இன்று ஒரு துக்க நாள்...
அழுகிய சமூகத்தின் கொடூரமான வக்கிரப்பிடியில் கருகிய, இரு மலர்களாய் ஸ்வாதியும் வினுப்பிரியாவும் முன் நிற்க .... காலை முதல் ஏதும் செய்யத் தோன்றாமல் மரத்துக்கிடக்கிறது மனம்;உறைந்து நிற்கின்றன உணர்வுகள்.
கொலை,தற்கொலை இவற்றைவிடவும்கொடூரம்; ஸ்வாதியை நெட்டைமரங்களெனப் பல மணிகள் , கண்ணெடுக்காமல் விட்டுச்சென்றதும் எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கும் குரூர வக்கிரமாய் வினுபிரியாவின் தந்தையிடம் செல்லிடப்பேசியை பேரம் பேசிய காவலரின் அற்பத்தனமுமே.
ஒரு கொலை; ஒரு தற்கொலை![தினமணி தலையங்கம்]
.’’’ஊமை சனங்களடி!’’என்ற பாரதிவாக்கில்தான் எத்தனை உள்ளொளி !
நான் கல்லூரிப் பேராசிரியராகப்பணியாற்றிய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி இறுதி [ இளங்கலை இறுதி வகுப்பு முதல் முனைவர்பட்டம் வரை ] முடிக்கும் மாணவியரைத் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியைக் கல்லூரியின் கடைசி நாளன்று பெற்ற பின்பே அவர்களை வழியனுப்பி வைப்பது என் வழக்கம்.’’வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் தோன்றக்கூடும் அந்தவகை எதிர்மறைச்சிந்தனையின்போது ஒரே ஒரு நொடி கண் மூடி வகுப்பறையில் நான் கேட்ட வரத்தை நினைவில் கொள்ளுங்கள்’’போதும்’’ என்பேன். வகுப்பேநெகிழ்ந்து கண்ணில்நீர் சொரிந்து நிற்கும் புனிதக் கணம் அது. அவர்கள் அந்தத் தூய கணத்தை நினைவுகூரும் அந்த ஒரு நொடிக்குள் மரணத்தின் பாதையிலிருந்து, அவர்களின் மனம் விலகி விடக்கூடும் என்ற எண்ணமும் குறைந்த பட்சம் என் மீது வைத்திருக்கும் அன்பினால் அவர்கள் அதை ஏற்கக்கூடும் என்னும் நம்பிக்கையுமே என்னை அதை நோக்கி இயக்கியவை. சமூக ஊடகங்கள் அதிகம் மலிந்து போகாத அந்தக்காலகட்டத்திலேயே ,ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாணவியின் தற்கொலை ஏதேனும் ஒரு காரணத்துக்காகநிகழ்ந்து, ஒவ்வொரு மலராய் உதிரும் சோகத்தை மௌனசாட்சியாகக் கண்டு மனம் நொந்த நான் அந்தப்பணியை ஒரு மாறாக்கடமையாகவே செய்து வந்தேன்... இப்போதும் அது குறித்து மாணவியர் கடிதங்கள் எனக்கு வருவதுண்டு,
அதனாலேயே மனம் மிக வலிக்கிறது...இது தொடர்பாக நான் பேசுவதை விடவும் ,இது தொடர்பாக இன்று விடியலில் என் வாசகி ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சலைப்பகிர்வது மேலும் பொருத்தமாக இருக்கக்கூடும்.என்று எனக்குப்படுகிறது.
அடுத்த தலைமுறையின் சிந்தனை வேகம் இன்னும் கூட வீரியம் மிக்கது என்ற எண்ணத்தோடு அந்தப்பகிர்வு...
பள்ளி மாணவியின் சுய மரணம் குறித்து....
வாசகியின் வார்த்தைகளில்....
சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு ஆபாச புகைப்படம் காரணம் பள்ளி மாணவி செய்து கொண்ட தற்கொலை குறித்துத் தாங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். என் கல்லுரிப் பருவத்தில், ஒரு தினம் என் அம்மாவிடம் ஒரு பெண்மணி வந்து,
"உங்க பொண்ணு காலேஜ் போகாம மலைல திரியறதா ஒரு பேச்சு இருக்கே?" என்று வம்பு விசாரித்தார்.
என் அம்மா பொதுவாக சற்று பயந்த சுபாவம் கொண்ட அமைதியான பெண்மணி. வம்பு பேசிய பெண்ணிடம்
"அப்பிடித்தான் ஊர் சுத்துவா, உங்களுக்கு என்ன வந்துது?" என்று கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
நான் அம்மாவிடம், நீ என்னை அல்லவா கோபிக்க வேண்டும் என்று கேட்டேன். குறைந்தபட்சம், முண்டன்துறைப் பகுதிக்குப் போனேனா என்றாவது விசாரிக்க வேண்டும் என்றேன்.
"சோலி இல்லை?" என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க நகர்ந்தார். அம்மாவிடம் என்னைக் குறித்து என்று இல்லை, எந்த ஒரு பெண்ணைக் குறித்தும் இத்தகைய வம்பு பேசி யாராலும் ஜெயிக்க இயலாது.
(இப்பொழுது அம்மாவுக்கு வயது எம்பது ஆகிறது. கொஞ்சம் பலஹீனமாகி இருந்தாலும், இந்த சுபாவம் மாத்திரம் மாறவில்லை.)
பிறகு ஒரு தினம் வம்பு விசாரித்த பெண்மணியின் மகள் ஏதோ வம்பில் மாட்டிக் கையும் களவுமாக பிடிபட நேர்ந்தது. அக்கம் பக்கம் எல்லாம் அவமானம் செய்யும்பொழுது அம்மாதான், அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தியது. நடந்ததை மறந்து விட்டு படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்தும்படி, என்னோடு படிக்கும் அந்தப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண்ணின் அம்மாவிடமும், சொந்தக் குழந்தையைப்புரிந்து கொண்டால் பிறத்தியார் குழந்தை மீதும் நம்பிக்கை வரும் என்று கேட்டுக் கொண்டார். என் தந்தையும் அம்மாவின் அதே மனநிலை கொண்டவராகத்தான் இருந்தார். ஆகையால் என்னால் படிப்பிலும், வாசிப்பிலும் கவனம் செலுத்த முடிந்தது. மதுரை காமராசர் பல்கலையில் முதல் ஆறு ராங்குக்குள் இளங்கலை அறிவியலில் மதிப்பெண் வாங்கி ஜெயித்து மேலே மேலே என்று படிக்க முடிந்தது. பாடத்துக்கு வெளியேயும் நிறைய வாசிக்க முடிந்தது.
மேடம், நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். என் அம்மா போன்ற ஒரு கிராமத்துப் பெண்மணிக்கு இந்த மனநிலை இருக்கிறது. தேவையற்ற வம்புகள், சுவர் கிறுக்கல் இதெல்லாம் ஒதுக்கித்த தள்ள வேண்டிய விஷயம் என்று. ஒரு வசதியும் இல்லாத பின்தங்கிய மலையோர தமிழக கிராமத்தில் இது சாத்தியம் என்றால் தகவல் தொடர்பு உலகத்தில் இது மேலும் அல்லவா சாத்தியமாகி இருக்க வேண்டும்? ஒரு மாணவனை சிறுநீர் கழிக்கும்பொழுது படம் பிடித்துப் போட்டால் அவன் கவலைப் படுவதில்லை. மாணவி மாத்திரம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்?
நான் என் சொந்தக்காரக் குழந்தைகளுக்கு இந்த வேண்டுகோளை விடுத்து இருக்கிறேன்.
பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு வேண்டுகோள்:
இணையத்தில் வெளியாகும் திருட்டு போட்டோவைக் கண்டெல்லாம் பயப்படாதீர்கள். உங்கள் உடல் ஊராருக்கு காட்டப்படுவது அவமானம் அல்ல என்று உணருங்கள். உடலே ஒரு ரசாயனம்தான். ஆகவே புரோட்டீனும், கார்போஹைட்ரேட்டும் படம் பிடித்துப் போடும்பொழுது யாராவது அவமானப் படுவார்களா? இருப்பினும், உடலை உடல் என்றே உணரும்பட்சத்தில், நீங்கள் இந்த அத்து மீறலை அனுமதிக்காதீர்கள். உங்கள் முகமோ அல்லது முகத்தோடு சேர்ந்து உடலோ, தரக்குறைவான புகைப்படங்களாக வெளியிடப்பட்டால், அது குறித்து முதலில் காவல் துறைக்கு புகார் அளியுங்கள். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில்,மேல் முறையீடு, ஊடகம் என்று செல்லுங்கள். திருடனுக்குப் பாடம் கற்பித்து உங்களைப் போன்ற மற்ற பெண்களைக் காப்பதில் உங்களுக்கே ஒரு மனநிறைவு வருகிறதா இல்லையா என்று பாருங்கள்.
உங்கள் உடல் உறுப்பு சம்பந்தப் பட்ட தரக்குறைவான புகைப்படமோ, காணொளியோ இணையத்தில் வெளியிடப்பட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வது குறித்து பயந்து நடவடிக்கை எடுப்பதெல்லாம் சினிமா கதை. நிலவரம் அப்படி அல்ல. நிலவரம் அப்படியே ஆனாலும் சமூக வலைத்தள யுகத்தில் நிலவரம் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நீங்கள், அசிங்க புகைப்படம், கக்கூஸ் சுவர் கிறுக்கல் இவற்றிற்கெல்லாம் பயந்து தற்கொலை செய்வதோ, அல்லது சக்கைப்போடு போட்டு தமிழ் தொடங்கி இந்திய மொழிகளில் பலவற்றிலும் வெளியான த்ரிஷ்யம் என்ற மலையாள சினிமாவின் தந்தை போல் கொலையை மறைத்து, காவல் துறையை மாட்டவைப்பதோதான் அவமானம், அசிங்கம். குழந்தைகளே விழித்தெழுங்கள்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக