துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.1.13

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-5


பிரபஞ்சனின் பிரும்மம்
‘'தன் அழிவிலிருந்தே ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முருங்கை எனும் பிரும்மம் உணர்த்தும் பாடம் இது.’’


தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சன். தமிழ் வரலாற்று நாவல்களின் வழக்கமான பாணியைத் தன் வானம் வசப்படும்’,’மானுடம் வெல்லும்ஆகிய வேறுபட்ட படைப்புக்களால் மாற்றியமைத்தவர்.சாகித்திய அகாதமி விருது, இலக்கியச்சிந்தனை போன அமைப்புக்களிலிருந்து விருதை வென்றிருக்கும் பிரபஞ்சன், முறையான தமிழ்க்கல்வி பயின்றிருப்பதோடு சமஸ்கிருதமும் அறிந்தவர். முழுநேர எழுத்துப்பணியையே தன்  வாழ்வாக அமைத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சன்,அற்புதமான பல சிறுகதைளையும் எழுதியிருக்கிறார் அவற்றில் ஒன்றான பிரும்மம் பற்றி

புது வீட்டுக்குக் குடி வரும் ஒரு குடும்பத்து இளைஞனின் மன ஓட்டமாக விரிகிறது பிரும்மம். வீட்டின் முன்னாலுள்ள வெற்றிடத்தை எவ்வாறு பயன் கொள்ளலாம் என்பதில் வீட்டு நபர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்கிறார்கள். மாடு வளர்க்கலாம் என்கிறாள் பாட்டி; அம்மா காய்கறித் தோட்டத்தையும்,சகோதரி பூந்தோட்டத்தையும் பரிந்துரைக்க,அப்பாவின் ஆசைப்படி முருங்கைக்கன்று கொண்டுவந்து நடப்பட,அது துளிர்த்துச் செழித்து வீட்டாரின் விருப்பத்துக்குரியதாகிறது.
சமஸ்கிருதம் படித்திருக்கும் இளைஞன் அதை பிரும்ம விருட்சமாகப் பார்க்கிறான். கீரை,காய் என முருங்கையின் அனைத்தும் சிருஷ்டிக்கு உரமாவதால் படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனுக்கு நிகரான விருட்சம் அது என்கிறார் அவனது சமஸ்கிருத வாத்தியார்.

‘’அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவும் எங்களுக்குத் தெரிந்தே நிகழ்ந்தது;உளுத்தம்பொட்டின் அளவான தளிர்,மெல்லிய நரம்பு போல அது விடும் கிளை,பச்சைபட்டாணி போல அதன் இலை,ஊடே ஊடே தோன்றும் அதன் புதிய புதிய தளிர்கள் எல்லாம் எங்கள் கண் முன்பாகவே நிகழ்ந்தன’’என்று படிப்படியான அதன் வளர்ச்சியை விவரித்துக்கொண்டு போகிறான் கதை சொல்லியான அந்த இளைஞன்.
முளை விட்ட பருவம் தொட்டு அந்த முருங்கையை தரிசித்து வருவது போலக் குழவிப்பரும் தொட்டுத் தான் பார்த்து வளர்ந்து வருபவளான  தன் சகோதரியின் வளர்ச்சியையும், அந்த முருங்கையின் வளர்ச்சியையும் சேர்த்து ஒப்பிட்டபடி, வியந்து போகிறது அவன் மனம்.

வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அந்த முருங்கை ஈர்க்கிறது. பிறரோடு அதிகம் பழகாமல் இருந்த அம்மாவுக்கு அதன்  கீரையையும்,காயையும் வேண்டி அவளை நாடி வரும் தோழியர் கூட்டம் அதிகரிக்கிறது. தேனாக இனிக்கும் முருங்கைக் கீரையையும்,மதுரமாய்ச்சுவைக்கும் காயையும் பாராட்டி விட்டுச் செல்ல அவர்கள் தவறுவதே இல்லை. அப்பாவும் மகனும் மர நிழலில் சைக்கிளை நிறுத்தி வைக்கிறார்கள். மகன் எழுதுவதும்,படிப்பதும்,ராம சப்தம் பயில்வதும் மரத்தடியிலேதான் நிகழ்கிறது. அவனது எழுத்தின் சிருஷ்டி நிகழ்வதும் கூட பிரம்ம விருட்சமான அதன் நிழலிலேதான். கூடிழந்து திரியும் பறவைகளுக்கு அது புகலிடம் ஆகிறது.

ஒரு நாள் சட்டென்று வீசிய மழைக்காற்றின் சூறாவளியில் மரம் சரிந்து அந்த இடம் சூனியமாகிறது. முருங்கை மரம் அவ்வாறு அழிந்து போனது, குடும்பத்தாரைக் கடுமையாகத் தாக்குகிறது. சில நாட்களுக்குப் பிறகு...
கதை சொல்லி, காப்பி தம்ளரோடு சென்று தன் வழக்கப்படி முருங்கை இருந்த இடத்தருகே நிற்க அவனை ஆச்சரியப்படுத்தும் வகையில் துண்டாகி நின்ற மரத்திலிருந்து ஒரு இடத்தில் சின்னதாய்க் கிளைத்திருக்கிறது.
‘’உயிர்தான்!
என ஒற்றைச்சொல்லோடு கதை முடிகிறது. 

உயிர் என்னும் ஆத்மாவுக்கு என்றும் அழிவில்லை என்னும் மிகப் பெரிய தத்துவத்தை- மானுட வாழ்வில் எதுவானாலும் அதற்கு ஒரு புத்துயிர்ப்பு உண்டு என்னும் நம்பிக்கையூட்டும் மாபெரும் உண்மை ஒன்றை ஜீவவிருட்சமான முருங்கையை முன்வைத்துச் சொல்லும் இந்தக்கதையை,
‘’கடந்த பல வருஷங்களில் இது போன்ற கதை மலர்ந்ததே இல்லை’’என்று 1983இல் மதிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு [தி ஜாவின் நெருங்கிய நண்பர் இவர்].
‘’பாஸிட்டிவான எதோடும் பொருத்திப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வைக்கிற கம்பீரமான முடிவு
என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்

மானுட வாழ்வில் சோர்ந்து விடச்செய்யும் தருணங்கள் வந்தாலும் புதிய நம்பிக்கை கொள்ள வைக்கும் சாத்தியங்களும் கூடவே உண்டு
’’என்னைப்புதிய உயிர் ஆக்கி..’’என்று பாரதி சொல்வது போலத் தன் சாம்பலிலிருந்து தன்னை உயிர்ப்பித்துக்கொள்ளும் ஃபீனிக்ஸ் பறவையைப்  போலத் தன் அழிவிலிருந்தே ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முருங்கை எனும் பிரும்மம் உணர்த்தும் பாடம் இது.
இணைப்புக்கள்;

பின் குறிப்பாக...ஒரு கூடுதல் தகவல்...
ஜேடி-ஜெர்ரி  அறக்கட்டளை சார்பில், இலக்கியப்படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சாரல் விருதை  இந்த ஆண்டு  பெறவிருக்கும் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்.
(விழா ஜனவரி 26 சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது).


[இது வரை இவ் விருதைப் பெற்றிருப்பவர்கள்: 
2009- திலீப்குமார் 
2010- ஞானக்கூத்தன் 
2011-அசோகமித்திரன் 
2012-வண்ணநிலவன், வண்ணதாசன்]


1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

பிரும்மம் – பிரபஞ்சன்,
சிறுகதை மனதிற்கு இதமாக இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....