துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.2.11

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (2)

சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு நாஞ்சில் நாடனுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா 16/02/11 மாலை மிகச் சிறப்பாகநடைபெற்றது.
தில்லித் தமிழ்ச்சங்கப் பாராட்டு விழாவில் நாஞ்சில் நாடன்

 பிப்ரவரி பிறந்ததிலிருந்து சிறிது அடங்கத் தொடங்கியிருந்த குளிர், சிறு மழை காரணமாகச் சீறிச் சிலிர்த்தெழுததால்,விழா தொடங்கச்
சற்றுத் தாமதமாயிற்று; அதனால் விளைந்த நன்மை, நாஞ்சிலுடனும்,அவரது துணைவியாருடனும் சற்று மனம் விட்டு உரையாட நேரம் கிடைத்தது.’எலிப்பத்தாயம்’போன்ற ஒன்றில் மாட்டிக் கொண்டது போலத் தான் உணர்வது போல நாஞ்சில் எங்களுடனான தனித்த உரையாடலில் குறிப்பிட்டார்.கலைமாமணி விழா,மதுரை விழா அனுபவங்களையும் அவரிடமிருந்து கேட்டறிய முடிந்தது
.
நாஞ்சிலுக்குச் சிறப்புச் செய்யும் தமிழ்ச்சங்க நிர்வாக அமைப்பினர்
செயலர் சக்திபெருமாள்,தலைவர் கிருஷ்ணமூர்த்தி..


விழாத் தொகுப்புரை
தில்லி வானொலித் தமிழ்நிகழ்ச்சிப் பொறுப்பாளர்
திரு குருமூர்த்தி...
தில்லி தமிழ்ச்சங்கப் பாராட்டு விழாவில் நாஞ்சில் நாடனுடன்
ஏ.ஆர்.ராஜாமணி,பேரா.நாச்சிமுத்து,நான்(எம்.ஏ.சுசீலா)
வடக்குவாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன்,
தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி..
விழாத் தலைமையேற்றிருந்த திரு சிற்பி பாலசுப்பிரமணியம் ,சாகித்திய அகாதமி அரங்கில் அப்துல்கலாம் பங்கேற்ற கூட்டமொன்றில்பங்கு பெற வேண்டியிருந்ததால் ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர்
திரு நாச்சிமுத்து அவர்கள் விழாத் தலைமை ஏற்றார்

1994இல் நாஞ்சிலின் படைப்பைப்படித்து விட்டுத் தான் எழுதிய கடிதத்தையும் அதற்கு நாஞ்சில் அளித்த மறுமொழிக் கடிதத்தையும் பாதுகாத்து வைத்திருந்த பேராசிரியர்,அவற்றை அவையினருடனும் பகிர்ந்து கொண்டார்.
சின்னச் சின்னவிவரங்களையும் நுணுகிக்கூறும் காவிய இலக்கியப்பண்பு நாஞ்சிலின் எழுத்தில் வாய்த்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்,
ஆ.மாதவனுக்கு விருது வழங்கிய கோவை விஷ்ணுபுர வட்ட நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்தார்.
திரைப்பட நடிகர்களையே பெரும்பாலும் முதன்மைப்படுத்தும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடையே ஜெயமோகன்,நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கும் வாசகவட்ட எழுச்சியும்,வரவேற்பும் எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டும் என்ற நிறைவு தனக்கு ஏற்பட்டிருப்பதையும் தனது உரையில் பேராசிரியர்,சிறப்பாகச் சுட்டிக்காட்டியது மகிழ்வளிப்பதாக இருந்தது.

பாராட்டுரை வழங்கிய நான், நாஞ்சில்நாடன் , நாஞ்சில்மண்ணின் மைந்தர் மட்டுமல்ல...-மும்பை,கோவை என எந்த மண்ணுக்குச்சென்றாலும் அங்குள்ள இயல்புகளைத்
(பழக்க வழக்கம்,பூகோளம்,உணவுப்பழக்கம் என அனைத்தையும்)
தனதாக்கிச் சுவீகரித்துவிடும் அவரை
உலக மண்ணின்மைந்தர்
என்பதே பொருத்தமாக இருக்கும் என்பதை அவரது பல சிறுகதைகளை மேற்கோளாகக் காட்டி விரிவான கருத்துக்களை முன் வைத்தேன்.

குறிப்பாக ‘சூடிய பூ சூடற்க’தொகுப்பை முதன்மைப்படுத்தி அதிலுள்ள ‘வளைகள் எலிகளுக்கானவை’,’யாம் உண்பேம்’,’பரிசில் வாழ்க்கை’ ,’படுவப்பத்து’’கொங்கு தேர் வாழ்க்கை’மற்றும் கும்பமுனிக்கதைகளை விளக்கமாகப் பார்வையாளர் முன் வைக்கக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன்.
மரபின் பின்புலத்தோடு நவீன இலக்கியம் படைத்து வரும் படைப்பாளிகள் அருகி வரும் காலகட்டத்தில் குறளையும்,திருமூலரையும்,ஆண்டாளையும்,கம்பனையும் மிகச் சரளமாகக் கதை ஓட்டம் குலையாமல் தன் படைப்புக்களில் கையாண்டிருக்கும் நாஞ்சிலின் மரபிலக்கியத் தாக்கங்களை எடுத்துக்காட்டும்வகையிலும் எனது உரை அமைந்தது.
யதார்த்த வாதக் கதைகளின் காலம் இன்னும்கூட உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதற்கு நாஞ்சிலின் கதைகள் பெற்றுவரும் வெற்றியே சாட்சி என்ற முத்தாய்ப்போடு உரையை நிறைவு செய்து கொண்டேன்.
(விரிவானதொரு ஆய்வுக் கட்டுரை போல எனது உரை அமைந்திருந்ததாகத் தன் ஏற்புரையின்போதும்,தனித்த சந்திப்பிலும் திரு நாஞ்சில்குறிப்பிட்டதை அவர் எனக்கு வழங்கிய நல்லாசியாகக் கொள்கிறேன்.
தனிப்பதிவாகத் தொடர்ந்து எனது உரையின் சாரத்தை வெளியிடுகிறேன்)

ஏ.ஆர்.ராஜாமணி..
தலைநகரின் மூத்த பத்திரிகையாளர் திரு ஏ.ஆர்.ராஜாமணி அவர்கள் நாஞ்சிலின் ‘கிழிசல்’கதை குறித்த சிறு அலசலை முன் வைத்த பிறகு , படைப்பாளியை அவனது படைப்பு தாண்டியும் பார்த்தாக வேண்டியிருக்கிறது என்றும்,அவ்வாறான பார்வை தனக்குக் க.நா.சுவிடமிருந்து வந்திருப்பதாகவும்குறிப்பிட்டார்.
தனது முன்னோடிகள்பலருக்கு விருது தந்திருக்க வேண்டும் என்றும் இதுவரை விருது தரப்பட்டிராத- விருது பெறும்தகுதியிலுள்ள 30 எழுத்தாளர்களுக்கு அரசு ஒட்டுமொத்தமாக விருது தர வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு நாஞ்சில் தனது புனைவுக்குள் மட்டுமே கவனம் செலுத்தினால்போதுமானது என்று தான் நினைப்பதாக ராஜாமணி அவர்கள்சொன்னாலும் , நகைச்சுவை கலந்த உரிமையான தொனியில் அதை அவர் குறிப்பிட்டதால் தவறாகத் தொனிக்கவில்லை;நாஞ்சிலும் அதைத் தவறாகக் கொள்ளவில்லை என்பதை அவரது ஏற்புரை எடுத்துக்காட்டியது.

வடக்கு வாசல் ஆசிரியர் திருபென்னேஸ்வரன்...
’தலை கீழ் விகிதங்கள்’காலத்திலிருந்து நாஞ்சில் நாடன் கதைகளின் மிகப்பெரிய ரசிகராகத் தான் இருப்பதைப் பெருமையுடன் அவையில் குறிப்பிட்ட வடக்கு வாசல் ஆசிரியர் திருபென்னேஸ்வரன், நாஞ்சில் முதலியோர் எழுதும்படைப்புக்களைப் பார்க்கும்போது நாமும் எழுதுதுகிறோம் என்று பேனா பிடிக்கவே கூச்சமாகவே இருப்பதாகத் தான் உணர்கையில்’கூகிள்’உபயத்தில் இணையத்தில் குவியும் குப்பைகள் எழுத்தாக எண்ணப்படுவதும்,உலக சினிமா , உலக இலக்கியம் என எல்லாமே  தெரிந்ததுபோலப் பலரும் பம்மாத்துக் காட்டிக் கொள்வதும் எந்த அளவு பேதமையானது என்பதை வருத்தத்துடன் எடுத்துக்க்காட்டினார்.

தில்லிக்குத் தற்செயலாக வர நேர்ந்த திரைப்பட நடிகர் தாமு அவர்களும் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் அவர்களும்..நாஞ்சிலைப் பாராட்டி சால்வை அளித்து ஆசி பெற்றனர்.

விழாவுக்கு வந்திருந்த திரைப்பட நடிகர் தாமுவும்,
அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜும்
நாஞ்சிலுக்குச் சிறப்புச் செய்கிறார்கள்.
.
மழையும்,குளிருமான மாலையில்
அரங்கின் கூட்டத்துடன்
திருமதி நாஞ்சில்நாடன்...


நாஞ்சில் நாடனின் நேர்த்தியும் நெகிழ்வுமான ஏற்புரை..அடுத்த பதிவில் விரிவாகத் தொடரும் .....

.

.

6 கருத்துகள் :

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

விரிவா பேசியது போலயே விரிவான தொகுப்பும் ..நன்றி சுசீலாம்மா..

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

நாஞ்சில் நாடனுக்கு இந்த மாதம் முதல்வாரத்தில் மதுரையில் நடந்த பாராட்டுவிழாவை, சில நண்பர்கள் வீடியோத்தொகுப்பாக நாஞ்சில் நாடன் தளத்தில் வெளியிட்டிருப்பதுபோல, தில்லியிலும் யாராவது அப்படி படமெடுத்துத் தொகுத்திருக்கிறார்களா அம்மா? அப்புறம் உங்கள் வானொலி உரை ஒலி வடிவத்தை திரு பென்னேஸ்வரன் வழியாகவே, தில்லி வானொலி நிலையத்தில் இருந்து பெறலாமே! அப்படிக் கிடைத்தால், உங்கள் பதிவில் வலையேற்றம் செய்துவிட்டுத் தகவல் சொல்லுங்கள்.

Unknown சொன்னது…

நிகழ்ச்சியில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அழகான புகைப்படங்களுடன் தொகுத்து எழுதி உள்ளீர்கள்

நன்றி

எம்.ஏ.சுசீலா சொன்னது…

புகைப்படம் எடுக்க உதவிய விட்டலன்,மற்றும் முத்து ..,
உங்கள் இருவரின் அன்புக்கும் நன்றி!
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு,
வணக்கம்.நலம்தானே.நெடுநாள் காணவில்லை தங்களை.
எனது மேடை உரையை யூடியூபில் ஏற்ற நண்பர் விட்டலன் முயன்று வருகிறார்.முயற்சி கை கூடியதும் கட்டாயம் வெளியிடுவேன்.
வானொலிப்பேச்சை வெளியிடச் சில முறையான அனுமதிகளும்,காத்திருப்புக்களும் தேவை.
எப்படியும் உரையின் சாரத்தைப் பதிவாக்கி விடுகிறேன்.
தங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

Unknown சொன்னது…

நேரில் திரும்பவும் நிகழ்ச்சியைப் பார்த்தது போலவே இருக்கிறது அம்மா உங்களது இந்தத் தொகுப்பு. நாளடைவில் நிகழ்ச்சியின் தொகுப்பை மறந்தாலும் உங்களது பதிவு காலத்துக்கும் ஞாபகப்படுத்தும்.பகிர்வுக்கு நன்றி அம்மா.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பு நண்பர்களுக்கு,இலக்கிய ஆர்வமும் விடா முயற்சியும்,என் பால் அன்பும்கொண்ட அருமை நண்பர் விட்டலன்,எனது உரையின் சிலபகுதிகளை ஒலிவடிவில் தனது தளத்தில் தந்திருக்கிறார்.
http://vittalankavithaigal.blogspot.com/2011/02/blog-post_18.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....