துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.3.12

’’நெஞ்சு நேர்பவளே..’


நன்றி;பயணம் இதழ்-கட்டுரைத் தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-2


சங்கச் சமுதாயத்தில்,பரத்தமை என்பது, ஓர் அன்றாட நடைமுறையாய் - ஓர் ஒழுக்கமாகவே ஏற்கப்பட்டிருந்தது என்பதும் அதை மிக இயல்பாக அந்தச் சமுதாயம் அங்கீகரித்திருந்தது என்பதும் பொதுவாக முன் வைக்கப்படும் கருத்துக்கள்.. இது, சமூகப் பொதுப்புத்தி சார்ந்ததேயன்றித் தனி மனிதர்களின் உள்ளம் அதை ஏற்பதில் எத்தனை அலைக்கழிவுகளுக்கும் ஆத்ம வேதனைகளுக்கும் ஆளானபடி புறக்கணிப்பின் வேதனையால் துடித்திருக்கும் என்பதை எவரும் எண்ணிப் பார்க்காமல் மிகவும் எளிதாக அவ்வாறனதொரு கருத்தை வீசி விட்டுப் போய் விடுகிறார்கள்.சங்கச் சமுதாயத்தின் தொடர்ச்சியாய் வந்த சிலம்பு அதன் மறுபக்கம் குறித்த கண்திறப்பைக் கண்ணகி துயரின் வழி  ஓரளவுக்கு அளிக்க முயன்றிருக்கிறது.. மனம் திருந்தி வந்த கோவலனை  நோக்கிப் ’’போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’’என்று கண்ணகியைப் பேச வைத்ததே கூட அந்தச் சூழலுக்கு ஒரு புதுமைதான். அவள் அதுகாறும் அனுபவித்த மன உளைச்சல்கள் அனைத்துக்கும் வடிகால் தரும் காட்சியாக அதை அமைத்து விடுகிறார் இளங்கோ.

குறுந்தொகையில் இடம் பெறும் அம்மூவனாரின் பாடல் ஒன்று பரத்தமையால் பாதிப்புக்குள்ளான ஒரு தலைவியின் ஆழ்மன ஏக்கத்தை அற்புதமான உளவியல் பாங்கில் பதிவு செய்து தந்திருக்கிறது.

கடலும் கடல் சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலம். அங்கே மண்டிக் கிடக்கும் நீர் முள்ளி எனப்படும் முண்டகப் பூக்கள். அவற்றில் அணிலின் பற்கள் போன்ற கூர்மையான முட்கள் அடர்ந்து கிடக்கின்றன; 
http://tamil.oneindia.in/img/2011/10/09-asteracantha-longifolia2-30.jpg

கூடவே அருமையான தேனையும் அவை உட்செறித்து வைத்திருக்கின்றன. நீலமணி போன்ற (மணிக்கேழ் அன்ன) அந்தக் கருங்கடல் நிலத்துக்குத் தலைவனாகிய சேர்ப்பனும் (நெய்தல் நிலத் தலைவனுக்கு வழங்கும் பெயர்) முள்ளையும் தேனையும் ஒருசேரக் கொண்டிருக்கும் அந்த நீர்முள்ளிப்பூக்களைப் போன்றவன்தான். ஒரு புறம் தன் மனைவிக்கு இனியவனாகத் தேன் போன்ற வார்த்தைகளைப் பேசிக் கொண்டே அவளுக்கு முள்ளாக உறுத்தும் பரத்தமை உறவையும் மறுபுறம் தொடர்ந்தபடி, இரட்டை வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான் அவன். தன் இரத்த வாரிசைப் பெற்றுத் தருபவள் என்கிற மதிப்பைத் தலைவிக்குத் தந்தாலும் அவனது மனம் லயித்துக் கிடப்பது பரத்தையிடம் மட்டுமே என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் தலைவி, பரத்தையிடமிருந்து தன்னை அவன் நாடி வரும் ஒரு  தருணத்தில்,
’’இம்மை மாறி மறுமையாயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே''என்றுதன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறாள். இந்தப் பிறப்பு மட்டுமில்லை..இனி வரும் பிறப்பு எதுவாயினும் நீயே எனக்குக் கணவனாக வாய்க்க வேண்டும் நான் மட்டுமே உன் நெஞ்சுக்கு உகப்பான பெண்ணாக வேண்டும்’’ என்று தன் நெஞ்சின் விழைவை அவள் வெளியிடுவதாக அந்தச் சங்கக் குறுந்தொகைப்பாடல் உருப்பெற்றிருக்கிறது.

''அணிற்பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமையாயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே''-                                
அம்மூவனார்--குறுந்தொகை 49                                                          

மேலோட்டமான முதற்பார்வையில் பாடலின் சூழலும் , தலைவியின் வேண்டுகோளும் முரண்பாடாக ஒலிப்பதுபோலவே நமக்குப் படுகிறது.தலைவன் சென்று வந்திருப்பது பரத்தையின் வீட்டுக்கு; கல்லானாலும் கணவன் என்ற மரபில்ஊறிப்போனவளாகவே இருந்தாலும் கூடஊடலும் ஒதுக்கமும் காட்ட வேண்டிய ஒருவேளையில், தலைவி இப்படி ஒரு விருப்பத்தைக் கொண்டிருப்பது சாத்தியம்தானா என்ற ஐயம் நமக்குள் எழுவதுமிகவும் இயல்பானதே.

தலைவி வெளியிடும் இந்த வினோதமான விருப்பத்துக்குத் தலைவன் மீது அவள் கொண்டிருக்கும் மாறாக் காதலையோ,வழிவழி வந்த கற்புக் கோட்பாட்டையோ காரணம் காட்டுவதென்பது நமக்குள் ஊறிய மரபு சார்ந்த கண்ணோட்டத்தாலேயே நேர்கிறது.அவற்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை என்றாலும் கூட-சற்றுநேரம் அவற்றையெல்லாம் புறமொதுக்கி விட்டுத்தலைவியின் ஆழ்மனதுக்குள் பயணிக்கத் தொடங்கும்போதே இதன் மர்மம் துலங்குகிறது; புதிரின் முடிச்சும் அவிழத் தொடங்குகிறது. 

பாடல் விவரிக்கும் குறிப்பிட்ட இந்தச் சூழலை மட்டும் வைத்து அவள் விருப்பத்தை மதிப்பிடும்போதுதான்,கணவனை முன்னிட்டு இன்னொரு பெண்ணிடம் தோற்றுப் போக விரும்பாத பெண்மையின் குரலாய் அது ஒலிப்பதை நம்மால் இனங்கண்டுகொள்ள முடியும். பெயரளவில் தலைவனுக்கு மனைவியாய்த் தான் இருந்தபோதும் தன்னில் காணாத நிறைவை –தன்னிடம் கொள்ளாத ஏதோ ஒரு மன நெருக்கத்தை வேறொரு பெண்ணிடம் அவனால் காண முடிந்திருக்கிறது என்பதும் அவளே அவனது நெஞ்சுக்கு நெருக்கமானவளாக இருக்கிறாள் என்பதும் அவளது உள்ளத்தில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகத்தைக் கிளர்த்தியிருக்கின்றன. 

‘’நான் உன் மனைவியாக இருந்திருக்கலாம்..ஆனால் உன் மனதின் ஒத்த அலைவரிசைக்குள் வரும் வாய்ப்பு-அந்த இடம்-இன்னொருத்திக்கல்லவா கிடைத்து விட்டது’’என்ற பெருந்தாபமும் அதை எப்படியாவது வென்றெடுத்தாக வேண்டும் என்ற உந்துதலுமே ’’யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’’என்னும் வரியில் அவளது ஆழ்மன ஏக்கத்தின் வெளிப்பாடாய்க் கசிகின்றன.இந்தப் பிறவியில் தான் அடைய முடியாத நெஞ்சு நெருக்கத்தை அடுத்த பிறவியிலாவது தான் அடைந்தே தீர வேண்டும் என்பதற்காகவே- அந்த வெற்றி இலக்கைக் குறியாகக் கொண்டே அடுத்த பிறவியிலும் அவன் கணவனாக வாய்க்க வேண்டும் என விழைந்திருக்கிறாள் அந்தத் தலைவி என்ற புரிதலும் தரிசனமும் அப்போது நமக்குக் கிட்டி விடுகின்றன.

ஏழேழு பிறவிக்கும் அவனே கணவனாக வர வேண்டும் என்ற மரபு வழிக் கற்பு நெறி மட்டுமே அவளை இயக்கியிருக்குமென்றால் அந்த இரண்டாவது வரிக்கான தேவையே இல்லாமல் போயிருக்கும். சங்கப் பாடலில் எந்தச் சொல்லும் தொடரும் வெற்றாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போதுதான்…அந்த இறுதி வரிக்குள் பாடலின் சூட்சுமம்…..அதன் சாரமே பொதிந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது..

இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் உரிப்பொருளாகச்சொல்லப்படுபவை. தலைவியின் ஆற்றாமையை அற்புதமான இரங்கல் தொனியில் ஒலித்திருக்கும் அம்மூவனார் பாடலும் கூடத் தலைவியின் மீதான நம் இரக்கத்தை ஊற்றெடுக்க வைப்பதுதான்.

காண்க.-1.யானை புக்க புலம்..

5 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

//‘’நான் உன் மனைவியாக இருந்திருக்கலாம்..ஆனால் உன் மனதின் ஒத்த அலைவரிசைக்குள் வரும் வாய்ப்பு-அந்த இடம்-இன்னொருத்திக்கல்லவா கிடைத்து விட்டது’’என்ற பெருந்தாபமும் அதை எப்படியாவது வென்றெடுத்தாக வேண்டும் என்ற உந்துதலுமே ’’யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’’என்னும் வரியில் அவளது ஆழ்மன ஏக்கத்தின் வெளிப்பாடாய்க் கசிகின்றன.இந்தப் பிறவியில் தான் அடைய முடியாத நெஞ்சு நெருக்கத்தை அடுத்த பிறவியிலாவது தான் அடைந்தே தீர வேண்டும் என்பதற்காகவே- அந்த வெற்றி இலக்கைக் குறியாகக் கொண்டே அடுத்த பிறவியிலும் அவன் கணவனாக வாய்க்க வேண்டும் என விழைந்திருக்கிறாள் அந்தத் தலைவி என்ற புரிதலும் தரிசனமும் அப்போது நமக்குக் கிட்டி விடுகின்றன.//

வழிகாட்டல்கள் அருமை

பெயரில்லா சொன்னது…

அருமையான விளக்கம். சங்கபாடல்களை பற்றி நீங்கள் எழுதும் பதிவுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கிறது. இந்த பதிவிலும் உங்கள் எழுத்தை மிகவும் ரசித்தேன்.
பதிவை படித்ததும் அந்த தலைவியின் ஆழ் மனதில் உள்ள வருத்தத்தை நாமும் உணர்ந்து அவள் மேல் நம் இரக்கமும் ஊற்றெடுப்பது உண்மைதான். இது இந்த
பாடலுக்கு கிடைத்த வெற்றியே.
பதிவுக்கேற்ற படத்தையும் இணைத்தது அழகாய் இருக்கிறது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அப்பாதுரையின் வினாவும் என் விடையும்;
//சமூகப் பொதுப்புத்தி சார்ந்ததேயன்றித் தனி மனிதர்களின் உள்ளம் அதை ஏற்பதில் எத்தனை அலைக்கழிவுகளுக்கும் ஆத்ம வேதனைகளுக்கும் ஆளானபடி புறக்கணிப்பின் வேதனையால் துடித்திருக்கும் என்பதை எவரும் எண்ணிப் பார்க்காமல் மிகவும் எளிதாக அவ்வாறனதொரு கருத்தை வீசி விட்டுப் போய் விடுகிறார்கள்// மிகவும் ரசித்த வரிகள். பிரமாதம்.
சமூகம் அங்கீகரித்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளதா? சமூக வழக்கில் இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒருவேளை இரண்டும் ஒன்று தானோ? சரி தவறு என்ற கண்ணோட்டம் வரும்பொழுது எல்லாமே ஒடிந்து விடுகிறது போல் தோன்றுகிறது. அந்த நாளில் அப்படி வாழ்ந்தார்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளும் பக்குவம் வரவில்லை :)
'கழனிமாஅத்து விளைந்துகு தீம்பழம் பழனவாளை கதூஉமுரன்' (அவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது :) என்று ஒரு பாட்டில் role reversal செய்திருப்பதை தமிழாசிரியர் மிகவும் லயித்துப் போய் விளக்குவார். இந்நிலையில் எது ஒழுக்கம்? (of course, எங்கள் வகுப்பில் எல்லாரும் ஆண்கள் :)
திரு அப்பாதுரை..
சமூக வழக்கில் இருந்தது என்று சொல்ல வேண்டுமென நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச் சரியானது.ஆயினும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் பரத்தையிற்பிரிவு என்பதையே ஒரு ‘ஒழுக்க’மாக வகுத்திருந்ததும் தலைவன்,குறிப்பிட்ட எந்தக் காலத்தில் எத்தனை நாட்கள் பரத்தையின் இல்லத்தில் தங்க வேண்டும் என்பதை வகுத்து வைத்திருந்தாதுமே அது சமூக அங்கீகாரமாகவும் இருந்திருக்கக் கூடும் என எண்ண வைக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

'ஒழுக்கம்' என்று சொன்னதன் காரணம் 'தகா ஒழுக்கம்' என்று அறிவிப்பதற்காகவென நினைத்திருந்தேன். இதென்ன.. 'இத்தனை நாள் பரைத்தையரோடு இருக்கலாம்' என்று டைம் டேபிள் போட்டுக் கொடுத்திருக்கிறார்களே?
வாவ்! நீங்கள் சொன்னது போல் இது அங்கீகாரம் தான்!

அப்பாதுரை சொன்னது…

உங்களிடம் தமிழ் படிக்காமல் போனேனே என்று வருத்தமாக இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....