துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.3.12

தில்லி புத்தகத் திருவிழாவில்..

புது தில்லியின் சர்வதேசப் புத்தகவிழா 25/2இல் தொடங்கிக் கடந்த பத்து நாட்களாகவே நடந்து வந்தபோதும் இறுதி நாளான ஞாயிறன்றுதான் 4/3 -அங்கே செல்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.தில்லி வருகைக்குப் பிறகு,முன்பொரு முறை இவ்வாறான புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தாலும் சாகித்திய அகாதமி,தேசிய புத்தக நிறுவனம் எனப்படும் என் பி டி ஆகிய ஒரு சில அரங்குகளில் மட்டுமே மருந்தைப் போல ஆங்காங்கே சில தமிழ்ப்புத்தகங்கள் கண்ணில் பட்டு வந்ததால் சென்ற சில ஆண்டுகளாக பிரகதி மைதானின் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் ஆர்வம் ஏற்படவில்லை.
இம் முறை விதி விலக்காக-ஓர் இனிய அதிர்ச்சியாக-ஒரு சில தமிழ்ப்பதிப்பகங்களும் கூடக் கண்காட்சியில் பங்கு கொள்ளவிருக்கின்றன என்னும் நல்ல செய்தியை முன் கூட்டியே அளித்து என் எதிர்பார்ப்பைப் பன்மடங்கு கூட்டியிருந்தார் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு நாச்சிமுத்து அவர்கள்.

காலச் சுவடு,என் சி பி ஹெச்,சந்தியா,பாரதி புத்தகாலயம்,கிழக்கு,சாந்தா போன்ற மிகச் சில பதிப்பகங்களே அரங்குகளை அமைத்திருந்தாலும் தில்லிச் சூழலில் தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே முற்றாகக் கொண்ட கடைகளைக் காண்பதும்கூடப் பாலைவனப் பசுஞ்சோலை போலத்தான் இருந்தது. மனம் கொண்ட மட்டும் [பட்ஜெட்டைச் சற்றே மீறியும் கூட] பல புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தாலும் குறிப்பாக ஒரு சில நூல்கள் மனதுக்கு மிகவும் நிறைவளித்தன.

தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தை நான் தொடங்கிவிட்டதை அறிந்தபின், தான் தொடங்கிய அந்த முயற்சியை நிறுத்திவிட்டு மற்றொரு நாவலான கரமஸோவுக்கு மாறிக் கொண்டவர் கவிஞர் புவியரசு அவர்கள். அவரது கரமஸோவ் சகோதரர்கள் மொழியாக்கம் என் சி பி ஹெச்சால் அண்மையில் வெளிவந்திருப்பதை அறிந்து அதைக் கட்டாயம் வாங்கியே ஆக வேண்டுமெனத் திட்டமிட்டு வைத்திருந்தேன்.என் நல்வினைப் பயனாகக் கடையில் எஞ்சியிருந்த ஒரே ஒரு பிரதி எனக்குக் கிடைத்து விட்டது.

தஸ்தயெவ்ஸ்கி பற்றிஅவரது மனைவி அன்னா எழுதிய நினைவுக்குறிப்புக்கள் யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயத்தில் கிடைத்தது.அங்கேயே யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகள்’என்ற அரிய நூலையும் வாங்கிக் கொண்டேன்.

மயிலிறகால் வருடுவது போன்ற பாவண்ணனின் மென்மையான எழுத்துக்கள் எனக்கு என்றும் உகப்பானவை.அவரது புதிய சிறுகதைத் தொகுப்பான  ’பொம்மைக்காரி’யை சந்தியாவில் வாங்க முடிந்தது. சென்னையின் வரலாறு தாங்கிய கிளின் பார்லோவின் சென்னையின் கதை[1921] ப்ரியா ராஜின் மொழியாக்கத்தில் சந்தியாவால் வெளியிடப்பட்டிருக்கிறது.ஓர் ஆய்வுக்காகச் சென்னை பற்றிய செய்திகளைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு அந்த நூல் ஒரு வரமாக வாய்த்தது.பிரதாப முதலியார் சரித்திரம்,கமலாம்பாள் சரித்திரம் போன்ற முதல் தமிழ் நாவல்களையும் சந்தியா பதிப்பகத்தார் மறு வெளியீடு செய்திருக்கிறார்கள்.சா கந்தசாமியின் வான்கூவர் என்னும் புதிய நாவலும் என் பட்டியலில் இடம் பிடித்துக் கொண்டது.

காலச் சுவடு கிளாசிக் வெளியீடுகளில் என் நூலகத்தில் இது வரை இல்லாத அமரர் ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு,கிருத்திகாவின் வாஸவேஸ்வரம்,நகுலனின் நினைவுப்பாதை,
யூ ஆர் அனந்தமூர்த்தியின் அவஸ்தை நாவலின்[கன்னடம்]தமிழாக்கம் முதலிய நூல்கள் என் தெரிவுகளாக அமைந்தன.

முதன்முதலாகச் சீனமொழியிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள எம் ஸ்ரீதரனின் [பயணி]’வாரிச் சூடினும் பார்ப்பவர் இல்லை’கவித்தொகை என்னும் நூலின் வெளியீட்டு விழாவைப் புத்தகக் கண்காட்சியின் முதல்நாளன்றே தில்லித் தமிழ்ச்சங்கத்தாரும் காலச் சுவடு பதிப்பகத்தாரும் இணைந்து தமிழ்ச்சங்க அரங்கில் ஏற்பாடு செய்திருந்தனர். [தமிழின் சங்க இலக்கியம் போன்றதெனக் கருதப்படும் இந்நூலைப் படித்துப் பார்த்த பின்பே அது பற்றிக் கருத்துக் கூற முடியும்].அந்த நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்ததால் அந்த நூலை அங்கேயே வெளியீட்டுச் சலுகைவிலையில் வாங்க முடிந்தது.பி ஏ கிருஷ்ணனின் ‘திரும்பிச் சென்ற தருணம்’, ‘அக்கிரகாரத்தில் பெரியார்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களையும் அந்த விழாவின்போதே காலச் சுவடு பதிப்பகத்தாரின் விற்பனையில் வாங்கிக் கொண்டேன்.

கிழக்கில் மிகக் குறைவான நூல்களே இருந்தன.ஒருவேளை நான் சென்றது இறுதிநேரத்தில் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.அசோகமித்திரனின் சிறுகதைத் தொகுப்பு முழுமையும் என்னிடமுள்ளதால் அவரது மூன்று குறுநாவல்களின் தொகுப்பை மட்டும் கிழக்கில் வாங்கிக் கொண்டேன்.

நான் வாங்கி முடிப்பதற்காகவே அது வரை காத்துக் கொண்டிருந்த பேரக் குழந்தைகள், வண்ணக் களஞ்சியமாகவே திகழ்ந்து கொண்டிருந்த குழந்தைகள் அரங்கை முற்றுகையிட்டுக் கலக்கியெடுக்க காலை 11மணிக்கு நுழைந்த நாங்கள் வெளிவழியை அடையும்போது மாலை 4 மணி ஆகி விட்டிருந்தது.

ஒரு மகனைப் போன்ற வாஞ்சையுடன் என்னுடன் பழகி வரும் பதிவுலக நண்பர் திரு தேவராஜ் விட்டலனும் புத்தகங்களுக்கு ஊடேயான இந்தப் பயணத்தில் என்னுடன் கலந்து கொண்டது மேலும் மகிழ்வளித்தது.

நினைத்த புத்தகத்தை நினைத்தபடி பெறும் வசதிகள் ஆன்லைனில் எவ்வளவுதான் இருந்தாலும் புத்தகக் கடலுக்குள் நேரடியாகத் திளைத்துக் களிக்கும் அனுபவத்தை இழக்கவோ தவறவிடவோ புத்தகப் பிரியர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை என்பதையே கடைசி நாள் மாலைவரையிலும் கூட அங்கே பெருகிக் கொண்டிருந்த கூட்டம் நிரூபித்துக் கொண்டிருந்தது.
மேலே குறிபிட்டவற்றைத் தவிர நான் வாங்கிய வேறு சில நூல்கள்..
ஆர் சூடாமணியின் ’இரவுச் சுடர்’-நாவல்
உமாமகேஸ்வரியின் ‘இறுதிப்பூ’-கவிதைத் தொகுப்பு
புவனா நடராஜனின் மொழிபெயர்ப்பில் சரத் சந்திரரின் ‘தேவதாஸ்’
சலீம் அலியின் ‘பறவை உலகம்’[தமிழில்]
மொழிபெயர்ப்பின் சவால்கள்-கட்டுரைத் தொகுதி,ஜெயராமன்,லதாராமகிருஷ்ணன்


பி.கு;ஜெயமோகனின் படைப்புக்களை அவ்வப்போது வெளிவந்த மறுகணமே சுடச்சுட வாங்கி விடுவதால் இங்கு எதையுமே வாங்க இயலாமல் போனதில் ஒரு சிறிய வருத்தம்...






7 கருத்துகள் :

புதியவன் பக்கம் சொன்னது…

கலங்கிய நதி விமர்சனம் விரிவாக இருக்கிறது. ஏற்கெனவே கேள்விப்பட்ட நூல் என்பதால் படித்த பிறகு நானும் இதற்கு விமர்சனம் எழுதத் தேவையில்லை - உங்கள் பதிவை சுட்டினால் போதும். உடன் பதில் அனுப்பியமைக்கு நன்றி.

புதியவன் பக்கம் சொன்னது…

தாங்கள் கண்காட்சிக்கு வந்த நாள் நான் தாமதமாகத்தான் வந்தேன். காரணம், முதல்நாள் பணி முடிந்து வீடு திரும்பியது காலை 5 மணிக்குத்தான். தமிழ்க் கடைகளைப் பொறுத்தவரை சிறு திருத்தம். நான் தில்லிக்கு வந்தது முதல் என்சிபிஎச் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. சாந்தாவும் ஒரு ஸ்டேண்டுடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. காலச்சுவடு நான்காவது முறையாகப் பங்கேற்றுள்ளது. கிழக்கு இரண்டாவது முறையாக. சந்தியா முதல் முறை பங்கேற்கிறது. பாரதி கடந்த முறையும் ஸ்டாண்ட் எடுத்தது. இவை தவிர பதிப்பாளர் சங்கத்துக்கான இலவசக்கடையும் உண்டு - இந்த ஆண்டு வரவில்லை. அதாவது, எந்தக் கண்காட்சியிலும் தமிழ்க் கடைகள் குறைந்தது மூன்று இருந்து வந்திருக்கினறன. தகவலுக்காக ஒரு செய்தி - யதுகிரி அம்மாளின் நூலை என் நண்பர் சேது அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியாக இருப்பதாகத் தகவல்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி திரு ஷாஜகான்..
நான் தில்லிக்கு அந்நியமானவள்தானே..அதனால் சிறு பிழை நேர்ந்து விட்டது.நான் இங்கு குடியேறிய முதல் ஆண்டு ஆசையோடு போய் வெறுங்கையோடு திரும்பியதாலும் பின்பு நடந்த புத்தகக் கண்காட்சிகளில் உங்களைப் போல வழிப்படுத்த யாருமில்லாததாலும் தமிழ்க்கடைகள் இல்லையென எண்ணிக் கொண்டு செல்லாமல் இருந்து விட்டேன்.
இம் முறை கண்காட்சி அரங்கிற்குச் செல்ல-மெட்ரோ முதல் அரங்கு வரை-செல்லும் வழி,நுழையும் வழி என சகலத்தையும் வரைபடமாகச் சுட்டி-எழுதிக் காட்டி விளக்கிய உங்கள் பதிவுகள் மிகப் பெரும் வழிகாட்டிகளாக அமைந்திருந்தன.ஒவ்வொரு கட்ட நகர்தலுக்கும் அவை துணையாக இருந்தன.அதற்காக இத் தருணத்தில் மீண்டும் நன்றி.

புதியவன் பக்கம் சொன்னது…

ஐயோ... பிழை கிழை என்றெல்லாம் சொல்லாதீர்கள். தமிழ்க் கடைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன என்பதை சுட்டிக்காட்டத்தான் விரும்பினேன். என்ன இருந்தாலும் தமிழ்ப் பதிப்பு உலகிலிருந்து வந்தவன் அல்லவா... பழைய பாசம் விடமாட்டேன் என்கிறது.
என் பதிவு தங்களுக்கும் உதவியாக இருந்ததில் மகிழ்ச்சி.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தில்லி புத்தகத்திருவிழாவில் தாங்கள் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று கூட நான் வாசித்ததில்லை. இன்னும் வாசிக்க வேண்டிய புத்தகங்களை எண்ணும் போது மலைப்பாய் இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பதிவு ! வாழ்த்துக்கள் !

பெயரில்லா சொன்னது…

கொடுத்து வைத்தவர் நீங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....