துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.9.09

’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’



’அசைவறு மதி கேட்டேன்’’என்பது சிவசக்தியிடம் பாரதி விடுக்கும் வேண்டுகோள்.

ஒருபோதும் சோம்பிக் கிடக்காத...எதைக் கண்டும் தளர்ந்து போய்விடாத...எந்த முயற்சியிலும் சலித்துப் போய்விடாத மனமே ‘அசைவறு மனம்’;
அதற்கு அடிப்படையாவது அசைவறு மதி.

‘’தனம் தரும் கல்வி தரும்....ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்’’
என்று அபிராமி அந்தாதியும்,
‘கலையாத கல்வியும்.......’சலியாத மனமும்...’’என்று அபிராமி அம்மை பதிகமும் குறிப்பிடுவதும் கூட இதைத்தான்.

‘’அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்’’ என்றும்,
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை’’
என்றும் வள்ளுவமும் அசைவின்மை பற்றிய செய்திகளை முன் வைக்கிறது.

மக்கள் வழக்கில் ’‘அசந்து போயிட்டான்யா’’ என்று அடிக்கடி புழங்கும் தொடரும் இதோடு தொடர்பு கொண்டிருப்பதுதான்.

அசதி,அசைவு ஆகியவை வெறும் உடற்சோர்வு காரணமாக மட்டும் நேர்ந்து விடுவதில்லை;
சோம்பல்...முயற்சியின்மை என மனிதனின் ஆக்க சக்திக்குத் தடைபோடும்சில குணங்களே இதற்குக் காரணமாகி, இடையறாத அவனது செயலூக்கத்தை ,ஆர்வத்துடன் செயல்படும் எழுச்சியை ,அவனது உற்சாகமான இயக்கங்களை முடக்கிப் போடுகின்றன.மேலும் அடுத்தடுத்து எதிர்ப்பட நேரும் தோல்விகள்,சரிவுகள் முதலியனவும் கூட அவனது சலிப்புக்கும்,அவனுக்கு விளையும் மனத் தளர்ச்சிக்கும் காரணங்களாகி விடுகின்றன.இவற்றால் மனச் சோர்வுக்கு ஆளாகும் அவன் ‘அசைவு’க்கு ஆட்பட்டு எதுவுமே செய்யாமல் ‘சும்மா’இருக்கக்கற்றுக் கொண்டு, ஓட்டுக்குள் ஒடுங்கும் நத்தையைப்போல ஒரு மூலையில் முடங்கிக் கொண்டு விடுகிறான்.

வட மொழியில் ‘தாமச’குணமாகச் சொல்லப்படுவதும் இதுவே.
‘தாமச’குணத்தின் உருவகமாகச் சொல்லப்படுவது எருமை.
எருமைமுகம் உடையவனாகப் புராணத் தொன்மங்களில் சித்திரிக்கப்படும் ‘மகிஷாசுரன்’ ,உண்மையில் வெளியிலிருப்பவன் அல்ல;
நமக்குள் இருந்து கொண்டே நம்மை இம்சிக்கும் அந்தத் ‘தாமச’குணத்தின் மொத்த அடையாளமே மகிஷாசுரன்.
அந்தத் தாமச குணத்தை...மந்தமான அந்த நிலைப்பாட்டை...சோம்பலை..மனச்சலிப்பை..தளர்ச்சியை
அசைக்க முடியாத பாறை போன்ற மன உறுதியால் நமக்குள் நாமே வெற்றி கொள்வதே மகிஷ வதம்.

மகிடனின் தலை மீது ஏறி நடக்கும் எழிற்கொடியாகிய துர்க்கை,நம் மன உரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள உருவகம்.
துர்க்கை என்றால் ‘அசைக்க இயலாதது’ என்று பொருள்.
மன வலிமையாகிய துர்க்கையின் துணையால் சோம்பலாகிய எருமையை...அந்த இராக்கதப் பண்பை அழித்துத் தொலைப்பதே..அவ்வாறு தொலைப்பதற்கான முயற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நாளே... வெற்றியின் விளைச்சலுக்கு வழிவகுக்கும் விஜய தசமி.
துப்பாக்கியிலிருந்து வெளிவரத் தயாராக...ஆயத்தமாக இருக்கும் தோட்டாவைப்போல நம் மனத்தைத் தயார் செய்துகொண்டு, எதையும் எதிர்கொள்ளவும்...தோல்விகளைப் புறந்தள்ளி நமக்கு நாமே ஊக்கத்தை வருவித்துக் கொள்ளவும் நமக்குள் நாமே ஒத்திகை பார்த்துக் கொள்ளும் நன்னாளே இந்நாள்.

மேற்குறித்த உள்ளார்ந்த தத்துவங்களை ஒதுக்கிவிட்டு ..... உருவக உள்ளர்த்தங்களைத் தொலைத்துவிட்டு.....ஆழ்ந்த அகமுகத் தேடல்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு வெறுமே காளி உருவத்தை...துர்க்கை வடிவத்தை மட்டும் மேலோட்டமாகக் கொண்டாடிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருககிறோம் நாம்.
’’நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.....
உண்மைகள் தெய்வங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்..’’

என்று,
புராணங்களிலுள்ள புறக் கதைகளை விடவும் அவற்றுள் ஆழ்ந்திருக்கும் உண்மையின் தரிசனங்களே வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முக்கியமானவை
என்பான் பாரதி.

’எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக்கெங்கணும் வெற்றி......
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி’’


என்ற பாரதியின் இந்த வரிகளைச் சோர்வு தலையெடுக்கும் தருணங்களிலெல்லாம் (auto suggestion போல)நம்முள் ஓடவிட்டால்.....

’எண்ணத்திருக்கும் எரியே சக்தி....
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி..’’


என்பதை நம் வாழ்நாளின் வேதமாக்கிக் கொண்டால்....அதுவே நம்மைப் புதிய உயிராக்கும்;நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர்த்தீயை உள்ளத்தில் மூண்டெழச் செய்யும்.

புதிய புதிய வெற்றிப்பாதைகளின் வழிகள் அப்போது தானாகவே திறந்து கொள்ளும்.
அனைவருக்கும் வெற்றித் திரு நாளின் வாழ்த்துக்கள்.

18.9.09

காணாமல் போன மோனோலிஸா



லியனார்டோடாவின்ஸி என்ற மாபெரும் கலைஞனின்
மிகச் சிறப்பான நுணுக்கமான ஓவியங்கள் பல இருந்தபோதும் அவருக்குப் பரவலான ஜனரஞ்சகப் புகழைத் தேடித் தந்த ஓவியம் மோனோலிஸா.


இத்தாலியின் மிலான் நகரிலுள்ள டாவின்சியின் சிலை
(கட்டுரையாளர் எடுத்த புகைப்படம்)
பரிமாண ஓவியமாகவும்(diamensional painting),புருவங்கள் அற்ற முகத்துடனும் அந்த ஓவியத்தை உருவாக்கினார் டாவின்ஸி. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அதிலுள்ள முகம் நம்மையே பார்த்துக் கொண்டிருப்பதைப்போன்ற மனக் காட்சியை ஊட்டக்கூடியது மோனோலிஸா ஓவியம்.

தற்பொழுது பிரான்ஸ் நாட்டில்,பாரீஸ்நகரிலுள்ள உலகப்புகழ்மிக்கதும்-உலகின் ஆகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றுமான லூவர் (பிரெஞ்சு மொழியில் லூவ் என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்)அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தைப்பற்றிய சுவாரசியமான கதை ஒன்றை,எனது ஐரோப்பியப்பயணத்தில் கேள்விப்பட நேர்ந்தது.

லூவர் அருங்காட்சியகம்

லூவர் அருங்காட்சியகத்துக்கு முன்பாகக் கட்டுரையாளர்


லூவர் அருங்காட்சியகம்,கலைகளின் பெட்டகம்.அதன் ஒவ்வொரு கூடத்திலும்(ஹால்),சிலைகளாகவும் சித்திரங்களாகவும் மேற்கூரை (விதான)வேலைப்பாடுகளாகவும் கொட்டிக்கிடக்கும்

லூவரின் மேற்கூரைக்காட்சி


நுண்கலை வேலைப்பாடுகளை வியந்து ரசிக்க..,கண்கொண்டவரை அந்த அழகுகளை அள்ளிப் பருக..,அவற்றின் பின்னணியிலுள்ள வரலாற்றுச் சம்பவங்களை அசைபோட ஒரு ஆயுள் போதாது.அங்குள்ள ஒவ்வொரு சிலைக்கு முன்பும் ,ஓவியத்திற்கு முன்னாலும் பலமணி நேரங்களைச் செலவழித்தால் மட்டுமே அவற்றை உள்ளபடி புரிந்து கொள்வதென்பது ஓரளவுக்காவது சாத்தியம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் அந்த அருங்காட்சியகம் முழுவதையும் பார்க்க எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மொத்த நேரமே இரண்டு மணிநேரம்தான்.
அதற்குள் மோனோலிஸாவைப் பார்க்க எல்லோரும் ஓட....நான் ,முதற்கூடத்திலுள்ள சிற்பங்களையும்...சிதைந்த கல் வடிவங்களையும்,பிற ஓவியங்களையும் சற்று நேரம் பார்த்துவிட்டு நிதானமாக மோனோலிஸாவிடம் போய்ச் சேர்ந்தேன்.அதிகம் பேசப்படுவதனாலேயே ஒன்றின் மீது ஈர்ப்பு ஏற்படுவதைப்போல - எதிர்பார்ப்புக் கூடுதலாவதாவதாலேயே ஏமாற்றமும் சலிப்பும் கூட ஏற்பட்டுவிடுகிறது.தாஜ்மஹாலை முதன்முறை பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அவ்வாறான உணர்வுதான்,மோனோலிஸா விஷயத்திலும் நேர்ந்தது.

மிகப் பெரிய-விஸ்தாரமான ஒரு அறையில் ஒரு சுவர் நடுவே தனியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மோனோலிஸா ஓவியம், பிரேமுக்குள் வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய படம் போலத்தான் இருந்தது.அந்தச் சித்திரத்தை அடிக்கடி புத்தகங்களில் பார்த்துப் பழகிய கண்களுக்குப் புதிதாக உறைக்கும்படியான தனித்ததொரு புதுமை எனக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை.அப்படி எதுவும் இருந்தாலும் கூட-அதை அணுகிப் பார்க்க இயலாதபடி- அதன் முன்னால் நெருக்கமாக எவரும் செல்ல முடியாதபடி-அதனுடன் நெருங்கிப் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாதபடி , ஐம்பதடி தூரத்தில் கயிற்று வேலி கட்டப்பட்டு அதற்கு அப்பாலிருந்துதான் அதைப் பார்க்க முடியும் என்ற வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

காட்சியகக்கூடங்களில் இருந்த இன்னும் பல உன்னதமான படைப்புக்களுக்குக் கூட இல்லாத பாதுகாப்பு அதற்கு மட்டும் ஏன் என்ற புதிருக்கான விடை...அந்தக் காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டுப்பேருந்துக்குள் ஏறிய பிறகே எங்களுக்குக் கிடைத்தது.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும்,
’’என்ன மோனோலிஸாவைப் பார்த்து முடித்து விட்டீர்களா?’’
என்று ஏதோ ஜன்ம சாபல்யம் பெற்றுவிட்டீர்களா என்பதைப் போலக் கேட்டார் எங்கள் ஐரோப்பிய வழிகாட்டி.ஆனாலும் கூட அவர் முகத்திலிருந்த குறும்புச் சிரிப்பு , வேறு ஏதோ ஒன்றை உணர்த்த முயல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

‘’மோனோலிஸா ஓவியத்தை ஒருவன் திருடிவிட்டான் தெரியுமா?’’
என்று அடுத்தாற்போல நிதானமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அவர்.

‘’இத்தனை ஆர்வத்துடன் நீங்கள் போய்க் கொண்டிருக்கும்போது அதைப் பற்றி முதலிலேயே சொல்லி உங்கள் ஆர்வத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை’’
என்ற பீடிகையோடு தன் கதையைத் தொடங்கினார் அவர்.

இத்தாலி நாட்டிலுள்ள பிளாரன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர் லியனார்டோடாவின்ஸி.அதே நகரத்தைச் சேர்ந்த ஒருமனிதன், லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாவலனாகப் பணி புரிந்து வந்தான்.மோனோலிஸா ஓவியத்தைத் திருடிக் கொண்டுபோகத் திட்டமிட்ட அவன், அங்கே வேலை செய்யும் இன்னொரு மின் பணியாளையும் தனக்குத் துணையாகக் கூட்டுச் சேர்த்துக் கொண்டான்.மியூசியத்தை இறுதியாக அடைத்துவிட்டுப் போக வேண்டிய பொறுப்பிலிருந்த அந்தப் பாதுகாவலன்,அதை அடைப்பதற்கு முன்பாக மோனோலிஸா ஓவியத்தைத் தன் கூட்டாளியிடம் கொடுத்து அங்கிருந்த கழிவறை ஒன்ற்றில் அவனை ஓவியத்துடன் பதுங்கிக்கொள்ளச் செய்துவிட்டு ‘எல்லோரும் வெளியே போய் விட்டார்கள்’என்று அறிவித்து விட்டுக் கதவை மூடி விட்டான்.
தன் மேலங்கிக்குள் ஓவியத்தைப் பதுக்கிக் கொண்ட கூட்டாளி, மறு நாள் காட்சியகம் திறக்கப்பட்டபோது மக்களோடு மக்களாகக் கலந்து ஓவியத்தோடு வெளியேறி விட்டான்.

பிற்கு மோனோலிஸாவை நான்கு பிரதிகள் எடுத்த பாதுகாவலன்(ஒளியச்சு போன்றவை இல்லாத காலகட்டத்தில் அவன் அவற்றைப் பிரதி எடுத்திருப்பது ஆச்சரியமானதுதான்), மோனோலிஸா ஓவியம் தங்களிடம் இருக்கிறதென்பதையே ஒரு பெரிய பெருமையாக- தங்கள் செல்வாக்கிற்கும்,அந்தஸ்திற்கும் அறிகுறியாகக் கருதும் மிகப்பெரும் பணக்காரர்களிடம் விற்று இரண்டாண்டுக் காலத்துக்குள் பெருந்தொகை ஈட்டிக் கொண்டான்.
இதற்கிடையே லூவரிலிருந்து மோனோலிஸா காணாமல் போனது பற்றிய அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

பாதுகாவலன், மோனோலிஸாவின் பிரதிகளை விற்றுக் கணிசமான பணத்தைச் சம்பாதித்துவிட்டபோதும் அசல் மோனோலிஸா அவன் வசம்தான் இருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தேசப் பற்று விழித்துக் கொண்டுவிட ..,இத்தாலி நாட்டவரான...அதுவும் பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்தவரான டாவின்ஸியின் ஓவியம் , குறிப்பிட்ட அந்த நகரத்தின் அருங்காட்சியகத்திலேதான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட அவன், அதற்குப் பொறுப்பானவர்களிடம் மோனோலிஸாவின் அசலான ஓவியம் தன்னிடமே இருப்பதாகவும் அதை பிளாரன்ஸ் அருங்காட்சியத்திற்கு இலவசமாகவே வழங்குவதற்குத் தான் முன் வந்திருப்பதாகவும் அறிவித்தான்.

பிளாரன்ஸ் காட்சியகம் அந்த ஓவியத்தை அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டாலும்....சட்டத்திற்குப் புறம்பான முறையில் செல்லத் துணியாத நிர்வாகம்,இரகசியமாக லூவர் நிர்வாகத்திடம் அதைத் தெரிவித்துச் சரியான நேரத்தைக் குறித்து அந்தப் பாதுகாவலனையும்,மோனோலிஸாவின் உண்மைப் பிரதியையும் லூவரிலேயே ஒப்படைத்தது.

இரண்டாண்டுக் காலச் சிறை வாசத்துக்குப் பின்பு -”அதீதமான” நாட்டுப் பற்றால் மட்டுமே அந்தக் குற்றத்தைச் செய்தவன் என்ற காரணத்தைக் காட்டி விடுவிக்கப்பட்டான் அந்தப் பாது காவலன்.

கதை அந்த இடத்தோடு முடிந்து விடவில்லை.பாதுகாவலன் எடுத்த நகல்கள் மொத்தம் ஐந்து என்றும் அந்த ஐந்தாவது பிரதியே லூவரை வந்தடைந்திருக்கிறது என்றும், உண்மையில் அசலான ஓவியம் அவனுடைய கூட்டாளியின் வசம்தான் இருப்பதாக...இருந்ததாகச் சொல்லப்படுகிறது என்றும் , அந்தப் புதிர் இன்னும் கூட எவராலும் சரிவர அவிழ்க்கப்படவில்லை என்றும் சொல்லி முடித்தார் எங்கள் வழிகாட்டி.

மோனோலிஸாவைக் கண்டுவிட்டதான பெருமிதத்தில் இருந்த பயணிகளின் முகங்கள் காற்றுப் போன பலூன்களாக சுருங்கிப்போக இன்னுமொரு கொசுறுச் செய்தியையும் முன் வைத்தார் அவர்.

கலைகளின் மீது - குறிப்பாக ஓவியங்களின் மீது தீராக் காதல்கொண்டிருந்த நெப்போலியன் எப்போதும் தன் தலையணைக்கடியிலே மோனோலிஸா ஓவியத்தை வைத்தபடிதான் உறங்குவானாம்.அதனால்,அவனுக்கும் அவன் மனைவிக்கும் ஊடல் ஏற்படக் கூட மோனோலிஸா காரணமாகியிருந்திருக்கிறாள்.

தூய்மையான ஒரு கலைப் படைப்பின் பின்னணியிலேதான் எத்தனை எத்தனை மாயச் சுழல்கள்.....?
பணத்தாசை....,தனக்கு மட்டுமே உடைமையாக்கிக் கொள்ளும்ஆசை....,போலியான நாட்டுப் பற்று என்று மனிதனின் குதர்க்க மூளை இந்த ஓவியத்தோடு எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது....?

இந்தக் கதை உண்மையோ..பொய்யோ...,அதன் வழி பெற முடிந்திருக்கிற செய்திகள் மோனோலிஸாவின் ஓவியத்தை விடவும் சுவையானவை.
அவையும் கூட மோனோலிஸா புரியும் மர்மப் புன்னகையைப் போலவே விடுவிக்க முடியாத புதிர்கள்தான்....

பி.கு:லூவர் அருங்காட்சியகத்தில் மோனோலிஸா மட்டுமில்லை.சிலை வடிவில் அங்கே ஒரு கருத்தம்மாவும் கூட இருந்தாள்.கருத்தம்மாக்களைக் காட்டிலும் மோனோலிஸாக்கள் முன்னுரிமை பெற்று விடுவதுதானே நாளும் காண முடியும் யதார்த்தம் ?

லூவரில் ஒரு கருத்தம்மா

11.9.09

பாரதியின் ’சந்திரிகையின் கதை’


பாரதி நினைவு நாளில்.....

நாட்டு விடுதலையோடும்,சமூக விடுதலையோடும் தன்னை இறுகப் பிணைத்துக் கொண்டிருந்த பாரதி,எந்தத் தெளிவுரையும், விளக்க உரையும் தேவைப்படாத வகையில் - தமிழ்மொழியை அதன் பழமையான பண்பாட்டு மரபுகளிலிருந்து சிறைவீடு செய்து ‘சொல் புதிது...பொருள்புதிது’என எளிமைப்படுத்தினான்.

பண்பாட்டு மாற்றம் வேண்டுகிற கவிஞனாகச் சில கவிதைகளில் கட்டளையிடும் தொனியிலும்....இன்னும் சில படைப்புக்களில் மன்றாட்டாகவும் குரல் கொடுத்தான்.

தனதுகட்டுரைகளின் வழியே மாற்றுப் பண்பாட்டின் தேவையைப் பிரசாரமாக முன்வைத்த பாரதி தனது நாவலொன்றில் அதை நடைமுறைச் சாத்தியமானதாகவே காட்டிப் பண்பாட்டுப் புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறான்.

தனது முற்றுப் பெறாத சிறு நாவலாகிய ‘சந்திரிகையின் கதை’(1925)வழியாக அவன் ஏற்படுத்திய அதிர்ச்சி...குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் பூமி அதிர்ச்சிக்கே நிகரானது.

வேளாண்குடி என்னும் சிற்றூரில் நிகழும் பூகம்பத்தில் ஒரு அக்கிரகாரம் முழுவதுமே அழிந்து போகிறது.சிதைந்தாக வேண்டிய சில பண்பாட்டு மரபுகளின் குறியீடாகவே அந்த அழிவை அமைக்கிறான் பாரதி.ஒரு பச்சிளம் பெண்குழந்தையும்,கன்னிப்பருவத்தில் விதவையான பெண் ஒருத்தியுமே அந்தப் பேரழிவிலிருந்து தப்பிப்பிழைக்கிறார்கள்.
மரணத் தருவாயில் இருக்கும் அந்தக் குழந்தையின் தாய்,கன்னிவிதவையான தன் கணவனின் சகோதரியைத் தன் அருகிலழைத்துப் பேசுகிறாள்;


’’விசாலாட்சி!...நீ ..விவாகம் செய்துகொள்...விதவா விவாகம் செய்யத் தக்கது....ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய்...ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை.ஆதலால் நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பில் போட்டுவிட்டு
தைரியத்துடன் சென்னப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு’’

விசாலாட்சியும் அவள் கூறியபடியே சென்னை சென்று பல சிக்கல்களை அடுக்கடுக்காய் எதிர்ப்பட்டு இறுதியில் ‘பிரம்ம சமாஜ’முறைப்படி திருமணம் செய்து கொள்கிறாள்.தன் அண்ணியின் குழந்தை சந்திரிகையையும் கணவனின் துணையோடு வளர்க்கிறாள்.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் அவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவளித்து வந்த சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், வீரேசலிங்கம்பந்துலு போன்ற தேச பக்தர்களையும் கூடக் கதை மாந்தர்களாக உலவவிட்டு நாவலுக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறான் பாரதி.

ஓர் அமைப்பே அடிமட்டமாகத் தகர்ந்து போகும் நிலையில் ஆதரவற்ற இரு பெண்களை மட்டும் உயிர் பிழைக்க வைத்துப் பெண் சார்ந்த தன் உறுதியான நிலைப்பாட்டைப் பாரதி தன் நாவலில் தெளிவாக்கியுள்ளபோதும்...
இப் படைப்பின் சோகம்,அவன் சொல்ல நினைத்த பச்சைக் குழந்தை சந்திரிகையின் கதை என்னவென்பது அவனது வாசகர்களுக்குக் கடைசிவரை தெரியாமல் அது முற்றுப்பெறாமலே போய்விட்டதென்பதுதான்.

விதவைப் பெண்ணுக்குத் திருமணம் வேண்டும் என்ற அவன் கனவு ,அவன் கதையில் மட்டுமன்றி ...ஓரளவு நாட்டு நடப்பிலும் நிறைவேறிவிட்டது உண்மைதான்;
ஆனால் அவன் சொல்லாமல் விட்ட சந்திரிகையின் கதைக்குள் முற்றுப்பெறாத ஆயிரம் ஆயிரம் பெண்களின் கோரிக்கைகள் முடங்கிக் கிடக்கிறதோ..?
இந்தக் கேள்விக்குப் பாரதியைத் தவிர வேறு யாரால் விடை சொல்ல இயலும்?

7.9.09

தமிழ்த் திரைக்குக் ‘காஞ்சிப்பட்டு’




’காஞ்சீவரம்’ தமிழ்த் திரைப்படத்துக்கும்,அதில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கும் தேசீய விருது கிட்டியிருக்கும் நற்செய்தி காதில் தேன் பாய்ச்சியிருக்கிறது.

தமிழ்ப்படங்களின் தரத்தை உயர்த்தும் படங்களுக்கான பட்டியலில் ‘காஞ்சீவர’த்துக்கு உறுதியான ஓரிடம் உண்டு என்பது அதைப் பார்த்தவர்கள் அனைவருக்குமே உணர்வாகியிருக்கும் ஓர் உண்மைதான்.
திரையரங்குச் சந்தையில் விலை போகாமல் உலகப் படவிழாக்களில் அதிகம் பேசப்பட்ட இந்தப் படம் , இந்திய அளவிலும் மேன்மையான அங்கீகாரம் பெற்றிருப்பது,உண்மையிலேலேயே பாராட்டப்பட வேண்டிய மகத்தான விஷயம்தான்.

’காலகட்டப்படங்களை’(Period films)உருவாக்குவதில் கைதேர்ந்த பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இந்திய விடுதலைக்கு முன்னுள்ள காலகட்டத்துப் பட்டு நெசவாளர் வாழ்க்கை நிலையை- பட்டு நெசவுத் தொழில் மேலோங்கியிருக்கும் காஞ்சீபுர நகரத்தின் பின்புலத்தில் முன் வைக்கிறது.

விவசாயிக்கு அவன் விளைக்கும் அரிசியில் உரிமையில்லை....கட்டிடத்தொழிலாளிக்கு அவன் சமைக்கும் மாடமாளிகைகளில் இடமில்லை என்பதுபோலத் தினந்தோறும் விதவிதமான பட்டுத் துணிகளை வித்தியாசமான பாணிகளில் நெய்யும் நெசவுக் கலைஞனின் குடும்பத்துப் பெண்களுக்கு அந்தப் பட்டைத் தரிக்கும் பாத்தியதை இல்லை என்ற சின்ன ...மெல்லிய இழைதான் ‘காஞ்சீவர’த்துக்கதை என்றபோதும் அந்தச் சிறிய இழையைத் தன் சீரிய கதைப்பின்னலால்...நெகிழவைக்கும் சம்பவங்களால்....கதைக் களனுக்கேற்ற காட்சி அமைப்புக்களால் காஞ்சிப் பட்டாக ஜொலிக்க வைத்திருக்கிறார் பிரியதர்ஷன்;
பிரகாஷ் ராஜ் பட்டுநெசவாளராகவே வாழ்ந்து காட்டி நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறார்.
ஆனாலும் கூட இது சற்று எளிமையான பட்டு....ஆரவாரமோ பகட்டோ இல்லாதபட்டு என்பதால்தான் வணிகத் திரைச் சந்தை இதை ஒதுக்கி விட்டது போலிருக்கிறது.

தன் திருமணத்திலேயே தன் மணமகளுக்குப் பட்டுடுத்திப் பார்க்க நினைத்த வேங்கடம் என்ற தறி நெசவாளி,தன் மணமகளின் திருமணத்திலாவது அதைச் செயல்படுத்தியே ஆக வேண்டுமென்று வெறியோடு உழைக்கிறார்;ஆனாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஆயிரம் தடைக் கற்கள் குறுக்கிட....தான் நெசவு செய்யும் இடத்திலிருந்து தினமும் ஒரு கொத்து பட்டு நூலை எவருக்கும் தெரியாமல் வாயில் அடக்கி வந்து ,மனைவி,மகள் ஆகியோர் கூட அறியாமல் ரகசியமாய் அதைச் சேமித்து வைத்து, நள்ளிரவில் தனித் தறியில் பட்டுப்புடவையையும்....அதனுடன் இணைந்த தன் கனவையும் படிப்படியாக வளர்க்கிறார்.இறுதியில் அத்தனை கனவுகளும் தரைமட்டமாய்த் தவிடுபொடியாகிவிட....பாலூட்டி வளர்த்த மகளை நஞ்சூட்டிக் கொன்றுவிட்டுத் தான் அரைகுறையாக நெய்து வைத்த பட்டாடையை அவளது சவத்துக்கு அரைகுறையாக அணிவிக்கிறார்.அவருக்குச் சாத்தியமானது அது மட்டும்தான் என்ற அழுத்தமான உண்மையை நெஞ்சில் கனமாக இறக்கி வைத்துவிட்டு முடிகிறது படம்.

இந்தப் படத்தைப் பார்த்தபோது , பலநாள் முன்பு நான் படித்த திரு ம.ந.ராமசாமியின் ’ஆகுதிக்கு மந்திரம் இல்லை’என்ற சிறுகதை ஒன்று என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருந்தது.அதுவும் பட்டு நெசவாளி பற்றியதுதான்.கோயில் திருவிழாவுக்குப் பட்டுப் புடவை நெய்து தரும் ஒரு நெசவாளி , தன் கலைப்படைப்பு அந்த விழாவில் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது என்பதைக் காண்பதற்காக ஆவலோடு போகிறான். அங்கே நடக்கும் வேள்வியின் நெருப்பில், அது ஆகுதியாகிவிடுவதைப் பார்க்கப் பொறாமல், தானும் அதே நெருப்பில் பாய்ந்து உயிரை விட்டு விடுகிறான் அந்த மகா கலைஞன்.
ஒரு சிற்பியின் பெருமை, தன் கலை வழிபடப் படுவதைவிடவும்,பலராலும் ரசிக்கப்படுவதிலேதான் அடங்கியிருக்கிறது என்று ‘சிற்பியின் நரகம்’ சிறுகதையில் எடுத்துக் காட்டிய புதுமைப்பித்தனின் படைப்பை ஒட்டியதுதான் இதுவும்.

தமிழ் எழுத்துலகம் , ஆங்காங்கே கையாண்டுள்ளபோதும் -
( எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நாவலாகிய ‘வேள்வித் தீ’நெசவாளர் வாழ்வியலைச் சித்தரிப்பது)
தமிழ்த் திரை உலகம் பரவலாகக் கையாளாத ஒரு கருப் பொருளை - களனைக் ‘காஞ்சீவரம்’திரைப்படத்தில் துணிவாகக் கையாண்டு தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்குத் தேசீய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் கேரளீயரான(உண்மைக் கலைஞனுக்குமொழி,இன பேதங்கள் இல்லை என்பது இதன் வழி மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது)பிரியதர்ஷனுக்கும்,அவரது குழுவினருக்கும் இத் திரைப்படத்தின் வழி தேசீய விருது பெறும் பிரகாஷ்ராஜுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

5.9.09

’நல்லாசிரியனுமாய்.....’


கற்பிக்கும்போது - தன்னுடைய கற்றலையும்,கல்வி சார்ந்த தேடல்களையும் ஒரு போதும் நிறுத்தி விடாமல் கூடவே தொடரும் நல்லாசிரியர்கள்....

கல்வியையும்...கற்றலையும் சுமையாக்கி விடாமல் அவற்றைக் கொண்டாட்டமாக்கிக் காட்டி வகுப்பறை அனுபவத்தை உற்சாகமும்,ஊக்கமும் இணைந்த ஓர் ஆனந்த அனுபவமாக்கும் நல்லாசிரியர்கள்...

கல்விப்பணிக்கு ஊதியம் பெற்றாலும்- காசை முன்னிறுத்தாமல் மாணவர் மீதான கரிசனத்தை முன்னிறுத்தும் நல்லாசிரியர்கள்.....

ஏட்டிலுள்ளவற்றையே எதிரொலித்துக்கொண்டிருக்காமல் - அவற்றின் அடித்தளத்தோடு அவற்றைக் கடந்து புதிய திசைகளை நோக்கியும் போக முடியும் என்ற தன்னம்பிக்கை விதைகளைத் தூவும் நல்லாசிரியர்கள்....

எந்தப்பொறி எந்த இளம் உள்ளத்தில் சூல் கொண்டிருக்கிறது என்பதை மிகச் சரியாக இனம் கண்டு அந்த அக்கினிக் குஞ்சைக் காட்டுத் தீயாக விசிறிவிடும் நல்லாசிரியர்கள்.....

எண்ணற்ற கேள்விகளை இதயத்தில் விதைத்து , அவற்றுக்கு விடைதேடிப் போகும் தீராத தாகத்தையும் அதற்கான மன உரத்தையும் ஊட்டும் நல்லாசிரியர்கள்.....

தலை சிறந்த முன் மாதிரியாக- அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்த பிம்பமாகப் பிஞ்சு மனங்களில் தன்னைக் கல்வெட்டாய்ப் பதிக்கும் நல்லாசிரியர்கள்.....

உள்ளொளியை ஏற்றிவைத்து அகக் கண்ணுக்குப் பார்வை நல்கும் அற்புதமான நல்லாசிரியர்கள்.....

என் அன்னை தொடங்கி எனக்கு அமைந்த அந்த நல்லாசிரியர்கள், வகுப்பறைகளில் வாய்த்தவர்கள் மட்டும் இல்லை....

என்னிலும் இளையவர்கள்.....,
என்னருமை மாணவர்கள்....,
கல்வி மற்றும் சமூகத் தகுதிகளில் என்னிலிருந்து வேறுபட்டிருப்பவர்கள் .....,
நான் மதித்துப் போற்றும் படைப்பாளிகள்.....,
பணியாட்கள் ...
வழிப்போக்கர்கள் ....,
இன்னும் என் அன்றாட வாழ்வில் நான் கடந்து போகும் ஒவ்வொருவருமே-என் பேரக்குழந்தைகள் உட்பட - தினந்தோறும் எனக்கு ஏதாவது ஒரு பாடத்தைப் புகட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

நம்மை நாமாக்கி உயிர்ப்புடன் உலவ வைக்கும் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தன்று அன்பான கை கூப்பு.

3.9.09

’’கல்லை மட்டும் கண்டால்...’’



''மரத்தில் மறைந்தது மாமத யானை...மரத்தை மறைத்தது மாமத யானை ‘’என்பது , திருமூலரின் திருவாக்கு.இவ்வாக்கில் பொதிந்துள்ள ஆன்மீக உட்பொருள் ஒருபுறமிருக்க.. , மரத்தில் மறைந்திருக்கும் மாமத யானையை...மரத்தை மறைத்திருக்கும் மாமத யானையை உள்ளொளி படைத்தவர்கள் மட்டுமே இனம் கண்டு கொள்கிறார்கள் என்பது ,இதில் வெளிப்படையாகத் துலங்கும் பேருண்மை.இந்த உண்மையின் நிதரிசனமான சாட்சிகளில் ஒன்று...,உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்சலோ என்னும் மகா கலைஞர் வடித்த பியட்டா என்னும் இந்தப் பளிங்குச் சிற்பம்.

சிலுவையில் மரித்தவுடன் அகற்றப்பட்ட இயேசுவின் உடலை அன்னை மரியாள் தன் கரங்களில் தாங்கிப் பிடித்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தின் பின்னணியில் சுவையான கதை ஒன்று உண்டு.

மைக்கேல் ஏஞ்சலோ, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்.‘மார்பிள்’எனப்படும் பளிங்குக் கற்களுக்குப் பிரசித்திபெற்றது இத்தாலி.இத்தாலியைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் ,குன்றுகளிலும் பனி உருகி வடிவதைப்போல வெள்ளை வெளேரென்ற பளிங்குக் கற்கள் - படிமங்களாக உறைந்து கிடப்பதைக் காண முடியும்.

இத்தாலி மலைகளில் மார்பிள்படிமங்கள் பனிப்பாறைபோல்....


‘மார்பிள்’கற்களை விற்பனை செய்யும் தொழில் அன்று முதல் இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருவதும் அங்குதான்.
அப்படிப்பட்ட ஒரு கடை வழியே சென்றுகொண்டிருந்த கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோ குறிப்பிட்ட ஒரு கடையின் முன்னால் கிடந்த ஒரு பளிங்குக்கல்லைக் கண்டு நிலைகுத்தி நின்றார்.கரடுமுரடாகப் பண்படுத்தப்படாமல் கிடந்த அந்தக் கல் அவருக்குள் சொன்ன கதை - அவரது ஆழ்மனதில் கிட்டிய தரிசனம் - அந்தக்குறிப்பிட்ட கணத்தில் அவர் மட்டுமே அறிந்த ஒரு ரகசியம்.

கடை உரிமையாளரை மிகுந்த தயக்கத்தோடு அணுகிய ஏஞ்சலோ , அந்தக் கல்லுக்கான விலையைக் கூறுமாறு கேட்டார்.உரிமையாளருக்கோ வியப்பு.காரணம் ,அவரது பாட்டனார் காலம் தொடங்கி அங்கேயே கிடக்கும் அந்தக் கோணல் மாணலான கல்லை விலைபேச இதுவரை எந்த வாடிக்கையாளருமே வந்திருக்கவில்லை.கடைக்குள் இடத்தை அடைத்துக்கிடக்க வேண்டாம் என்பதற்காகவே அதை வாசலில் போட்டு வைத்திருந்தார் அந்தக் கடைக்காரர்.

மைக்கேல் ஏஞ்சலோவை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அதை இலவச அன்பளிப்பாகவே அவருக்கு அளித்துவிட்ட அந்தக் கடைக்காரர் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அவருக்கு விதித்தார்.எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுவிட்ட அந்தக் கல்லை மைக்கேல் ஏஞ்சலோ எப்படிப் பயன்படுத்தினார் என்பதை மட்டும் அவருக்குக் காட்டியாக வேண்டும் - அது அவருக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட ஏஞ்சலோவும் அந்தக் கல்லைக் கண்ட மாத்திரத்தில் தன்னுள் கருத் தரித்த ‘பியட்டா’சிற்பத்தை எழிலுற உருவாக்கி அவரை மட்டுமன்றி உலகையே தன் கை வன்மையால் கலைத் திறமையால் திகைப்புறச் செய்தார்.

மாமல்லபுரத்தில் கிடந்த கற்பாறைக்குள் யானை வடிவத்தைக் கண்ட நரசிம்ம பல்லவனைப் போலப் பண்படாத பளிங்குக் கல்லுக்குள் உயிர் நீத்த மைந்தனையும், தாயையும் ஒருங்கே..ஒன்றாகக் கண்டார் மைக்கேல் ஏஞ்சலோ.

உதவாத வெறும் கல்லுக்குள்ளும் கூட உயிர்த் துடிப்புள்ள கலைப்படைப்பைக்காண்பவை படைப்பாளியின் கண்கள் என்பதற்குச் சாட்சியாக அமைந்த இச் சிற்பம்,உலகின் மிகச் சிறிய நாடாகக் கருதப்படும் வாடிகனிலுள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.மிக அரிதான இந்தப் பளிங்குச் சிற்பத்தை முன்பொருமுறை மனநிலை சரியில்லாத ஒருவன் தாக்கித் தகர்க்க முயன்று விட்டதால்,இப்பொழுது இது கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எத்தனை மணி நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாலும் பார்க்கப் பார்க்கத் திகட்டாத அபூர்வக் கலைப்பொக்கிஷமான இந்தச் சிற்பத்துக்குப் பின்னால் மற்றொரு சோகமும் உண்டு.

குறிப்பிட்ட இந்தச் சிற்பத்தில் இயேசுவைத் தாங்கியுள்ள அன்னை மரியாள் அவரை விடவும் இளமையாகக் காட்சி தருவதைக் காண முடிகிறது.அந்தத் தாயை வடிவமைக்கையில் தனது பச்சிளம் பருவத்தில் - தனது நான்காம் வயதில் பறிகொடுத்த தனது சொந்த அன்னையின் முகமும் வடிவமுமே மைக்கேல் ஏஞ்சலோவின் உள்ளத்தில் மேலோங்கி நின்றதன் விளைவே சிற்பத்தில் நேர்ந்த அவ்வாறான கட்டமைப்பிற்கு அனிச்சையான காரணமாக ஆகிப் போயிருக்கிறது.மலரினும் மெல்லிதல்லவா கலை உள்ளம்?

பியட்டா சிற்பத்தின் முன்பு கட்டுரையாளர்

2.9.09

ஒரு எதிர்வினை



முனைவர் பட்ட ஆய்வேடு குறித்த மதிப்பீடுகளில் -( குறிப்பாகத் தமிழ் இலக்கியம் சார்ந்தவை)-காணப்படும் தரம் தாழ்ந்த நிலைப்பாடுகள் குறித்த என் மனக் கொதிப்பைக் ’கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு....’ என்ற தலைப்பில் அண்மையில் கட்டுரையாக்கியிருந்தேன்.புது தில்லியிலிருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழான ‘வடக்கு வாச’லிலும்(ஆக.09)அது வெளியாகி இருந்தது; பிறகு என் வலையிலும் அதை வெளியிட்டிருந்தேன்.
http://masusila.blogspot.com/2009/08/blog-post_03.html


தற்பொழுது ‘வடக்கு வாசல்’ ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள் ,அக் கட்டுரைக்கு நிறைய தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாக எனக்கு மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறார்.

''அன்புள்ள சுசீலா அம்மையார் அவர்களுக்கு
வணக்கம்.
உங்கள் கட்டுரைக்கு நிறைய தொலைபேசிகள் வந்தன எனக்கு.
எல்லாப் புகழும் உங்களுக்கே.
அன்னை பராசக்தியும் சத்குருநாதனும் என்றும் உங்களுக்குத் துணை இருக்கட்டும்,.
அன்புடன்
பென்னேஸ்வரன்''
அக் கட்டுரையை வடக்கு வாசல் இணைய தளத்திலும் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.http://vadakkuvaasal.com/article.php?id=376&issue=61&category=10 ''
வலை வாசகர்கள் அத் தளத்திற்குச் சென்றும் அக் கட்டுரையைப் படிக்கலாம். வடக்கு வாசலின் பிற பகுதிகளையும் சுவைக்கலாம்.
(உண்மையில் சொல்லப் போனால் அந்த இதழ் அச்சேறும் கடைசித் தருணத்தில் ஒரு ஆவேச வெறியுடன் அதை நான் மின் அஞ்சலில் அனுப்ப அடுத்த 10 நிமிடங்களிலேயே அதைப் பிரசுரத்துக்கு ஏற்ற பெருந்தன்மையாளர் , இதழ் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள்).

ஒரு படைப்பாளி என்ற வகையில் ஆசிரியரின் இப் பாராட்டு எனக்கு மகிழ்வும் ஊக்கமும் ஊட்டியபோதும் - ஒரு கல்வியாளர் என்ற நிலையில் அது என்னைக் கவலையும் கரிசனமுமே கொள்ள வைக்கிறது.இக் கட்டுரைக் கருத்துக்களோடு ஒத்துப் போகும் மனம் கொண்டோர் பலர் இருந்தும் நிதரிசன நிஜங்களை இம்மியும் அசைக்க முடியவில்லையே?ஆனாலும் முழக்கும் சங்கின் நாதத்தை ஓய விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தால் என்றேனும் ஒரு நாள் பொழுது புலராமலா போய்விடப் போகிறது.....?

அந்த நம்பிக்கை இருக்கும் வரை சிறுமை கண்டு சீறும் எழுதுகோல்கள் இயங்கிக் கொண்டேதான் இருக்கும்.

1.9.09

’ஷாலோமுக்கு ஒரு சலாம்’

அன்புள்ள வலை வாசகர்களுக்கு

வணக்கம்.ஐரோப்பியப் பயணத்தால் ஏற்பட்ட நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் இணைய அன்பர்களை எழுத்து வழி சந்திப்பதில் மகிழ்கிறேன்.

18நாட்கள் பயணம் முடித்து 25.08.09 புதுதில்லி திரும்பினேன்.பிறகு கடந்த ஒரு வாரமாக இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கணினியைத் தொட முடியாத நிலை!
இன்று முதல்...ஆராத ஆர்வமுடன் வலையை மீண்டும் தொடர்கிறேன்.

இதுவரையிலும் ......
வரலாறுகளிலும்....இலக்கியங்களிலும் -நூல்கள் வழியாக மட்டுமே எனக்கு அறிமுகமாகியிருந்த இடங்களை-
என் கற்பனையில் மட்டுமே நான் கண்டு வந்த இடங்களை-

ரோமிலும் பாரீசிலும் சிதைவுண்ட எச்சங்களாகவும் ,நிலைபெற்ற கட்டிடங்களாகவும் விரவிக் கிடக்கும் வரலாற்றுச் சின்னங்களை,
 
Posted by Picasa

பனி கொட்டிக் கிடக்கும் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களை,
 
Posted by Picasa

மிதக்கும் வெனிஸ் நகரத்தை,

பைசாவின் சாய்ந்த கோபுரத்தை,

இரும்பின் உரத்தோடு மட்டுமே உயர்ந்து நிற்கும் ஈபில் கோபுரத்தை,

ஹாலந்தின் காற்றாலைகளை...

மார்பிள் படிமங்கள் உறைந்து கிடக்கும் இத்தாலி மலைகளை

எழில் கொஞ்சும் மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பங்களை...,

லியனோர் டாடாவின்சியின் சித்திரநுணுக்கங்களை,

மிகச் சின்னதொரு பூமியை வைத்துக் கொண்டு நம்மை ஆட்டிப் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் லண்டனை

நிஜமாய்...நனவின் நிகழ்வாய்க் காணக் கிடைத்த வாய்ப்பு ....,எனக்கு நானே தேடிக் கொண்டதுதான் என்றபோதும் வாழ்வில் எனக்குக் கிடைத்த பெறற்கரிய பெரும்பேறு.
 
Posted by Picasa


பயணத் துளிகளைப் பகிரத் தொடங்குமுன்
இந்தப் பயணம் வெறுமே ஒரு பொழுதுபோக்குச் சுற்றுலாவாகப் போய்விடாமல் - நான் கற்ற பலவற்றை நினைவு கூரும் வகையிலும்,பல புதிய விஷயங்களை எனக்குப் படிப்பித்துத் தரும் முறையிலும் அமைந்ததற்கு முதன்மையான காரணமாக - இறை அருளால் எனக்கு வாய்த்த ‘ஷாலோம் டூர்ஸ் ‘ என்ற மிகச் சிறப்பான பயண அமைப்புக்கு நான் நன்றி கூறியாக வேண்டும்.
இது வெறும் முகத்துதிக்காகக் கூறப்படும் நன்றி அறிவிப்பு அல்ல.இதைப் படிப்பவரில் சிலராவது இதனால் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்’யான் பெற்ற இன்ப’த்தைப் பகிரும் சிறு முயற்சியே இது.

இன்றைய நவீன யுகத்தில் - வணிக நோக்குடன் புற்றீசல் போல மலிந்து கிடக்கும் பல சுற்றுலா நிறுவனங்களிலிருந்து இந்த நிறுவனம் பெரிதும் மாறுபட்டிருப்பதைக் கடந்த பல நாட்களில் நான் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பயணத்திட்டம்(18 நாட்களுக்கும்)-

அதில் கொஞ்சம் கூடப் பிசிறு இல்லாத வகையில்-ஒரு சின்ன இடத்தைக் கூடத் தவறவிட்டு விடாமல்(சொல்லப் போனால் இன்னும் கூடுதலான இடங்களையும் கூட)காட்டும் முனைப்பு-

செல்லும் இடங்களைப் பற்றிய விவரங்களனைத்தையும்(சரித்திர,பூகோள,அரசியல் மற்றும் பிற சிறப்புக்கள்) ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி மிக அருமையாக விளக்கும் பாங்கு-
(நாம் ஏற்கனவே நிறையத் தயாரித்துக் குறிப்பு எடுத்துக் கொண்டு போனாலும் கூட நமக்குத் தெரியாத ஏதாவது ஒரு விஷயம் அங்கே- அவர்களின் விளக்கத்தில் ஒளிந்து கொண்டுதான் இருந்தது)-

உணவுக்காக அலைமோதி அலைக்கழிவதில்(குறிப்பாக சைவ உணவை மட்டுமே மிக உறுதியாகக் கடைப் பிடிக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகவும் முக்கியம்) நேரத்தைத் தொலைத்துவிட்டு இடங்களைத் தவற விட்டுவிடாதபடி -
(அப்படிப்பட்ட குழுக்கள் சிலவற்றையும் நாங்கள் எதிர்பட நேர்ந்ததால் எங்கள் குழுவின் சிறப்பு மிகத் தெளிவாகப் புரிந்தது)
குறிப்பிட்ட இடத்திற்கு நாம் சென்று சேரும்பொழுதே சுடச்சுடப் பரிமாறப்படும் இந்திய உணவுகள்(ஐரோப்பாவில் நாங்கள் சென்ற சொகுசுப்பேருந்தைத் தொடர்ந்து சமையலறை கொண்ட வாகனம் ஒன்றும் எங்களுடனே பயணித்தது)-

அனைத்துக்கும் மேலாக அத்தனை பயணிகளின் (25 பேர் எங்கள் குழுவில் இருந்தோம்)
நலனிலும் தனிப்பட்ட அக்கறை காட்டிக் குன்றாத ஆர்வத்துடனும் இன் முகத்துடனும் - அதே வேளையில் கட்டுப்பாட்டுடனும் எங்களை வழிநடத்திய ஜான் செல்வின் என்ற அற்புதமான மனிதர்(நிறுவன மேலாளர்)-பல முறை பல குழுக்களோடு சென்றவர்தான் என்றாலும் ஏதோ அப்போதுதான் முதல் முறையாக அந்த இடத்தைப் பார்ப்பவர் போன்ற ஆர்வத்தை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்திப் பயணத்தை உற்சாகமாக..விறுவிறுப்பாக ஆக்கியவரும் ,அதன் வழி பயண ஆர்வம் துளிக் கூடக் குறைந்து போய்விடாமல் பார்த்துக் கொண்டவரும் அவரே.

என் பலநாள் கனவைப் பயனுள்ள வகையில் மெய்ப்படச் செய்து.....
அந்தப் பதினெட்டு நாட்களை... என் வாழ் நாளில் என்றென்றும் மறக்க முடியாத கல்வெட்டு நாட்களாக்கிய ’ஷாலோ’முக்கு ஒரு சலாம் !

என் பயணம் குறித்து வலை வழி அறிந்து எனக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பிய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

விரைவில் ஐரோப்பா அனுபவங்கள் சிறிது சிறிதாக வலையில் மலரும்.

பி.கு:நான் சென்ற பயண நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அதன் முகவரியை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.
Mr.John Selwin,
Shalom Tours and Travels,91,Arunachalam Street,Chindadripet,
Chennai-600002
ph:044-28453655,044-28453764,04428457671

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....