துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.12.12

2012 இல்.....

31/12/12 குங்குமம் தமிழ் வார இதழ் வெளியிட்டிருக்கும் 2012 க்கான 10 முக்கியமான நூல்களில் [டாப் டென்] -என் மொழிபெயர்ப்பான ’அசடனு’ம்’ இடம் பெற்றிருக்கிறது.

இலக்கியம்,அரசியல்,பொருளியல் எனப்பல தளங்களிலும் வெளிவந்த முக்கியமான சில நூல்களை எழுத்தாளர் திரு ஜெயமோகன் இப்பட்டியலில் தன் கணிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கும் பட்டியலிலும் அசடன் இடம் பெற்றிருக்கிறது.

மூலநூலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் மொழியை என் சொற்களில் வைத்தது மட்டுமே நான் செய்தது. இவ்வாண்டில் இம்மொழிபெயர்ப்பைப் பெருமளவில் வரவேற்று வாசித்த இலக்கிய ஆர்வலர்களுக்கும்,விமரிசகர்களுக்கும்-  அளவில் மிகப்பெரியதான இந்த நூலைப் பல வகைச்சிக்கல்களுக்கு நடுவிலும் பிரம்மாண்டமாக வெளியிட்ட மதுரை பாரதி புத்தகநிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கும் என் நன்றி....

2012 இல் என் நூலுக்கும் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்ததை நிறைவுடன் ஏற்று....அடுத்த அடி எடுத்து வைக்க இன்னும் பொறுப்புடன் ஆயத்தமாகிறேன்.

இ பாவின் கண்ணன்


கையில் எடுத்து விட்டால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி விறுவிறுப்போடும்...அதே நேரம் ஆழமான தகவல்களைக்  கூட மெல்லிய கிண்டலோடும்,நகைச்சுவையோடும் சேர்த்துத் தரும் ஒரு நூலை வாசித்துப் பல நாட்களாயிற்று. அந்தக்குறையைப்போக்குவது, இந்திரா பார்த்தசாரதியின் நாவலா..கட்டுரை நூலா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஆக்கமான ’’கிருஷ்ணா..கிருஷ்ணா...’’

இந்துக்கடவுளரில் கண்ணன் மதம் கடந்த பிரியத்துக்கும் நேசத்துக்கும் உரியவன்.பயபக்தியோடு செய்யப்படும் வழிபாட்டை விடவும் ஒரு குழந்தையைச் சீராட்டுவது போன்ற வாஞ்சையே அதில் எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கும். கண்ணனின் பிள்ளைக் குறும்புகளை அதிகம் கேட்டே அவனைக் குழந்தையாக வரித்துக் கொண்டு விட்ட நம் மனங்களில் அந்தச் சித்திரத்தை இன்னும் அழுத்தமாகத் தீட்டியிருக்கிறது பாரதியின் கண்ணன் பாட்டு.

கண்ணன் ஒரு குழந்தையாக நம் மனங்களில் பதிவாகியிருந்தாலும் அவனுக்குப் பல முகங்கள்,பரிமாணங்கள் உண்டு.இராமனைப்போன்ற ஒற்றைப்படைத் தன்மை கொண்டவன் அல்ல அவன். பாகவதத்தில் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத் திரியும் அவன், பாரதத்திலோ அரசியல் விளையாட்டில் முக்கியமான அங்கம் வகிக்கும் மதியூகியாகிறான். கண்ணனைக் கடவுளாகவே ஏற்றிருப்பவர்களுக்கும் கூட அவனது செயல்பாடுகளில் பல கேள்விகளும் ஐயங்களும் தலைநீட்டும் இடங்கள் பாரதம்,பாகவதம் இரண்டிலுமே ஏராளமாக உண்டு.அவற்றுக்கெல்லாம் விடை தேட இந்நூல் மூலம் ஒரு முயற்சி மேற்கொண்டிருக்கிறார் இ.பா. அந்த விடைகளை மிக இலகுவான மொழியில்,அவருக்கே உரிய அங்கத நடையில் சொல்லிச் செல்வதால் நூற்றுக்கணக்கான கிளைக்கதைகளும்,தத்துவ விளக்கங்களும் இதில் இடம் பெற்றாலும் கூட அவை துருத்திக் கொண்டோ,எளிதான வாசிப்புக்குத் தடையாக உறுத்திக் கொண்டோ நிற்காமல் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்தோடும் வேகத்தோடும் இந்த நூலைப்படித்து விட முடிகிறது.

‘’உபதேசம் என்று எதுவுமில்லாமல் கவனமாக எழுதியிருக்கிறேன்’’என்கிறார் இ.பா.

கண்ணன் என்னும் அந்த அவதாரத்தின் முடிவு ஜரா என்னும் வேடனால்,அவன் எய்யும் அம்பால்  நேர்கிறது.அந்த இறுதிக்கணத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்கள் அளிக்கிறான்; அதை நாரதர் தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூலின் வடிவைக் கட்டமைத்திருக்கிறார் இ.பா.[நாரதரைத் தகவல் கடத்தும் ஒரு நபராக- எல்லாக் காலங்களிலும் சஞ்சரிக்கக்கூடிய ஒரு பத்திரிகையாளராக ஆசிரியர் வடிவமைத்திருப்பதால் பத்திரிகைக்காரருக்கே உரிய,நையாண்டி,விமரிசனம்,மாடர்னிஸம்,போஸ்ட்மாடர்னிஸம்,எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எனத் தற்காலப்போக்குகளை ஒன்றுகலந்து சொல்வதற்கான வாய்ப்பு இந்தப்படைப்புக்குக் கிடைத்து விடுகிறது]

’700 சுலோகங்களாக விரியும் கீதையைப் போர்முனையில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா....?’- அதற்கு இப்படி விளக்கம் தருகிறது இந்நூல். நாரதர் சொல்கிறார்...’’எதிர்த்தாற்போல் பகைவர்கள் போராடத் தயாராக நின்றுகொண்டிருக்கும்போது கிருஷ்ணன் மணிக்கணக்கில் இவ்வாறு அருச்சுனனிடம் பேசியிருப்பான் என்பது சாத்தியமா என்பது நியாயமான கேள்வி.நானே கிருஷ்ணனிடம் இது பற்றிக்கேட்டேன்.கிருஷ்ணன் சொன்னான்,’நாரதா வார்த்தைகள் உதவியின்றி மனமும் மனமும் வெறும் எண்ண மொழியில் பேசினால் இந்த உரையாடல் நிகழ அதிகபட்சம் ஐந்து நிமிஷங்களாகும் என்று....நீங்கள் இப்போது சொல்லுகிறீர்களே     அதுவேதான் கிருஷ்ணன் சொல்லும் எண்ண மொழி-telepathy’’

போர் முனைக்கு வந்தபோது அர்ச்சுனனுக்கு நேர்வது  ஓர் existentialistic dilemma என்று கூறும் இ.பா.,
‘செய்கைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு,மனப்போராட்டம் என்பது,காரியம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கான மனச்சமாதானம்’என்பதையே கண்ணன்
கீதையாக உரைப்பதால், அது எந்தக்காலத்துக்கும் பொருந்தி வரும் ஓர் அரசியல் manual ஆவதையும், அதனாலேயே கம்யூனிஸ்ட் தோழர் டாங்கே போன்றவர்களும் கூட அதிலிருந்து மேற்கோள் காட்டுவதையும் சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

ஜராசந்தனின் உடல் எப்படிக்கூறு போட்டாலும் ஒட்டிக்கொள்ளும் என்பதால் துரும்பைக்கிள்ளித் தலை கீழாக மாற்றிப்ப்போட்டு சங்கேதம் காட்டியது...., மற்போர் விதிகளுக்கு மாறாக துரியனின் தொடையில் அடிக்குமாறு பீமனைத் தூண்டியது...,கர்ணனின் தேர்ச்சக்கரங்கள் இறங்கி விட்ட நிலையில் அவன் மீது அருச்சுனனை அம்பு தொடுக்கச் செய்தது என தர்மத்துக்கு மாறான பல செயல்களுக்குத் தான் தூண்டுதல் தந்ததற்கான காரணம் பற்றி பீஷ்மர் துரியோதனன் ஆகியோரிடம்
‘’யுத்தம் என்கிறபோது தர்மம் அதர்மம் என்று எதுவுமில்லை;அநியாயத்தை நியாயத்தால் வெல்ல முடியவில்லையென்றால் அநியாயத்தை அநியாயத்தால் வெல்வதில் தவறேதுமில்லை....நீ ஆடும் ஆட்டத்தைப்பார்த்து அதற்கேற்ப ஆட்ட விதிகளைப்புதுப்பித்துக் கொண்டு ஆடுகின்றேன் நான்...இதுதான் என்னுடைய இப்பொழுதைய தர்மம்..உன் தர்ம விதிகளுக்கு ஏற்பத்தான் நான் என் தர்மவிதிகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது;இதில் தவறேதுமில்லை...வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க ஆட்டம்.நீ காய்களை நகர்த்துவதற்கு ஏற்பத்தான் நானும் காய்களை நகர்த்தியாக வேண்டும்.....இதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை....இதைத்தான் நான் போர்த் துவக்கத்தில் அருச்சுனனிடம் சொன்னேன்..’’என்று குறிப்பிடுகிறான் கண்ணன்.

பெண்ணினத்தின் மீது கண்ணன் கொண்ட பெருங்கருணையே அவர்களுக்கு விடுதலையளிக்கும்  ராச லீலையாக மலர்கிறது.
‘’ஒவ்வொரு கோபிகையும் அவரவர் கற்பனையில் விரிந்த இலட்சிய புருஷனை அவளுடன் குழல் இசைத்து நடனமாடிய கிருஷ்ணனிடம் கண்டாள்’’என்று சொல்லும் இ பா.,
‘’அந்தக்காலத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் எத்தனை மனைவிகள் தெரியுமா......ஆண்கள் இப்படியிருக்கும்போது பெண்களுக்குத் தங்கள் விருப்பப்படி கற்பனை செய்து கொள்ளக்கூடவா உரிமையில்லை...? அவர்கள் கற்பனையின் வடிகாலாகத் தன்னை அவர்களுக்கு அர்ப்பணித்தான் கண்ணன்’’என்று அதற்கு மேலும் விளக்கம் தருகிறார்.

கௌரவர் அவையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியே எந்த தர்ம வரம்பையும் கடந்து தீயதை மாய்க்க வேண்டும் என்னும் உத்வேகத்தைக் கண்ணனுக்கு அளிக்கிறது...! மரணப்படுக்கையில் இருக்கும் பீஷ்மர் ‘நீ நினைத்திருந்தால் இந்தப்போரைத் தடுத்திருக்க முடியாதா’’என்று கேட்கும்போது,
‘’அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் உன்னிடம் நியாயம் கேட்டபோது உன்னால் என்ன செய்ய முடிந்தது.....? இப்பொழுது நினைத்தாலும் அந்தக்காட்சி என் மனத்தை உலுக்குகிறது.பெண்களுக்குக் கொடுமையிழைத்து விட்டு யாராலும் தப்பித்துக் கொள்ள முடியாது;இதைத் தவிர வேறு தர்மம் எனக்குத் தெரியாது’’என்பதே கண்ணன் சொல்லும் விடை.
நூல் முழுவதும் கண்ணன் வருவது பெண்களின் உற்ற தோழனாகவே....

பீஷ்மன்,கர்ணனாகிய ராதேயன் இருவரையும் கிட்டத்தட்ட ஒரே தட்டில் நிறுக்கிறார் இ பா. இருவரும் சூழ்நிலைக் கைதிகளாகித் தங்கள் மனச்சாட்சியின் உட்குரலைக்கடந்து செல்பவர்கள். அநீதியான செயல் என்று உணர்ந்தாலும் அரச நீதியைக் காப்பதற்காகவே பிறந்தவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பீஷ்மன் அநீதியின் பக்கம் நின்று போராடுகிறான்;அதே போல நட்புக்காக அநியாயத்தின் பக்கம் சேர வேண்டியதாகி விடுகிறது கர்ணனுக்கு.
‘’பீஷ்மன்,ராதேயன் இருவருமே கிரேக்கத் துன்பவியல் நாடகங்களில் வரும் கதாநாயகர்கள் போன்றவர்கள்’’என்னும் இ பாவின் அவதானிப்பு மிகக்கூர்மையானது.

’’கிருஷ்ணன் ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக் காலத்துக்கேற்ப அர்த்தப்படும்படியான பல பரிமாணங்களையுடைய மஹாபுஷன்.நீ இந்தக் கதையைச் சொல்லும்போது இந்த அர்த்தப்பரிமாணங்கள் கேட்கின்றவர்களுக்குப் புலப்பட்டால்தான் கிருஷ்ணனைப்புரிந்து கொண்டதாக அர்த்தம்..’’என்று ஜரா, நாரதரைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள் இந்த நூலை எழுதும்போது இ.பா.,தனக்குத்தானே வகுத்துக் கொண்ட நியதியாகவே ஒலிக்கிறது.அந்த நியதியை மிகத் துல்லியமாக இப்படைப்பில் செயலாக்கி எல்லாக் காலங்களுக்கும் உரிய நாயகனாகக் கண்ணனை நிலை நிறுத்தியிருக்கிறார் இ பா.

கண்ணனின் கதை ஜராவின் அம்பினால் முடிவதற்கு முன் தன் அன்புக்காதலி ராதாவை இறுதியாகத் தேடிப் போகிறான் கண்ணன்.அங்கே அவன் காண நேர்வது ராதைப் பாட்டியையைத்தான்..இளமைப்பருவத்தில் அவனோடு கொஞ்சி விளையாடி,மழலை பேசி மகிழ்ந்திருந்த அந்த இளைய ராதையை அல்ல...அவனுள் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இளம்பெண்ணைத் தொலைத்துக் கொள்ளவிரும்பாமல் அவளைப்பார்க்காமலே திரும்பி விடுகிறான் கண்ணன். மூப்பு இளமை இவையெல்லாம் சரீரத்துக்குத்தான்..ஆத்மாவுக்கில்லை என்று அர்ச்சுனனுக்கு உபதேசித்த தானே இவ்வாறு நடந்து கொண்டதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவும் செய்கிறான். துண்டு துண்டான நிகழ்வுகளும் குட்டிக்கதைகளும் நிறைந்த இந்நூலின் ஒருமுகத்துக்கு உதவி இதற்கு ஒரு  நாவல் வடிவு தர உதவுகிறது இந்த இறுதிக்கட்டம்.

இ.பா.,இயல்பிலேயே ஒரு நல்ல கதை சொல்லி...
எள்ளலும்,எளிமையான கதை மொழிபும் அவரது எழுத்துக்கு வாய்த்த ஒரு வரம்; கூடவே கண்ணனின் கதைகளும் சேர்ந்து கொள்ள சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதபடி விறுவிறுப்புடன் செல்கிறது கிருஷ்ணா கிருஷ்ணா...
க்‌ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழிப்பதுதான் உன் இலக்கா என்கிறாள் காந்தாரி..அதற்கு இவ்வாறு விடை சொல்கிறாணன் இ பாவின் கண்ணன்.
’’பிறவியினால் யாரும் எந்த ஜாதியுமில்லை..குணத்தினால் வருவது ஜாதி..அரசியலில் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் க்‌ஷத்திரியர்கள்; அறிவினாலும் கலாசாரத்தினாலும் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் பிராமணர்கள்....எந்த விதமான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற கலகக்காரன் நான்...’’

‘’எந்தக்கோட்பாடாக இருந்தாலும் சரி அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னைப்புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்’’
என்று நூலின் ஓரிடத்தில் கண்ணன் குறிப்பிடுவது போலவே வழக்கமான காலட்சேப பாணிகளிலிருந்து மாறுபட்ட ஒரு நவீன,பின் நவீன கண்ணனை நமக்குப் படிக்கத் தந்திருக்கிறார் இ பா.

கண்ணனின் கதைகள் முழுவதையும் ஒரே இடத்தில் தொகுத்துப்பார்க்கவும்,சமகாலநோக்கில் அவை மறு ஆக்கம் செய்யப்படுவதை மனதுக்குள் அசை போட்டு உள்வாங்கவும் இந்நூலை விட்டால் வேறு புகல் இல்லை என்ற அளவுக்குக் கண்ணனின் அனைத்துப் பரிமாணங்களின் இண்டு இடுக்குகளுக்குள்ளெல்லாம் பயணப்பட்டிருக்கிறார் இ.பா.

கிருஷ்ணா கிருஷ்ணா இப்போது ஒலிப்புத்தகமாகவும் கிடைக்கிறது.
இதைப் படிக்கவோ..கேட்கவோ தவறினால் இழப்பு நமக்குத்தான்....
‘’

29.12.12

கண்ணீர் விடை!

தில்லி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த பெண் இன்று காலை மரணமடைந்த செய்தி வந்திருக்கிறது.

பொதுவாக இத்தகைய கொடுமைகளுக்கு -அதிலும் கூட்டான பாலியல் வல்லுறவுக்கு- ஆளாகும் பெண்கள் மரிக்கவே விரும்புவார்கள்; மாறாக இந்தச் சகோதரி வாழ விரும்பி மன திடத்தோடு போராடியிருக்கிறார். தான் உயிரோடு எழுந்து வந்து குற்றவாளிகளை இனம் காட்டி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றே துடித்திருக்கிறார்; நினைவு வரும் நேரங்களிலெல்லாம் அதையே எழுதி எழுதிக் காட்டியுமிருக்கிறார். அவரது குடும்பமும் கூட இந்தக்கருத்தையே கொண்டிருந்தது வித்தியாசமானது...

அவரது மன உரம் அவரை மீட்டுவிடும் என்னும் நமது நம்பிக்கை பொய்த்துப்போக அவர் இன்று காலை மரணம் எய்தி விட்டார்.கோழையைப் போலக் கண்ணீர் சிந்தியபடி இறக்காமல் நெஞ்சுரத்துடன் வாழத் துடித்த அவருக்கு நேர்ந்திருப்பது நிச்சயமாக வீர மரணம்தான்...

இந்தவாரக் குமுதத்தில் நண்பர் ‘தீம்தரிகிடஞாநி’ அந்தச்சகோதரிக்கு எழுதியிருக்கும் மனம் திறந்த மடலில் குறிப்பிட்டிருப்பது போல அழுகிப்போன இந்தச் சமூகத்தில் அங்கம் வகிக்கும் நாம் ஒவ்வொருவருமே இந்தக் குற்றத்துக்குப் பொறுப்பானவர்கள்தான்...

‘’இந்த நாட்டில் பிறந்ததற்காக முதன்முதலாக வெட்கப்படுகிறேன்,அவமானம் கொள்கிறேன்..’’
இன்று விடியலில் என் தோழியின் மகளிடமிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி இது..

இந்த நாட்டில் பிறந்ததற்கு நாண வேண்டாம் பெண்ணே! நல்லதொரு நாட்டை மிருகங்கள் உலவும் காடாக மாற்றி வைத்திருக்கும் அரசியல்,சமூக அமைப்புக்களுக்காக வெட்கப்படுவோம்...!
மரித்துப்போன அந்த ஆத்மாவிடம் அவர்கள் அனைவர் சார்பிலும் நாணித் தலை குனிந்தபடி பாவ மன்னிப்புக்கோருவோம்..!


28.12.12

ஆணின் பார்வை....


வாய்ச்சொல் அருளாதீர் எனச் சென்ற பதிவில் நான் சொன்னதில் சற்றும் மிகை இல்லை என்பதைத் தொடர்ந்து வரும் செய்திகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

பொறுப்பான பதவியும் பாரம்பரியமும் கொண்ட குடியரசுத் தலைவரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான அபிஜித் முகர்ஜி அளித்திருக்கும் பேட்டி இன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
‘’மாணவியர் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அழகான பெண்கள்; அவர்கள் வர்ணம் பூசிக்கொண்டு,பற்களைக்காட்டியபடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்’’- 28.12.12/ தினமணி,தில்லி பதிப்பு

அபிஜித்தின் திருவாயிலிருந்து உதிர்ந்திருக்கும் இந்த முத்தான கருத்தை அவரது சகோதரியும்  குடியரசுத் தலைவரின் மகளுமான சர்மிஷ்டாவே கடுமையாக எதிர்த்திருப்பதோடு அதிர்ச்சியோடு கூடிய தனது வேதனையை வெளிப்படுத்தியிருப்பதும்,அபிஜித்தின் சார்பில் மன்னிப்புக் கோரியிருப்பதும் சற்றே ஆறுதலளித்தாலும்

Sharmishtha said she was highly embarrassed with this remark. "I don't know in what context my brother said that, it's highly insensitive. I'm embarrassed," she said.]

சமூகத்தில் பெண் சார்ந்த ஆணின் கண்ணோட்டங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

என்னதான் நினைக்கிறார் அந்தப் ‘’பெரிய மனிதர்’’?
அழகான பெண்களென்றால் அவர்கள் முட்டாக்குப்போட்டபடி மூலையில் முடங்க வேண்டும்,இப்படி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாதென்கிறாரா?
தில்லிக் குளிருக்குக் கம்பளி எப்படி அவசியமோ அதுபோலவே ஒரு அவசியப்பொருளாக ஆகிப்போன உதட்டு வண்ணத்தை அவர்கள் பூசியிருப்பது தவறென்கிறாரா?

குழந்தைகளோடு கூட சில பெண்கள் வருகிறார்கள்,அவர்கள் மாணவியரா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று வேறு சொல்லியிருக்கிறார்....
இளம் தாய்மார்களாக இருந்தால்தான் என்ன...தில்லியின் இப்போதைய நடுக்கும் குளிரில் தங்கள் ஒருமித்த உணர்வைக்காட்ட அவர்கள் ஒன்றுகூடுகிறார்களே....அதுவே பெரிய விஷயம் இல்லையா..
மாணவியர் நடத்தும் போராட்டத்தில் இவர்கள் கலந்து கொள்வதால் என்ன நேர்ந்து விடும் என்று இப்படிப்பதைக்கிறார் இவர்?

அண்மையில் ஒரு நண்பர் கீழ்க்காணும் வாசகங்களை எனக்கு அனுப்பி மொழியாக்கம் செய்யக் கோரியிருந்தார்...
ஏதோ ஒரு சலிப்பிலும் மனச்சோர்விலும்- நம் ஆண்மக்கள் ஒன்றும் இந்த அளவு மோசமானவர்கள் அல்ல என்ற நம்பிக்கையிலும் அதைச் செய்ய அப்போது மனம் வரவில்லை.
அதை இங்கே தந்திருக்கிறேன்.
[ஆனாலும் இப்போதும் கூட மனிதத்தின் மீது...ஆணினத்தின் மீதான நம்பிக்கை என்னுள் எஞ்சியிருக்கவே செய்கிறது...அதைச் சற்று உலுக்கி விடவே இதை இங்கே தந்திருக்கிறேன்]

’’Don't go out alone at night - That encourages men
இரவில் தனியே செல்லவேண்டாம்-அது ஆணைச் சபலப்படுத்தும்

Don't go out alone at any time - Any situation encourages some men
எந்த நேரமென்றாலும் தனியே செல்லவேண்டாம்-எந்தச் சூழ்நிலையும் ஆணை சபலத்துக்குள்ளாக்கும்

Don't stay at home - Intruders and relatives can both rape
வீட்டில் இருக்க வேண்டாம்-உறவுக்காரர்களும் உள்ளே வருபவர்களும் கூடப்பாலியல் சேட்டைகள் செய்து விடலாம்

Don't go without clothes - That encourages men
சரியாக ஆடை அணியாமல் வெளியே செல்ல வேண்டாம்-அது ஆணைச் சபலப்படுத்தும்

Don't go with clothes - Any clothes encourage some men
ஆடைகளை அழகுற அணிந்தும் செல்ல வேண்டாம்-அதுவும் ஆணைச் சபலப்படுத்தும்

Avoid childhood - Some rapists are turned on by little girls
குழந்தைப்பருவத்தைத் தவிர்த்து விடலாம்-சிலரின் குறி சின்னப்பெண்களின் மீதுதான்


Avoid old age - Some rapists prefer aged women
வயோதிகத்தையும் தவிர்ப்பதே நல்லது-சிலரது கண் வயதான பெண்கள் மீதுதான்


Don't have father, grandfather, uncle or brother - These are the relatives that often rape young women
அப்பா,தாத்தா,மாமா,சித்தப்பா,சகோதரன் என யாருமே வேண்டாம்-இவர்களிலும் கூட இளம் பெண்களைக் குறி பார்ப்பவர்களே அதிகம்


Don't have neighbours - They often rape
அண்டை வீட்டாருடன் பழக வேண்டாம்-அங்கும் ஆபத்து காத்திருக்கிறது


Don't marry - Rape is legal within marriage
திருமணம் வேண்டாம்-அது சட்டஅங்கீகாரமுள்ள பாலியல் குற்றம்


To be quite sure - DON' T EXIST !
எதைச் செய்தால் எதுவும் நடக்காது என்று உறுதியாக இருக்கலாம்?
பேசாமல் ......பெண் என்பவள் இல்லாமலே போய்விடலாம்..அதுதான் நல்லது.’’

இன்னும் ஒன்று....
வாய்ச்சொல் அருளாதீர் பதிவில் நான் சொன்னவற்றை வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுத்து அதிலுள்ள நியாயத்தை ஏற்கத் துணிவின்றிக் கீழ்க்காணும் பின்னூட்டம் ஒன்று ’குலசேகரன்’என்பவரால்
[மேல்விவரம் தெரிந்து கொள்ள முடியாமல் மறைந்து எழுதுபவர்]
எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.அதை அந்தப்பதிவிலேயே வெளியிட்டாலும் அதற்கான மறுமொழியைஎல்லோரும் காணும் வகையில் இங்கு விரிவாக அளிக்க விரும்புகிறேன்.

குலசேகரன் மொழி....
காந்தி சொன்னது, உண்மையான சுதந்திரம் என்பது இரவில் ஒரு பெண் அணிகலன்களோடு தன் வீடு திரும்ப எப்போது முடியுமோ அப்போதுதான். ஆந்திர அமைச்சர் சொன்னது: நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்.
இரண்டையும் நீங்கள் உய்த்துணரவில்லையென்பதே என் அச்சப்பாடு.
காந்தி சொன்னது நாம் ஆகஸ்து 1947 ல அடைந்த சுதந்திரம் வெள்ளைக்காரனிடமிருந்து மட்டும்தான். அது நாட்டுச்சுதந்திரம். மக்கட் சுதந்திரமன்று. என்று நம் நாட்டில் பெண்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களோ அன்றுதான் நமக்கு உண்மைச்சுதந்திரம்.
இதையே ஆனந்தப்பள்ளு பாடும்போதுபாரதியார் குறிப்பிட்டார். அப்பாட்டில், முதலில் பறையருக்கும் புலையருக்கும் சுதந்திரம். பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று கற்பனையாகக் குறிப்ப்ட்டார். அதாவது எப்படிப்பட்ட சுதந்திரம் வரவேண்டும்? தீண்டாமையில்லா ஏற்றத்தாழ்வுகளில்லாச்சுதந்திரமனைவருக்கும். வந்துவிட்டதா? இல்லையென்பதை உங்கள் ஊரே நிருபித்துக்கொண்டு வருகிறது. மொததம் 12 பேர் தேவர் குருபூஜையின் போது மதுரை சிந்தாமணியில் கொல்லப்பட்டார்கள். மூவர் பரமக்குடிக்கருகில் கொல்லப்பட்டார்கள். ஒரு போலீசு ஆய்வாளர் அடித்துக்கொல்லப்பட்டார் சாதிவெறியர்களால். இருவர் என்கவுன்டரில் டிஎஸ்பி வெள்ளைத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வந்ததா பாரதி சொன்ன சுதந்திரம் உங்கள் ஊரில்? இல்லை. அதே போல,
காந்தி சொன்ன அந்தச்சுதந்திரம் இன்று வந்துவிட்டதா? பெண்களுக்குப் பாதுகாப்பு வந்துவிட்டதா? இல்லையென்பதை தில்லிச்சம்பவமட்டுமன்று; நாடோறும் நடக்கும் பல பெண்ணெதிர் வன்கொடுமைகள் நிருபிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் முன்னெச்சரிக்கையாக வாழ வேண்டும் என்கிறார் ஆந்திர அமைச்சர்.
ஐயமேயில்லை. அவர் வாக்குச்சரியே. 
பெண்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும். All other helps from other sources are secondary.

என் மறுமொழி
இதைப்படிக்கநேரும் வாசகர் எவருக்காவது குலசேகரன் சொல்வது,சொல்ல வருவது என்னவென்று புரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்....
நான் சொல்ல வருவதையே தன் வார்த்தைகளில் சொல்லி விட்டுக் கடைசியில் ஆந்திர அமைச்சர் சொன்னது சரி என்கிறாரே....இதை எங்கே போய்ச் சொல்ல?

காந்தியடிகள் விரும்பியது அரசியல் விடுதலை மட்டுமல்ல....

சமூக விடுதலையும்தான்.அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.
சமூக விடுதலை பெறாத நாட்டில் அரசியல் விடுதலைக்கு அர்த்தமில்லை என்பதாலேயே நாடு விடுதலை பெற்ற தருணத்திலே கூட  மதப்பூசல்கள் மலிந்து கிடந்த கொடுமையைப்பார்த்துப்பார்த்து மனம் குமுறிக்கொண்டு தவித்தபடி இருந்தார் அவர்.

நள்ளிரவில் பெண்கள் நடமாடலாகாது எனப் பெண்களின் தனி உரிமையைப் பறித்தவரில்லை காந்தி. நள்ளிரவில் பெண்களும் அச்சமின்றி நடமாடும் வண்ணம் நம் நாடு பக்குவம் பெற வேண்டும் என்பதே அவர் விரும்பியது.


நாடு அரசியல் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும்- 
உயர் அதிகார மையங்களில் இருந்து கொண்டு காந்தியாரின் ஒரு சின்னக்கனவைக் கூட நனவாக்காமல் இருந்து விட்டு....-அதை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்தும் நழுவி விட்டுப் பெண்களுக்குப் புத்திமதி சொல்ல முன் வருகிறார்களே இந்தப்போலி உபதேசிகள்...அதைச் சுட்டிக் காட்ட மட்டுமே நான் நினைத்தேன்;ஏதோ பெண்கள் எச்சரிக்கையாக இருந்து விடால் ஏதுமே நடக்காது என்பது போன்ற பூச்சாண்டித்தனங்களை எவரும் காட்ட வேண்டாம் என்பதற்காகவே மேலே என் நண்பர் அனுப்பிய வாசகங்களையும் தமிழில் தந்திருக்கிறேன்....

குலசேகரனுக்கு மற்றும் ஒன்று..
அந்தப்பெண் சென்றது ஆந்திர அமைச்சர் சொன்னது போல நள்ளிரவில் இல்லை.இரவு ஒன்பதரைக்கு.
//பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும்.//
இதற்குப்பெண்கள் தயார்.....ஆனால் அதற்கான வயது வருவதற்கு முன்பே ஏற்படும் அசம்பாவிதங்களால் செய்தித் தாள்களின் பக்கங்கள் நாளும் நிரம்பிக் கொண்டிருக்கின்றனவே....அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
ஏற்கனவே பச்சைப்புண்ணிலிருந்து குருதி ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது....
அதில் வேல்பாய்ச்சும் வேலையைச் செய்வதை விட்டு விட்டு உருப்ப்படியாக வேறு ஏதாவது இருந்தால் செய்யுங்கள்...

இல்லையென்றால் அரசியல்வாதிகளே..அரட்டையாளர்களே....எங்கள் பாட்டை நாங்கள் பார்த்துக்கொள்ள விட்டுவிட்டு வாயையாவது தயவு செய்து மூடிக்கொள்ளுங்கள்...
நாங்கள் வேண்டுவது அது ஒன்றைத்தான்...!




25.12.12

வாய்ச்சொல் அருளாதீர்!

அண்மையில் தில்லியில் நடந்த குரூரமான பாலியல்தாக்குதலும் அது தொடர்பாக நிகழ்ந்து வரும் தொடர் போராட்டங்களும் அனைவரும் அறிந்ததுதான்...அவை எழுப்பி வரும் ஆத்திர அலைகளே அடங்காமலிருக்கையில், ஒரு சில பெரிய மனிதர்கள் திருவாய்மலர்ந்து அருளும் உபதேசங்களும் ஆலோசனைகளும் பெண்களை மட்டுமல்ல....கொஞ்சநஞ்சம் மனச்சாட்சி மீதமுள்ள எவரையுமே கோபப்படுத்துபவை;காயப்படுத்துபவை...

நள்ளிரவில் நம் நாடு சுதந்திரம் பெற்றதென்பதற்காக நள்ளிரவில் பெண்கள் நடமாடலாமா என்று கேட்டிருக்கிறார் ஓர் ஆந்திர அமைச்சர்...

அனைத்து ஆடை ஆபரணங்களுடன் கூடிய-சர்வாலங்கார பூஷிதையான- அழகான இளம்பெண் ஒருத்தி நள்ளிரவில் தனியே நடந்து போகும் நாளே நாம் சுதந்திரம் பெற்ற நாளென்று சொன்ன மகாத்மாவின் வாக்கு...பாவம் அவருக்கு   மறந்து போயிருக்கலாம்....
அல்லது ....மகாத்மாவே யாரென்று கூட அவர் அறியாமலும் இருக்கலாம்..
அறியாமைதானே இன்றைய அரசியலின் அணிகலன்?

முன்பு ஒரு முறை  பெண்கள் வேலைக்குப் போவது தவறென்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிய உதாரணம் கூட நம்மிடம் இருக்கிறது....

நம் வீட்டுப் பெண்களை சொகுசுக்கார்களிலேயே அனுப்பிப் பத்திரப்படுத்திவிட்டோம்...
அயல்நாடுகளுக்கெல்லாம் அனுப்பிப் படிக்கவும் வைத்து விட்டோம்....

நகரப்பேருந்துகளில் போகும் சாமானியர்களைப்பற்றி நமக்கென்ன கவலை?

அது கூட எப்படியும் போய்த் தொலையட்டும்..
அவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகும்போது ஆதங்கமோ அனுதாபமோ கொள்ள வேண்டாம்...
எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டாம்..

கருத்துச் சொல்வதாக இப்படிக் கண்டதையும் உளறாமலாவது இருக்கலாமல்லவா?
நல்லதைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை,பாதகமான கெட்டதைச் செய்யாமலிருந்தாலே போதும் !
’’நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்’’
என்று பழந்தமிழ் இலக்கியம் சொல்கிறது.
காந்தி சொன்னதையே தெரிந்து வைத்துக் கொள்ளாதவர்களுக்கு இது எங்கே தெரியப்போகிறது?

தவறு செய்பவர்களைச் சிறையில் அடைத்துப் பூட்டுப்போடுவதோடு இப்படிப்பட்ட ’பெருமக்களின்’வாய்க்குப்  பூட்டுப்போடுவதும்   இப்போது   தேவைதான்! காரணம் சமூகத்தின் பொதுப்புத்தியில் விஷவிதைகளை உடனடியாகத் தூவும் திருப்பணியைச் செய்பவை இப்படிப்பட்ட கருத்துப்பரப்பல்கள்தான்...நல்லவற்றை விடவும் வெகுவேகமாகச் சென்று தைக்கும் நச்சு அம்புகள் இவையே !

நல்ல சமூகப்பணிகளுக்குப் பணம் படைத்தவர்கள்  பொற்குவையாகவும்,காசுகளாகவும் தாருங்கள்...மற்றவர்கள் நன்மொழிகளைத் தாருங்கள் என்ற பொருளில் 
‘வாய்ச்சொல் அருளீர்’
என்றான் பாரதி.
மேலே குறிப்பிட்டிருக்கும் நாகரிகக் கோமாளிகளை நாம் கரம் கூப்பிக் கேட்பதெல்லாம் அவர்கள் தங்கள் வாயிலிருந்து எந்தச்சொல்லும் அருளி விடாமல் இருக்க வேண்டும் என்பது மாத்திரமே...!

பி.கு;
நாளும் செய்தித் தாளில் குளிர்தில்லியின் கொதிப்புக் கண்டு கசியும் நெஞ்சங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி இந்தியக்குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கண்டன மனுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்..
முடிந்தால் உங்கள் இணைய தளங்கள்,முகநூல்களில் இணைப்பையும் கீழுள்ள படத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சமூக மாற்றத்துக்கு நம் எழுதுகோல்களும் சிறு நெம்புகோல்களாகட்டும்....











16.12.12

நாஞ்சிலுக்கு இயல்விருது


நாற்பது ஆண்டுக் காலமாக இடைவிடாமல் எழுதி வரும் நாவலாசிரியர்,சிறுகதையாசிரியர்,கட்டுரையாளர் என்ற பெருமைகளுக்குரியவர் நாஞ்சில் நாடன். அவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்க’ளைப் படித்தபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுகள் இன்னும் கூட என் நினைவில் எஞ்சியிருக்கின்றன.[சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமானது அந்த நாவலே]

அலுவல் காரணமாக மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் விளைந்த மன உளைச்சல்களை..சொந்த மண்ணின் மீதான ஏக்கத்தைத் தனது ‘மிதவை’நாவலிலும்,சிறுகதைகளிலும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் இவரது புகழ் பெற பிற நாவல்கள்
சதுரங்கக்குதிரை,
என்பிலதனை,
எட்டுத்திக்கும் மதயானை
ஆகியன.
இவரது சிறுகதைகளும் இரு பெரும் பகுதிகளாக- முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.’சூடிய பூ சூடற்க’என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கைத் தமது புனைவுகளில் பெரிதும் கையாண்டு வரும் ஜி.சுப்பிரமணியம் என்னும் புனைபெயர் கொண்ட நாஞ்சில் நாடன், கட்டுரைகளைக் கூடக் கதைக்குரிய புனைவுத் தன்மையோடு முன்வைத்து வருபவர்; சங்க இலக்கியத்திலும், கம்பனிலும் தேர்ந்த புலமை படைத்தவர். விரைவில் வெளிவரவிருக்கும் இயக்குநர் பாலாவின் பரதேசி படத்துக்கான உரையாடல்களையும் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார்.

இந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012ஆம் ஆண்டுக்கான இயல் விருது, நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படவிருக்கிறது. கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்ட இந்த விருது, சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாஞ்சில் நாடனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!

இணைப்புக்கள்;

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3)  

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (2)



10.12.12

பாரதி பிறந்த திருநாளில்

என் எழுத்தின் ஆதர்சம்...,என் தமிழின் ஆதர்சம்..,என் ஆளுமையின் ஆதர்சம் மகாகவி பாரதி. பாரதி பிறந்த இந்தத் திருநாளில் அவன் சார்ந்த ஒரு நூல்,ஒரு ஓவியம்,ஒரு பாடல்...ஒரு காணொளி...இங்கே பகிர்வுக்கு..

வலைச்சரப்பதிவுகள்


வலைச்சரம் இணைய இதழில் -ஒரு வார காலம் 3/12 முதல் 9/12 வரை- சில வலைப்பதிவுகளையும்,தளங்களையும் பகிர்ந்து கொள்ள நண்பர் சீனா அழைப்பு விடுத்திருந்தார்.அங்கே நான் இட்ட பதிவுகள் இங்கே பார்வைக்கு....

7.12.12

தில்லிகை-டிச.நிகழ்வு



தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

கலை
இலக்கியச் சந்திப்பு: 2012/10

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....