மார்ச் 2021 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த என் ‘முகமூடி’ சிறுகதை (https://solvanam.com/2021/03/14/முகமூடி/ )குறித்து திருமதி சரஸ்வதி தியாகராஜன் என்னோடு நிகழ்த்திய உரையாடலின் காணொளியை இத்துடன் பகிர்ந்திருக்கிறேன். சொல்வனத்துக்கும், சரஸ்வதிக்கும் என் நன்றிகள்.
சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2021/03/14/முகமூடி/19.8.25
14.7.25
'அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்' நாவல் - ஒரு பார்வை
'அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்' நாவலைப் படித்து விட்டு எழுத்தாளரும்,என்னோடு பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியையுமான வள்ளியம்மாள் அவர்கள் எழுதி அனுப்பிய ரசனையோடு கூடிய விமரிசனம்..
வள்ளியம்மாள்
ஓய்வு பெற்ற பேராசிரியை
இயல்பாகவே அறிவும் தேடலும் துடிப்பும் சமுதாய அக்கறையும் உள்ள பெண் கணவனால் புறக்கணிக்கப்பட்டு, மகளால் காயப்பட்ட வலியையும் தாங்கி தனது இலக்கைத் தொடர்தலே இந்நாவல். மருத்துவப் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகர்களால் கதையின் மையப்புள்ளியில், இணையமுடிவது படைப்பின் தனிச்சிறப்பு.
‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ என்ற இலக்கியவரிகளும் அதற்கான சித்திரமும் குழந்தைப் பேறு, குழந்தை இன்மை பற்றிப் பேசப் போகிறதோ என்ற எண்ணத்தை ஊட்டினாலும் தொடக்கமே அதை மாற்றிவிடுகிறது.
‘‘எப்பவுமே ஒரு விஷயத்தை அனுபவிக்கிறவளா மட்டுமில்லாம அதை உருவாக்கிறவளா இருக்கணும்கிற ஆசை’’ என தொடக்கமே ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த ஆசைக்கான வித்து, நிறைவேற ஏற்படும் நெருக்கடிகள், காயங்கள் என விவரிக்கும் வேளையில் மானுடப் பிறப்பின் மேன்மையை உணர்த்துவதுடன் ஊடே சரடாக தனித்து வாழ்வைச் சந்திக்கும் தாயின் வலியும் இணையாக, இழையாகத் தொடர்கிறது. வாழ்வின் பல தருணங்களில் ஆதிக்கத்தில் சிக்கித் தன்னைத் தொலைப்பவர்களால், தன் உழைப்பு, பாசம், அக்கறை அங்கீகரிக்கப் படாததால் ஏங்கும் பெண்களால், சாதிக்கத் திறமையும் வாய்ப்பும் இருந்தும் முடங்கும் முடக்கப்படும் பெண்களால் எளிதில் கரையமுடிகிறது. இந்தப் பிறவியை மேன்மையுறும்படி வாழ்ந்தோமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
மருத்துவர் காயத்ரி, மீண்டும் ஒரு மருத்துவர் காயத்ரி, மீரா என அறிமுகம் நிகழும் போது வாசிப்பில் வரும் தடை சவாரஸ்யம் தருகிறது. மீராவின் குரல், சுமதியின் குரல், காயத்ரியின் குரல், தினகர் குரல், வித்யாவின் குரல், முத்தாய்ப்பாய் பாட்டியின் குரல்.
‘‘என்னையும் அறியாம எங்கம்மா சொன்ன சிலவார்த்தைகள் அவங்களோட குரலிலேயே காதுக்குள்ளேயும் மனசுக்குள்ளேயும் கேட்கும். உடனே spring மாதிரி நிமிர்ந்திடுவேன்.’’
‘‘பிறந்ததிலேருந்து உன் மனசிலே சதா சர்வகாலமும் விடாம கேட்கிற உட்குரல்’’ என படைப்பாளரின் குரல் என்று பல குரல்கள் Multiple Voices.
தேடலை முழுமை நோக்கித் தொடரும் மருத்துவர் காயத்ரி, தேடலுடன் கனவுகளுடன் துள்ளலாய் சேவையைத் தொடங்கும் இளைய காயத்ரி, என்ற இரு காயத்ரிகள், நிறுத்தி நிறுத்தி சிந்திக்க வைத்துத் தொடரும் தடைகள், மெலிதான ஒரு இருண்மை, கத்தரித்தது போல அமைந்த episodes, அதில் ஒரே ஒரு உரையாடல், நீண்ட சிந்தனை என அமையும் பத்திகள், விளக்கமற்ற சின்னஞ் சிறு உரையாடல்கள் விவாதங்கள், சட்சட் எனத் தாவும் காட்சிகளின் வேகம், அடுக்கி கலைத்து கதை சொல்லப்பட்டாலும் சோர்வு தராத நடை, சம்பிரதாயமற்ற கதை சொல்லல், முடிக்காமலே தொடரும் அடுத்த episode, வலுவான dialogues, புதிரை அவிழ்க்கத் தொடரும் கதையில் மறைக்கப்படும் சிறு பகுதி, அதைப் பூடகமாய் பின்னால் வெளிப்படுத்தும் உத்தி,
‘‘உன் வாழ்நாளிலே ஒரு நாள் கூட வருத்தப்படக்கூடாது. ஒவ்வொரு சிருஷ்டியும் ஏதோ ஒரு நோக்கத்தோட தான் இந்த மண்ணுக்கு வந்து சேருது. ஆனா அதை சரியா அடையாளம் கண்டுக்காம திசைமாறி தடுமாறி இந்தப் பிறவியையே வீணாக்கிடறவங்கதான் ஜாஸ்தி. உன்னோடது எதுங்கிறதை நீ சரியா கண்டுபிடிச்சிருக்கே, உண்மையாகவும் இருந்திருக்கே’’ என அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்த பிறவியின் பயனைச் சுட்டும்போது முடிவு தொடக்கத்தைத் தொடுவது புதிய உத்தி. நல்ல message.
மொத்தத்தில் very crisp & cute. ஒரு மணி நேரத்தில் வாசிக்க முடிகிறது. தொட்டால் வைக்க முடியாதபடி சின்ன chapters, சிறு சிறு பத்திகள், நிகழ்வுகள் ஆங்காங்கே முடிவுறும் விவாதங்கள் என அலுப்போ சோர்வோ தட்டுவதில்லை என்பது படைப்பின் வெற்றி.
“Retirementங்கிறது நமக்கு நாமே ஏற்படுத்திக்கிறதுதான். ஒரு சில விஷயங்களிலே இருந்து selectiveஆ விலக்கிக்கிட்டு எனக்கு நானே ஒரு கடிவாளம் போட்டுக்கிட்டேன். தொழில்லேருந்து மட்டும்தான். ஒரேயடியா துறையிலே இருந்தே இல்லை”
”நான் எல்லாத்தையுமே முழுசா உதறி இருப்பேன். என்னோட துறப்புக்களில் ரொம்ப selectiveஆ இருந்தேன்.”
“அந்த ஆகாயம் எனக்குப் பிடிச்ச ஆகாயம். என்னை ஒரு நாளும் கைவிடாத ஆகாயம். ஒரு கட்டத்துல அதுக்கும் பூமியோட யதார்த்தத்துக்கும் ரொம்பதூரம்னு தெரிஞ்சபோது யதார்த்தமே வேண்டாம்னு அதை விலக்கிட்டுப் போயிட்டேன்” என மனம் தொட்ட இடங்கள் பல.
”ஓட்டிலிருந்து தானா கழண்டு விழற புளியம்பழம் மாதிரி” என கதை முழுக்கத் துறக்கத் துடிக்கும் உணர்வும் இழையோடுகிறது. பிறப்பு, துறப்பு என ஒரு முரண். பல்வேறு தடைகளைத் தாண்டி வாழ்வில் புகும் மனிதப் பிறவி பத்து மாதம் தாங்கிய தாய் உடலை புளியம்பழ ஓடு போல துறக்கிறது. இடர் கடந்து தான் கண்ட கனவு வாழ்வு கைவசப்படும் போது அதைத் துறந்து உறுதியுடன் பயணிக்கும் பெண்ணின் தனித்துவம்.
மனதைத் தொட்டதால், உணர்வுகளை எழுப்பியதால், நிதானித்து சிந்திக்க வைத்ததால், உள்ளிருக்கும் உண்மை உறைத்ததால் பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததால் சிறுகதையாய் விமர்சிக்கவோ, எழுதவோ தோன்றவில்லை. ஒன்றிவிட்டேன்.
9.6.25
‘குற்றமும் தண்டனையும்’ -வாசக எதிர்வினை
Faceboo
Shared with Publi2008 இல் ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கத்தின் முதல் பதிப்பு வெளி வந்த புதிதில் எனக்கு வந்த பல வாசக எதிர்வினைகள், மானுட வாழ்க்கைக்குப் பொருள் சேர்க்கும் ஒரு செயலைச் செய்து முடித்ததான நிறைவை என்னுள் ஏற்படுத்தியிருந்தன. இப்போது பதினேழு ஆண்டுகள் கழித்து திரு நாகப்பன் ராமஸ்வாமி என்ற முகம் தெரியாத வாசகர் ஒருவரிடமிருந்து ‘குற்றமும் தண்டனையும்’ குறித்து அண்மையில் வந்திருக்கும் ஒரு கடிதம், அதற்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது. நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பை..,
2008 இல் ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கத்தின் முதல் பதிப்பு வெளி வந்த புதிதில் எனக்கு வந்த பல வாசக எதிர்வினைகள், மானுட வாழ்க்கைக்குப் பொருள் சேர்க்கும் ஒரு செயலைச் செய்து முடித்ததான நிறைவை என்னுள் ஏற்படுத்தியிருந்தன. இப்போது பதினேழு ஆண்டுகள் கழித்து திரு நாகப்பன் ராமஸ்வாமி என்ற முகம் தெரியாத வாசகர் ஒருவரிடமிருந்து ‘குற்றமும் தண்டனையும்’ குறித்து அண்மையில் வந்திருக்கும் ஒரு கடிதம், அதற்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது. நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பை..,அல்லது ஒரு மூலப் படைப்பைப் படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், அது குறித்த நீண்ட ,செறிவான, ஆத்மார்த்தமான கடிதத்தைப் படைப்பாளிக்கோ மொழிபெயர்ப்பாளருக்கோ விரிவாக எழுதி அனுப்புவது என்பதுதான் எத்தனை உன்னதமான செயல்? மொழிபெயர்ப்பாளரின் உழைப்புக்குக் கிடைக்கும் உண்மையான ஊதியமும் விருதும் அதுவன்றி வேறெதுவாக இருக்க முடியும்…? மொழிபெயர்ப்பில்/ அல்லது படைப்பில் முனைபவரைத் தொடர்ந்து இயங்க வைக்கும் சஞ்சீவினி மருந்தல்லவா அது?
இந்தக்கடிதத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து அது பற்றி என்னுடன் அவர் அஞ்சல் வழி உரையாடி வருவது ஒரு பின் இணைப்பு.
இணைய ஊடகங்களின் பெருக்கம், புத்தக வாசிப்பை இன்னும் கூட முழுமையாகக் கபளீகரம் செய்து விடவில்லை என்ற சிறிய ஆறுதலை அளிக்கும் அவரது கடிதம் இங்கே பகிர்வுக்கு.
3/6/2025
(திரு நாகப்பன் ராமஸ்வாமி)
திருமதி M A சுசீலா அம்மையார் அவர்களுக்கு,
கடந்த மூன்று வாரங்களாக "குற்றமும் தண்டனையும்" நாவலுடன் வைக்க மனமில்லாமலும் வைத்தால் எடுப்பதற்கு அஞ்சியும் மல்லுக்கட்டினேன் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்று அந்த மாஸ்டர் பீஸ் நாவல் முடிந்தபோது எனக்கு ஏதோ எவெரெஸ்ட் சிகரம் ஏறியது போன்ற ஒரு பெருமித உணர்வு.
ஒரு இடத்தில கூட மொழியாக்கம் செய்யப்பட்ட உணர்வு தென்படாமல் தமிழ் நாவல் படித்த உணர்வை 1500 பக்கங்கள் முழுவதும் கொடுத்த அந்த சிற்பி யார் என்று வலையில் தேடினால் 75 வயது நிரம்பிய உங்கள் வலைப் பக்கத்தை பார்த்து ஒரு கனம் திகைத்து பின் என்னை மீட்டு உங்களை சாஸ்டாங்கமாக வணங்கினேன்.
நான் ஆங்கிலத்தில் சராசரிக்கும் ஒரு படி மேல் என்று என்னைக் கருதிக்கொண்டாலும், என்னுடைய வாசித்தலில் 80 சதவீதம் ஆங்கிலப் புத்தகங்கள் தான் என்றாலும் இந்த "Crime and Punishment" புத்தகத்தை நான் ஆங்கிலத்தில் படிக்கத் துவங்கி இருந்தால் சத்தியமாக என்னால் 50 பக்கங்களை தாண்டி இருக்க முடியாது. அதோடு நாவலை படிப்பதையே கை வீட்டிருப்பேன்.
அழகான தமிழில் கொஞ்சம் கூட அந்நிய வாசனை இல்லாமல் "குற்றமும் தண்டனையும்" படித்து உள்வாங்கி கொள்ளுவதற்கு எனக்கு இவ்வளவு சிரமமாக இருக்கும் போது நீங்கள் எப்படி, எத்தனை ஆண்டுகளில் மொழிபெயர்த்து இருப்பீர்கள் என்று எண்ணும் போது "நகைச்சுவை நடிகர் வடிவேலு" குறிப்பிடுவதைப்போல் "இப்போவே கண்ண கட்டுதே" என்ற உணர்வுதான் மேலோங்கியது.
படித்த எனக்கே எவரெஸ்ட் சிகரம் ஏறிய பிரமிப்பு என்றால் மொழிபெயர்த்த உங்கள் மகிழ்ச்சியை எண்ணி திகைத்துப் போனேன்.
கிட்டத்திட்ட உங்கள் 60 வயதில் இதை மொழிபெயர்த்து இருப்பதை எண்ணும்போது "வயது என்பது வெறும் எண்கள்தானோ" என்று என்னையும் எழுச்சி கொள்ளச் செய்தீர்கள்.
நீங்கள் மொழிபெயர்த்த 2008 களில் இப்போது இருக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் கூட இல்லை. வாட்ஸப்போ, யூடுயுபோ, chatGpt யோ, செயற்கை நுண்ணறிவு மற்றும் கூகிள் கூட மிகவும் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டிருந்த காலத்தில் இவ்வளவு பெரிய 1500 பக்கங்கள் கொண்ட, ஆழ்ந்த தத்துவம் மற்றும் தனிமனித மனோதத்துவ பின்புலம் கொண்ட நாவலை நம்மால் மொழிபெயர்க்க முடியும் என்று தொடங்கியதற்கே ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தாலும் அது தகுந்த சன்மானமாகாது.
உங்கள் வயதையும், புலமையையும், படைப்புகள் மீதான அளப்பரிய காதல் மற்றும் ஈடுபாடு எண்ணி உங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் வணங்கலாம்.
இந்த படைப்பின் மூலம் தங்கள் மரணமில்லா பெருவாழ்வு நோக்கி நடை போட்டு இருக்கிறீர்கள். இந்த படைப்பு நீங்கள் தமிழ் மொழிக்கும், எங்களுக்கும் அளித்த கொடை.
இந்த நாவல் பற்றி உங்களுடன் நிறைய பேசி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற என் விருப்பத்தை இந்த கடிதத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
நன்றி அம்மா!!!
தங்களைப் பெரிதும் மதிக்கும்,
ராமு
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)