துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.1.10

பத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி



தமிழ்ப்பேராசிரியர்கள் நவீன இலக்கியத்திற்கும், படைப்பாக்கத்திற்கும் அந்நியமானவர்கள் என்ற பிம்பத்தைத் தகர்த்தெறிந்து, அவ் வசை கழித்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர், ‘இந்திரா பார்த்தசாரதி’ என்ற புனைபெயரைக் கொண்டிருக்கும் டாக்டர் ரங்கனாதன் பார்த்தசாரதி.

தில்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்த  திரு இ.பா அவர்கள், போலந்தின் வார்ஸா பல்கலையிலும் ‘வருகை தரு’(Visiting Professor  ) பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இறுதியாகப் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் சுவாமி சங்கரதாஸ் நாடகப் பள்ளியை நிறுவி,அதன்  இயக்குநராகச் செயலாற்றி,  நாடக நிகழ்கலையில் ஆர்வம் கொண்ட பலரின் உருவாக்கத்துக்குத் தூண்டுகோலாக விளங்கியிருக்கிறார்.

பேராசிரியப் பணிக்கிடையே படைப்பிலக்கியத் துறையின் பல தளங்களிலும் இடையறாத முனைப்போடு இயங்கித் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்கள் பலவற்றையும்,நாடகங்களையும்,சிறுகதைகளையும் உருவாக்கியிருப்பது...இ.பாவின் மற்றொரு பரிமாணம்.

கீழவெண்மணியில் நிகழ்ந்த கலவரத்தைப் பின் புலமாகக் கொண்ட ‘குருதிப் புனல்’  நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசையும், 
வேதபுரத்து வியாபாரிகள்’ என்னும் (சமகாலஅரசியல் அங்கத) நாவலுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருதையும்,
‘ராமானுஜர்’ நாடகத்திற்காக ஞான பீட பரிசுக்கு நிகரான- இந்தியாவின்  சரஸ்வதிசம்மான் விருதையும் வென்றிருக்கும் திரு இ.பாவுக்கு.....
இந்தக் குடியரசு நாளில் ‘பத்மஸ்ரீ’ விருதை அறிவித்திருப்பதன் மூலம் மைய அரசு , தன்னைக் கௌவரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மெல்லிய எள்ளலோடு கூடிய பாணியைக் கையாளும் இ.பாவின் படைப்புக்கள் பெரும்பாலும் நகர்சார் வாழ்வின் நடப்பியலை ஒட்டி அமைந்திருப்பவை.
’கால வெள்ளம்’,’தந்திர பூமி’,’திரைகளுக்கு அப்பால்’’மாயமான் வேட்டை’,’ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’...மேலும்
வார்ஸாவில் பெற்ற அனுபவப் பதிவால் உருப் பெற்ற ’ஏசுவின் தோழர்கள்’ ஆகியவை தவற விடாமல் படித்தாக வேண்டிய இ.பாவின் ஒரு சில நாவல்கள்.

நவீன நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இ.பா உருவாக்கிய குறிப்பிடத்தக்க நாடகப் பிரதிகள்,
’மழை’, ’ஔரங்கசீப்’, போர்வை போர்த்திய உடல்கள்’, ’கால இயந்திரம்’ ஆகியன. 
புராணம் ,மற்றும் காப்பிய மறுவாசிப்பால் எழுதிய நாடக ஆக்கங்கள் என்று அவரது  ‘நந்தன் கதை’ , ‘கொங்கைத் தீ’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்..
இ.பாவின் நாடக முயற்சிகள் பற்றிய ஒரு குறும்படத்தையும் சாகித்திய அகாதமி வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

சேதுமாதவனின் இயக்கத்தில் ‘மறுபக்க’ மாய்த் திரைப்பட உருவெடுத்துத் தேசிய விருதை வென்றிருப்பது,‘உச்சிவெயில்’என்னும் இ.பாவின் குறுநாவலேயாகும்.

சிலப்பதிகாரத்தின் மறு பார்வையாக அமைந்த ‘கொங்கைத் தீ’ நாடகமும், ‘வெந்து தணிந்த காடுகள்’ நாவலும் பெண்ணியத்துக்கான இ.பாவின் பங்களிப்புக்கள்.

கண்ணனை எந்தக் காலத்துக்கும் ஏற்றவனாக அர்த்தப்படுத்துகிற ’கிருஷ்ணா...கிருஷ்ணா....’ ,2003ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் இ.பாவின் வித்தியாசமான ஒரு நாவல் முயற்சி.

முன்பொரு தருணத்தில் தனக்கு வழங்கப்படவிருந்த  ‘கலைமாமணி’ பட்டத்தைத் துணிவோடு மறுதலித்த திரு இ.பா அவர்கள், ’பத்மஸ்ரீ’ விருதை மகிழ்வோடு ஏற்று , வளரும் தலைமுறைத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகத் திகழ வேண்டுமென்பதே நம் அவா.

பத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கத்தோடு கூடிய வாழ்த்துக்கள்.

5 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

நடகக் கலைஞர்களின் சார்பாக இ.பா. அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சீத்தா.பிரபாகரன்
புதுச்சேரி

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல பகிர்வு..

இந்திரா பார்த்தசாரதி சொன்னது…

அன்புள்ள சுசீலா அவர்களுக்கு,
நான் சாதாரணமாக 'Spam'பார்ப்பதில்லை.இன்று எதேச்சையாகப் பார்த்தேன். வலைப் பதிவு அனுப்பியதற்கு நன்றி.

உயிரோடை சொன்னது…

ப‌கிர்வுக்கு ந‌ன்றி அம்மா. மேலும் இந்திர‌ பார்த்த‌சார‌திக்கு வாழ்த்துக‌ளும்.

உயிரோடை சொன்னது…

ப‌கிர்வுக்கு ந‌ன்றி அம்மா. மேலும் இந்திர‌ பார்த்த‌சார‌திக்கு வாழ்த்துக‌ளும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....