துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.11.10

மீனாட்சியின் பொன் விழா

’’கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும்,லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...
நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...’


தன் எழுத்தின் வழி மனித நேயத்தின் சிகரம் தொட்ட கதை ஆசான்
 பத்மபூஷண் திரு ஜெயகாந்தனை முன்னிலைப்படுத்தி-
பாரம்பரியப் பெருமை மிக்க மதுரை மீனாட்சி புத்தக நிலையம் தன் பொன்விழாவை டிச.12ஆம் தேதியன்று மதுரையில் கொண்டாடவிருக்கிறது..
விழா அழைப்பிதழும்,பொன்விழா மலருக்கு நான் எழுதி அனுப்பிய கட்டுரையும்..கீழே...



இரு மீனாட்சிகள்......
எம்.ஏ.சுசீலா

மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.
மதுரையம்பதியின் அணியாகத் திகழும் ஆலயத்தில் குடிகொண்ட அன்னை மீனாட்சியோடு...,புத்தக அடுக்குகளுக்குள் குடியிருந்து கோலோச்சும் மீனாட்சியையும் (மீனாட்சி புத்தக நிலையத்தில் )
சேர்த்து...மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.

1970ஆம் ஆண்டு பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையின் இளம் விரிவுரையாளராக மதுரையில் கால் பதித்தது முதல்...பல காவதங்கள் தாண்டி வடமாநிலத்தில்..இந்தியத் தலைநகரில் வசித்து வரும் இன்றைய சூழ்நிலையிலும் கூட இரண்டு மீனாட்சிகளுக்கும் ஒரே மாதிரியான இடத்தையே என் உள்ளத்தில் வழங்கி வருகிறேன்..
மீனாட்சி புத்தக நிலையத்தோடான என் பிணைப்பும்,நட்பும் மதுரையில் நான் வசிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நீண்டு,இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டிருக்கின்றன.

நான் பணி புரிந்த கல்லூரி நூலகத்துக்கும்,ஆண்டு விழாவுக்கும் பரிசுப் புத்தகங்கள் வாங்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்படும்போது - இளமைக் காலம் தொட்டே புத்தக விரும்பியாக இருந்த நான் , அந்தப் பணியை ஆர்வத்தோடு வலிந்து ஏற்றுக் கொண்டதனாலேயே மீனாட்சி புத்தக நிலையத்தாரோடான என் உறவுப் பாலம் , தலைமுறைகள் தாண்டியும் தளராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தானப்ப முதலி தெருவில் மயூரி வளாகத்தில் தற்போது இருக்கும் மீனாட்சி புத்தக நிலையம் ,  '70,மற்றும் '80களில் மேலக் கோபுர வாசலில்,செண்ட்ரல் திரையரங்கிற்குச் சற்றுத் தள்ளி மிகச் சிறிய இண்டு இடுக்கான பெட்டிக் கடை போன்ற ஓர் இடத்திலேதான் இருந்தது.
மூர்த்தி சிறிதானாலும்...அதன் கீர்த்தி பெரிது;
காரணம் அது வெறும் புத்தக விற்பனை நிலையமாக மட்டும் இல்லாமல் தமிழின் தலை சிறந்த பதிப்பகங்களில் ஒன்றாகவும் விளங்கியதுதான்.
அப்போதைய எழுத்துலக ஜாம்பவான்களாகிய ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,லா.ச.ராமாமிருதம் போன்றோரின் நூல்கள் பலவும்(குறிப்பாக ஜெயகாந்தனின் நூல்கள் அனைத்துமே) மேலக் கோபுர வாசல் முகவரியைத் தாங்கியபடிதான் வெளிவந்து கொண்டிருந்தன

அந்தப் பருவத்தில் அக்கினிப் பொறியாகத் தெறித்துக் கொண்டிருந்த திரு ஜெயகாந்தனின் எழுத்துக்களையே ஆதர்சமாகக் கொண்டு எழுதுகோல் பிடிக்க ஆரம்பித்திருந்த எனக்கு அவரது நூல்களைப் பதிப்பிக்கும் அந்தக்குறிப்பிட்ட இடமும் கூட மனக் கிளர்ச்சியும்,உத்வேகமும் ஊட்டும் ஒன்றாகத்தான் தோன்றிக் கொண்டிருந்தது; தொடர்ந்து...அதே பதிப்பகக் கடைக்குள் வைத்து நான் ஆராதித்து வந்த எழுத்தாளர்களை-ஜே.கே முதல் லா.ச.ரா வரை எதிர்ப்பட நேர்ந்ததும்,அவர்களில் ஒரு சிலரை மீனாட்சி புத்தக நிலையத்தின் நிறுவனரும்,உரிமையாளருமான திரு செல்லப்பன் அவர்களின் உதவியோடு கல்லூரியில் உரையாற்ற அழைத்துச் சென்றதும் என் வாழ்க்கைப் பேரேட்டில் மறக்க முடியாத சில பக்கங்கள்.

 பதிப்பகத்தின் இன்றைய உரிமையாளர் திரு செ.முருகப்பனின் தந்தையும், நிறுவனருமான திரு செல்லப்பன் ,முக மதிப்புக்காக ,ஜோடனையாக எதுவுமே பேச அறியாதவர்;ஆனால் கருமமே கண்ணாக...உரிய நேரத்தில்,உரியதைச் செய்து-மிகத் துல்லியமான தரமான படைப்பாளிகளை மட்டுமே தெரிவு செய்து அவர்களது நூல்களை மட்டுமே பதிப்பித்து மிகச் சிறந்த தரக் கட்டுப்பாட்டைத் தன் பதிப்புப் பணியில் பேணி வந்தவர் அவர்;


சென்னையிலிருந்த பல பதிப்பகங்கள் கூடச் செய்யாத தலை சிறந்த பதிப்புக்களை அளித்து மதுரையின் முகவரியை உலகறியச் செய்து கொண்டிருந்த அவர் எண்ணியிருந்தால் அந்தத் துறையைக் கொண்டே பணம் பண்ணக்கூடிய எழுத்துக்களைப் பதிப்பித்துக் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கலாம்.அவ்வாறு செய்யத் துணியாத தேர்ந்த ரசனையோடு கூடிய கறாரான பதிப்புக் கொள்கை கொண்டிருந்தவர் திரு செல்லப்பன்.

நான் சற்றும் எதிர்பார்த்திராத நிலையில்...திரு செல்லப்பன் அவர்கள் எனக்கு வழங்கிய இரு பெரும் வாய்ப்புக்கள் , வாழ்வின் எந்தத் தருணத்தில் நினைவுகூர்கையிலும் என்னை நெகிழ வைப்பவை. 
ஒன்று....,சிறந்த சிறுகதைகளின் வரிசையான தொகுப்புக்களாக அவர் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்த மணிக்கதைகள் ஐந்தாம் தொகுப்பில் என் சிறுகதை ஒன்றையும் இணைக்கப் போவதாக அவர் எழுதிய கடிதம்..
(மணிக்கதைகள் 5 இல் கலைமகள் மாத இதழில் வெளியான
புதிய பிரவேசங்கள்’என்னும் என் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது.)மீனாட்சியின் அரிதான அந்தத் தொகுப்புக்கள் ஒன்றில் என் படைப்பும் இடம் பெற்றிருப்பதைப் பெருமைக்குரிய ஓர் அங்கீகாரமாக இன்றளவும் நன்றியின் நெகிழ்வோடு நான் போற்றிக் கொண்டிருக்கிறேன்.

அடுத்தாற்போலத் திரு செல்லப்பன் அவர்கள் அளித்த இன்ப அதிர்ச்சி, நான் கற்பனையிலும் எண்ணிப் பாராதது.
மதுரை ஒய் எம் சி ஏ அரங்கை ஒட்டிய குஜராத்தி சமாஜத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தின் சார்பில் நடைபெற்ற ஜெயகாந்தனின் மணிவிழா நிகழ்வில் - சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக என்னையும் இணைத்துச் சொற்பொழிவாற்றுமாறு அவர் பணித்ததை எனக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச கௌரவமாக நான் எண்ணுகிறேன்.ஜே கே பற்றிய என் எண்ண ஓட்டங்களை உரையாய் ஆக்கி அவர் முன்னிலையிலேயே சமர்ப்பிக்கவும், அவருடன் உரையாடவும் வழி அமைத்துத் தந்த அந்த மணிவிழா மேடை... என்னுள்ளத்தில் என்றென்றும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கிறது.

திரு செல்லப்பனைத் தொடர்ந்து , தானும் நயத்தக்க நாகரிகத்தோடு பழகி எனது நூல்களையும் 
(தடை ஓட்டங்கள்,சிறுகதைத் தொகுப்பு-2001    ,
 பெண் - இலக்கியம் - வாசிப்பு-2001,
 இலக்கிய இலக்குகள்,-2004,      
 தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும்,பெண்ணும்- 2006)
செம்மையான முறையில் அச்சிட்டு வெளியிட்ட பண்பாளர் ,அவரது மகன் திரு முருகப்பன் அவர்கள்.
எத்தனை முறை ’படி’ திருத்த வேண்டுமென்று சொன்னாலும் - நூல் வடிவம்,அட்டை ஆகியன எப்படி அமைய வேண்டுமென்று நான் விரும்பினாலும்,முகம் சற்றும்கோணாமல் அதற்கெல்லாம் ஒத்துழைப்பு நல்கி.,நானும் சக பேராசிரியை ஒருவரும் இணைந்து நடத்திய-அவரது பதிப்பக வாயிலாக வெளியிடப்பட்ட -புத்தக வெளியீட்டு விழாவிற்கு இயன்ற உதவிகளையெல்லாம் செய்து தந்து அவர் துணை நின்றதை எந்நாளும் மறக்க இயலாது.


நூல் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்து,அவர்களுக்குச் சேர வேண்டிய ராயல்டி - சன்மானம் போன்றவற்றை அவர்களே மறந்து விட்டாலும் - மறவாமல் குறித்து வைத்துத் தவறாமல் கொடுத்துவிடும் மிகச் சிறந்த நெறியைத் தந்தையின் வழியில் தனயனும் பின் தொடர்ந்து வருகிறார்.இன்றைய பதிப்புலகில் மிகவும் அருகிப் போய்விட்ட பண்பு இது.

என் முனைவர் பட்ட ஆய்வின்போதும்,தொடர்ந்து மாணவர்களுக்குத் தேவையான நூல்களை நாடி வரும்போதும்,இன்று தில்லியில் இருக்கும் நிலையிலும் எந்த நூல் எப்போது வேண்டுமென்று கூறினாலும் முகம் கோணாமல் உதவிக் கரம் நீட்டும் திரு முருகப்பன்,இன்று எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே ஆகிப் போயிருக்கிறார்.

இன்று அச்சுத் தொழிலில் பல வியத்தகு தொழில்நுட்பங்கள் கை கூடியிருக்கலாம்..பல்வேறு பதிப்பகங்கள் பல்கிப் பெருகியிருக்கலாம்.விதம் விதமான செய்நேர்த்தியுடன் கூடிய நூல்கள் வெளிவரலாம்.ஆனாலும் கூட எனக்கென்னவோ மீனாட்சி புத்தக நிலையத்தின் பழைய பதிப்புக்களில்...(ஜெயகாந்தனின் குறு நாவல்கள் மற்றும் நாவல்கள் அனைத்தையும் தொகுத்து அவர்களே இன்றைய நவீன பதிப்புக்களாக வெளியிட்டிருந்தாலும்) -  கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும்,லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...
நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...

பொன்விழாக் காணும் மீனாட்சி புத்தக நிலையம் ,தன் பாரம்பரிய உயர் நெறிகளைத் தக்கவைத்துக் கொண்டபடி பதிப்புத் துறையில் உன்னதமான பல சாதனைகளைப் படைக்க வேண்டும்...எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியின் ஆசி அதற்குத் துணை நிற்க வேண்டும் என இந்த இனிய தருணத்தில் மனம் கனிந்து வாழ்த்துகிறேன்.


பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட..susila27@gmail.com





















27.11.10

பெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்

பெண்ணியம் சில எளிய புரிதல்கள் (9பகுதிகள்)என்னும்கட்டுரைத் தொடரின் இறுதியில் எனக்கு வந்த கடிதமும்,என் மறுமொழியும்.

25.11.10

இரு மாற்றங்கள்

இத் தளத்தை இலக்கியத்துக்கும்,சமூகத்துக்கும் மேலும் சற்று  அண்மையாகக் கொண்டு சென்று மேம்படுத்தும் நோக்கில் கீழ்க்காணும் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.


1.இலக்கிய உரையாடல் என்னும் புதுப் பகுதி தனியொரு பக்கமாக அமையவிருக்கிறது.வாசகர்களும் அதில் பங்கு பெற்று இலக்கியப்போக்குகள் குறித்த தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
காழ்ப்புணர்வுகள் தவிர்த்த- மெய்யான இலக்கிய வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஆரோக்கியமான விவாதங்களைத் தூண்டும் கருத்துக்கள் வலையில் பதிவாக வெளியிடப்பட்டுத் தொடர் விவாதங்கள் இந்த வலையின் பதிவரால் மட்டுமன்றிப் பிற வாசகர்களாலும் தொடர்ந்து மேலெடுத்துச்செல்லப்படும்.

மேலும் சங்க இலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம்-(நாவல்,சிறுகதை,கவிதை) வரை வாசகர்களுக்கு ஏற்படும் ஐயங்களையும், நூல்கள் மற்றும் படைப்பாளிகள் குறித்த விவரங்களையும் அறிய விரும்பினாலும் இப் பகுதியில் பதிவு செய்தால் நான் அறிந்துள்ளவரை எனக்குத் தெரிந்த தகவல்களை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.


மின் அஞ்சலின் subject பகுதியில் இலக்கிய உரையாடல் எனக்குறிப்பிட்டு உங்கள் ஐயம்,கேள்விகள் மற்றும் சிந்தனைகளை மின் அஞ்சல் செய்யலாம்.


2.அடுத்த மாற்றம் பின்னூட்டம் பற்றியது.
பெரும்பாலான பின்னூட்டங்கள் ஒற்றை வரிப் பாராட்டுக்களாகவும்,
சில வேளைகளில் ஆழ்ந்த வாசிப்பில்லாதவைகளாகவும் அமைந்து விடுவதால் 
அவற்றைத் தவிர்க்கும் நோக்கில் 
தனிப் பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு மாறாகக் 
குறிப்பிட்ட பதிவுகள் குறித்த கடிதங்களை மட்டுமே இனி இத் தளத்தில் ஏற்க முடிவு செய்திருக்கிறேன்.
கடிதம் வழியாகவும் விவாதங்களை முன்னெடுத்துச்செல்ல முடியுமென்பதாலும்,
பதிவர்-வாசகர் ஆகிய இரு முனை வளர்ச்சிக்கும் இதுவே பயனளிக்க வல்லது என்பதாலும் 
இணைய நண்பர்கள் இதைத் தவறாகக் கொள்ளாமல் தொடர்ந்த தங்கள் அன்பு கலந்த ஒத்துழைப்பையும்,ஆதரவையும் 
எனக்கு அளிப்பார்கள் என்ற எண்ணத்தில் இம் மாற்றங்களைத் துணிந்து மேற்கொள்கிறேன்.
மின்னஞ்சலிடுவதற்கான முகவரி
susila27@gmail.com
கடிதம் அனுப்புவதற்கான மின் அஞ்சல் முகவரி வலையின் முகப்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடிதம் எழுதும் அன்பர்கள் அதிலேயே தங்கள் வலைத்தள இணைப்பையும் குறிப்பிட்டால் பலரும் பயன் பெற வழி ஏற்படும்.





19.11.10

சென்ற தம்பியும், நின்ற தம்பியும்..

காப்பியக் கவிஞர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு வழங்கும் நீதி துல்லியமானது;எந்த சமரசமும் அற்றது;கறாரானது. தலைமைப் பாத்திரமென்றாலும், துணைப்பாத்திரமென்றாலும், எதிர்நிலைத் தலைவன் என்றாலும் அவரவர்க்கு உரிய இடமும்,மதிப்பும் இலக்கிய அரங்கில் கண்டிப்பாக வழங்கப்பட்டு விடும்.


கம்பனில் ஒரு காட்சி

15.11.10

பெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)

பெண்மொழியை உடல் மொழியாக்கும் கலகக் குரல்;

பெண்மொழி என்பது பால் சார்ந்த தனி அடையாளங்களை உடையது என்பதும்,’பெண் உடல்,பெண்ணின் பாலியல் உறவு,தாய்மை இவைகளை வெளிப்படுத்தும் மொழியே பெண்மொழி’என்பதுமே சமகாலப் பின் நவீனச் சிந்தனைப்போக்காக உள்ளது.

14.11.10

குற்றமே தண்டனையாக...-தமிழ்மகனின் பதிவு

குற்றமும் தண்டனையும் நாவல் குறித்தும்,எனது மொழிபெயர்ப்பு பற்றியும்'' குற்றமே தண்டனையாக''என்னும் தலைப்பில் தினமணி முதுநிலை உதவி ஆசிரியரும்,சிறந்த நாவல்,மற்றும் அறிவியல் புனைகதைகளை அளித்து வருபவருமான எழுத்தாளர் திரு தமிழ்மகனின் பதிவு,



தமிழ்ஸ்டூடியோ இணைய இதழில் வெளியாகியுள்ளது.
http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_18.php

12.11.10

தலைநகர்தில்லியில்..தமிழ்2010-கருத்தரங்கம்

சம காலத் தமிழின் பலமுனை வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு,
தமிழ் 2010 
என்னும் 
இலக்கியக் கருத்தரங்கை
டிச.10,11,12 ஆகிய நாட்களில்மிகச்சிறப்பாக நிகழ்த்த
தில்லித் தமிழ்ச்சங்கம் திட்டமிட்டுள்ளது.

எழுத்தாளர்களும்,விமரிசகர்களும்,நாடக மற்றும் ஊடகவியலாளர்களும்
(நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் , கவிஞர் சிற்பி , கவிஞர் முத்துலிங்கம் ,
கவிஞர் கலாப்ரியா , பேராசிரியர் ப்ரேம், வெளி ரங்கராஜன் ,இமையம்,அம்பை, 
லிங்க்ஸ்மைல் வித்யா , காந்தளகம் சச்சிதானந்தன் ,அமரந்தா ,தியடோர் பாஸ்கரன் , 
ரவி சுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி , 
பேராசிரியர் சிவப்பிரகாஷ்,சந்திரபோஸ்முதலியோர்)
பங்கு பெற்றுச் சொற்பொழிவாற்றும் நான்கு அமர்வுகள்,
50ஆண்டுக்காலப் புனைவிலக்கியம்,
கவிதை இலக்கியம்,
கணினித் தமிழ்,
பிறமொழிகளில் தமிழ்,
ஒடுக்கப்பட்டோர் இலக்கியம்,
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்,
நாடக-ஊடகத்தமிழ்
எனப் பல அமர்வுகளாக நடைபெறவிருக்கின்றன.

10.11.10

வலை முகவரி மாற்றம்

நண்பர்களுக்கு,
இந்த வலைப் பதிவு முகவரியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது வரை,
masusila.blogspot.com
என்னும் முகவரியில் இயங்கி வந்த இத் தளம்,தொடர்ந்த சில நாட்களில்,
masusila.com
என்னும்முகவரியில் இயங்கும்.
தொடர்ந்த தங்கள் கருத்துரைகளையும்,ஆதரவையும் நாடுகிறேன்.

8.11.10

பெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)

நவீனப் பெண் கவிதைகளில் பெண்மொழி அமைந்துளள தன்மையை மூன்று வகைப் போக்குகளாய்ப் பகுத்துக் காணலாம்.

-மரபு சார்ந்த நெருக்குதல் தாங்க முடியாமலிருப்பதை ஆற்றாமையாய்,வலியாய்-சில வேளைகளில் விமரிசனமாய் வெளிப்படுத்தல்.
-மரபுச் சிறையிலிருந்து வெளிப்பட்டாக வேண்டுமென எழுச்சி கொள்ளல்
-பெண்மொழியை உடல்மொழியாக்கி அதன் வழி எழுப்பும் கலகக் குரல்.

7.11.10

நன்றி தமிழ்மணம்...!

கடந்த ஒரு வாரமாக என்னைத் தமிழ்மண நட்சத்திரப் பதிவராக்கி என் பதிவுகளைக் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக வெளியிட்ட தமிழ்மணத்துக்கு என் நன்றி..
குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் என் வலைக்கான வருகை சராசரி எட்டு முதல் பத்து மடங்கு கூடியதும்,வழக்கமான வாசகர்களோடு புதுப்புது வாசகர்கள் வாய்த்ததும் எனக்குக்கிளர்ச்சியூட்டும் அனுபவங்களாக அமைந்தன.
அத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய தமிழ்மண அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக் கூறி வரவேற்றதோடு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து தொடர்ந்து பல விவாதங்களை மேலெடுத்துச் சென்ற வலை வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி


6.11.10

ஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(?!)


'இரவு வேளையில் பாரீஸின் இளவரசி,
பகற்பொழுதிலோ பாரீஸின் ராட்சசி’’
- பாரீஸ் நகர வாசிகளிடையே மிகவும் பிரபலமானது ஈபில் கோபுரம் பற்றிய இந்த வாசகம்

பொம்பளை வண்டி..

மகளிர் மட்டும்...

காதுச் சவ்வே கிழிஞ்சு போயிடற மாதிரி இரைச்சலோட..கல்யாண வீட்டு ‘ஸ்பீக்கர்’பொட்டியிலேயிருந்து அலறிக்கிட்டிருந்த முக்கல் முனகல் சினிமாப்பாட்டுக்குப் பொடிசுகள் போட்டுக்கிட்டிருந்த கும்மாளம்,பிரியாணிச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கிட்டே பொண்ணு மாப்பிள்ளையைக் கலாட்டா பண்ணிக்கிட்டிருந்த பொம்பளைங்களோட கலகலப்பு,அவங்க உடுத்திக்கிட்டிருந்த சரிகைச் சேலையெல்லாம் கூட்ட நெரிசலிலே கசங்கிப்போய் உச்சி வெயில் வேக்காட்டிலே வெளிப்படுத்திக்கிட்டிருந்த குமட்டலெடுக்கிற வேர்வை நாத்தம்...இதுங்களுக்கெல்லாம் மத்தியிலே - இதுங்களோட கூடவே ஈஸ்வரியும் இருந்தாலும்...காலையிலே புருஷன் கிட்டே வாங்கின ‘எத்து’ ,அவளோட அடிவயத்திலே பாறையாக் கனத்துக்கிட்டுத்தான் இருந்தது.

5.11.10

சின்னக் கண்ணன் அழைக்கிறான்....

(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )
தமிழில் பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகையின் முறைப்படுத்தப்பட்ட வருகை 12ஆம் நூற்றாண்டை ஒட்டியதாயினும்,ஆழ்வார் பாடல்களில்-குறிப்பாகப் பெரியாழ்வாரின் பாசுரங்களில் அதற்கான அடித்தளம் வலுவாக அமைந்திருக்கிறது.

ஜெயமோகனின் ’டார்த்தீனியம்’

(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )
யதார்த்தச் சித்தரிப்பும், அதீதக் கற்பனையின் அழகியல் புனைவுமாய் மாறி மாறிச் சஞ்சாரம் செய்யும் குறிப்பிடத்தக்க ஒரு குறு நாவல், ஜெயமோகனின் டார்த்தீனியம்’.

3.11.10

’சக்ராதா’வின் மலை மடிப்புகளில்...

சக்ராதா மலைத் தொடர்களுக்குக்குள் மேற்கொண்ட 
பயணத்தின்போது நான் எடுத்த சில புகைப்படங்கள்...,இணைய வாசகர்களின் பார்வைக்கு.

மலையும்,மலை சார்ந்த இடமும் என்று தமிழ்க் குறிஞ்சி சொல்லும் மலைத் தொடர்கள் திகட்டாத பல ஆனந்தக் காட்சிகளை உள்ளடக்கி வைத்திருப்பவை.
ஒவ்வொரு நிலப் பகுதியில் இருக்கும் மலைகளுக்கும் ஒவ்வொரு முகங்கள் உண்டு.
தேராதூனுக்கு மேல் மட்டத்தில் இமையம் தொடங்கும் இடத்தில்-சக்ராதா என்னுமிடத்தில் உள்ள இம் மலைத் தொடர்கள் ஈரம் பட்ட மண் செறிந்து இறுகிப் போனவை.எளிதில் இளகிக் கரையக் கூடியவை.
மலைத் தொடர்களை ’அடுக்கம்’ என்ற சொல்லால் குறிப்பிடும் சங்கப்புலவனின் நுண்ணிய அவதானிப்பு எத்தனை துல்லியமானது என்பதற்கு,ஒன்றுக்குள் ஒன்று உட்செறிந்தபடி..அடுக்கப்பட்டது போலக் காட்சி தரும் இம் மலை அமைப்பே சாட்சியம் கூறுகிறது.
மானுட முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்...இயற்கை வழங்கும் இன்பம்
இணையற்ற இன்பம்தானே?.






பெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)

கருத்துப் பரிமாற்றத்திற்கு மட்டுமே கருவியாக உள்ள மொழியில்,பால் பாகுபாட்டிற்கு இடமில்லை என்றபோதும்,பொதுவாக மொழியைக் கையாளும் அதிகாரம் எவர் வசம் உள்ளதோ,அவரது கண்ணோட்டத்தை ஒட்டியே மொழியும் வடிவமைக்கப்படுவதைக் காண முடிகிறது.

2.11.10

கண் திறந்திட வேண்டும்...!


’’செல்லி! அந்த ஷெல்ஃபிலே இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் எடுத்துத் தூசிதட்டி ஒழுங்கா அடுக்கி வை!நானும் பப்பியும் கடைத் தெரு வரைக்கும் போயிட்டு வந்திடறோம்’’
கதவைத் தாளிட்டு விட்டுப் புத்தக அடுக்குகளைப் பிரித்துத் துடைக்க ஆரம்பிக்கிறாள் செல்லி.அவளுக்குப் புஸ்தகமென்றால் கொள்ளை ஆசை.பளபளப்பான வண்ணங்களில் வழுக்கிக் கொண்டு போகும் அட்டைகளை அணிந்திருக்கும் அந்தப் புத்தகங்களை ...ஒவ்வொன்றாக எடுத்து ஆசை தீரத் தழுவி,அவற்றின் வாசனையை முகர்ந்து நெஞ்சு கொள்ளாமல் நிரப்பிக் கொள்கிறாள் . அவள் இங்கே வந்து சேர்ந்த இத்தனை நாட்களில் ஒரு பொழுது கூட இந்த வீட்டிலிருப்பவர்கள் இவற்றையெல்லாம் பிரித்துப் பார்த்ததாய் அவளுக்கு ஞாபகமில்லை.கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கப்பட்டிருக்கிற அலங்கார அழகுப் பொருட்களைப் போல இந்தப் புத்தகங்களும் கூடப் பணம் படைத்தவர்களின் அந்தஸ்தைக் கட்டியம் கூறும் அடையாளச் சின்னங்கள் மட்டுமே என்ற உண்மை புரியாதவளாய் அவற்றை வெற்றுப் பார்வையோடு வெறித்துப் பார்க்கிறாள்.அவளுக்கிருந்த அரைகுறைஞானத்தில் அந்தப் புத்தகங்களில் பரவிப் படர்ந்திருக்கிற ஆங்கில எழுத்துக்களை எழுத்தளவில் இனம் காண முடிகிறதே ஒழிய எழுத்துக் கூட்டிச் சொல்லவோ,உச்சரிக்கவோ முடியாத குறை,உள்ளுக்குள்ளிருந்து முட்டிக்கொண்டு வருகிறது.கண்ணைக்கூடச் சரியாக விழித்துப் பார்க்கத் தெரியாத கோழிக் குஞ்சை எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து,தூக்கிக்கொண்டு போவதைப் போல விதி அவளை ஒரே தூக்காய்த் தூக்கி இங்கே கொண்டுவந்து போட்டுவிட்டது!

’’எல்லாரும் ஒரு தடவை சத்தமாய்க் கை தட்டுங்க!இந்த மாசமும் நம்ம செல்லிதான் முதல் ராங்க் வாங்கியிருக்கா.செல்லி! வா..வந்து ராங்க் கார்டை வாங்கிக்க...’’

சிந்தை இரங்காரடீ...


ரஷியப் பின்புலத்தில்...ஒரு காட்சி!
உயர் அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அலுவலர்(அந்தக் கால மொழியில் குமாஸ்தா)ஒருவர், நாடக அரங்கொன்றுக்குச் செல்கிறார்.நாடகம் தொடங்கி நடந்து கொண்டிருந்த வேளையில் அவருக்கு அடக்க முடியாத தும்மல் வந்து விடுகிறது.தும்மல் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தவரைக் கண்டு குமாஸ்தா பேரதிர்ச்சி அடைகிறார்.காரணம் அது,அவரது உயர் அதிகாரி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....