துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.7.12

கல்வித்துறையின் ஒரு இலக்கியமுயற்சி...

http://www.classicsintamil.com

நூல்களை வாங்கிப் படிப்பவர்களை விட இணையத்தில் அவற்றைப் படிப்பவர்களே இன்று மிகுதியாகியிருக்கிறார்கள்.மேலும் இன்றைய உலகமயச் சூழலில்- பல நாடுகளிலும் சிதறிக்கிடக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு நல்ல தமிழ்ப்படைப்புக்களின் மீதான ஆர்வமும் தேடலும் அதிகரித்து வருவதால் அவற்றை உரியபடி  கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பு இத் துறையில் நாட்டம் கொண்ட அனைவருக்கும் உரியதாகிறது. அது  ஏதோ ஒரு சில இலக்கியவாதிகளின் கடமை மட்டுமே என்று ஒதுங்கிக் கொள்ளாமல் கல்வி நிறுவனங்களுக்கும் அதில் பங்குண்டு என்பதை உணர்ந்த  மதுரை பாத்திமாக் கல்லூரியின் [நான் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்லூரி] ஆங்கிலம் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் [U.G.C.]உதவியுடன் ஓர் ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகின்றனர்.

நல்ல தமிழ்ப்படைப்புக்களை[கவிதை,சிறுகதை,குறுநாவல்,நாவல்] வலை ஏற்றுவது, அவற்றை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது, இந்திய மொழியின் தரமான படைப்புக்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து அளிப்பது ,இன்னும் மொழியாக்கம் செய்ய்யப்படாமல் இருக்கும் தரமான படைப்புக்களைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றோடு அயல் மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் வாழும் -தமிழ்  எழுத்தை வாசிக்க அறியாத அடுத்த தலைமுறையினரின் வசதிக்காகக் குறிப்பிட்ட படைப்புக்களை ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் ஒலிபெயர்ப்பாகத்-transliteration-தருவது என அனைத்தும் அடங்கிய து அந்த ஆய்வுத் திட்டம்.

சங்கப்பாடல்களில் தொடங்கி வண்ணதாசன்[கல்யாண்ஜி] போன்றோரின் கவிதைகள் வரை பலரின் ஆக்கங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் ஒலிபெயர்ப்பாகவும் வாசிக்கக் கிடைக்கும் இத் தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் யானைடாக்டர் சிறுகதையின் தமிழ்மூலம்- ஆங்கில மொழியாக்கம் -ஒலிபெயர்ப்பு ஆகியன இப்போது புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

DOWNLOAD செய்து படித்தால் விரியும் மூன்று பத்திகளில் மூலம்,மொழிபெயர்ப்பு,ஒலிபெயர்ப்பு என ஒரு படைப்பு சார்ந்த அனைத்தையும் ஒருசேரப்பார்க்க முடியும்.படித்து ஒப்புநோக்க முடியும்.

இது கல்வித் துறை சார்ந்து எடுக்கப்படும் சிறு முயற்சி...எங்கோ எவருக்கோ ஏதாவது எட்டி விடலாகாதா என்னும் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும்  மேற்கொள்ளப்படுவது.

தேவைப்படுவோர்க்கு இத் தளத்தை வலையுலக நண்பர்கள்  அறிமுகம் செய்யலாம்; 
இதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் ஆர்வத்தோடு அவர்களால் வரவேற்கப்படுகின்றன.
நான் இதில் ஒரு பார்வையாளர் மட்டுமே..அவ்வப்போது சில படைப்புக்களைச் சேர்க்கலாம் என இங்கே தில்லியில் இருந்தபடி பரிந்துரைப்பதும் சில கருத்துக்களை முன் வைப்பதும் மட்டுமே என் பணி.
[தொடர்புக்கு]

பி.கு; புதிய பிரவேசங்கள் என்னும் என் சிறுகதையையும் அத் தளத்தில் காணலாம்.



2 கருத்துகள் :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

மதுரை பாத்திமாக்கல்லூரியின் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறைக்கு என் வாழ்த்துகள். எல்லாக்கல்லூரிகளிலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் இன்னும் நல்லாயிருக்கும். பகிர்விற்கு நன்றி.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி நண்பரே...நீங்களும் அந்தத் தளத்துக்கே சென்று கருத்திடுங்கள்.அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....