பம் எதுவும் நேர்ந்திருக்குமோ?

''முதலில் நீங்கள் யார்...உங்கள் பெயர் என்ன என்பதைக்கொஞ்சம் சொல்லுங்களேன்.''
பதற்றத்தை வெளிக்காட்டாத நிதானத்துடன் சங்கிலியிடமிருந்து சொற்கள் பிறந்தன.

''எனக்குப் பெயரும் இல்லை; முகவரியும் இல்லை....பிறந்தபொழுது... ஏதோ ஒரு பெயர் எனக்கு இடப்பட்டிருக்கலாம்....ஆனால் ..காலம் அதையெல்லாம் அழித்துத் துடைத்துத் தூக்கி எறிந்து விட்டது. பாலியத்தில் நான்..சடங்கவி சிவாச்சாரியாரின் மகள்....இளமையில் நான் சுந்தரரின் மனைவியாகக் காத்திருந்தவள். அதற்கு முன்பாகத்தான் தடுத்தாட்கொள்ளும் சூழ்ச்சி நாடகம் அரங்கேறி....என் அடுத்த முகவரியைக் கலைத்துப் போட்டுவிட்டதே?''

சுந்தரன் தடுத்தாட்கொள்ளப்பட்ட தருணத்தில்...மணக்கோலத்தில், மண மேடையில் அவனுடன் அமர்ந்திருந்த புத்தூர் சடங்கவி மகளா இவள்? சங்கிலிக்கு அந்தப் பெண்ணின் பேச்சில் சற்றே சுவாரசியம் தட்டிற்று.

''நீங்கள் இறந்து போய்விட்டதாக அல்லவா....?''

அவள் சிரித்தாள். நெற்றிக்கண் திறந்து முப்புரம் எரித்த கணத்தில் அந்தப் பரமன் சூடியிருந்த பாவனையாக சங்கிலிக்கு அது தோன்ற...அவள் சற்றே பயம் கொண்டாள்.

''அப்படி ஒரு கதையை உருவாக்கி விட்டவளே நான் தானே?என்னை வேறென்ன செய்யச் சொல்கிறாய் பெண்ணே! ஊரறிய..உலகறிய..ஒருவனோடு மண மேடை வரைபோய்விட்ட பெண்ணை நம் சமூகம் அத்தனை எளிதாக விட்டுவிடுமா என்ன? தாயும், தந்தையும் என்னைப் பார்த்து வடித்த கண்ணீர் பொறுக்கவில்லை எனக்கு. நான் செய்யாத தவறுக்காகச் சாகவும் விருப்பமில்லை. நான் இறந்து விட்டதாக அவர்கள் நம்பும்படி சில தடயங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு வெளியேறி விட்டேன்! ஆனால்..நீ வேண்டுமானால் பாரேன் !வருங்காலத்தில் சுந்தரனின் கதை காவியமாகிறபோது...அந்தக் காப்பியப் புலவர்கள், கட்டாயமாக- சாவைத்தான் எனக்கு முடிவாகத்தருவார்கள். கதையை முடிக்க வழி தெரியாதபோது...பாத்திரத்தை முடிப்பதுதானே இலக்கிய தர்மம்...?''

அவளது வாதத்தில் மனம் லயித்தபோதும்..தன்னைத்தேடி இந்தத் தருணத்தில் அவள் வந்திருக்கும் நோக்கம் சங்கிலிக்கு இன்னும் தெளிவாகவில்லை.

''தடுத்தாட்கொண்டது ஒரு சூழ்ச்சி நாடகம் என்றீர்களே...அது என்ன?''

''இது கூடவா புரியவில்லை? என்னை மணந்து கொள்ள சுந்தரனுக்கு விருப்பமில்லை.உருத்திர கணிகையின் குலத்தில் வந்த பரவையின் மீது அப்போதே அவனுக்கு ஒரு கண். பெரியவர்களிடம் விரும்பியதைச்சொல்லத் துணிச்சலில்லை. தனக்கு வேண்டியவர்களின் துணையோடு அந்த ஈசனே தடுத்தாட்கொண்டதாக ஒரு நாடகம் நடத்த ...என் வாழ்வு அதற்குப் பலிகடா ஆயிற்று.''

'இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன..?'- சங்கிலியின் விழிகள் வியப்பால் விரிய... வந்தவள் தொடர்ந்தாள்.

''ஏமாந்தவர்களாகவும்...சிந்தனை மழுங்கிப்போனவர்களாகவும் நம்மைப்போன்றவர்கள் இருக்கும்வரை...இப்படிப்பட்ட நாடகங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.அந்த நந்தனை எரித்த நெருப்பு, தில்லை வாழ் அந்தணர்களின் பொறாமை நெருப்புத்தான் என்பது மறந்து விட்டதா உனக்கு ? கொஞ்சம் யோசித்துப்பார் சங்கிலி ! உண்மையிலேயே சுந்தரன்...அந்த இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டிருந்தால்...தொடர்ந்து, அவன் பரமனின் பாதையில் அல்லவா பயணப்பட்டிருக்க வேண்டும்?அதை விட்டுவிட்டு அவன் ஒரு பரவையைத் தேடிப் போனது எதற்கு ?இன்று...மீண்டும் உன்னோடு...இந்தச் சங்கிலியோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள அவன் ஏன் துடிக்க வேண்டும் ?''

தந்தை சொன்ன கதை நினைவுக்கு வந்தது, சங்கிலிக்கு. சுந்தரன் பூவுலகில் பிறப்பெடுத்தபோது, அவனை மணக்க அங்கிருந்தே இரண்டு பெண்களும் இறக்குமதியாகி விட்டார்களாம்; அவர்களில் தன் மகளும் ஒருத்தி என்பதில் அவருக்குத்தான் எத்தனை பெருமை..?

''என்ன...கைலாயக்கதை கண்ணுக்குள் ஓடுகிறதோ?''- மனதைப் படித்துவிட்டவள் போலக்கேட்டாள் சடங்கவி மகள்.

''இரு தார மணத்திற்குத் தேவலோக அங்கீகாரம் தருவதற்காக, மனிதர்களின் கற்பனைக்குதிரை கட்டறுந்து ஓடி...எப்படிப்பட்ட புனைவுகளையெல்லாம் உற்பத்தி செய்திருக்கிறது பார்த்தாயா சங்கிலி ?''

சத்திய தரிசனம், மின்வெட்டாய்ச் சித்தியான அந்தக் கணத்தில், தான் செல்ல வேண்டிய பாதை எதுவென்பது புலப்படத்தொடங்கியது போலச் சங்கிலிக்குத் தோன்றியது. மறுபுறத்திலோ... திரும்பிச் செல்வதற்கே வழியில்லாத ஒரு முட்டுச்சந்தில்,தான் நின்று கொண்டிருப்பதான பிரமை கலந்த அச்சம் அவளைப் பீதியுறவும் செய்தது.

''இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?''

''அதை நான் சொல்வது நியாயமில்லை. உன் முடிவை நீதான் எடுக்க வேண்டும் சங்கிலி ! இதே மாதிரியான ஒரு கட்டத்தில்.. நான் பரவையையும் சந்திக்கச் சென்றதுண்டு. ஆனால் அவள் சார்ந்திருந்த கணிகையர் குல தருமம் தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாமல் அவளைத் தடுத்து விட்டது. அவளை எனக்குப் போட்டியாகவோ..பகையாளியாகவோ என்றுமே நான் நினைத்ததில்லை. நினைத்துப்பார். இப்போதும் கூட...உனக்கும், அவளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் என்ன விரோதம் இருக்கிறது ? பெண்ணுக்குப் பெண்ணைப் பகையாக்கி ஆண் உலகம் செய்கிற சூழ்ச்சிக்கு நீயும் இரையாகி விடாதே என்று எச்சரிப்பது மட்டுமே என் நோக்கம் ! மற்றபடி உன் விருப்பம்..''

கீழ்த்தளத்தில் இருந்த திருமண மண்டபத்தில் மங்கல இசை மெலிதாக ஒலிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில், தீர்மானமான ஒருமுடிவுக்கு வந்து விட்டிருந்த சங்கிலி...,சடங்கவி மகளைப் பார்த்தபடி உறுதியான குரலில் சொன்னாள்.

''நமக்காக முக்கியமான ஒரு கடமை காத்திருக்கிறது. நாம் இரண்டு பேரும் உடனடியாகச்சென்று...பரவையைத் தடுத்தாட்கொண்டாக வேண்டும். இந்தத் திருமணம் தடைப்பட்டாலும்...தொடர்ந்தாலும் சுந்தரன், அடுத்தாற்போல் தேடிச் செல்லப் போவது அவளைத்தானே?''

புலர் காலை விடியலுக்கு ஒரு நாழிகையே எஞ்சி இருந்தபோது, அடர்ந்து செறிந்த இருளைக் கிழித்தபடி....அவ்விருவரின் பயணமும் தொடங்கியிருந்தது.

16.3.09

கிருத்திகா- சில நினைவுகள்


தனது 93ஆம் வயதில் பெங்களூரில் காலமான(13.02.09)கிருத்திகா அவர்கள்,தமிழ் நவீன இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாளி.ஹெப்சிபா ஜேசுதாசனைப்போலவே இவரும் வெகுஜனத்தளத்தில் பரவலாக அறிமுகமாகாத ஒரு பெண் எழுத்தாளராகவே இருந்து வந்திருக்கிறார்.

35 வயதில் எழுதத்துவங்கியபோது,ஆங்கிலம்,பிரெஞ்சு,சமஸ்கிருதம்,தமிழ் எனப்பலமொழிகளிலும் தேர்ந்த ஞானம் அவருக்கு உருவாகிவிட்டிருந்தது.

மகாகவி பாரதியையே தனது ஆதர்சமாக வரித்துக்கொண்ட இவரின்'புகை நடுவினில்','நேற்றிருந்தோம்..','புதிய கோணங்கி' ஆகிய நாவல் தலைப்புக்கள் பாரதியிடம் இவர் கொண்டிருந்த பிடிப்பை வெளிப்படுத்தக்கூடியவை.

கிருத்திகாவின் படைப்புக்கள், அவரது சமகாலப்பெண் எழுத்துக்களிலிருந்து மாறுபட்டவை. பெண் குறித்த தனிப்பட்ட பிரச்சினைகளைக்காட்டிலும்,நாடு, சமூகம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளித்தவை.விடுதலை இயக்கப்போராளியாகவும் செயல்பட்ட அவர்,சரோஜினி நாயுடு,கஸ்தூரிபாய்,மணிபென் படேல் ஆகியோரின் தாக்கத்தை மிகுதியாகப்பெற்றிருந்ததனால் ,அவர்கள் கனவு கண்டு ,உருவாக்க விரும்பிய இந்திய சமூகத்தைத்தன் கதைகூறல் வழியே முன்வைப்பதிலேயே பெரிதும் நாட்டம் கொண்டிருந்தார்.

ஒரு கற்பனைச்சமுதாயத்தை- நடப்பில் இல்லாத புதியதொரு கிராமத்தை அல்லது ஊரைப்பற்றிய புனைவுகளின் வழியே நடப்பியல் இந்திய சமூகத்தின் அவலங்களை அங்கதப்போக்கில் சித்தரிப்பதே அவரது தனிப்பட்ட பாணி.'தர்மக்ஷேத்ரே' ,'வாசவேஸ்வரம்' ஆகிய அவரது நாவல்கள் அந்தப்போக்கில் அமைந்தவையே.21ஆம் நூற்றாண்டு பற்றிய கற்பனைச்சமூக அமைப்பைத் தனது புனைவின் வழி உருவாக்கிய 'புதிய கோணங்கி'யில் அவர் சித்தரித்திருக்கிறார்.

ஐ.சி.எஸ் பட்டம் பெற்ற வாழ்க்கைத்துணைவர் வாய்க்கப்பெற்றிருந்ததால் மேல்தட்டுமக்களின் வாழ்நிலை குறித்த பதிவுகளையும் 'புகை நடுவினில்' போன்ற படைப்புக்களில் அவரால் வெளியிட முடிந்திருக்கிறது.

'விதியின் வினை','கண்ணகி'போன்ற அவரது நாடகங்கள்,சாவித்திரி, கண்ணகி ஆகியோரின் 'பதிவிரதா தரும'த்தைப்பெண்ணிய நோக்கிலான மீள்பார்வைக்கு உட்படுத்தியுள்ளதை எழுத்தாளர் அம்பை(The Face Behind The Mask) தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிருத்திகாவின் பல நாவல்களும் வாசகர்வட்ட நாவல்களாக தில்லியில் பதிப்பித்து வெளியிடப்பட்டவை.அவை இன்றைய தலைமுறையை எட்டுவதற்கான முயற்சிகள்- -அவரது நூல்கள் மறுபதிப்பு செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமலிருப்பதைத்தமிழின் துர்ப்பாக்கியம் என்றே சொல்லத்தோன்றுகிறது.

நிறைவு பெறாமல் எஞ்சியிருக்கும் அந்தப்பணியைச்செய்து முடிப்பதே,நிறைவாழ்வு வாழ்ந்துமுடிந்திருக்கும் கிருத்திகா அவர்களுக்குச்செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமைய முடியும்.
(நன்றி;அஞ்சலியை வெளியிட்ட வடக்குவாசல் இதழுக்கு-மார்ச்09)

14.3.09

செம்மூதாய்

(ஒரு முன் குறிப்பு:
திரு முருகபூபதி,தமிழின் குறிப்பிடத்தக்க நவீன நாடகக்காரர்களில் ஒருவர்.சென்ற நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கிய நாடகக்கலைஞரான மதுரகவி பாஸ்கரதாஸின்பேரன்;எழுத்தாளர்கள் கோணங்கியும்,தமிழ்ச்செல்வனும் இவரது சகோதரர்கள்.தனக்கே உரித்தான பாணியின் தனித்துவத்தோடு நவீனநாடகங்கள் பலவற்றையும் அரங்கேற்றிவரும் முருகபூபதியின் நாடகத்தைக்காணும் வாய்ப்பு,புதுதில்லியில் நடைபெற்ற 'தேசிய நாடக விழா'வில் எனக்குக்கிட்டியது. எழுத்தாளர் கோணங்கி,பெண்ணிய அரங்கின் மங்கை,எழுத்தாளரும் குறும்பட ஆர்வலருமான முத்துகிருஷ்ணன்,நாடகப்பேராசிரியர் ரவீந்திரன்,வடக்குவாசல் ஆசிரியர் பென்னீஸ்வரன்,மதுரையைச்சேர்ந்த 'யதார்த்தா'ராஜன் ஆகியோரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் இனிய அனுபவமும் அத்துடன் வாய்த்தது.
தொடர்ந்து செம்மூதாய் நாடகம் என்னுள் கிளர்த்திய அனுபவப்பகிர்வுகள் ......)

செம்மூதாய்
புது தில்லியிலுள்ள தேசீய நாடகப்பள்ளியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் 'தேசீய நாடக விழா' வின் 11ஆம் ஆண்டு நிகழ்வுகளுக்காகத் தெரிவு செய்யப்பட்ட பன்மொழி நாடகங்கள்,சங்கீத நாடக அகாதமியின் பல்வேறு அரங்குகளில்,இவ்வாண்டு ஜனவரிமாதம், நாடக ஆர்வலர்களின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டன.அவற்றுள் தமிழிலிருந்து தேர்வான இரு நாடக ஆக்கங்களில் ஒன்றான முருகபூபதியின் 'செம்மூதாய் 'நாடகம்,12.01.09 மாலை ஆறு மணி அளவில் 'மேகதூத்' திறந்த வெளிக்கலையரங்கில் நிகழ்த்தப்பட்டது.

இந்நாடகத்தை எழுதி,இயக்கிய திரு முருகபூபதியும்,தமிழகத்தின் மணல்மாகுடி என்னும் சிற்றூரைச்சேர்ந்த அவரது குழுவினரும்-தங்கள் படைப்பில் முன்வைக்க எடுத்துக்கொண்ட கருப்பொருளாலும்,அதைப்பார்வையாளர்களிடம் கொண்டுசெல்லக் கையாண்ட வீரியமான உடல்மொழியாலும் காலத்தை நம் கண் முன்பு உறையச்செய்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும்.

மனிதனின் இருப்பியல் களங்கள்,வாழ்வியல் சூழல்கள், அவனாலேயே சுரண்டலுக்கும், சூறையாடலுக்கும் ஆளாகிவிட்ட பிறகு, அவனது இருப்பே அர்த்தமற்றதாகவும், வறண்டதாகவும்,சிக்கல்கள் நிரம்பிய கேள்விக்குறியாகவும் மாறிப்போகும் யதார்த்தமான அவலமே இப்படைப்பின் உள்ளீடு.மண்வளம்,நீர்வளம்,பசுமைக்காடுகள் என, இயற்கை இயல்பாக அமைத்துக்கொடுத்த எல்லாவற்றையுமே அன்றாட அற்பத் தேவைகளுக்காகவும்,சுயநலத்தேடல்களுக்காகவும் பலியாக்கிக் காவுகொடுத்துவிடும் மனித இனம்,பிறகு அதற்காகக் கையற்றுத் தவிக்கிறது;கூடடையும் பறவைகளின் ஒலி கேட்கத்துடிக்கிறது;இளைப்பாற நிழல் கொடுக்கும் மரங்களைக் காணாமல், ஒப்பாரிவைத்து ஓலமிடுகிறது. இயற்கைச் சூழலை-இயல்பான மனித நேயத்தை- சக உயிரியாகப் பெண்ணைக்கருதும் சிந்தனையை...இன்னும் இவை போன்ற சகலத்தையும் துறந்துவிட்டு ,ஆதிக்கக்கருத்தியல்களை மட்டுமே வளர்த்துக்கொண்டு,அழிவின் ஆயுதமான போரை-வன்முறையைக்கையில் எடுத்துக்கொள்ளும் மனித வாழ்வு,தவிர்க்க முடியாத அவலங்களோடு-தப்பிக்க முடியாத ஒரு தண்டனையாக முடிந்து போவதென்பது,ஒருவகையில் காவிய நீதியாகவே அமைந்து விடுகிறது என்பதைப் பல தளங்களிலிருந்தும் இந் நாடகம் பூடகமாக உணர்த்திக்காட்டியது. தனித்துவமிழந்து வெற்று எண்களாகக் குறுகிப்போகும் மனிதர்கள், தங்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் காட்சியே நாடகத்தின் உச்ச கட்டம்.

மழைக்காலங்களில் மட்டும் ஜீவித்துவிட்டுப்பிறகு காணாமல் போய்விடும் 'செம்மூதாய்' என்னும் அற்ப உயிரினம், இந்நாடகத்தில் பலவற்றையும் சுட்டும் அடிப்படையான ஒரு குறியீடாக அமைந்திருக்கிறது.

நமது மரபில் காலம்காலமாகப்பலவகைப்படிமங்களையும் உணர்த்துவதற்குப்பயன்பட்டு வரும் தாய்த்தொன்மம்,இப்படைப்பிலும் குறிப்பான பங்கு வகிக்கிறது.தமிழக நாட்டுப்புற வெளியில்-அங்கு கையாளப்படும் சடங்குகளில்-பெண்கள்,தெய்வங்களாக,தேவ தாசிகளாக, குறிசொல்லிகளாக,மருத்துவச்சிகளாக,தாய் வழிச்சமூகத்தின் தொல் எச்சங்களாக....என்று பலவகைகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். பெண் என்ற ஒரு மனித உயிர் இத்தனை வேடங்களையும் மாறி,மாறித்தரிப்பதும் கூட இவ்வகை நாடக ஆக்கத்திற்கு ஓர் உந்துதலை வழங்கியிருக்கிறது.பெண்ணின் உடலுக்குள், ஒரே நேரத்தில் பத்து ஆவிகள் கூடக்குடியேற முடியும் என்பதும்,அவற்றின் பத்து வேறுபாடான குரல்களைக் கண நேரத்திற்குள் அவளால் மாற்றி, மாற்றி ஒலிக்க முடியும் என்பதும் நாட்டாரியல் சார்ந்த ஒரு நம்பிக்கை. நடிப்பை நிகழ்த்தும் ஓர் உடலுக்குள்ளும் கூட அவ்வாறான சடங்குகளின் சாயல் எஞ்சியிருக்கிறது என்பதைக் கருதுகோளாகக்கொண்டு,ஒரு பாத்திரத்தின் உடல்மொழியிலிருந்து வேறுபட்ட பல பரிமாணங்களை வெளிப்படச்செய்யும் முனைப்பு, இந்நாடக நிகழ்வின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.ஒரே உடல் புழுவாகவும், பூச்சியாகவும், மீனாகவும், மனிதனாகவும், மனிதப்பறவையாகவும், மீமனிதனாகவும் பரிணாமம் கொள்ளும் அற்புதத்தை நாடகத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களுமே தங்களது அபாரமான நடிப்புத்திறமையாலும்-குறிப்பாகக் கடுமையான பயிற்சியால் கைவரப்பெற்ற அசாத்தியமான தங்கள் உடல் மொழிகளாலும்-அங்க அசைவுகளாலும் அருமையாகச்சித்தரித்துக்காட்டினர்.
தொடர்ச்சியான கதைப்பின்னல், உரையாடல் போன்ற சம்பிரதாயமான நாடகப்போக்கு எதுவுமற்ற இப்படைப்பின் வெற்றிக்குத் திறந்த வெளி அரங்கின் சுதந்திரச்சூழலும்,மிகப்பொருத்தமான ஒளிஅமைப்புக்களும்,நாட்டுப்புற இசைக்கருவிகளின் துணையோடு கூடிய பின்னணி இசையும் பெரிதும் துணை புரிந்தன.

இன்றைய நவீன வீதி நாடக ஆக்கங்கள் பலவும் நாட்டுப்புறக்கலைமரபுகளிலிருந்து தங்கள் வடிவங்களை மீட்டெடுத்துக்கொண்டு வருவது உண்மைதான் என்றபோதும், முருகபூபதியின் நாடகங்கள்,நகர்மயமாதல் காரணமாக வழக்கொழிந்து வரும் பல சடங்குகளை-கிராமப்பகுதிகளிலே கூடக்காண்பதற்கு அரிதான-ஆதிவாசிகள்மட்டுமே கையாளும் சடங்குகளையும் கூட மீட்டெடுத்து,நாடகம் என்னும் நிகழ்கலை வடிவத்தின் வழியாக அவற்றுக்கு வேறு வகையில் புத்துயிர் அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன; பூபதியின் இதற்கு முந்தைய சில நாடகங்களும் கூட,நகர நாகரிகங்களின் கறை படியாத அடர் காடுகளையும் அங்குள்ள காட்டுவாசிகளின் சடங்குகளையும் பின்புலமாகக்கொண்டவைதான்.வரலாறும் ,இலக்கியமும் வாய் பேசாது மௌனிக்கும் இடங்களே பெரும்பாலும் முருகபூபதியின் கதைக்களங்கள்; நகர்சாரா மக்களின் வாழ்வியல் களங்களும், சடங்குகளுமே அவரது படைப்புக்களில் முதன்மை தந்து முன்னிறுத்தப்படுபவை. நவீன நாடக அரங்கியலில் புதுமொழி ஒன்று உருப்பெறுவதற்கு இவ்வகையான படைப்புக்கள் அடித்தளம் அமைத்து வருகின்றன என்று துணிந்து கூறமுடியும்.
நன்றி:இக்கட்டுரையை வெளியிட்ட 'புத்தகம் பேசுது'(மார்ச்'09)இதழுக்கு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....