துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.4.09

பிண அரசியலுக்கு நடுவே ஒரு மே தினம்

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடீ.....செம்மை மறந்தாரடீ...- பாரதி

முதல் நாள்

என் இடப் பக்கத்து வீட்டுக்காரனைக்

காவலர் கைது செய்தனர்

அவன் ஒரு யூதன் என்று சொல்லிக் கொண்டார்கள்

நான் கண்டு கொள்ளவில்லை

காரணம் நான் ஒரு யூதனில்லை


மறு நாள்

என் வலப்பக்க வீட்டுக்காரனை

அவர்கள் கைது செய்தனர்

அவன் ஒரு கத்தோலிக்கன் என்று சொன்னார்கள்

நான் கண்டு கொள்ளவில்லை

காரணம் நான் கத்தோலிக்கன் இல்லை

அதற்கு மறு நாள்

என் எதிர் வீட்டுக்காரனை

அவர்கள் சிறைப் பிடித்தனர்

அவனை ஒரு கம்யூனிஸ்ட் என்று சொன்னார்கள்

அப்போதும் நான் கண்டு கொள்ளவில்லை

காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை


ஐயோ ...இன்று என்ன நடக்கிறது?

அவர்கள்..........

என்னைக் கைது செய்கிறார்கள்

என் உதவிக்கு யாருமே இல்லை

பரவலாக அறியப்பட்டிருப்பதும், புகழ் பெற்றதுமான இந்த ஜெர்மானியக் கவிதையை இன்றைய மே தினத்தில் நினைவு கூரும் இத் தருணத்தில்,மே தின வாழ்த்துக் கூறவோ, மே தினச் செய்தி விடுக்கவோ இந்தியாவிலுள்ள எந்த அரசியல்வாதிக்குமே - தங்களைத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் எவருக்குமே தகுதியில்லை என்ற கசப்பான உண்மையை கனத்த இதயத்தோடு எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.மொழி, இனம் ஆகிய சொற்கள், பொருளிழந்த வெற்றுச் சொற்களாக -
ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டுமே கை கொடுப்பவைகளாக மாறிப்போய்ப் பல காலம் ஆகி விட்டது. இப்போது இந்தத் தேர்தல் காலத்தில் அது மேலும் சிறிது வீரியத்தோடு புதுப்பிக்கப்படுகிறது ...அவ்வளவுதான்.மலினமாகி மடிந்து கொண்டிருக்கும் மனித உயிர்களைப் பற்றிய மெய்யான கரிசனம் எவருக்குமே இல்லை.. அற்பப் பூச்சிகளைப் போல ஈழத்தில் அன்றாடம் பலியாகிற...,.பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிச் சிதைந்து போகிற ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் நம்மைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரிக்க , நாம் எந்தக் கவலையும் இன்றி மே தின சிறப்புப் படக் காட்சியில் மூழ்கியபடி , பொழுதை 'இனிமையாகக்' கழித்துக் கொண்டிருக்கிறோம்.

வெற்று விளம்பரத்திற்காக அல்லாமல்,''என்று தணியும் இந்தக் கொடுமையெல்லாம்'' 'என்ற உள்ளார்ந்த ஆதங்கத்துடன்..உண்மையான உண்ணாநோன்பை ஆத்ம சுத்தியோடு கைக்கொண்டு , களத்தில் மெய்யாக இறங்கிப் போராட்டம் நிகழ்த்தும் தோழர், தோழியர்க்கு மட்டும் இந்த மே தினம் சமர்ப்பணம். கள பலியாகும் உயிர்ப்பலிகள் ஓய்ந்து, மனித மாண்புகள் தலையெடுக்க. .......உண்மையான போர் ஓய்வு பிறந்து, அமைதிப் பூக்கள் விரைவில் மலர.......சக மனித உயிரிகளாக விழைவதும் அதற்கான பங்களிப்பை அவரரவர்க்கு இயன்ற வகையில் செய்ய முற்படுவதும் மட்டுமே நம்மால் செய்யக் கூடியவை;அதுவே இத் தருணத்தில் ஒரு மகத்தான மானுடக் கடமையுமாகிறது.

படைப்பாளியின் ஆயுதம் அவனது எழுதுகோல் மட்டுமே.
இலங்கைத் தமிழரின் இன்னல்களுக்குத் தங்கள் எழுத்துக்களைப் போர்ப்படையாக்கிய படைப்பாளிகள் சிலரின் கவிதைகள் கீழே....

இக் கவிதைகளில் பலவும் '80களின் தொடக்கத்தில் எழுதப்பட்டவை. அப்பாவித் தமிழர் வாழ்வில் இது வரை மாற்றம் எதுவுமில்லை என்பதோடு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு போகும் அவர்களது நிலை நம் 'தலைவர்க'ளின் மனச்சாட்சியைக் கொஞ்சமாவது அசைக்க வேண்டாமா?

ஈழக் கவிதை வரிகளிலிருந்து......

காசி ஆனந்தன்

விடுதலை
சாகடிக்கப்படலாம்

நாங்கள் -

தோற்கடிக்கப்பட மாட்டோம்

உலக அமைதி
மாந்த நேயம் பேசின

அணுகுண்டுகள்

புறாக்களைப் பறக்க விட்டன

கழுகுகள்

போராடிக் கொண்டிருக்கிறது அமைதி

சிவசேகரம்
இந்தக் கரும்பனைகள்

இங்கேதான் முளைக்கும்

இடம் பெயரச் சொல்லி எவர்

வேரோடு கிள்ளி வெளியே எறிந்தாலும்

வடலி வளர முதல் வெட்டிச் சரித்தாலும்

இந்தக் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும்


சிவரமணி
யுத்தகால

இரவொன்றின் நெருக்குதல்கள்

எங்கள் குழந்தைகளை

வளர்ந்தவர்கள் ஆக்கிவிடும்


ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற

அவர்களின் அழகிய காலையின் பாதையில்

குறுக்காய் வீசப்படும்

ஒவ்வொரு குருதி தோய்ந்த முகமற்ற மனித உடலும்

உயிர் நிறைந்த

அவர்களின் சிரிப்பின் மீதாய்

உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய்

எங்களுடைய சிறுவர்கள்

சிறுவர்களல்லாது போயினர்

சேரன்

மரணம்

காரணம் அற்றது

நியாயம் அற்றது

கோட்பாடுகளும் விழுமியங்களும்

அவ்வவ்விடத்தே உறைந்து போக

முடிவிலா அமைதி

நன்றி-படங்கள்:ஊடறு; பேய் ஆட்சி செய்கிறது பிணம் தின்ன வாருங்கள்!!




செல்வி
அமைதியான காலைப்பொழுது

காலைச் செம்மை கண்களைக் கவரும்

காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்....

எங்கும் அமைதி எதிலும் அமைதி

...பொழுது புலராக் கருமை வேளையில்

தடதடத்துறுமின வண்டிகள்

அவலக் குரல்கள் ஐயோ அம்மா

தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின

அங்குமிங்கும் காக்கி உடைகளாய்....

அள்ளி ஏற்றிய இளைஞர்கள்

மூச்சுத் திணறினர்

தாய்மையும்

தங்கையின் விம்மலும்

பொழுது புலர்தலின்

அவலமாய்க் கேட்டன

காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது

எங்கும் அச்சம் எதிலும் அமைதி

நேற்று வரையிலும் அமைதியான காலைப் பொழுது

மீண்டும் சேரன்
நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால் அது கண்ணீரின் குருதி

நீங்கள் ஒடுக்குபவர்களானால் அது குருதியின் கண்ணீர்
............

....எனது நகரம் எரிக்கப்பட்டது

எனது மக்கள் முகங்களை இழந்தனர்

எனது நிலம் எனது காற்று

எல்லாவற்றிலும் அந்நியப் பதிவு

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி

யாருக்காகக் காத்திருந்தீர்கள்

முகில்கள் மீது

நெருப்பு

தன் செய்தியை எழுதியாயிற்று

இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்ததெருக்களிலிருந்து எழுந்து வருக !

............

அரசியல் பிழைப்பில் ஆழ்ந்து போயிருக்கும்

அனைவரும் உணர்க

உங்கள் முதுகு நாண் கலங்கள்மீதும்

சாதிப்பிரிவினைப் பூஞ்சண வலைகள்

கங்கை கொண்டு கடாரம் வென்று

இமயக் கொடியில் விற்பொறி பொறித்துத்

தலைநிமிர்வுற்ற தமிழர் ஆளுமை

குனிந்த தலையுடன்

அம்மணமாய்த் தெருக்களில் திரிக

மானுட ஆண்மையின் நெற்றிக்கண்ணே இமை திற ! இமைதிற !

2 கருத்துகள் :

Unknown சொன்னது…

கண் கலங்க வைத்து விட்டீர்கள்.

மிக அற்புதமாகப் பொருள் பொதிந்த கவிதைகளை இந்நேரம் நினைவூட்டி இருக்கிறீர்கள். நம்முடைய தன்மானத் தலைவர்களுக்கு இந்தப் பதிவை மே தினச் செய்தியாக அனுப்பலாம்.

ராகவன் தம்பி

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

உள்ளம் பற்றி எறியத்தான் செய்கிறது
கண்கள் வழிந்து அருவியாய் விழுகிறது
பார்ப்பவர் ஆனந்த கண்ணீர் என்று கூறி செல்கிறார்கள் என்ன செய்ய
இதயம் இருந்த இடத்தில இயந்திரம் பொருத்தி வாழ பழகிய
மனித உரு கொண்ட மிருகங்களுக்கு இடையே சிக்கி இருக்கிறோம் ........................

வலிக்க செய்கிறது பதிவு .............

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....