துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.10.11

இடியட்(அசடன்)நாவலின் படைப்பாளி பற்றி...

உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிச் சொல்லி விடுவார்கள்-  எம்.ஏ.அப்பாஸ்[என்றென்றும் வாழும் படைப்புகளும்,படைப்பாளர்களும்]
ரஷ்ய சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப் பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை அதன் வினோதங்களைக் கண்டறிய முயன்ற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலக இலக்கியத் தளத்தில் மிகச் சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞர் என விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட பெருமை கொண்டவர். 


துன்பமயமான கதைப் பின்னல்களையே அவரது படைப்புக்கள் அதிகம் கொண்டிருந்ததால் அங்கதநயத்துடன் கூடிய மெல்லிய நகைச் சுவை உணர்வும் அதைக் கையாளும் திறனும் அவரிடம் இருந்ததைப் பலரும் சரிவர அறிந்து கொள்ளக் கூடவில்லை;அவரது பிற படைப்புக்களைக் காட்டிலும் இடியட் நாவலில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்ததாக மதிப்பிடப்படும் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் அவரது இடியட் நாவல் மிகவும் அற்புதமான ஒன்றாகவும் அவர் உருவாக்கிய மிகத் துணிச்சலான ஓர் ஆக்கம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது..

தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு....
தாங்கள் எழுதும் நாவல்களை விடவும் விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கியிருப்பவை சில நாவலாசிரியர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்.
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி[1821-1881]
வறுமையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் ஊடாடிய ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வும் கூட அவரது நாவல்களைப் போன்றே துயர் கப்பிய, திருப்பங்கள் மலிந்த தருணங்களைக் கொண்டிருப்பதுதான்.

லிதுவேனியாவைச் சேர்ந்த பிரபுக்கள் வம்சத்தில் ஓர் இராணுவ மருத்துவரின் மகனாக 1821ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அன்று பிறந்தவர் தஸ்தயெவ்ஸ்கி.அவருடன் உடன் பிறந்தோர் ஏழு பேர். காசநோயாளியான அன்னை,முன் கோபியான தந்தை என அமைந்த குடும்பச் சூழலில் இளம் வயதிலேயே ஏழ்மை துன்பம் மரணம் இவற்றோடு பரிச்சயம் கொண்டிருந்ததால் மகிழ்ச்சியும் உற்சாகமும் அற்ற இளமைப் பருவமே தஸ்தயெவ்ஸ்கிக்கு வாய்த்தது.

பதினாறு வயதில் தாயை இழந்தபின் இவரையும் இவரது சகோதரரையும் இராணுவப் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டார் இவரது தந்தை.மதுவில் மூழ்கிய தந்தை தனது அன்றாடத் தேவைகளைக் கூடக் கண்டு கொள்ளாததால் வறுமை,கண்ணீர்,அச்சம் இவற்றில் ஊடாடியபடியே தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வு நகர்ந்தது.தந்தையின் கொடூர நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது சொந்த வேலையாட்களே அவரைக் கொன்றுவிட அன்று முதல் தஸ்தயெவ்ஸ்கியைக் காக்காய் வலிப்பு நோய் தாக்கத் தொடங்கியது.காலம் முழுவதும் அந்த வலிப்பு நோய் அவரை வாட்டியும் வதைத்தும் வந்தது.

பட்டம் பெற்ற பிறகு, இராணுவ வேலையைக் கை விட்டு - இளம் பருவம் முதலே தன் மனதை ஆக்கிரமித்திருந்த இலக்கியத் துறையில் ஈடுபடத் தொடங்கினார் தஸ்தயெவ்ஸ்கி.நெக்ரசோவ் என்னும் இலக்கிய விமர்சகரின் துணையால் அவரது முதல் நாவலான ‘ஏழை மக்கள்’[POOR FOLK ] THE CONTEMPORARY- இதழில்[1846 ஆம் ஆண்டு] வெளியானதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இடையே முடியாட்சிக்கு எதிரான புரட்சியில் பங்கேற்றதற்காக அரசாங்கம் இவரைக் கைது செய்து மரண தண்டனையும் விதித்தது.தண்டனை நிறைவேற்றத்தின் கடைசிக் கணத்தில் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட தஸ்தயெவ்ஸ்கி, கை விலங்குடன் சைபீரியப் பாலை வனச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அந்தக் கால கட்டத்தில் அவரது இலக்கியப் படைப்பில் சற்றுத் தேக்கம் ஏற்பட்டாலும் அவரது மனம் உறுதி பெற்றது அப்போதுதான்.பிராயச்சித்தம்,பாவம்,தவறு,மன்னிப்பு முதலிய மனிதாபிமானப் பண்புகள் அவரது உள்ளத்தில் மேலோங்கி எழுச்சி பெற்றது அந்தக் காலகட்டத்திலேதான்.

சிறையிலிருந்து மீண்ட பிறகு மேரியா டிமிட்ரிவ்னா இஸாயவா என்ற விதவையை மணந்து கொண்ட தஸ்தயெவ்ஸ்கிக்குத் திருமண வாழ்வும் மகிழ்ச்சியை அளிப்பதாயில்லை;கடனும் வறுமையும்,மனைவியின் காச நோயும்,தொடர்ந்து அவளது மரணமும் ,தனது சூதாடும் பழக்கமும் அவரை அலைக்கழித்தன.கடன் தொல்லையிலிருந்து காத்துக் கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரே ஆயுதம் எழுத்து மட்டுமே. குற்றமும் தண்டனையும் 1866,அசடன் 1868-69,கரமஸோவ் சகோதரர்கள் 1879-80ஆகிய உலகப் பேரிலக்கியங்களை உருவாக்கக் கடனாலும் சூதாட்டத்தாலும் விளைந்த வாழ்க்கை நெருக்குதல்களும் பணத் தேவையுமே அவருக்குக் காரணமாய் அமைந்தன.
சூதாடி நாவலை 26 நாட்களில் எழுதி முடித்த தஸ்தயெவ்ஸ்கி அதில் தனக்கு உதவிய அன்னா கொரிவ்னாவைத் தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார்.

உலகின் சிறந்த எழுத்தாளர்களெல்லாம் தஸ்தயெவ்ஸ்கியை மதித்துப் போற்றத் தொடங்கி விட்டிருந்த நிலையில்-புகழின் உச்சத்தில் இருக்கும்போது நுரையீரல் பாதிப்பினால் மரணமடைந்த[1881] அவரது இறுதி ஊர்வலத்தில் வரலாறு கண்டிராத அளவுக்கு 50000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு ஓர் ஒப்பற்ற எழுத்தாளனுக்குத் தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
ரஷிய இலக்கியத்தில் மட்டுமன்றி உலக இலக்கியத்தின் பக்கங்களிலும் அமரத்துவம் வாய்ந்த ஒரு சிருஷ்டிகர்த்தாவாக நிலைத்த புகழ் பெற்றார் தஸ்தயெவ்ஸ்கி.



காண்க இணைப்புக்கள்

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -1

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3

மரணதண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1
மரண தண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-2

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1

1 கருத்து :

அப்பாதுரை சொன்னது…

அரிய தகவல்கள். நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....