துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.9.12

இழப்புகள்..எதிர்பார்ப்புகள்...



ஸ்கூல் விடுகிற நேரம் இந்த மழைக்கு எப்படித்தான் இவ்வளவு கணக்காகத் தெரிகிறதோ?தினமும் நாலரைக்கு ‘பெல்’அடிக்க வேண்டியதுதான்! என்னவோ தனக்காகவே அது அடிக்கப்படுகிற மாதிரியல்லவா நினைத்துக் கொள்கிறது?

எப்படியோ..கடந்த மூன்று நாட்களாக உமா ஒரு மாதிரி தப்பி விடுகிறாள்.ஒரு நாள் கிருஷ்ண ஜெயந்தியை சாக்குக் காட்டி மூன்று மணிக்கெல்லாம் பர்மிஷன் போட்டாயிற்று.சென்ற இரு நாட்களும் இன்னொரு ஸ்கூலில் ஆசிரியர் கூட்டம் இருந்ததால் இரண்டு மணிகுப் போய்விட்டு நாலு மணிக்கே அங்கிருந்து விடுபட்டு பஸ்ஸ்டாண்டுக்கு வந்து விட முடிந்தது.


இன்றைக்கு வேறு வழியில்லை.மழையில் அகப்பட்டுக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் வரை நடந்துதான் ஆக வேண்டும்;நனைவதைப்பற்றிக் கூட அவளுக்குக் கவலையில்லை.குடை இருக்கிறது;முழுக்க நனையாமல் முக்காடு அளவுக்காவது காப்பாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு கையால் புடவையை லேசாக உயர்த்திப் பிடித்துக் கொண்டு,அதே கையால் திருத்துவதற்குக் கொண்டுபோகிற நோட்டுப் புத்தகங்களும்,டிஃபன்பாக்ஸும் கனம் தாளாமல் பிதுங்கி அழுத்துகிற ...அவளே பார்த்துப் பார்த்துப் பின்னிய அந்த ஒயர்கூடையையும் சுமந்து கொண்டு மற்றொரு கையில் குடையைப்பிடித்தபடி மதுரை வீதிகளில் ஆறாக ஓடும் முழங்காலளவு நீரில் ..தேர்ந்த ஒரு சர்க்கஸ் வித்தைக்காரியைப்போல பாலன்ஸ் செய்து நடப்பதை உமா ஒன்றும் அறியாதவளல்ல.அது கூட அவளுக்குப் பிரச்சினை இல்லை.

ஆனால்..அந்தச் செருப்புக்கள்..! மூன்றுமாதமாக பட்ஜெட்டில் இடமில்லாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து ஒவ்வொரு காதும் அறுந்து போகும்போது சில்லறைக்காசுகளால் ரிப்பேர் செய்து வைத்துக் கொண்டிருந்த அந்தப்பழைய செருப்புகள்’இனிமேல் உனக்காக உழைக்க எங்களிடம் திராணியில்லை’என்று ஒரேயடியாக உயிர்மூச்சை விட்ட பிற்பாடு,...இந்த மாதம் ரூ.11.95ஐ [கதைநிகழ்காலம் ‘70கள் என்பதை வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்க] அதற்காகவே திட்டம் போட்டு ஒதுக்கி வைத்து ஸ்கூலில் சம்பளம் தந்த அதே நாளில் ...எங்கே ஒரு நாளைத் தள்ளிப்போட்டாலும் கூட மனம் மாறிவிடப்போகிறதோ என்ற பயத்தில் ஆசையுடன் வாங்கிய அந்தச் செருப்புகள்..!

பிரவுன் கலர் லைனிங் கொடுத்திருக்கும் அந்த வெள்ளை நிற சாண்டாக் செருப்புகள் அவள் காலில் ஏறியபோது என்னவோ ஒரு பெரிய சிகரத்தையே எட்டிப் பிடித்து விட்ட சாதனையைப்போலல்லவா அது தோன்றியது...இனிமேல் செருப்புக் கிழிசலை மறைக்கப் புடவையைத் தழையத் தழையக் கட்டிக் கொண்டு அழுக்காகி விட்ட ஓரப்பகுதியை ஒரு மணி நேரம் உட்கார்ந்து கசக்கித் துவைக்க வேண்டாம். வகுப்புக்குக் கிளம்புகிற நேரத்தில் செருப்பின் ‘வார்’அறுந்து போய்விட ,வகுப்புக்கு வெறுங்காலுடன் போகக் கூச்சப்பட்டுக் கொண்டு சக ஆசிரியைகளிடம் ஒரு மணிநேரச் செருப்பு இரவல் கேட்டுக் கொண்டு நிற்க வேண்டாம்...

உமா தன் கால்களை ஒருமுறை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டாள்.சனியன் பிடித்த மழை!ஸ்கூலிலிருந்து கிளம்புகிறபோதே இவ்வளவு தூரம் வலுக்கும் என்று தெரிந்திருந்தால் அங்கேயே கழற்றிப்போட்டு விட்டு வெறுங்காலோடாவது வந்திருக்கலாம்.

தயிர்க்காரிகளும்,காய்கறிக்கூடைக்காரர்களும் செருப்பு ஜோடியைக் கூடையில் செருகி வைத்துவிட்டு வெறுங்காலோடு செல்வதை உமா நிறையவே பார்த்திருக்கிறாள்.அப்படிச் செய்வதற்கு அவள் கூடையில் இடம் இல்லை.அப்படியே இருந்தாலும் சாப்பாட்டு டப்பாவோடும்,சரஸ்வதியாக நினைத்துக் கொண்டிருக்கும் புத்தகக் கட்டுக்களோடும் என்னதான் கூடுதல் விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் அதைச் சேர்த்து வைக்க அவளுக்கு மனமுமில்லை.

மதுரையில் நடக்கப்போகிற மாநாட்டுக்காகத் தெரு ஓரங்களில் தோண்டிப்போட்டிருக்கிற பள்ளங்களில் விழுந்து விடாமலிருக்க வீதியின் நடுவாகவே அவள் நடந்து போகிறாள்.வாகனங்கள் அவ்வப்போது அசுரத்தனமாக வாரிஅடிக்கும் செந்நீர் அவளை முழுவதுமாய் அபிஷேகம் செய்கிறது.இதோ..அதோ என்று டவுன் ஹால் ரோடை நெருங்கியாயிற்று.மழை மிக வலுக்கிறது.

***********************************************************************
’’ராக்கு ! அட உன்னத்தான் புள்ளை ..என்ன இந்த ஓட்டம் ஓடறே...மளையிலே வளுக்கி விளுந்து மூஞ்சி மோரையெல்லாம் பேத்துக்கப்போறே..’’

‘’உனக்கென்னடி பொன்னி..நீ பேசுவே...எங்காத்தா வூட்டிலே சீக்கோட மொனகிக்கிட்டுக் கெடக்கும்.ரவைக்குச் சோறாக்கி வைக்கலேன்னா எங்கப்பன் வேற குடிச்சிட்டு வந்து அதைப் பின்னி எடுத்துறுவான்....நானும் என் தம்பிங்க ரெண்டு பேரும் வேலை பாத்து இன்னிக்குக் கெடச்சிருக்கிற கூலியிலேதான் அரிசியும் ,வெஞ்சனமும் வாங்கி அடுப்பு மூட்டி ஒலை வைக்கணும்’’

‘’சரி சரி..ஒன்னோட பிலாக்கணத்தை ஆரம்பிச்சிராதே. நீ மளையைத் தாங்கிருவே...இந்தப் பச்சப் புள்ளைங்க எப்படி நடுங்குது பாரு...மானம் என்னடான்னா பொத்துக்கிட்டுக் கொட்டுது.அந்தக் கடை வாசலிலே ஒரு திண்ணை இருக்கு பாரு..அந்தால போயி சத்தே குந்தி இருந்திட்டுக் கொஞ்ச நேரஞ்சென்னு போவோம்..’’

அந்தக்கடை வாசலில் மழைக்காக ஒதுங்கியிருக்கும் ராக்குவின் கண்கள் ஷோகேஸில் அடுக்கியிருக்கும் வண்ணமயமான செருப்புக்களில் கலர்க்கனவுகளாய் லயிக்கின்றன.


ஒவ்வொரு ஜோடிச் செருப்புடனும் திரைப்படங்களில் வரும் ஸ்லோமோஷன் கதாநாயகியாக மானசீக நடை போடுகிறாள்.ஹைஹீல்ஸ் கற்பனை அவளை ஒருகணம் குப்புறச் சரித்து விட....தன்னையும் மறந்து குலுங்கிச் சிரித்து விடுகிறாள்.

‘’தா..என்ன புள்ளே சிரிப்பு....இது என்ன வீதியா இல்லே ஒங்க வீடா...’’என்று உரிமையாகக்கடிந்து கொள்ளும்பொன்னியின் வார்த்தைகளுக்குக் கூட அவள் கனவுகளைக் கலைக்கும் வல்லமை இல்லாமல் போகிறது.லெதர் செருப்பின் இதமான சூடு,ஹவாயின் பதிகிற மென்மை அத்தனையும் மனதில் அனுபவித்துத் தெளிந்த பின்னர் அவள் பார்வை, குறிப்பிட்ட அந்த ஜோடிச் செருப்பில்  படிகிறது.அதை அவள் தனக்காகத் தேர்ந்தெடுக்கிற அந்தக்கணத்தில்....

‘’என்னா ராக்கு ...மளை விட்டுப்போச்சு...வேடிக்கை பாத்தது போதும் வா’’என்று ஒலிக்கும் பொன்னியின் குரல் அவளை இந்த உலகுக்கு இழுத்து வர,இருவருமாய் பஸ் பிடிக்க விரைகிறார்கள்.
************************************************************** *********

தெருக்களில் ஓடும் மழைநீர் ஆறெல்லாம் ஒன்று கலக்கிற மகாசமுத்திரமாக ’ஹோ’வென்ற பேரிரைச்சலுடன் அலைமோதிக்கொண்டிருக்கிற மதுரை செண்ட்ரல் பஸ்ஸ்டாண்டுக்கு ...உமா ஒரு வழியாக வந்து சேர்ந்து விடுகிறாள்.ஒரு காலைப்பூமியில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு,அடுத்த காலைக்கவனமாகப் பெயர்த்து வைப்பதற்குப் படும் பாட்டில்,சந்திர மண்டலத்தில் நடந்தவர்களெல்லாம் என்ன மகாப் பெரிய சாதனையைச் செய்து விட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது அவளுக்கு.கிளம்புவதற்கு ஆயத்தமாக நின்று கொண்டிருக்கும் 29-ஏ பஸ்ஸில் தெய்வ தரிசனமே கிடைத்து விட்டதைப்போல வண்டிக்கு முன்புறமாய் முண்டியடிக்கும் பெண்கள் கூட்டத்தில் தானும் ஒருத்தியாய்ச் சங்கமிக்கிறாள்.

குடை,கூடை,புடவை அத்தனையும் இடது கையில் இடுக்கிக் கொண்டு வலது கையால் பஸ்ஸின் கைப்பிடியைப் பற்றிய வண்ணம் ஒரு காலைத் தூக்கிப் படியில் வைக்கிறாள்.பூமியில் புதையும் சேற்றின் அழுத்தத்திலிருந்து அடுத்த காலை விடுவித்துக் கொள்ளும் வேகத்தில் அழுத்தம் லேசாகிக் காலிலிருந்து விடுபட்டுச் செருப்பு மிதக்க ஆரம்பிக்கிறது.ஒரு கணம் கைப்பிடியைக் கூட விட்டு விட்டு அதைப்பற்றுவதற்காகப் பாய்ந்து முன்னே சாயும்போது எங்கிருந்தோ வந்து மோதிய சாக்கடை அலை ஒன்று அதை வேகமாக அடித்துச் செல்கிறது.

ஒரு கால் படியிலும்,மறுகால் அந்தரத்திலுமாக உமா தத்தளிக்கிற நேரத்தில் டிரைவர் இஞ்சினை ஸ்டார்ட் செய்கிறார்.அப்பொழுதுதான் மூச்சிரைக்க ஓடி வந்த கூடைக்காரி ஒருத்தி இடுப்புச் சுமை தாங்காமல் அவள் விலாவில் இடிக்கிறாள்.
‘’என்னம்மா இது..ஒண்ணுலே ஏறு...இல்லாங்காட்டி எறங்கு..வாசலை அடைச்சுக்கிட்டு இப்படி நின்னா..’’

இன்னும் காது கொண்டு கேட்க முடியாத வார்த்தைப்பிரயோகங்களில் வசை அங்கே விநியோகமாகிறது.

கண்டக்டர் விசில் கொடுக்கிறார்.
இனியும் யோசிக்கப்பொழுதில்லை.சடாரென்று பஸ்ஸுக்குள் பாயும் உமா ஹேண்டில் பாரைப்பிடித்துக் கொண்டு தொங்குகிறாள்.மணி இப்போதே ஏழரை.விளாங்குடி போய்ச்சேர எப்படியும் எட்டாகி விடும்.பிறகு அவள் கொஞ்ச நேரம் இருட்டில் தனியாக வேறு நடந்து போக வேண்டும்.

பஸ்ஸைக் கோட்டை விட்டு விட்டுக் கொட்டுகிற மழையில் மூழ்கடிக்கிற நீர்மட்டத்தில் நின்று கொண்டு அளைந்தாலும் நீரோட்ட வேகத்தில் அது இந்நேரம் எங்கே போயிருக்குமோ?

பஸ் உறுமிக்கொண்டு கிளம்புகிறது..
********************************************************************

17ஆம் நம்பர் பஸ் ஸ்டாப்பில் ஈக்களும் கொசுக்களும் ஏற்கனவே ருசி பார்த்து வைத்திருக்கிற பிளாட்பாரத்து முறுக்குகளைத் தம்பிகளுக்கு வாங்கிக் கொடுத்து விட்டுத் தானும் ஒன்றைச் சுவாரசியமாகக் கடித்துக்கொண்டிருக்கும் ராக்குவின் கால்களில் தரை தட்டிக் கரை சேர்கிறது அது.
‘’ஹை..செருப்பு..’’

அதை எடுக்கிற ஆர்வத்தில் முறுக்கு கைநழுவிப்போனது கூட அவளுக்குத் தெரியவில்லை.இடது காலில் நிதானமாக அதைப்போட்டுக் கொண்டு திருப்பித் திருப்பிப் பார்க்கிறாள்.பாந்தப்பதிய...அது அவளுக்கு அழகாய்த்தானிருக்கிறது.ஒரு காலுக்கு மட்டும் போட்டுக் கொண்டிருக்கிறோமே என்கிற கூச்ச உணர்வுகளெல்லாம் இல்லாதவளாய் அந்தச் செருப்போடு சிறிது நேரம் ஒயில் நடை பயில்கிறாள்.

‘’இந்தப் புள்ளைக்கு ஆசையப்பாரு..’’
பொன்னி கைகளை வாயில் பொத்திக்கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறாள்.

அக்காவின் புதுக்கோலம் அந்தப்பச்சைப்பிள்ளைகளுக்குக் கூட வியப்பூட்டியிருக்க வேண்டும்.பொன்னியின் கிண்டலில் அவர்களும் பங்குபெறத் தொடங்குகிறார்கள்.
‘’யக்கோவ்...அதோ அங்ஙனே சோடிச்செருப்பு மெதக்குது பாரு..’’

அப்போதுதான் அந்த இன்னொரு செருப்புப் பற்றிய பிரக்ஞையே வரப்பெற்றவளாய் அந்தத் திசையை ஆவலுடன் நோக்கும் ராக்குவின் கண்கள் அங்கு மிதந்து வரும் பலகாரம் சுற்றுகிற வெற்றுத் தாளைக் கண்டு கூம்பிப்போகின்றன.ஆளுக்கொரு அடியென்று தம்பிகளை வெளுத்தெடுக்கிறாள்.தூக்குச் சட்டியைக் கீழே இறக்கி வைத்தவள் இடுப்புச் சேலையை உயர்த்திச் செருகிக் கொண்டு பிளாட்பாரத்தில் முதல் கோடி முதல் மறு கோடி வரை இரு கைகளாலும் துழாவுகிறாள்.

‘’ஒனக்கென்ன பயித்தியம் புடிச்சிடுச்சா புள்ளே...நாளைக்கே’ஜன்னி’கண்டா...வேலைக்குப் போய் ஆக்கிப் போடறது யாரு..’’

பொன்னியின் சொற்களால் ராக்குவின் நிஷ்காம்ய கர்மம் கலையவில்லை.17ஆம் நம்பர் பேருந்தில் ஏறுகிறபோது கூட அந்த ஒற்றைச் செருப்பைத் தன் முந்தானையில் சர்வ ஜாக்கிரதையாய் முடிந்து கொண்டு போகிறாள் அவள்.
******************************************************************

விளாங்குடி ஸ்டேஷன் ஸ்டாப்பில் இறங்கிக் கரிசல்குளம் கிராமத்துக்குப் போகிற பாதையில் உமா நடந்து கொண்டிருக்கிறாள்.,ஒற்றைச் செருப்பு நடையின் வேகத்தைத் தடுக்கிறது.இதை வீட்டுக்குக் கொண்டு போய் என்ன செய்வது...பார்க்கிறபோதெல்லாம் அதன் விலை வேறு மனசில் ஒரு உறுத்தலாய் நெருடிக்கொண்டே இருக்கும்.குனிந்து அதைக்கழற்றியவள் வயற்காட்டில் வீசி எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வேகமாய் நடக்கிறாள்.

கிட்டத்தட்ட அதே நேரத்தில்....பஸ்ஸ்டாண்டில் மீண்டும் அலையடிக்கும்போது அந்த மற்றொரு செருப்பும் கரை சேரக்கூடும் என்ற நம்பிக்கையோடு அந்த ஒற்றைச் செருப்பைத் தன் குடிசை எரவாணத்தில் செருகி வைக்கிறாள் ராக்கு.

[’கல்கி’இதழ்-6.01.1980]

பி.கு;
குறிப்பிட்ட இந்தக்கதையின் பின்னணியையும் அதை இப்போது இங்கே வெளிடுவதற்கான காரணத்தையும் இங்கே சற்று பகிர்ந்து கொள்ள விருப்பம்...

என் முதல் சிறுகதை 1979இல் வெளியான பின்பு,எதைப் பார்த்தாலும் அதில் ஒரு கதையைக் காணும் எழுச்சி மேலோங்கி நின்ற மனநிலைக்கு நான் ஆட்பட்டிருந்தேன். ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த ஒரு பின் மாலைப்பொழுதில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஒரு பஸ்ஸுக்குள் நான் உட்கார்ந்திருக்க சுற்றிலும் பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது.மதுரைக் கோயிலைச் சுற்றி உள்ள சில தெருக்கள் தவிர மதுரை நகரின் வெளி வீதிகள்,சந்துகள் பலவும் அகழியாக இருந்து பிறகு துர்ர்க்கப்பட்டவை என்பதால் தாழ்வான அந்தப் பகுதிகளில் நீர் விரைவில் வடியாமல் இடுப்பளவு தேங்கி நிற்கும்;மனிதர்களும்,வாகனங்களும் அதில் நீச்சலடித்துக் கொண்டுதான் போயாக வேண்டும்.பேருந்தில் இருந்தபடி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது...வெள்ளமாக ஓடும் மழை நீரில் மிதந்து வரும் சில செருப்புக்கள் கண்ணில் பட்டன;அதே வேளையில் கட்டிட வேலை முடிந்து திரும்பும் சில சிற்றாள் பெண்களும் பார்வையில் பட்டு விட....இரண்டும் ஒருங்கிணைந்து இந்தக்கதையாக உருப்பெற்றது. இதை எழுதியபோது ஒரு செருப்பை வைத்து எழுதிய சாதாரணமான ஒரு கதையான இது, எப்படி எதிர்கொள்ளப்படப்போகிறதோ என்று நான் நினைத்ததற்கு மாறாக எல்லோராலும் இது வரவேற்கப்பட்டது;காரணம் கதையின் எளிமையும் நேரடித் தன்மையும் மட்டுமல்ல;இதே போன்றதொரு அனுபவம் பலருக்கும் நேர வாய்ப்பிருக்கிறது என்பதும்தான்.

மிக அண்மையில் தில்லியில் வசிக்கும் மூத்த பெண் எழுத்தாளராகிய ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.அவர் இந்தக் கதையை ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு பாராட்டியதோடு...தன் வட நாட்டு மருமகளுக்கும் இந்தக் கதையை இந்தியில் சுவையாய்ச் சொல்ல...எல்லோருக்கும் நேரக்கூடிய ஒரு சம்பவத்தை சுவாரசியமான ஒரு கதையாக மாற்றுவது படைப்பாளிகளுக்கு மட்டுமே சாத்தியம் என்று அந்தப் பெண்ணும் சற்றுக் கிளர்ச்சியான மனநிலையுடனேயே அந்தக் கதையை எதிர்கொண்டாள்....அந்த ஊக்கமான மனநிலை தந்த நம்பிக்கையுடன் இணைய வாசகர்களுக்காக அது.....

8 கருத்துகள் :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

அருமையான சிறுகதை. ஆச்சர்யமாக இருக்கிறது இக்கதையில் வருவது போல இன்று மதுரையில் நல்ல மழை. எளிய மனிதர்களைக் குறித்த அற்புதமான பதிவாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது. இந்தக்கதை எத்தனை ஆண்டுகள் கழித்து வாசித்தாலும் புதிது போலத்தான் இருக்கும். பகிர்விற்கு நன்றி.

புதியவன் பக்கம் சொன்னது…

பின்குறிப்பு தேவையே இல்லை. படிக்கும்போதே பழைய கதை என்று புரிந்து விடுகிறது. ஆனாலும் ஒன்று... மனதை நெகிழ வைக்கும் எழுத்துகளைப் அவ்வப்போது படிக்காவிட்டால் இயந்திரத்தனம் மேலெழுந்து விடுகிறது. அத்துடன், கண்ணீர் விடுவது கண்ணுக்கு நல்லதாம், அதனால் இப்படி இன்னும் ஏதேனும் கதைகள் இருந்தாலும் அவற்றையும் வெளியிடுங்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

கதை பற்றிய ஒரு மின் அஞ்சல்
asanbes@gmail.com.
very good madam,Keep it up.write More realistic stories

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஊக்கமான சொற்களுக்கு நன்றி நண்பர்களே..

மதுரை வந்தபோது சந்திக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் சித்திர வீதி..அடுத்த முறை சந்திப்போம்..ஆமாம்...மதுரையில் மழை என்றீர்களே..இன்னும் இந்தக் கதையில் வருவது போலத்தான் தண்ணீர் தேங்குகிறதா?

நெகிழ வைப்பதாகச் சொன்னதற்கு நன்றி திரு ஷாஜகான்..இனி அடிக்கடி அதற்கான முயற்சி மேற்கொள்கிறேன்.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

இன்றும் நல்ல மழைதான். கதையில் வருவதுபோல தண்ணீர் தேங்குகிறது. ஏதோ குழாய் பதிப்பதற்காக சாலையோரங்களில் தோண்டிப் பள்ளமாக்கிவிட்டார்கள்.

மதுரை பெரியார்நிலையம் இருந்த பகுதியில் முன்பு வலைவீசித்தெப்பம் ஒன்று இருந்ததாம். அதனால்தானோ என்னவோ இன்றும் மழைபெய்தால் பெரியார்நிலையம் பகுதியில் தண்ணீர் தேங்கிக்கொண்டுதானிருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பின் படித்த நல்ல சிறுகதை.

பெயரில்லா சொன்னது…

அருமையான சிறுகதை. ஒரு கீழ்தட்டு நடுத்தர குடும்பத்தினரின் நிலையை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.
எங்கள் வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் இருபது நிமிட நடை. மழை நாட்களில் அலுவலக செல்லும்போது நீங்கள் விவரித்து இருப்பது போலத்தான் நடக்க வேண்டும். செருப்பு வாங்க பட்ஜெட்டில் இடம் வேண்டும். அறுந்த செருப்பை அதிகபட்சம் எவ்வளவு முறை தாங்குமோ அவ்வளவு முறை தைத்து, இறுதியில் செருப்பு தைப்பவரே இதற்கு மேல் இதை தைக்க முடியாதம்மா என்று கை விரிக்கும் வரை உபயோகித்து......இப்படி என் வாழ்கையின் அந்த கால நாட்களை என் மனதில் அழகாய் அசைபோட வைத்து விட்டீர்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்க நன்றி,அப்பாதுரை,மீனாட்சி.
பலர் வாழ்வும் இவ்வாறான கட்டங்களைக் கடந்து வந்திருப்பதுதான் மீனாட்சி.அது கதையில் காட்சியாகிறது அவ்வளவே...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....