துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.10.10

காட்டுக்குள்ளே திருவிழா !



பணி நிறைவு பெற்றதிலிருந்து,கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் புது தில்லியில் மகள் மருமகனுடன் வாசம் !
கண்ணாடியில் என் இளம்பருவத்தைப் பார்த்துக் கொள்வது போல...என்னின் நீட்சியாய்..என்னைக் கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பிரதி எடுத்த இளசுகளாய்க் காலைச் சுற்றிவரும் இரு பேரப்பிஞ்சுகள் !
புழுதி படிந்து புறாப்பறக்கும் புராதனக் கோட்டைகள் !
இலக்கிய இளைப்பாறலுக்குப் புத்தகங்கள்..,வடக்கு வாசல்..,மற்றும் கணினியின் வலைகள்!
கலாசார,ஆன்மிகத் தொடர்புகளுக்குத் தமிழ்ச்சங்கமும்,மனவளக் கலைமன்றமும்!
படிக்க எழுதத் தெரிந்திருந்தாலும் பேச வராமல் அடம் பிடிக்கும் ஹிந்தி !
ஆண்டில் ஒரு முறையோ இரு முறையோ தெற்கு நோக்கிய பயணம்!
முப்பதாண்டுக் காலம் ஒன்றிக் கலந்து, நட்பு வட்டத்திலிருந்த ஒவ்வொருவரைச் சந்திப்பதற்கும் முப்பது மணித் துளிகளை மட்டுமே
ஒதுக்கிவிட்டு....அடுத்த மதுரைப் பயணம் குறித்த மாளாத ஏக்கத்துடன் தில்லி திரும்பியாக வேண்டிய அவதி !

வழக்கமான இந்த வாழ்க்கை நியதியிலிருந்து சற்றே விலகி...எதிர்பாராத இனிமையான ஒரு மாற்றத்தை எனக்குப் பரிசாக அளிக்க விரும்பிய என் மகள் இவ்வாண்டு மார்ச் மாத வாக்கில் இவ்வாறு அறிவித்தாள்...
‘’பிப்ரவரிமாதம் உங்கள் 60 ஆம் ஆண்டின் பிறந்த நாள் சத்தமே இல்லாமல் கடந்து போயிருக்கலாம்;ஆனால் நான் அதை அப்படி விடப் போவதில்லை.ஜூனில் மதுரை செல்லும்போது எனக்கு வேறு திட்டம் இருக்கிறது’’
எனக்கு வயிறு சற்றுக் கலங்கித்தான் போயிற்று.
காரணம் அவள் நினைத்ததை முடிப்பவள்.
பொதுக் கூட்டம் போல நிகழும் சம்பிரதாயமான மணிவிழாக் கூட்டங்களின் போலித் தனங்களைக் கண்டு எப்பொழுதுமே எனக்கு ஒருவகை அருவருப்பு உண்டு...
அது அவளும் அறிந்ததுதான் என்றபோதும் என் பங்குக்கு எச்சரிக்கை விடுத்தேன்.

‘’அப்படியெல்லாம் எதுவும் இருக்காது....ஆனால் ஏதோ ஒன்று இருக்கும்.அது என்னவென்றோ ...எப்படி ....எந்த வகையில் நிகழப் போகிறதென்றோ கேள்விகளும் எழுப்பக் கூடாது..அதைத் தெரிந்து கொள்ளவும் முயலக்கூடாது’’என்று மறு மொழி கிடைத்தது.

நிபந்தனைகள் பலமாக...புதிராக இருந்தாலும்...புதிரை அவள் விரும்பும் கணத்தில் அவிழ்த்துக் கொண்டு அதன் சுவாரசியத்தைத்தான் கொஞ்சம் நீட்டித்துக் கொண்டுவிடுவோமே என்று உள் மனம் ஓதியதால் 
‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டபடி,வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
ஒரே கூரைக்கடியில் ஏதோஒரு சுகமான ’சதி’நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஊகிக்க முடிந்தாலும் 
(என் புத்தக அடுக்குகள் மற்றும் புகைப்பட ஆல்பங்கள் சற்றுச் சீர்குலைந்திருப்பதை வைத்தும், இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கத்தைத் தழுவிவிடும் மகள்பின்னிரவு நேரம் வரை விழித்திருக்கும் புதுமையைக் கண்டதாலும் )
புதையல் பொதியை நெருங்கும் இறுதிக் கட்டத்திற்காக அமைதியாகக் காத்திருக்கத் தொடங்கினேன்.

ஜூன் பிறந்ததும் கறாராக வரையறுக்கப்பட்ட ஒருசில முடிச்சுக்கள் மட்டும்...(அதுவும் கூட ஏற்பாட்டு வசதிக்காகத்தான்)மொட்டவிழத் தொடங்கின.
ஆத்மார்த்தமான நட்புக்களுக்கும்,மனதுக்கு நெருக்கமான ஒரு சில உறவுகளுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 
ஜூன் 10 அன்று கேரளத்தின் காட்டுப் பகுதியில் ,ஒரு விழாக் கூடுகை நிகழப் போகிறது...இதில் எனக்குள்ள பங்கு ,மதுரை நண்பர்களுடன் ஜூன் 9 பிற்பகலுக்குள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்து விட வேண்டியது மட்டுமே..

என்ன நிகழ்ச்சி எப்படி நிகழப்போகிறது என்பது மட்டும் ஒரு மர்ம முடிச்சாகவே இருந்து கொண்டிருக்க இடையிடையே சில தமாஷ்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.
அழைப்பிதழ் கிடைத்ததும் என் நண்பர்கள் முதலில் என்னைத் தொலைபேசியில் அழைத்து அதைப் பற்றிச் சிலாகித்துப் பேசத்தொடங்கி விடுவார்கள்;அழைப்பிதழ் ஒன்று இருப்பதையே அறியாமலிருக்கும் நான் நிதானிப்பதற்குள் எங்கிருந்தோ ஒடி வந்து அலைபேசியைக் கைப்பற்றிக் கொண்டுவிடும் என் மகள் தனியாக ஒரு மூலைக்கு நகர்ந்து போய் எது பற்றியும் மூச்சு விடக் கூடாதென்று அவர்களை எச்சரிக்க ஆரம்பித்து விடுவாள்.

நாளாக ஆக நண்பர்களுடனான தொலைபேசி உரையாடல்களில்... அவர்களும் கூட ஏதோ ஒரு மாய நாடகத்தின் கூட்டாளிகள் போலவே எனக்குத் தென்படத் தொடங்கி விட்டனர்.

ஜூன் 9 காலை நான்கு மணிக்கு மதுரையிலிருந்து தோழியருடன் ஒரு தனிச் சிற்றுந்தில் கிளம்பி...கோவை,ஆனைகட்டி வழியே பிற்பகல் ஒரு மணியை எட்டும்போது முக்காலிக்கு அருகிலுள்ள வனத் துறைத் தங்கும்விடுதியை வந்தடைந்தபோது.....விருந்தினர் விடுதியின் வாயிலிலேயே எங்களை எதிர்கொண்டது என் மகளின் தலைமையிலான வரவேற்புக் குழு.
முதன் முதலாக அழைப்பிதழ் என் முன்பு நீட்டப்பட்டது அப்போதுதான்.
முன்பொருமுறை நான் எடுத்திருந்த அமைதிப் பள்ளத்தாக்கின் புகைப்படமும் ,24 வயதில் எடுக்கப்பட்ட என் புகைப்படமும் ஒருங்கிணந்த- கணினியில் தயாரிக்கப்பட்ட -எளிமையான -அன்பின் ஆழம் பொதிந்த அந்த அழைப்பைக் கண்டதும் கண்கள் குளமாக ,அடுத்த முடிச்சும் விலகிப் போனது.

நெகிழ்வுப்பகிர்வைக் காட்ட நேரம் அளிக்காமல் அடுத்த ஏற்பாட்டுக்கான ஆயத்தங்களோடு மகள் அங்கே ஆஜரானாள்.
‘’வனத் துறையினரின் அனுமதியோடு அமைதிப் பள்ளத்தாக்குள் அடர்த்தியாய்ப் பயணித்து வர இரு பேருந்துகள் தயார் நிலையில்....!உடனே உணவை முடித்துக் கொண்டு கிளம்புங்கள் ..’’என்று பரபரத்தாள்.
விழா 10 ஆம் தேதிதானே...எல்லோரையும் முதல்நாளே வரச் சொன்னது ஏன் என்பதற்கான மர்மத் திரையும் விலகி வழிவிட ,அட்டகாசமான ஆரவாரத்தோடு அடர் காட்டில் அப்பிக்கிடந்த அட்டைகளுக்கு ஊடே எங்கள் பயணம் தொடர்ந்தது.
அமைதிப் பள்ளத்தாக்கின் உச்சமான சைரந்திரியை எட்டுகையில் அங்குள்ள கண்காணிப்புக்கோபுரத்தில் ஏறி நாற்புறமும் அடர்ந்து செறிந்து ஆழத்தில் அமைதியை உறையவிட்டபடி இருக்கும் அமைதிப் பள்ளத்தாக்கின் எழிலை ரசிக்க முடியாமல் இயற்கைஅடைமழையாய்ப் பொழிந்து தடை போடக் காட்டு மழையில் கொஞ்சம் நனைந்து குளிர்ந்து அதையும் ரசிக்கத்தக்க அனுபவமாக ஆக்கிக் கொண்டு மாலை ஆறு மணி அளவில் விருந்தினர் விடுதிக்கு மீண்டோம்.
மறு நாள் என்னதான் நடக்கப் போகிறது ...அது இன்னமும் மர்மமாகவே இருந்து கொண்டிருக்க....
பழங்கதைபேசிச் சுகமான கடந்தகால நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நண்பர்கள் - இடையிடையே மகளுடன் ஏதோ ரகசியம்பேசிக் கொண்டிருந்தாலும் என்னிடம் மட்டும்அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராணுவக் கட்டுப்பாட்டையே கடைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 ஜூன் 10 விடிந்ததும் விழாவுக்கான நிகழ்ச்சி நிரல் சீரான கணினிப்பிரதியாகக் கைக்கு வந்து சேர....அதிலும் முழுமையான விவரமில்லை.
சுவையான மர்மத்தின் நிழல் இன்னும்கூடப்பின் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
வனத் துறை விருந்தினர் விடுதியிலிருந்து பேருந்து மூலம் சில கிலோமீட்டர் தொலைவிலிருந்த பவானி ஆற்றின் கரைக்கு ....ஒரு சிறிய மலைச் சரிவுக்கு - தேக்கு வட்டு என்ற பகுதிக்கு வந்து சேர்ந்தோம்

அதன் பின்னர் அந்த நிகழ்வு எவ்வாறு நடைபெற்றது என்பதை எனது தோழி ஒருவரின் பதிவாகக் கீழே தந்திருக்கிறேன்.
அதை நானே விவரிப்பதிலுள்ள கூச்சமும்,அதனால் விளைந்த மனத் தடையும் ஒரு புறமிருக்க,
இத்தனை சம்பவங்களையும்...ஏற்பாடுகளையும் ஒரே வீட்டிற்குள் இருந்தபடி எந்த ஆரவாரமுமில்லாமல் - துளிக்கூட ரகசியம் கசிந்து விடாமல் -எப்படி என் மகளும்,மருமகனும் செயலாக்கிக் காட்டினார்கள் -ஒரு புத்தக வெளியீடு இருக்கிறது என்ற விஷயத்தைக் கூட எப்படிப்பொத்திப் பொத்தி அடை காத்தார்கள் என்ற பிரமிப்பு ,இன்னும் என்னுள் விலகாமல் ஈரம் கசிந்த நிலமாக இருந்து கொண்டிருக்கிறது.

கல்லூரிச் சூழலிலேயே வாழ்நாளின் செம்பாதியைக்கழித்து விட்ட ஒரு தாயின் மன உணர்வுகளை நுட்பமாக உள் வாங்கிக்கொண்டு அவளது ரசனைக்கு ஏற்றபடிபடியே விழா எடுத்ததோடு,வாழும் காலத்திலேயே தாயைப் பற்றிய நூலை எழுதி வெளியிட்டு,

மலரும் நினைவுகளைப் பதட்டமின்றி அசைபோட்டபடி.,..

நட்புக்களோடு இரு முழு நாட்களைக் கொண்டாட்டமாய்ச் செலவழிக்க வழியமைத்துத் தந்த , என் மகளைப் பற்றி நானே சொல்லிக் கொள்வது மிகையாகப் பட்டாலும் அந்த நிகழ்வு சார்ந்த என் ஆழ்மன உணர்வுகளைத் தவறாமல் நான் ஏதோ ஒரு இடத்தில் பதிவு செய்தே தீர வேண்டும்.அதுவே தாய் மகட்காற்றும் நன்றி..’’இன்னும் இது போன்ற நெகிழ்வான தருணங்களில் நகர்ந்து செல்லட்டும் உங்கள் நாட்கள்’’என்றார் ஒரு இணைய நண்பர்.வாழ்க்கைப் பயணத்தின் நகர்வில் மனதில் அழியாச் சுவடு பதிக்கும் நாட்கள் வெகு சிலவாகவே இருக்கின்றன.என் வாழ்க்கை ஏட்டின் பக்கங்களில் ஜூன் 9ம்,10ம்(2010)அப்படித்தான்.

இனி என் தோழியின் விவரிப்பில் விழா...

.

















பள்ளத்தாக்கின் கூழாங்கற்படுகையில் ஓடுகிற பவானி ஆறு!





சூழ நிற்கும் மலை மேல் அடிக்கொரு தரம் அமர வரும் மேகக் கூட்டங்கள்!



நதியைப் பார்த்தவாறு நிற்கிறது விழாப்பந்தல்!.





வாழைமரத் தோரண வாயில் அருகே தென்னம்பாளைக் கீற்றுக்கள் அசைகையில் 'SUSI60FEST' என்ற எழுத்துக்கள் வண்ண மயமாக மின்ன அசத்துகிறது பந்தல்!

மலைச் சரிவில் இறங்கி வரும் விருந்தினர்களுடன் கூடவே இறங்கி வருகிறார் சுசீலா.


உங்கள் நீண்ட நாள் நண்பர்களுடன்... கேரளத்தின் அமைதிப்பள்ளத்தாக்குப் பகுதியில் - ஆற்றங்கரை ஒன்றில் ஒரு சிறிய பிக்னிக்’என்று மட்டுமே தனக்குச் சொல்லப்பட்டிருந்ததால் விழாப் பந்தலைப் பார்த்ததும் எதிர்பாராத அதிர்ச்சியில் திகைக்கிறார்.

நதிக்கரையோரம் மேசை போட்டு சந்தனம்,பன்னீர்செம்பு,கல்கண்டு,பூக்கள் சகிதம் வருவோரை வரவேற்ற்ற கையோடு வித்தியாசமானதொரு புகைப்படக் கண்காட்சிக்கு நெறிப்படுத்துகிறது வரவேற்புக் குழு.



சமீப கால சுசீலாவின் Life size blow-up மேடையின் முகப்பாக அமைக்கப்பட்டிருக்க ,(அவரை மட்டும் வி.ஐ.பி.நாற்காலியில் தனியாக அமரவைத்து அந்நியப்படுத்தும் சம்பிரதாயத்தை உடைப்பதற்காகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்தது அது)
.பந்தலின் ஒரு புறம் நெடுக...கறுப்பு வெள்ளையில் 6 வயது பட்டுப் பாவாடை இரட்டைப்பின்னல் சுசீயில் தொடங்கி,60களின் சுசீயில் நீண்டு,2009 சுவிட்சர்லாந்து பயணத்தில் பனிக்கட்டி பொம்மைக்கு நடுவே சிரிக்கும் சுசீ, இரண்டு பேரக் குழந்தைகளையும் அணைத்தபடி சிரிக்கும் சுசீ,இலக்கிய நாடக மேடைகளில்...மற்றும் விருதுகள் பெறும்போது எடுத்த படங்கள் என ஒரு வாழ்வின் மைல்கற்களை நிஜமாய்க் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் நிழற்படத் தொகுப்பு கண்காட்சியாய் விரிகிறது.

தாகூரின் கவிதையுடன் இறை வணக்கம் முடிந்தபின்,சுசீலாவின் வாழ்வின் அர்த்தமுள்ள மூன்று இருபது ஆண்டுத் தொகுப்பை நினைவு கூரும் வகையில் மேடையில் வைக்கப்பட்டிருந்த மூன்று குத்துவிளக்குகளை (Dream,Purpose,Inspiration)  ஏற்றுமாறு முறையே அவரது இளம்பருவத் தோழியர்,சமகால சகாக்கள்,இளம் தலைமுறை இலக்கிய வட்டத்தினர் என மூன்று சாரார் தனித் தனியேஅழைக்கப்படுகின்றனர்.
மலைக் காற்றின் வேகம் விளக்குச் சுடரோடு போர் தொடுக்க...
‘’தன் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் தன் ஆக்க சக்தியின் கனலை சுசீலா அணைய விட்டதில்லை’’என்று பொருத்தமாய்க் கூறுகிறார் நண்பர் ஒருவர்.

நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் எங்கெங்கிருந்தோ வந்து சேர்ந்திருக்கும் சிறு பருவத் தோழர் முதல் சமீபத்திய நட்பு வரை...அவர் குறித்த நினைவலைகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ள...,மலைக் காற்றின் ஈரம் இன்னமும் சற்றுக் கூடுதலாகிறது.






சுசீலாவின் உறவினர்கள்,உடன் பணியாற்றிய பேராசிரியத் தோழியர்,கேரளத்தைச் சேர்ந்த அவரது மருமகனின் பெற்றோர் என ஒவ்வொருவரும் உறவு,பணி ஆகிய வரையறைகளைக் கடந்து சுசீலவைப் பற்றிய நினைவுகளை நட்பு ரீதியில் மட்டுமே பகிர்ந்து கொண்டபோது ‘மணிவிழா’ என்ற நிகழ்வையும் தாண்டி...ஆற்றங்கரையோரம் ஒரு நட்பு வட்டத்தின் ஆத்மார்த்தமான சங்கமிப்பு நிகழ்ந்து கொண்டுப்பதை அங்கு கூடியிருந்த அனைவராலும் உள்ளூர உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஐம்பதாண்டு உறவுகள்....

நாற்பதாண்டு நட்புக்கள்....

பத்தாண்டுக்கால சம்பந்தியுடனான சிநேகம்...

இவற்றின் மொழிகள்தமிழ்,ஆங்கிலம்,மலையாளம் என மலையோரம் எதிரொலிக்க ‘நட்பு’என்னும் ஒரே ஒரு இழை மட்டுமே அனைவரையுமிறுகப் பிணைத்து வைத்திருக்கிற அதிசயத்தை அங்கே காண முடிந்தது.



ஒரே வீட்டிலிருந்தபடி -அவருக்கு ரகசியம் எட்டிவிடாமல்..ஒளித்து வைத்துப் பயிற்சி செய்த நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை அவரது 8 வயதுப் பேத்தியும்,4வயதுப் பேரனும் அங்கே அரங்கேற்றியது அருமை.
தந்தைவழிக் கேரளத்து உறவான சித்தியின் தாளத்துக்குப் பேத்தி சோபனா நடனமாட,சின்னஞ்சிறு பேரன் ஜோதிர் ,கமாண்டோ உடையில் வீர வசனம் பேசிக் கலக்கப் பந்தலில் எழுந்த கைதட்டலோடு தென்றலும் கை கோர்த்துக் கொண்டது.






நடனப் பட்டதாரியான குழந்தைகளின் சித்தி ரகசியமாய்த் தயாரித்த இரண்டு சிறப்பு நடனங்களை அரங்கேற்ற,இசைப்பட்டதாரியும் பாடகருமான சித்தப்பாவின் பாடல் ஜேசுதாஸையே விழாவுக்கு அழைத்து வந்து விட்டது.

சுசீலாவின் நேரடி உறவினர்களான மாமன் மகள்,மாமன் மகன் ஆகியோர் தங்கள் நினைவுப் பெட்டகத்தைத் திறந்து காட்டியது ஒரு புறமிருக்க...எவரும் சொல்லாமலே ஊக்கமும்,உற்சாகமுமாய்த் தங்கள் உணர்வுகளைக் கவிதையில் வடித்தளிக்க அதிகம் பழகியிராத அவர்களின் வாழ்க்கைத் துணைகளும் தானாகவே முன் வந்தது நெகிழ்வூட்டும் அனுபவம்.

நண்பர்களின் மனநிலை வார்த்தைகளின் விவரிப்பு அப்பாற்பட்ட ஆழ்கடல்...
கண்கள் பனிக்காமல்....
மனம் தளும்பி வாழ்த்தாமல்...
ஆனந்த அழுத்தம் சுமக்காத எவரும் அங்கே எஞ்சவில்லை.

அடுக்குமொழியில் அனைவரையும் கட்டிப்போட்ட அன்புமீனாள்..,
நட்புக் காவியமாய்க் கவிதை வடித்த பாத்திமா...,
ஆசீர்வாதம் வழங்கிய மிக மூத்த பேராசிரியை இந்திராசுப்புலட்சுமி...,
அசத்தல் நினைவுகளால் ஈர்த்த அனுராதா..,
மணிமுத்துச் சிதறலாய்க் கவனம் கவர்ந்த மைதிலி..,
ரத்தினச் சுருக்கமாய் உதிர்ந்த இயற்பியல் பேராசிரியத்தோழி சுசீலாவின் சொற்கள்..
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலச் சக்கரத்தில் ஏற்றிச் சென்று நிலை மறக்க வைத்த பாலிய பருவத் தோழி லலிதா..
என்று பலர் பொறித்த நினைவுக் கல்வெட்டுக்கள் நதிக்கரையோரம் பொறிக்கப்பட...
கவின் மலையாளத்தில் தனது சம்பந்தியின் சிநேகத்தைக் குறித்து ‘சம்சாரிக்கி’றார் சுசீலாவின் மருமகன் பிரமோதின் தாய் விஜயம்மா.

அடுத்த கணம்....முத்தாய்ப்பாக எவரும் எதிர்பாராத...கற்பனை கூடச் செய்திராத ஒரு திருப்பம் சட்டென நிகழ்கிறது.
அவரது ஒரே மகள் மினு பிரமோத் தன் தாயைப் பற்றி எழுதிய ’SUSI MY MOTHER' நூல் வெளியிடப்படுகிறது.(அதையும் அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவரது முக பாவனையே காட்டிக் கொடுத்து விடுகிறது)
வித்தியாசமான இயற்கைச் சூழலில் வியக்க வைக்கும் இவ் விழாவை நடத்திக் காட்டிய அவரது மருமகன் பிரமோத்கிருஷ்ணன் முதற்பிரதியை அவருக்கு அளித்துச் சிறப்புச் செய்கிறார்.
சலசலக்கும் பவானியும் உடன் கலந்து கொள்ள..தேசிய கீதத்துடன் விழா முடிவடைகிறது.
மத்திய அரசுப் பணியில் இருக்கும் அவரது மகளும்,ஐ.நாவில் பணியாற்றும் மருமகனும் இவ் விழாவைப் பற்றிக் குறிப்பிடும்போது,
‘’பந்தல் ஏற்பாடு முதல் புத்தக வெளியீடு வரை அம்மாவுக்குத் தெரியாமல் வைத்திருந்ததுதான் விழாவின் ஹைலைட்’’என்றனர்.
  'SUSI MY MOTHER' நூலில்
‘’யாரும் பயணித்திராத பாதைகளில் விருப்பத்துடன் பயணித்து வாழ்வின் போர்க்களத்தைத் தனியொரு பெண்மணியாய்ச் சந்தித்து வெற்றிவாகை சூடியவர்
என்று தன் தாயைப் பற்றிக் குறிப்பிடுகிறார் மினுபிரமோத்.
‘’நம் விழாக்கள் அடைக்கப்பட்ட அரங்கங்களைத் தாண்டி எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில் நடைபெறும்போதுதான் அவை செயற்கைத்தனமற்று உண்மையின் அழகைப் பிரதிபலிக்கும்’’
என்கிறார் விழாவில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர்






தினமலரின் வாரமலர்-திருச்சி பதிப்பு

25 கருத்துகள் :

Pg Saravanan சொன்னது…

காட்டுக்குள்ளே திருவிழா வழக்கமான விழாவாக இல்லாமல் பேரன்புப் பெருவிழாவாக நடந்தேறியதை உங்கள் எழுத்தும் உங்கள் தோழியின் எழுத்தும் அழகாய்ச் சொல்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் அம்மா.

துளசிகோபால் சொன்னது…

இனிய வாழ்த்து(க்)கள் . தில்லி வரும்போது சந்திக்க விருப்பம். இப்போது சண்டிகரில் வாசம்

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள்

தேனம்மைலட்சுமணன் சொன்னது…

அம்மா என்னிடம் வார்த்தைகளில்லை.. மீனு நீ கொடுத்து வைத்தவள்.

ஜெய்லானி சொன்னது…

வாழ்த்துக்கள்..!!

kggouthaman சொன்னது…

வாழ்த்துகள்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி சொன்னது…

அருமையான உறவுகளின் பரிசு
அற்புதம்.

கார்த்திகா வாசுதேவன் சொன்னது…

சுசிலாம்மா சந்தோசமாய் இருக்கிறது இந்தக் கட்டுரையை படிக்க. இயற்கையோடு கை கோர்த்துக் கொண்டு தன் அம்மாவின் ரசனையை கொண்டாடி ஒரு புத்தக வெளியீட்டு விழா நடத்தி முடித்த உங்கள் மகளின் ஆர்வம் சுவாரஸ்யமானது. சரியான திட்டமிடலோடு பின்பற்றத்தக்கதும் கூட.

உங்கள் பிறந்தநாள் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

சென்ஷி சொன்னது…

மகிழ்வான தருணங்கள் கிடைத்தலரிது. அதை அப்படியே உணர்வாய் வடித்தலுமரிது.. தங்களின் மகிழ்வை எழுத்தில் வடித்தது எங்களையும் உற்சாகப்படுத்தியது

கலாநேசன் சொன்னது…

நீங்கள் மிக கொடுத்துவைத்தவர். இப்படி ஒரு மகளைப் பெற்றதற்கு.....

படிக்க படிக்க பிரமிப்பாய் இருக்கிறது உங்கள் விழா.

உங்கள் தோழியின் விவரிப்பில் உள்ள சில புகைப்படங்களை பார்க்க இயலவில்லை. சரி செய்யவும்

ஜெரி ஈசானந்தன் சொன்னது…

அம்மா வணக்கம்,இப்படி ஒரு மகளை பெற்றது உங்கள் பாக்கியமா?இப்படி ஒரு தாய் கிடைத்தது உங்கள் மகளின் பாக்கியமா?மொத்தத்தில் உங்களை நான் இன்று தெரிந்துகொண்டது என் பாக்கியம். வாழ்க வளமுடன்

அப்பாதுரை சொன்னது…

மறுபடியும் படித்தேன்.
உங்கள் சொல்லாட்சியும் அடுக்கு மொழியும் அற்புதம்.

நண்டு @நொரண்டு சொன்னது…

அருமை

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பு நண்பர்களுக்கு,
காட்டுக்குள்ளே திருவிழா பதிவைப் படித்துவிட்டு, அன்பின் நெகிழ்வோடு எனக்குச் செய்தி அனுப்பிய உங்கள் அனைவருக்கும் என் பிரியமும்,நன்றியும்.
சற்றும் எதிர்பாராத வகையில் அந்தப் பதிவு இயங்காமல் போனதால் இப்போது புதிய பதிவாக அதை மீண்டும்வேறு முகவரியில் வெளியிட்டிருக்கிறேன்.
உங்கள் எதிர்வினைகளையும் புதிய முகவரியிட்ட பதிவில் உங்கள் வலைப்பூ இணைப்புக்களோடு இணைத்துப் போட்டிருக்கிறேன்.
மீண்டும் நேசமுடன்,
எம்.ஏ.சுசீலா,

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல பதிவு.

MuthuKrishnan சொன்னது…

அடடா நாங்கள் இந்த விழாவுக்கு அழைக்கபடலயே என ஏக்கம் சொல்லச்செய்யும் பதிவு... புகைப்படங்களை மட்டும் ஒரு பதிவாக விரிவாக பதிவேற்றம் செய்யலாம் உங்கள் FACEBOOK ல்

R. Gopi சொன்னது…

சூப்பர் பதிவு

சரவணகுமார் சொன்னது…

சரவணகுமார்,அபுதாபி.
படிக்க படிக்க ஏங்கிட்டேன் மேடம், கொடுத்து வச்ச மகாராசி... எனக்கு கண்ணு கலங்கியிருச்சி... உங்க மக கலக்கிட்டாங்க மேடம்...இதையெல்லாம் நேர்ல பாரத்தவங்க அசந்து போயிருப்பாங்க .வாழ்வின் சூப்பரான கணங்கள்........ வாழ்த்துக்கள் மேடம்

jas diaz சொன்னது…

Dear Madam,
It is indeed a blessing to have such a daughter, son-in-law and grand children.
All the best.
regards,
Diaz

ஜெயபாண்டியன் சொன்னது…

வாழ்த்துக்கள்!!

அண்ணாமலையான் சொன்னது…

சிறப்பா இருக்கு... வாழ்த்துக்கள்.

சித்தார்த் சொன்னது…

இன்று தான் உங்களது காட்டுக்குள் திருவிழா பதிவினை படித்தேன். நெகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள்

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்கம் அம்மா வாழ்த்துகள்.நெஞ்ம் நெகிழும் பதிவு.

Unknown சொன்னது…

பாசமும் நேசமும்தான் வாழ்வின் இன்றியமையாதது என்பதை, இந்த பதிவு நினைவூட்டுகிறது. பெற்ற அன்னையையே எங்கோ இருக்கும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு , குளிர் அறைகளில் சுகமாய் வாழும் மனிதர்கள் நிறைந்த இக்காலத்தில் .

தாயை நேசிக்கும் தங்கள் மகள், மருமகன் போன்ற நல்லவர்கள் இருப்பதினால்தானோ இன்னும் மாரி பொய்க்காமல் பெய்து வையகத்தை செயல்பட வைக்கிறது என்ற எண்ணங்களை மனதில் எழ செய்துள்ளது தங்களது இந்த பத்தி.
தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை
சிறப்புடன் வளரட்டும் தங்கள் தலைமுறை.
வாழ்த்த வயதில்லாவிட்டாலும்
தங்கள் குடும்பம் தலைத்தோங்க
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....