துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.5.09

நைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்


ஜோதிர் லிங்கத் தலங்கள் பன்னிரண்டில் ஒன்றாகக் கருதப்படுவது , உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவிலிருந்து 36 கி.மீ.வடகிழக்காக அமைந்திருக்கும் ஜாகேஷ்வர். கடல் மட்டத்திலிருந்து 1870 மீட்டர் உயரத்தில் , ஜடகங்கா பள்ளத்தாக்குப் பகுதியில் ,தேவதாரு மரங்கள் அடர்ந்து செறிந்துள்ள வனப் பகுதியிலிருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்வதென்பது , பத்ரிநாத் ,கேதார்நாத் புனிதப்பயணங்களுக்கு இணையாகக் கருதப்படும் பெருமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
முந்தைய நாட்களில் ,மானசரோவர்,கைலாச யாத்திரை செல்பவர்கள் , ஜாகேஷ்வர் வழியாகவே சென்றிருக்கிறார்கள். கைலாசப் பயணத்திற்குப் பல வரையறைகளும் , கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுவிட்ட இன்றைய சூழலில் அந்தப் பாதையும் கூட வேறு வழியக மாறிப் போய்விட்டது.

பெரியதும் ,சிறியதுமான 124 கற்கோயில்களை உள்ளடக்கி இருப்பது ஜாகேஷ்வர்.
பிரமிட் வடிவம் கொண்டவையும் ,பூரி ஜகன்னாதர் ஆலயம் போன்ற வடிவமைப்புக் கொண்டவையுமான கட்டமைப்புடன் தண்டேஷ்வர் , சண்டிகா ,ஜாகேஷ்வர் ,குபேர் ,மிருதுஞ்சயர் , நவதுர்க்கை , நவக்கிரகம் ,சூரியன் ஆகிய பல கடவுளர்களுக்கான கோயில்கள் இவ் வளாகத்தில் அமைந்திருக்கின்றன.இவற்றுள் மிகப்பெரியது , தண்டேஷ்வரருடையது ; மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது மிருத்யுஞ்சயருடையது.

ஜாகேஷ்வர் கோயிலின் பலவகைத் தோற்றங்கள்




ஆதி சங்கரர் கேதார்நாத்திற்குத் தன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டபோது , இக் கோயிலுக்கு வருகை புரிந்து புனருத்தாரணமும் செய்ததற்கான குறிப்புக் கிடைக்கிறது.

இக் கோயில்கள் கட்டப்பட்ட காலம் குறித்த ஆதார பூர்வமான - உறுதியான தகவல்கள் சரிவரக் கிடைக்காதபோதும் ,கி.மு.9 முதல் கி.மு.13க்குட்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக எண்ணப்பட்டுத் தொல்லியல் துறையால் 'புராதனச் சின்ன'மாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஆனால் புராதனச் சின்னம் என்பதைக் குறிப்பிடும் தொல்லியல் துறையின் கல்வெட்டு ஒன்றைத் தவிர - அப்படிப்பட்ட பராமரிப்புக்கும் , பாதுகாப்புக்கும் இப் புனிதத் தலம் உட்பட்டிருப்பதற்கான தடயங்கள் எதுவுமில்லை . ஆலய வளாகம் அடிப்படைத் தூய்மை கூட அற்றதாகப் புழுதி மண்டிக் குப்பைக் குவியலுக்கு நடுவில் இருப்பது , காணச் சகிக்காத ஒரு காட்சி.

1000 ஆண்டுப் பழமை உடையதாகச் சொல்லப்பட்ட தேவதாரு மரம் ஒன்றை ஆலயச் சுற்றுக்குள் நாங்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சிதிலமான கற்குவியல்கள் மீது அமர்ந்தபடி , கோணல் சிரிப்போடும் , புகை வாயோடும் (கஞ்சா!?)
எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சில காவி உடைப் பரதேசிகள்.(ஒரு வேளை ...இதுதான் அவர்களின் மாற்றுக் கலாச்சாரக் கலகக் குரலோ?).

காசிக்குப் போனால் எதையாவது விட்டு விட வேண்டுமென்பது ஒரு சம்பிரதாயமாம் . காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் போகும் வழியைப் பார்க்கும்போது காசிக்கு வந்ததன் அடையாளமாகப் பக்தியையே விட்டுவிட வேண்டும் போலிருக்கிறது என்று என் தோழி ஒருத்தி சொன்னது ஜாகேஷ்வருக்கும் கூடப் பொருத்தமானதாகவே எனக்குத் தோன்றியது.

1 கருத்து :

வடுவூர் குமார் சொன்னது…

ஆதிசங்கரர் கி.மு. 3 ம் நூற்றாண்டு (இதுவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தான்)என்று படித்த ஞாபகம்.
எங்களை 1870 மீ உயரத்துக்கு கூட்டிப்போனதற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....