துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.11.17

இரு நிகழ்வுகள்

கல்லூரிச் சூழலில் நீண்ட ஆண்டுகளாகப் பணியாற்றியதால் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இளம் மாணவர்களுக்கிடையே உரையாற்றுவதென்பது எப்போதுமே என் மனதுக்கு நிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பதாய் இருக்கிறது. அதிலும் நமக்கு விருப்பமான பேசுபொருளும்…, நல்ல கவனிப்போடு கூடிய பார்வையாளர்களும் அமையும்போது கூடுதல் மகிழ்ச்சி.

அவ்வாறான இரு நிகழ்வுகள் அண்மையில் வாய்த்தன.

ஒன்று..கோவை பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் கலைக்கல்லூரியின் இந்தித் துறை, சாகித்திய அகாதமியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கியங்களில் சமகாலப்போக்குகள் குறித்த கருத்தரங்கம். [16.8.2017]


இந்தித் துறை சார்ந்தவராயினும் தமிழ் இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவரும் பல இந்திப்படைப்புக்களைத் தமிழிலும் , தமிழ்ப்படைப்புக்களை இந்தியிலும் மொழிபெயர்த்திருப்பவருமான துறைத்தலைவர் முனைவர் பத்மாவதி மேற்கொண்ட தீவிர முயற்சியால் கைகூடிய இக் கருத்தரங்கில்
இலக்கியமும் மொழிபெயர்ப்பும் என்னும் தலைப்பில் நான் உரையாற்றினேன். 



மொழிபெயர்ப்புக்கான தேவை…, அதன் இயல்புகள்..போக்குகள்…, மொழிபெயர்ப்பாளரிடம் எதிர்பார்க்கப்படும்  தகுதிகள்,அவரது பொறுப்புகள் ஆகியவை குறித்தும் காலந்தோறும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இலக்கியங்கள் பற்றியும் சொற்பொழிவாற்றியதோடு, மொழிபெயர்ப்பு சார்ந்த என் தனிப்பட்ட அனுபவங்களையும் பார்வையாளர்களோடு விரிவாகப் பகிர்ந்து கொண்டேன். மொழிபெயர்ப்பு என்பது சொந்தப்படைப்பை விடத் தரம் தாழ்ந்தது என எண்ணுவதன் அபத்தத்தையும் … இரண்டாம் மொழி வழி செய்யப்படும் [ மூல மொழி- இலக்கு மொழி..- Source language,Target language- இரண்டுக்கும் நடுவே ஓர் இடை மொழி] மொழியாக்கங்களும் இன்றைய சூழலில் அவசியமானவையே என்பதையும் பல மேற்கோள்களுடன் விளக்கமாக எடுத்துக்காட்டும் வண்ணம் என் உரையை அமைத்துக்கொண்டேன்.

நாற்பது நிமிடங்கள் நீண்ட அந்த உரையை மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு எதிர்வினையாற்றிய இளம் மாணவியர்களையும்  பேராசிரியர்களையும் காண முடிந்ததும் ,சாகித்திய அகாதமியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாச்சிமுத்து அவர்களை சிறிது இடைவெளிக்குப்பின் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்ததும் உற்சாகம் அளிப்பதாய் இருந்தது. கல்லூரி மாணவர்களைக்கொண்டு இந்துஸ்தான் கல்லூரிப்பேராசிரியர் திரு திலீப் குமார் அரங்கேற்றிய வீதி நாடகம் சுருக்கமான கச்சிதத்துடன் சிறப்பாக அமைந்திருந்தது. 

**************************************

அடுத்த நிகழ்ச்சி ..
மதுரை டோக்பெருமாட்டி கல்லூரியில்.. [13.10.2017]



’70 இல் பாத்திமாக் கல்லூரியில் நான் பேராசிரியரானது முதல் தேர்வுப்பணிகள், பாடத்திட்டக்குழுக்கூட்டங்கள், உரை நிகழ்ச்சிகள் என்று அடிக்கடி சென்று பழகிய அந்த வளாகம்… ,என் மகள் இளம் அறிவியல் பயின்ற அந்தக் கல்லூரி இனிய பழைய நினைவுகள் பலவற்றை என்னுள் எழுப்பியது..


இளம் பேராசிரியைகளாய் எனக்கு அறிமுகமாகி இன்று துறைப் பொறுப்பில் இருப்பவர்கள், முன்னாள் மாணவிகளான இந்நாள் பேராசிரியைகள் என்று பலரும் என்ன்னை அன்போடு எதிர்கொள்ள.., மீண்டும் வகுப்பறையில் பேராசிரியையாகப்பிறப்பெடுத்து விட்டது போன்ற உணர்வு…



இலக்கியங்களில் மறுவாசிப்பு என்னும் தலைப்பில் மாணவியருக்கான பயிலரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பின்பு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்த  பேராசிரியர் முனைவர் திரு திருமலை அவர்களும் நானும் உரையாற்றுவதாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது, திருமலை அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவருக்கு மாற்றாக திரு முருகேச பாண்டியன் உரையாற்றினார். பின் நவீனத்துவத்தை ஒட்டிய மறு வாசிப்புக்கோட்பாடுகளை அதிகமும் முன் வைப்பதாக அவர் உரை அமைந்தது.

நவீன தமிழ்க்கதை இலக்கியப்பரப்பை முதன்மையாக எடுத்துக்கொண்ட நான், புதுமைப்பித்தனின் சாப விமோசனம், எம் வி வெங்கட்ராமின் நித்ய  கன்னி என மணிக்கொடி காலத்தில் தொடங்கி.. இன்று ஜெயமோகனின் மகாபாரத மறுஆக்கமான வெண்முரசு வரை மறு வாசிப்பும் அதன் உடனிகழ்வான மீட்டுருவாக்கமும் பல வகையான போக்குகளில் நிகழ்ந்திருப்பதையும் நிகழ்ந்து வருவதையும் பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சுட்டிக்காட்டி ஒன்றரை மணிநேரம் உரையாற்றினேன். மலையாளம்,வங்கம் ஆகிய மொழிகளில் [எம்.டி,வாசுதேவன் நாயர், மஹாஸ்வேதாதேவி எனப்பலராலும்] செய்யப்பட்டிருக்கும் மீட்டுருவாக்கங்களையும் ஆங்காங்கே எடுத்துக்காட்டினேன். 

என் மீட்டுருவாக்கப்படைப்பனுபவங்களையும் [ புதிய பிரவேசங்கள், மானிடவர்க்கென்று பேச்சுப்படில், தேவந்தி,சங்கிலி,சாத்திரம் அன்று சதி] பகிர்ந்து கொண்டேன். 

டோக் கல்லூரியின் தமிழ்த்துறைப்பாடத் திட்டத்தில் என் கதைகள் சிலவும் இருந்ததால் முன் அறிமுகத்தோடும் ஆர்வத்தோடும் உரையைக்கேட்டபடி மாணவியர் பல வினாக்களை எழுப்பியது நிகழ்ச்சிக்கு மேலும் உயிரூட்டியது…

இரண்டு நிகழ்வுகளையும் நினைக்கும்போது… சிறிது நேரம் எங்கோ பழகிய இடத்துக்கு..பழகிய வேலைக்குக்  கூடு விட்டுக் கூடு பாய்ந்து போய் விட்டு வந்தது போல் மனம் மகிழ்வோடு சஞ்சரிக்கிறது…. 


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....