துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.2.12

காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-2

காவல் கோட்டம் நாவல் குறித்த பகிர்வுகளைத் தொடரும் முன் தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய பாராட்டு விழா குறித்த சில செய்திகள்..
தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய பாராட்டு விழாவில்
சு வெங்கடேசனுடன்..
.

என் வாழ்த்துரை..
சு வெங்கடேசனின் ஏற்புரை..
டி கே ரங்கராஜன் எம்.பி.உரையாற்றுகிறார்..
.தில்லியின் மூத்த பத்திரிகையாளரும் இதழாளருமான காலம் சென்ற 
எழுத்தாளர் திரு ஏ ஆர் ராஜாமணி அவர்களது நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் முடிந்த பின்பு துவங்கியதாலும் புதன்கிழமை வேலை நாள் என்பதாலும் சாகித்திய அகாதமி விருது பெற்ற வெங்கடேசனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா சற்றுத் தாமதமாகவே தொடங்கியது; என்றாலும் மனதுக்கு நிறைவளிக்கும் ஒரு விழாவாக அது அமைந்து விட்டதற்கு முதன்மைக் காரணம் அரங்கிலிருந்த பார்வையாளர்கள். வந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான்; அவர்களிலும் நூலைப் படித்தவர்கள் இன்னும் கூடக் குறைவுதான் என்றபோதும் நாவல் பற்றிய உரைகளைக் கூட்டத்தினர் ஆர்வத்தோடு உள்வாங்கிக் கொண்டதும் நாவலைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை இந்தக் கூட்டத்தின் மூலம் பெற்றதாக நிகழ்ச்சியின் இறுதியில் பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சியளித்தது. 


பேச்சாளர்களின் உரைகளும் கூட,மேலெழுந்தவாரியான வெறும் பாராட்டுரைகளாகப் போய் விடாமல்,நாவலை ஒட்டிய பலவகையான தகவல்களை விரித்துரைப்பதாக அமைந்தது பொதுவாக இந்தவகையான கூட்டங்களில் அரிதாகவே வாய்க்கக் கூடிய ஒன்று.


திரு முத்து இருளன், நான், விஜய் ராஜ்மோகன் ஆகிய மூவரும் நாவல் குறித்த பலவகையான பார்வைகளை முன் வைத்த பிறகு மார்க்ஸிஸ்ட் கட்சியின் எம் பி திரு டி கே ரங்கராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.அந்த உரை சற்று நாவலுக்கு வெளியில் சஞ்சரித்தாலும் கூடச் சூழலுக்குப் பொருத்தமானதாகவும் தமிழ் சாகித்திய அகாதமி உருவாக வேண்டும் என்பது போன்ற ஆக்க பூர்வமான யோசனைகளை முன் வைப்பதாகவுமே அமைந்திருந்தது.சாகித்திய அகாதமியின் தலைவராகப் பண்டித நேரு பொறுப்பேற்றிருந்தபோது அவர் போட்ட முதல் ஆணை தன் எந்தப் படைப்புக்கும் அந்தவிருது வழங்கப்படக் கூடாது என்பதுதான் என்னும் செய்தியை அவையில் அவர் பகிர்ந்து கொண்டபோது முந்தைய தலைவர்களின் நேர்மைத் திறனையும்,இன்றைய சூழலின் அவலத்தையும் ஒரு கணம் ஒப்பு நோக்கிப் பார்க்காமல் இருக்க இயலவில்லை.


நிகழ்ச்சியின் உச்சம் சு வெங்கடேசனின் ஏற்புரை. நாவல் உருவாக்கத்தில் தனது பத்தாண்டுக் காலஉழைப்பை - முயற்சியை தேடல்களை அவையில் விரிவாக முன் வைத்த அவர் தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனாக உருப்பெறுவதும்,அங்கீகாரம் பெறுவதும் அத்தனை எளிதான காரியம் ஒன்றும் இல்லை என்பதைத் தன் உரையில் நிறுவ முற்பட்டார்.


எங்கோ மூலையில் கிடைத்த ஒரு சிறு ஆவணம் நாவலுக்கான சிறு பொறியைத் தன் உள்ளத்தில் விதைத்ததையும், அதைத் துரத்தித் தேடிப் பிடிக்கச் செய்த முயற்சியே இத்தனை பக்க நாவலாக உருப்பெற்றதையும் விவரித்த அவர் இந்த நாவல் குறித்த சர்ச்சைகளும்,விவாதங்களும் பெருகப் பெருக இதைத் தேடிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடியது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. கி ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்[வாய்மொழிக் கதைகளை மட்டும் சார்ந்த இனக்குழு வரலாற்றுப் பதிவு], பிரபஞ்சனின் வானம் வசப்படும்[ஆனந்தரங்கம் பிள்ளையின் டயரிக் குறிப்புக்களை வரலாற்று நிகழ்வுகளாகக் காட்சிப்படுத்தல்] ஆகிய இரு நாவல்களும் வித்தியாசமான முறையில் இந்த நாவலை எழுதவும் அணுகவும் தனக்கு முன்னோடியாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டிய அவர்  இந்த இரு அணுகு முறைகளையும் ஒருங்கிணைத்தபடி,தன் முன்னோடிகளின் தோள் மீது ஏறி அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தைத் தன் நாவலில் தொடர்ந்திருப்பதாகவும் விவரித்தார்.


இளம் வயதில் சாகித்திய அகாதமி பெறுபவர் என்னும் கருத்து தன்னைப் பற்றி முன் வைக்கப்படுவது பற்றிப் பேசுகையில் ஜெயகாந்தன் தனது 38ஆம் வயதில் ’சிலநேரங்களில் சில மனிதர்க’ளுக்கான விருதைப் பெற்றபோது இதை விடப் பலமான சர்ச்சைகள் எழுந்தததை நினைவு கூர்ந்தார். கேரளத்தில் 30 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிக்குக் கூட இந்த விருது கிடைத்து வருகையில் தமிழகத்தில் மட்டுமே வயது விருதுக்கு ஒரு பிரச்சினையாகக் கொள்ளப்படுவதை எடுத்துக் காட்டிய வெங்கடேசன், அந்த அடிப்படையிலேயே இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ விருதுக்குத் தப்பிப் போன அவலத்தையும் சுட்டிக் காட்டினார்.கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ்ப் புனைவுலகில் இளம் படைப்பாளிகளின் எண்ணிக்கையும்,எழுத்துத் தரமும் மிகச் சிறப்பாகத் துலங்குவதைப் பல சான்றுகளுடன் [ஜோ டி குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’,சு வேணுகோபாலின் ‘வெண்ணிலை’,ஃபிரான்சிஸ் கிருபா போன்றோரின் ஆக்கங்கள்] விவரித்த வெங்கடேசன் அந்த இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஒரு குறியீடாகவே இந்த விருதைக் கொள்வதாகவும் -அதிலும் விருது தனக்கு என்பதை விடவும் ‘காவல் கோட்டம்’என்னும் படைப்புக்கு என்பதிலேயே தான் பெருமிதம் கொள்வதாகவும் கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

(காவல் கோட்டம் நாவல் குறித்த பகிர்வுகள் மேலும் அடுத்த பதிவில்...)
காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-1

2 கருத்துகள் :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

காவல்கோட்டம் குறித்த வெங்கடேசனின் ஏற்புரை மிகவும் அருமையாக இருந்தது. காவல்கோட்டத்திற்கு கிடைத்த விருது மதுரைக்கு கிடைத்த விருது. மதுரையை மையமாகக் கொண்டு நாவல் எழுதிய வெங்கடேசனை வாழ்த்தி மகிழ்கிறேன். காவல்கோட்டம் குறித்த தங்கள் பதிவுகளையும் ஆவலோடு எதிர்பார்த்து,
சித்திரவீதிக்காரன்.
(காவல்கோட்டம்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுவையான தொடர் ! தொடருங்கள் !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....