துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.5.09

நைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா


சித்தாயி கோலு தேவதா கோயில்

இறை வழிபாடு என்பது வினோதமான நம்பிக்கைகளையும்,சடங்கு முறைகளையும் உள்ளடக்கியதாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வித்தியாசமான வேண்டுதலுடன் கூடிய ஒரு வழிபாட்டை நைநிடால் பயணத்தில் எதிர்ப்பட நேர்ந்தது.

நைநிடால் அருகிலுள்ள அல்மோராவுக்கு மிக அண்மையில் - சற்று மேலே உள்ள சிற்றூர் ஒன்றில் ,நீதி தேவனுக்கான ஆலயம் ஒன்று மிகப் பிரபலமாக விளங்கி வருகிறது.

'கோல் மந்திர்' என்று அழைக்கப்படும் இக் கோயிலில் குடி கொண்டிருக்கும் நாதனைச் 'சித்தாயி கோலு தேவதா 'என்று பெயர் சூட்டி (நீதி வழங்கும் தெய்வம் என்ற பொருள்பட)அழைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் கோயில் வளாகங்களுக்குள் தொட்டில் கட்டித் தொங்க விடுவதை நாம் கண்டிருக்கிறோம்.அது போல மனித நீதியில்....,.மனிதர்கள் அமைத்த வழக்கு மன்றங்களில் நம்பிக்கை இழந்தவர்கள் அல்லது நீதி மன்றங்களிலுள்ள தங்கள் வழக்குகள் வெற்றி பெற வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் வித்தியாசமான வழிமுறை ஒன்றைக் கடைப் பிடிக்கிறார்கள்.
நீதி மன்றங்களில் வழக்குக்கான விண்ணப்பம் போடுகையில் பயன்படுத்தும் முத்திரைத் தாள்களை வாங்கி அதில் தங்கள் விண்ணப்பத்தைப்பக்கம் பக்கமாய் எழுதிக் கடவுள் சன்னிதானத்தில் பட்டுத் துணிகளுடனும் , மணிகளுடனும் இணைத்துத் தொங்க விட்டு விடுகிறார்கள்.
வேண்டுதலுக்காகத் தொங்கவிடப்பட்டுள்ள மணிகள்,மனுக்கள்

பத்திரப்பதிவு முத்திரைத்தாளில் கடவுளுக்கு விண்ணப்பம்

மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் நிலுவையில் இருக்கும் தங்கள் வழக்குகள்...., நீண்டு கொண்டே போகும் தங்கள் வழக்குகள் ,அப்படியாவது ஒரு முடிவுக்கு வந்து விடாதா என்ற ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு......அந்தக் கோயில் பிரகாரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் தாள்களில் படபடக்கிறது ; எண்ணற்ற கண்ணீர்க் கதைகளைத் தாங்கியிருக்கக்கூடிய ( மொழி தெரியாததால் அவற்றைப் படிக்க முடியவில்லை என்றபோதும் அவற்றிலுள்ள செய்திகள் அனுமானிக்கக் கூடியவைதானே?) அந்தக் காகிதங்கள் மனித சுயநலங்களின் மௌன சாட்சியங்களாய்க் காற்றில் சலசலத்தபடி வானிலிருந்து இறங்கி வந்து வரம் கொடுக்கப் போகும் நீதி தேவனின் வரவுக்காய் அங்கே தவம் இயற்றிக்கொண்டிருக்கின்றன......

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....