துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.10.11

நாவலும் சராசரி மனிதர்களும்


 ’’சராசரி மனிதர்களிடமிருந்தும் கூடச் சுவையான சாரமுள்ள தன்மைகளை ஒரு படைப்பாளி தேடிக் கண்டடைய வேண்டும்’’
-தஸ்தயெவ்ஸ்கி-அசடன் நாவலில்....

நம்மைக் கடந்து போகும் ஒரு சாதனை மனிதனை..வேறுபட்ட ஒரு ஆளுமையைக் கவனிப்பது போல அன்றாட வாழ்வில் நாம் எதிர்ப்பட நேரும் ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் மீது நம் பார்வை குவிவதில்லை; அவர்களைப் பொருட்படுத்தாதபடி பெரும்பாலும் புறந்தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறோம் நாம்.ஆனால் படைப்பாளிகளின் பார்வை,கவனம்,அவதானிப்பு அவர்களின் மீதும் மையம் கொள்வதே ஒரு படைப்பை நம்பகத்தன்மையுடையதாக்கும் என்கிறார் தஸ்தயெவ்ஸ்கி..
அது பற்றி அவரது சொற்களில்....

’’ஒரு கேள்வி மட்டும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.சராசரியான மனிதர்களை ஒரு படைப்பாளி எப்படிக் கையாளுவது?.தன் வாசகர்களிடம் அவர்களையும்கூடச் சுவாரசியமாகக் கொண்டு சேர்க்க அவன் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அது.அப்படிப்பட்ட சராசரிமனிதர்களின் பாத்திரங்கள் ஒரு புனைகதையில் இடம் பெறாமல் தவிர்ப்பதும் இயலாத ஒன்றுதான்.காரணம்,மனிதர்களின் அன்றாட நடப்பியல் செயல்பாடுகளில் ஒவ்வொரு கணமும் மிகவும் முக்கியமான மிகவும் அவசியமான கண்ணிகளாக விளங்கி அவறை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பவர்கள் 
சராசரி மனிதர்கள்தான்...அவர்களை ஒட்டுமொத்தமாக விட்டு விட்டால் கதை தன் நம்பகத் தன்மையை இழந்து விட நேரிடும்.தனிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்களால் மட்டுமே ஒரு நாவலை நிரப்புவதோ அல்லது அந்தக் கதையைச் சுவாரசியமாக ஆக்குவதற்காகவே வினோதமான நம்ப முடியாத பாத்திரங்களை அதிகமாகச் சித்தரித்துக் கொண்டிருப்பதோ அந்தப் படைப்பை மேலும் கூட நம்ப முடியாததாகவும் சுவையற்றதாகவும் ஆக்கி விடும்

இந்த நோக்கில் பார்க்கப்போனால்...காலம் காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படிச் சராசரி மனிதர்களாக மட்டும் இருக்க நேர்வதே சில மனிதர்களின் சாரமான குணமாய்ப் போயிருப்பதைக் காண முடியும்.சராசரி வாழ்விலிருந்து மேலெழுந்து வருவதற்கு எவ்வளவு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டாலும் கடைசியில்-வேறு வழியே இல்லாமல்- அதே பழக்கப்பட்ட சாதாரணமான சூழ்நிலையிலேயே அவர்கள் விடப்படுகையில் அவர்களுக்கும்கூட ஒரு தனிப்பட்ட குணாதிசயம் ஏற்பட்டு விடுகிறது.தாங்கள் சராசரிகளே என்ற நிதரிசனமான உண்மையை மறுத்தபடி தங்களுக்கென்று ஒரு தனித்துவமும் சுதந்திர மனோபாவ்மும் வேண்டுமென்று தீவிரமாக ஆசைப்பட ஆரம்பித்து விடுகிறார்கள் அவர்கள்.ஆனால் அவற்றை அடைவதற்கான சாத்தியக் கூறுகள் அவர்களுக்குச் சிறிதும் கிட்டுவதில்லை.

இவ்வாறான சராசரி மனிதர்களிடமிருந்தும் கூடச் சுவையான சாரமுள்ள தன்மைகளை ஒரு படைப்பாளி தேடிக் கண்டடைய வேண்டும்’’


அசடனில் சில துணைப் பாத்திரங்கள்;
பாவ்லிஷ்ட்சேவ்-[நிகொலாய் ஆண்ட்ரியேவ் பாவ்லிஷ்ட்சேவ்]-
பெற்றோரை இழந்த மிஷ்கினுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு வளர்த்தவர்.மருத்துவரின் கண்காணிப்பில் அவன் ஒப்படைக்கப்படும் வரை அவனுக்குப் பாதுகாவலராக இருந்தவர்.

ஷ்னீடர்-/ஷெனிடர்-மிஷ்கினின் மன நலமருத்துவர். 
டாட்ஸ்கி-[அஃபனாஸி இவானோவிச் டாட்ஸ்கி]-
பெரும் செல்வந்தர்; தன்னிடம் பணி புரிந்து இறந்து போன அலுவலரின் மகள் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பிறகு அவளைத் தன் ஆசை நாயகியாக்கி அவளது வாழ்வு சீரழியக் காரணமானவர்.
இபான்சின்[இவான் ஃபியோதரவிச் இபான்சின்] -
லிசவெதாவின் கணவர்; இராணுவத்தில் உயர்பதவி வகிக்கும் தளபதி.

லிசவெதா ப்ரகோஃபியேவ்னா-
இளவரசன் மிஷ்கினின் பரம்பரையைச் சேர்ந்த தூரத்து உறவினள்; தளபதி இபான்சினின் மனைவி.அலெக்ஸாண்ட்ரா,அடிலெய்டா,அக்லேயா ஆகிய மூன்று பெண்களின் அன்னை.கள்ளமற்ற வெள்ளை மனமும் வெளிப்படையான குணமும் கொண்டவள்.
அலெக்ஸாண்ட்ரா,அடிலெய்டா

இபான்சின் தம்பதியரின் மகள்கள். அக்லேயாவின் சகோதரிகள்.
கன்யா[கேவ்ரிலா ஆர்டலியோனோவிச் கன்யா]- 
குறுக்கு வழியில் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞன்; அக்லேயா மீது விருப்பம் கொண்டிருந்தாலும் பணத் தேவையால் நஸ்டாஸ்யாவை மணக்க முன் வருபவன்;இபான்சினின் உதவியாளனாக இருந்த இவன்,ஒரு கட்டத்தில் மிஷ்கினின் உதவியாளனாக மாறிப் போகிறான்.
இவோல்ஜின்[கேவ்ரிலா ஆர்டலியோனோவிச் இவோல்ஜின்]-
முன்னாள் இராணுவத் தளபதி;கன்யா,வார்வரா,கோல்யா ஆகியோரின் தந்தை; பிறரிடம் கடன் வாங்கிக் குடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்ததால் இவர் நல்ல பல சமூகத் தொடர்புகளை இழக்கவும் கடன்காரர்களுக்கான சிறையில் பல நாட்களைக் கழிக்கவும் நேர்கிறது.பழைய நினைவுகளில் சஞ்சரிப்பதே இவரது வாடிக்கையான பொழுது போக்கு; இறந்து போன கேப்டன் ஒருவரின் விதவை மனைவியோடு தொடர்பு கொண்டிருப்பவர்.
நீனா அலெக்ஸாண்ட்ரோவ்னா-கன்யாவின் தாய்; தளபதி இவோல்ஜினின் மனைவி.
வார்வரா அலெக்ஸாண்ட்ரோவ்னா-
இவோல்ஜின் தம்பதியரின் மகள்;கன்யாவின் சகோதரி.
கோல்யா-கன்யாவின் இளைய சகோதரன்; மிஷ்கின் மீது எதிர்பார்ப்புக்களற்ற உண்மையான அன்பு கொண்டிருப்பவன்.
ப்டித்சின்[இவான் பெத்ரோவிச் ப்டித்சின்];
மிகவும் நாகரிகமும் கண்ணியமும் வாய்ந்த 30 வயது வாலிபன்.வட்டிக்கு விடும் தொழிலை மேற்கொண்டிருந்தாலும் பேராசையின் பிடியில் சிக்காதவன்.கன்யாவின் தங்கை வார்வராவை விரும்பி மணந்து கொள்பவன்.
லெபதேவ்[லுகியான் திமோஃபெயீச் லெபதேவ்]- பணம் படைத்தவர்களை அடி வருடிப் பிழைக்கும் ஒட்டுண்ணி போன்ற குணம் கொண்டவன்; முதலில் ரோகோஸினுடனும் பிறகு மிஷ்கினோடும் ஒட்டிக் கொண்டு வாழ்க்கை நடத்துபவன்.

வெரா லெபதேவ்-


லெபதேவின் மகள்;இனிமையான குணம் படைத்தவள்.நாவலின் இறுதியில் 

யெவ்கெனி பேவ்லோவிச்சை மணப்பவள்.
இளவரசி பைலாகான்ஸ்கி-
லிசவெதாப்ரகோஃபியேவ்னாவின் தோழி; ஆலோசகி; உயர்மட்டத்துக்கே உரிய செருக்குடன் இருப்பவள்.


காண்க இணைப்புக்கள்


அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -1

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1





கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....