துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.11.12

ஒரு பாலைப்பயணம்-1

பாலைப் பெருவெளியில் 
பேரனுடன்....


தமிழ் நாட்டில் காணக் கிடைக்காதது பாலைநிலம்.பாலை என்றதுமே நம் மனதில் இயல்பாக வந்தமரும் ராஜஸ்தானின் தார் பாலைவனம்,அரேபியப்பாலை வனங்கள் போன்ற  நிலச்சித்திரங்கள்,காட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை.இங்கு நாம் காண்பதெல்லாம் வற்றிப்போன தாவரங்களும்,வளம் இழந்து வறண்டு போய் மொட்டையாய்க்காட்சியளிக்கும் மலைகளும் மட்டுமே.அவற்றையே பாலையென்று குறிப்பிடுகிறோம் நாம்.

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்ற நானிலப் பாகுபாடுகள் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் பாலையை ‘நடுவணது’ என்ற சொல்லாலேயே குறிக்கிறார்.தமிழகத்தைப்பொறுத்தவரை பாலை என்பது ஒரு தனிநிலமாக இல்லை என்பதையும் காட்டுநிலமாகிய முல்லையும்,மலை சார்ந்த குறிஞ்சியும் தங்கள் வளம் குன்றிப்போகும்போது வெறுமையும் வறட்சியுமாய்ப் பாலையாய்த் திரிபடைகின்றன என்றும் அவர் அறிந்து வைத்திருந்ததே அதற்கான அடிப்படை.
பழந்தமிழ் இலக்கியங்கள் பாலை என்ற பெயரில் சுட்டுவதும் அவ்வாறான நிலப்பகுதிகளையே.
முல்லையென்ற காட்டு நிலமும் ,குறிஞ்சி என்னும் மலைநிலமுமே படிப்படியே பாலையாகத் திரிந்துபோகின்றன என்ற
தொல்காப்பியத்தின் கருத்தை
‘’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்’’
என்னும் வரிகளில் மேலும் விளக்கமாகவும்,நுணுக்கமாகவும் விவரிக்கிறது சிலப்பதிகாரம்.

பாலைப்பெருமணல் வெளியைத் திரைப்படக்காட்சிகளிலும் புகைப்படங்களிலும் மட்டுமே அதுவரை கண்டிருந்த நான் இம்மாத நடுவில் எங்கள் ஜெய்சால்மர் பயணம் உறுதியான பிறகு  புதிதான ஒரு நிலவியல் காட்சியைக்காணப்போகும் பரவசத்தில் கனவு காணத் தொடங்கியதோடு, இணையத்தில் அது சார்ந்த செய்திகளையும் திரட்டத் தொடங்கினேன்.

முழுமையும் காரிலேயே செல்வதான எங்கள் பயணத் திட்டம்,அலுவலக,பள்ளி வேலை நாட்களால் நான்கு நாட்கள் என்று மட்டுமே எல்லை கட்டப்பட்டிருந்தது ; செல்ல வேண்டிய தொலைவோ  மிகவும் கூடுதலாக - கிட்டத்தட்ட 900கி.மீ வரை நீள்வது [சென்று திரும்பும் தூரம் கிட்டத்தட்ட 1800 கி.மீ] என்பதால் வழியிலிருந்த ஜெய்பூர்,ஜோத்பூர் ஆகிய இடங்களில் இரவுநேரத் தங்கல் மட்டுமே சாத்தியமாயிற்று.மேலும் ஜெய்ப்பூர் முன்பே இரு முறை பார்த்த இடம்;ஜோத்பூர் பார்க்கலாம் என்று ஒரு சபலம் இருந்தபோதும் ஜெய்பூர்-ஜோத்பூர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், பயணத்தைப் பல மணி நேரம் தாமதப்படுத்த இம்முறை ஜெய்சால்மரை மட்டுமே ஒற்றை இலக்காக வைத்துக் கொண்டு அதற்கு முதன்மை தர முடிவெடுத்தோம். பாலைப்பகுதிகளுக்குச் செல்வதற்குக்  குளிர் இலேசாகத் தொடங்கி வெயில் மட்டுப்பட்டிருந்த இந்தப்பருவநிலையே உகந்தது என்பதால் இம்முறை நழுவவிட்டால்  அங்கே திரும்பச்செல்வது கடினம் என்பதும் அதற்கு ஒரு காரணம்.

வெள்ளி மாலை கிளம்பி இரவு ஜெய்பூர்;சனிக் கிழமை முழுவதும் பயணித்து இரவில் ஜோத்பூர் ;மறுநாள் விடியற்காலை ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மரை நோக்கி என்று எங்கள் பயணம் ஒன்றரை நாட்களுக்கும் மேலாக நீண்டு கொண்டே சென்றது.

பயணப்பாதையில் ஆர்வமூட்டும் சுவாரசியங்களைக் கொண்டிருந்தது ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் சாலைதான்.சமகாலத்து அதிவிரைவு நெடுஞ்சாலைகள் போல இல்லாவிட்டாலும் கூட மிக விரைவாகப் பயணிக்க முடிந்ததும் அந்தச் சாலையிலேதான்.

ஜோத்பூரிலிருந்து சிறிது தூரம் சென்றதுமே வெள்ளிய மணல் பரப்பையும், ஒரு சில வறண்ட தாவரங்களையும் இருபுறமும் கொண்டிருப்பதும், நம்மை ஜெய்சால்மர் நோக்கி இட்டுச் செல்வதுமான அந்த மிக நீண்ட பாதை வந்து விடுகிறது...அப்புறம்...திருப்பங்களோ வளைவுகளோ அதிகம் இல்லாமல் நீ.....ண்....டு சென்று கொண்டே இருக்கிறது அந்த சாதாரணத் தார்ச் சாலை.






சாலையின் இருபுறமும்
மணல் மேடுகள்..பாலைத் தாவரங்கள்
வறண்டு வெளுத்த மணல் வெளிகளுக்குள் ஒரே சீராகச் சென்று கொண்டிருந்த அந்தச் சாலை, கொல்லென்று வெளுத்துப் போன ஒரு மூதாட்டியின் நரைமுடிக்கு நடுவே சீராகப் பராமரிக்கப்பட்டுச் சமமாக வகிரப்பட்டிருக்கும் வகிடு போல நீண்டு போவதாக எனக்குத் தோன்றியது.


ஒரு கட்டத்தில் இது முடிவே அற்றதோ என்னும் மன மயக்கத்தைக் கூட ஏற்படுத்தி விடும் அந்த நீண்ட சாலையின் குறுக்கே அவ்வப்போது மயில்களும்,மான்களும் வந்து ஜாலம் காட்டி விட்டுச் செல்கின்றன.அத்கமான போக்குவரத்து அற்ற சாலை என்பதால் அதிவேகமாக விரையும் வாகங்களின் அடியே பரிதாபமாக நசுங்கிச் சாகும் ஜீவன்களையும் பார்க்க முடிந்தது.
மர நிழல்களில் இளைப்பாறிக்கொண்டிருக்கும்பாரம் சுமக்காத ஒட்டகங்கள் 
குறிப்பிட்ட இந்தச் சாலையில்தான் குறுக்கிடுகிறது இந்தியா அணுஆயுத சோதனையை நிகழ்த்திப் பார்த்த பாலை நிலமான போக்ரான்.
போக்ரான் அருகே....
அதற்கான அடையாளங்கள் நினைவுச்சின்னங்கள் என எதுவும் அந்தச் சாலை வழியில் இல்லாமல் [ஒருக்கால் சற்று விலகி இருக்கக்கூடும்] சின்னதொரு நகரமாக சுற்றுலாப்பயணிகளின் சோர்வு தீர்க்கும் உணவகங்கள்,தாபாக்கள் நிறைந்ததாக இருக்கும் போக்ரானில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.இம்முறை ராஜஸ்தான் பயணத்தில் வயிற்றுக்குத் தொந்தரவு தராத போஹா [நம்மூர் அவல் உப்புமா] பல இடங்களிலும் மிகச் சுவையாகக் கிடைத்ததால் வயிற்றுப்பிரச்சினையின்றிப்பயணம் செய்ய முடிந்தது.

முற்பகல் 11 மணியளவில் ஜெய்சால்மர் நகரை வந்தடைந்தோம்;ஜெய்ப்பூர் நகரம் இளம் சிவப்பு வண்ணத்தைத் தன் அடையாளமாகத் தரித்துக் கொண்டு’பிங்க் சிடி’என்று பெயர் பெற்றிருப்பதைப்போலச் சூரிய ஒளியில் பொலியும் பொன்மணல் நிறத்தில்- இளம் மஞ்சள் வண்ணக் கட்டிடங்களையும் வீடுகளையும் கொண்டதாக-பொன் நகரம் எனப்பெயர் பெற்றிருப்பது ஜெய்சால்மர்.

நகரத்தின் சாலைகளைப்பிரிக்கும் தடுப்புக்களும்,

வங்கிக் கட்டிடங்களும் கூட ராஜஸ்தானியக் கட்டிடக் கலைப்பாணியில் அமைந்திருப்பது புராதன மரபுகளைப் பேணிப் போற்றிக் கொண்டாடும் அந்த மக்களின் மனோபாவத்துக்கு ஒரு சான்று.

நெடுந்தூரப் பயணக்களைப்புத் தீர ஒரு குளியல் போட்டு விட்டு உடன் கிளம்ப ஆயத்தமானோம்.ஜெய்சால்மர் கோட்டையை ஒட்டியிருந்த ராஜஸ்தானிய உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டோம்; சௌகிதானி என்று அதைச் சொல்கிறார்கள்;அந்த மண்ணின் பாரம்பரிய ஆடல் பாடல் கைவினைப்பொருட்கள்,வீடுகளோடு - அந்த மண்ணின் மணத்தோடு சுற்றுலாப்பயணிகளைக் கவர அங்கே கடைப்பிடிக்கப்படும் உத்திகளில் இதுவும் ஒன்று.

அங்குள்ள கோட்டை கொத்தளங்களைப் பார்ப்பதை விடவும் மணல் வெளியைக் காண வேண்டுமென்பதிலும், பாலைப்பெருநிலத்துக்கு எப்போது செல்லப்போகிறோம் என்பதிலுமே எங்கள் அனைவரின் கவனமும் குவிந்திருந்தாலும் மாலை நான்கு மணிக்குப் பிறகு அங்கே செல்வதே இனிமையாக இருக்கும் என்று சொல்லப்பட்டதால் நானும் குழந்தைகளும் ஜெய்சால்மர் ஊருக்குள் இருந்த பத்வா ஹவேலிக்குள் விரைவாகச் சென்று கண்டு வந்தோம்....
[பயணம் தொடரும்..]



6 கருத்துகள் :

புதியவன் பக்கம் சொன்னது…

பயணத்தின் ஊடாக பாடமும் நடத்தி விட்டீர்கள். நன்றி. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

asan bes- asanbes@gmail.com
அனுப்பிய மின்னஞ்சல்
உங்களின் எழுத்தின் நடை நன்று,உங்களோடு சகபயணியாய் உணருகின்றோம்.அடுத்த
கட்டத்துக்காக காத்திருக்கிறோம்

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

GREAT...BEST WISHES FROM NORWAY!

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

GREAT!

சித்திரவீதிக்காரன் சொன்னது…

பாலை நிலவெளியை உங்கள் பதிவுகளினூடாக தரிசிக்க முடிந்தது. நன்றி.

பெயரில்லா சொன்னது…

ஆ...ன்ற சாலைகளின் விதம்,பொருத்தமான அடுத்த அடுத்த போட்டோக்கள்.
சாலைகளில் அடிபடும் உயிரினங்கள் ஐயோ! ச்சே...பாவம்.
ராஜஸ்தான் என்றாலே இந்த கட்டிடம் தானா? வேற ஒன்னும் இல்லையா?
ஆ..இது பேங்கா! பழைய கால கட்டிடம் மாதிரில இருக்கு.

வணிக இதழ்கள் இந்த பயணக் கட்டுரையை வெளியிடலாம். ஏனோ தோணுது. நல்லா எழுதி இருக்கீங்க மேடம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....