துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.9.11

அசடன்:சில முன் குறிப்புகள் [3]




முழுமையான தீமை என்றோ...முழுமையான தீயவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் வரையறுக்க முடியாது என்பதை எப்போதுமே தன் படைப்புக்களில் முன்னிறுத்துபவர் தஸ்தயெவ்ஸ்கி என்பது அவரைப் பற்றி ஓரளவேனும் அறிமுகமுடைய வாசகர்கள் அறிந்திருப்பதுதான்.


காமுகனான சுவிட்ரிகைலோவ்,கண்டிப்பான கடுமை காட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச் ஆகியோரிடமும் கூட வற்றாமல் சுரக்கும் மானுடக் கருணையின் தெறிப்புக்களைக் குற்றமும் தண்டனையும் நாவலிலும் கூட மிக இயல்பாகச் சித்திரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.  அவரது இடியட்/அசடன் நாவலும் அதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை என்பதோடு கூடுதலான ஒரு பரிமாணமும் அதில் சேர்ந்திருப்பதே அவரது பிற படைப்புக்களிலிருந்து தனித்து நிற்கும் தகுதியை அசடனுக்கு அளிக்கிறது.



அசடனாகச் சொல்லப்படும் இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தை அப்போதுதான் மண்ணில் ஜனித்த ஒரு குழந்தையைப் போன்ற பரிசுத்தத்துடன் - கபடுகளும் சூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே - மிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.பிறரைப் பற்றிய தவறான எண்ணம் தற்செயலாக மனதில் தோன்றும் தருணங்களிலும் - அந்த எண்ணம் அல்லது கணிப்பு உண்மையாகவே இருந்தாலும் கூட- அப்படி நினைத்து விட்டதற்காகவே தன்னைத் தானே கடிந்து கொள்ளும் ஓர் உன்னத மாமனிதன் மிஷ்கின்.பிறர் துயர் கண்டு இரங்கி நெகிழ்வதோடு நின்று விடாமல்,அந்தத் துயர் தீர்க்கத் தன்னையே ஒப்புக் கொடுத்துக் களபலியாக்கத் துணியும் உள்ளம் மிஷ்கினைப் போல அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்து விடுவதில்லை.

தன்னை வேடிக்கைப் பொருளாக்கி அலைக்கழிக்கும் பெண்களாகட்டும்..வன்மத்தோடும்,பொருளாசையால் தூண்டப்பட்ட சுரண்டல் விருப்பங்களோடும்,கொலை வெறியோடும் தன்னை அணுகும் மனிதர்களாகட்டும்..! இவர்களில் எவருமே எப்போதுமே அவனது வெறுப்புக்கும் கசப்புக்கும் உரியவர்களாவதில்லை; மாறாக அவர்களின் நிலை கண்டே அவன் கசிந்து உருகுகிறான் ; அவர்களது எதிர்காலம் குறித்தே அவன் கவலை கொள்கிறான்.உலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கப்படுவதற்கான காரணமும் அதுவே...



''எனக்கு இருபத்தேழு வயதாகிறது..
ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன்...
என்னுடைய பாவனைகள் எல்லாமே...எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன.
நான் சொல்ல நினைத்த கருத்துக்கு எதிரான கருத்தையே அவை வெளிப்படுத்தி விடுகின்றன.
அதனாலேயே நகைப்புக்கு இடமாகி நான் சொல்ல வந்த கருத்துக்களைத் தரம் தாழ்த்தியும் விடுகின்றன..
எதை..எப்படி..எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை.அதுதான் முக்கியமான விஷயம்..! ’
என்றபடி தன் நடத்தை மீதான ஒப்புதல் வாக்கு மூலத்தை அவனே அளித்தபோதும் - ஒரு புறம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை.


ஆளுக்கொரு புறமாக அவனை அலைக்கழித்து ஆட்டிப் படைக்கும் இரு பெண்பாத்திரங்களுமே அவனது இதயத்தின் பரிசுத்தத்தை வியக்கிறார்கள்.


’அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் கொண்ட ஒரு மனித’னாக அவனைக் காணும் நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா,பலதரப்பட்ட ஆண்களின் வஞ்சகங்களுக்கு ஆளாகி வாழ்வில் நொந்து போனவள்.மிஷ்கினின் தன்னலம் துறந்த அன்பும் காருண்யமும் அவளுக்கு வியப்பூட்ட,‘’என் வாழ்க்கையில் சந்தித்த முதல் மனிதர் நீங்கள்தான்!’’
என்கிறாள் .


மிஷ்கினின் வாழ்வில் குறுக்கிட்டுக் குறும்பு செய்யும் இன்னொரு பெண்ணான அக்லேயா இவானோவ்னா,
’’உங்களுடைய சுண்டுவிரல் அளவுக்குக் கூடத் தகுதியானவர்கள் இங்கே இல்லை.உங்களுடைய மனம்,உங்களுடைய இதயம் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்கும் இணையான தகுதி படைத்தவர்கள் இங்கே யாருமே இல்லை.அவர்கள் எல்லோரையும் விட நீங்கள் மிகவும் நேர்மையானவர்;மிகவும் மேன்மையானவர்;சிறந்தவர்;அன்பானவர்.அவர்கள் எல்லோரையும் விட அறிவுக் கூர்மை படைத்தவர் நீங்கள்.இவர்களில் சிலர் நீங்கள் நழுவ விட்ட கைக் குட்டையை எடுக்கும் தகுதி கூட இல்லாதவர்கள்’
என்று அவனுக்கு நற்சான்று வழங்குகிறாள். ’’எப்படிப்பட்ட அன்பான இதயம் கொண்ட மனிதன்....ஆனால் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டுமென்பதே அவனது விதியாக இருக்கிறது’’
என்கிறார் அவனது தூரத்து உறவினரான தளபதி இபான்சின்.
அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அவன் தூயவன் என்னும் உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.

[மேலும்-

28.9.11

எழுத்தெனப்படுவது....


’’வாசிக்க வாசிக்க நம் அம்பறாத் தூணியிலிருந்து வார்த்தைகள் வற்றாது பொங்கி வரும்.
அவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் எழுதத் தொடங்கியதுமே அவை நம் ஏவலுக்கு வந்து முன் நிற்கும்.’’


மதுரையிலிருந்து ஒரு வலைப் பூ வாசகர்,எழுதுவது குறித்தும்- குறிப்பாக மொழிமாற்றங்களைப் பற்றியும் சில ஆலோசனைகள் நாடிக் கடிதம் எழுதியிருந்தார்.
’’100 சதவீதம் பிழையில்லாமலும், அசலின் உணர்வுகள் கெட்டுவிடாமலும் ’’மொழிமாற்றங்களை எவ்வாறு செய்வது என்பதும், ’’இது குறித்து என்ன புத்தகங்கள் வாயிலாக அறியலாம் ’’என்பதும் அவர் குறிப்பாக முன் வைத்த கேள்வியாக இருந்தது.
அவரும் இதழ்களிலும்,இணையத்திலும் அவ்வப்போது சில கட்டுரைகள் எழுதி வருபவரே;சில மொழியாக்கப் பணிகளையும் அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.ஆனாலும் தன்னை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளவும் இன்னும் சற்று மேலான தளத்தில் முழுமைப்படுத்திக் கொள்ளவும் என்னிடம் கருத்துக் கேட்டிருந்தார்.
அதற்கு நான் அளித்த பதில் கடிதம் எழுதும் கலையில் ஆர்வமுள்ளோருக்கு- குறிப்பாகத் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்குப் பயன்படக் கூடும் என்பதால் நான் அந்த வாசகருக்கு எழுதிய கடிதத்தைக் கீழே வெளியிடுகிறேன்.


அன்புள்ள நண்பருக்கு,

தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி.
முதலில் உங்கள் எழுத்துப் பணி நன்கு வளர வாழ்த்துக்கள்.

மொழி மாற்றம் அல்லது மொழியாக்கம் என்பது சுயமான படைப்பாக்கத்தையே அடித் தளமாகக் கொண்டிருக்கிறது.சுயமாக எழுதக் கூடிய ஒருவரே நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் சிறக்க முடியும். படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள்ளே இருந்தாக வேண்டும்.புதுமைப்பித்தன்,க.நா.சு,போன்ற அன்றைய எழுத்தாளர்களும் சரி..ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,பாவண்ணன் போன்ற சம காலப் படைப்பாளிகளும் சரி நல்ல மொழிபெயர்ப்புக்களையும் கூடவே செய்திருக்கிறார்கள்.எனவே உங்கள் படைப்பாக்கத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.அவ்வப்போது ஏதேனும் ஒரு பொருள் பற்றிச் சொந்தமாக ஒரு சிறு குறிப்போ,கட்டுரையையோ எழுதுவதை விட்டு விடாதீர்கள்.

சுயமான எழுத்தாக இருந்தாலும்,மொழிமாற்றமென்றாலும் முதலில் தேவைப்படுவது மொழி வளமும் (diction) மொழியின் மீதான ஆளுமையுமே (command)என்றே நான் எண்ணுகிறேன்.

தரமான நல்ல நடையில் -இன்றைய காலகட்டத்துக்கேற்ற நவீனமான நடையில்- தங்களுக்கு ஆர்வமூட்டும் நூல்கள் என்னவெல்லாம் கிடைக்கிறதோ [புனைவுகள் அபுனைவுகள்]- அவை எல்லாவற்றையும் படித்து மொழியை உங்கள் ஆளுகைக்குள் முதலில் வசப்படுத்திக் கொள்ளுங்கள்.இடை விடாத வாசிப்பு ஒன்று மட்டுமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து விடக் கூடியது.அதை ஒரு பக்கம் தொடர்ந்து செய்தபடி படைப்பாக்க மனநிலையுடன் இருந்தாலே மொழி நம் கட்டுக்குள் வந்து விடும்.
கண்ணதாசனின் மொழி வளம் கம்பனைப் படித்ததால் ஏற்பட்டதே என்பார் அவர்.


அபுனைவுக்கட்டுரைகள் உங்கள் தேர்வாக இருக்கும் பட்சத்தில் சரளமான தெளிவான நடையில் எழுதப்பட்ட அவ்வாறான நூல் வாசிப்புக்கள் மூலமாக உங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.
எழுத்துக்கு வலுவான அடித்தளம் அமைப்பது தொடர்ச்சியான தேர்ந்த வாசிப்பு மட்டுமே.
வாசிக்க வாசிக்க நம் அம்பறாத் தூணியிலிருந்து வார்த்தைகள் வற்றாது பொங்கி வரும்.
அவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் எழுதத் தொடங்கியதுமே அவை நம் ஏவலுக்கு வந்து முன் நிற்கும்.



எழுதும் கலை பற்றியும் மொழிமாற்றம் பற்றியும் நூல்கள் வழி படித்து அறிய முற்படுவதை விடவும், தொடர்ந்து நீங்களாக எழுதி வருவதே உங்கள் வளர்ச்சிக்கு உதவக் கூடும்..எழுதச் சொல்லிக் கொடுக்கும் நூல்கள் கட்டிக் கொடுத்த சோறு போன்றவைதான்.அவை எப்போதும் கை கொடுப்பதில்லை.தண்ணீரில் குதித்துத்தான் நீச்சலைப் பழக முடியும்.


தொடர்ந்து கடிதம் எழுதி வந்ததன் வாயிலாகவே தான் ஒரு கதை சொல்லியாக உருவாக முடிந்தது என அண்மையில் ஒரு பேட்டியில் சொலியிருந்தார் தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ராஜநாராயணன்.
சென்ற தலைமுறையில் கடிதம் எழுதும் வழக்கம் தொடர்ந்து வந்ததால் 7,8 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருப்பவர்கள் கூட நீண்ட கடிதத்தைப் பிழைகளின்றி எழுதி விடுவார்கள்.
ஆனால் கடிதம் எழுதுவதென்பதே இன்று அருகிப் போயிருப்பது எத்தனை பெரிய அவலம் பாருங்கள்.தொடர்ச்சியாகச் சில வரிகளைக் கூட எழுத முடியாமல் இன்றைய தலைமுறை தவிப்பதற்கு சுருக்கப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றங்களும் குறுமடல்களுமே காரணம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.எனவே நீளமாக எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள்.

மொழியாக்கப் பணியைச் செய்யத் தொடங்கு முன் அந்த நூலை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.அதன் உள்ளடக்கம் உங்களுக்குப் பரிச்சயமானதாக,பிடித்ததாக,உங்கள் மனத்தின் அலை வரிசைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதையும்,கலைச் சொற்கள் உங்களால் அணுகக் கூடியதாக இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
எளிய சொற்களில் இலகுவான நடையில் சிறு சிறு வாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுங்கள்.
நேரடி மொழியாக்கம் -literal translation- என்பது தட்டையானது;உயிரற்றது.எனவே நேரரடி மொழியாக்கமாக இல்லாமல் அதுவே ஒரு தனிப் படைப்பு போலத் தோற்றமளிக்குமாறு ஓர் உயிரோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

‘எழுதும் கலை’என்னும் தலைப்பில் தமிழினி வெளியீடாக ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் உங்களுக்குப் பயன் படக் கூடும்.

அசலின் உணர்வுகள் கெடாமல் மொழிமாற்றத்தைச் செய்ய உகந்ததாக உங்கள் நடை இருப்பதை உங்கள் சீரான 
கடிதத்தின் ஓட்டமே புலப்படுத்துகிறது.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலா


25.9.11

அசடன்:சில முன் குறிப்புகள் [2]



’’நாவலின் முதல் 50,60 பக்கங்களை மட்டும் கடந்து சென்று விட்டால்...பிறகு உணர்ச்சிமயமானதும்,இங்கே நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.’’

தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களை ரஷ்ய மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் பெயர்த்துள்ள பல மொழியாக்கங்களில் - மூலத்துக்கு மிக நெருக்கமாகவும் சிறப்பாகவும் CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே கருதப்பட்டு வருகிறது.
குற்றமும் தண்டனையும் நாவலை மொழிபெயர்க்க CARNACE GARNETT இன் ஆங்கில மொழிபெயர்ப்பே எனக்குத் துணை புரிந்தது.அசடனுக்கும் அவ்வாறே.
அந்த மொழிபெயர்ப்பில் எனக்குத் தெளிவு கிடைக்காத ஒரு சில இடங்களில்,மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பையும்( JULIUS KATZER) ஆங்காங்கே ஒப்பு நோக்கிக் கொண்டேன்.வேர்ட்ஸ்வர்த் கிளாசிக் மொழியாக்கமும் ஓரளவு உதவியபோதும் அது முழு நாவலின் பெயர்ப்பாக இல்லை;பல இடங்கள் அதில் சுருக்கப்பட்டிருக்கின்றன.முழுமையான-சுருக்கப்படாத மொழி மாற்றம் செய்ய
CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே ஏற்றதாக இருந்தது.

பொதுவாகவே மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை அணுக நமக்குள் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருப்பது உண்மைதான்...
மொழியாக்கங்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கப்படாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

’’அயல்நாட்டுக் கதையைச் சொல்வதன் விசேஷ நோக்கம் என்ன?விசித்திர விபரீத உடையுடன்,பாஷையுடன் காணப்பட்டாலும் - அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்க முயற்சிக்கிறான்’’(மணிக்கொடி,நவ.1937.)
என்கிறார் தமிழின் முதன்மைப் படைப்பாளியும் பிறமொழிக்கதைகள் பலவற்றைத் தானே மொழிபெயர்த்தளித்திருப்பவருமான புதுமைப்பித்தன்.

தல்ஸ்தோய்..தஸ்தயெவ்ஸ்கி ஆகியோரின் படைப்புக்களையும் ஆள்பெயர் மற்றும் இடப்பெயர்களைக் கண்டு மலைத்தபடியும்,அந்தக் கலாச்சாரப் பின்புலத்தைச் சற்று சிரத்தையோடு புரிந்து கொள்ள மனமின்றியும் சற்று தயங்கி நின்று விட்டால் சிறந்த உலக இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பை நாம் தவற விட்டதாகவே ஆகிப் போகும்.
‘பெயரில் என்ன இருக்கிறது..?’என்ற புகழ் பெற்ற வாசகத்தை நினைவுபடுத்திக் கொண்டபடி நாவலின் முதல் 50,60 பக்கங்களை மட்டும் கடந்து சென்று விட்டால்...பிறகு உணர்ச்சிமயமானதும்,இங்கே நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இடியட்/அசடன் நாவலும் அப்படிப்பட்டதுதான்...
ரஷ்ய சிற்றரசப் பரம்பரை ஒன்றின் வாரிசான மிஷ்கின்(லேவ் நிகொலெவிச்)
பெற்றோரை இழந்து குடும்ப நண்பரின் பராமரிப்பில் விடப்பட்டவன்; இளமை முதலே சற்று மன நிலைப் பிறழ்வும் வலிப்பு நோயும் உள்ளவனாக இருந்த அவன் மன நல மருத்துவர் ஒருவரின் தனிப்பட்ட கண்காணிப்பில் சுவிட்சர்லாந்தில் நீண்ட காலத்தைக் கழித்த பிறகு - தான் இது வரை காண்டிராத தன் தாயகத்துக்கு-தனக்கு அறிமுகமாகியிருக்காத ஒரு மனித சமூகத்தை நோக்கி வருகிறான்.அங்கே அவன் எதிர்ப்படும் எதற்குமே இதுவரை அவன் பழகியிருக்கவில்லை என்பதால் அவை அவனுக்குப் புரியாத புதிர்களாகவே இருக்கின்றன.அவனது அறிதல் என்பது உலகியல் அளவுகோல்களுக்குள் அடங்காத ஒன்றாக அமைந்திருப்பதால்...உலகம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கிறது;தனது முந்தைய நோய்வாய்ப்படலால் அவனுக்குமே தன்னைப் பற்றிய தாழ்வுணர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது..அதே வேளையில் தான் அசடனில்லை என்பதையும் அவன் புரிந்தே வைத்திருக்கிறான்.


’’ஒரு காலத்தில் நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது - உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு அசடு போலத்தான் இருந்தேன்.ஆனால் அதன்பின் வந்த கொஞ்ச நாட்களிலேயே அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்து விட்டேன்.அதனால் என் முகத்துக்கு நேராக என்னை அசடன் என்று எவராவது சொன்னால் அதை நான் விரும்புவதில்லை’’-
என்கிறான் அவன்..


அசடனோ அறிவாளியோ அவனது உள்ளம் ஒரு குழந்தையைப் போலப் பரிசுத்தமானது...கபடற்றது; உலகின் சூது வாது பொய் புரட்டல்களுக்கு அப்பால் சஞ்சரித்துக் கொண்டிருப்பது. எதையும் யாரையும் - எவரது எந்தச் செயலையும் தவறாக எண்ணத் தயங்குவது .
தன்னைக் கொலை செய்ய வருபவனையும்,தன்னிடமுள்ள பணத்தைச் சுரண்ட வருபவனையும்,தன்னை வன்மத்தோடு அணுகுபவனையும் கூட அவனால் வெறுத்து ஒதுக்க முடிவதில்லை.
தன்னைப் பைத்தியமாக்கி அலைக்கழித்தாலும் அவ்வாறு செய்யும் இரண்டு பெண்களிடத்திலும் அவன் கொண்டிருக்கும் நேசமும் கருணையும் எள்ளளவும் 
குறைவதில்லை.
கருணையை முன்னிறுத்திக் காதலையே துறக்கும் எல்லை வரை அந்தக் குணம் அவனை இட்டுச் சென்றாலும் கூட அவன் அதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இல்லை என்பதோடு அந்தக் கட்டத்தில் தன்னையே அதற்குக் கள பலியாக்கவும் அவன் துணிந்து விடுகிறான்.
அதனாலேயே உலகத்தின் பார்வையில் அவன் அசடன்..
ஆனால்...நாவலின் அனைத்துக் கதைப் பாத்திரங்களும்-அவனுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் நபர் உட்பட
அவன் ஒரு பரிசுத்தமான ஆத்மா
என்பதை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தவறுவதே இல்லை..


’’நான் உங்களை மிகவும் உண்மையான..மிகவும் நேர்மையான ஒரு மனிதராகக் கருதி வருகிறேன்...
உங்கள் மனத்தைப் பற்றி...மன ரீதியாக நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்று அவர்களெல்லாம் சொவது கொஞ்சமும் நியாயமற்றது...
நீங்கள் உண்மையிலேயே மனதளவில் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கூட உங்களுடைய மனத்தின் ஒரு பகுதி அவர்களுடையதை விட உயர்ந்தது என்றே நான் நினைக்கிறேன்...
உண்மையில் அப்படிப்பட்ட ஒரு மனத்தை அவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.’’
என்கிறாள் அவனை நேசிக்கும் அக்லேயா...

’’ஐயோ இளவரசே நீங்கள்தான் எவ்வளவு இனிமையாகவும் குழந்தையைப் போல ஒரு அப்பாவியாகவும் இருக்கிறீர்கள்...எப்படிப்பட்ட களங்கமற்ற பரிசுத்தமான துறவியைப் போன்ற வாழ்க்கை முறை உங்களுடையது’’
என்கிறான் முரட்டுத்தனமே வாழ்வாகக் கொண்ட கெல்லர்.
[அடுத்த பதிவில் மேலும்...]

காண்க;



23.9.11

’எட்டுத் திக்கும்’-கலந்துரையாடல்

திருப்பூர் வலைப்பதிவர் குழுமத்தின் சார்பில் நண்பர் திரு வெயிலான் அவர்களிடமிருந்து வந்துள்ள நிகழ்ச்சி அறிவிப்புக் கடிதம்..
வணக்கம்!
25 செப்டம்பர் 2011 அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை திருப்பூர் அரோமா உணவக வளாகத்தில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான சேர்தளம் சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

நண்பர்கள் அனைவரின் வருகையையும், வாழ்த்துகளையும் அன்போடு எதிர்நோக்கும்...........
நண்பர்கள் - சேர்தளம், திருப்பூர்.
s.raa.jpg

20.9.11

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம்



’’ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு அணுசக்தி குறித்த உலகப் பார்வை ஒரு அதிரடி மாற்றத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி, இத்தாலி ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் அணு சக்தியை முற்றிலும் கைவிட முடிவெடுத்துள்ளன. அடுத்த சில வருடங்களில் அணுஉலைகளை ஒவ்வொன்றாக நிறுத்தப்போகிறார்கள். அவை மாற்று சக்தியை நோக்கி நகர முடிவெடுத்துள்ளன. மிகத் தீவிர  அணுசக்தி ஆதரவான நாடு ஃப்ரான்ஸ். அங்கேயே 63%மக்கள் அணுசக்திக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இத்தாலியில் 95%பேர் அணுசக்தி பயன்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மே 25, 2011ல் வியன்னாவில் கூடிய ஆஸ்ட்ரியா, கிரீஸ், அயர்லாந்து, லாத்வியா, போர்சுகல் உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மந்திரிகளின் குழுஅணு சக்தி பயன்பாட்டுக்கு எதிராக பிரகடனம் ஒன்றை செய்துள்ளது.
நோபல் பரிசு பெற்றவர்கள் 18 பேர் ஒன்றுகூடி ஃபுக்குஷிமாவுக்குப் பின் உலகளவில் அணுசக்தி பயன்பாடு மெல்ல கைவிடப்படவேண்டும் என பிரக்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
ஆனால் இந்தியாவில் ஃபுக்குஷிமாவுக்குப் பிறகான அணுசக்தி அணுகுமுறை என்ற ஒன்றே வகுக்கப்படவில்லை. உலகின் மிகப் பெரிய அணுஉலை விபத்தை இந்தியா கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ’’

-சிறில் அலெக்ஸ் 


கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்து நண்பர் சிறில் அலெக்ஸ் 
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
என்னும் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார் .
அதன் இரு பகுதிகளையும்,
 தமிழ் பேப்பர் நெட்டின் கீழ்க்காணும் இணைப்புக்களில் காணலாம்.
http://www.tamilpaper.net/?p=4108
http://www.tamilpaper.net/?p=4115  




காண்க;
நஞ்சும் அமுதும்..



13.9.11

அசடன்:சில முன் குறிப்புகள் [1]


உலக இலக்கிய மாமேதை ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்  ‘குற்றமும் தண்டனையும்’  நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்ய நான் எடுத்துக் கொண்ட காலம் எட்டு மாதங்கள்தான்...
பிறகு மீண்டும் ஒரு முறை மொழியாக்கத்தையும் அதன் ஆங்கில மூலத்தையும் ஒப்பிட்டு சரி பார்த்து,அச்சுப்படி திருத்தி,பதிப்புத் தொடர்பான பிற பணிகளெல்லாம் முடிந்து நூல் ஒன்று ஒன்றரை ஆண்டுக்குள் வெளிவந்து விட்டது.

ஆனால்....இடியட்/அசடனின் மொழியாக்கமும் வெளியீடும் சற்றுக் கூடுதலாகவே நேரத்தை எடுத்துக் கொண்டு விட்டன.

ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு ஒருவன் படும் அவதிகளை- பெரும்பாலும் அந்த ஒற்றைப் பார்வையை மட்டுமே பெரிதும் முன்னிலைப்படுத்திய ஒரு ஆக்கம் ‘குற்றமும் தண்டனையும்’.
ஆனால்..இடியட்/அசடன் பன்முகத்தன்மையையும் பற்பல வகைமாதிரியான(types) பாத்திரங்களையும் கொண்டது..
ஆழமான உளவியல்,தத்துவச் சிக்கல்கள் பலவற்றை நீண்ட மன ஓட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வழி விவரித்துக் கொண்டே செல்வது.
இடையிடையே ஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவை விரவி வருவது.
அளவிலும் மிகப் பெரியதாய் நான்கு பாகங்கள் கொண்டது.
இந்தக் காரணங்களால் கொஞ்சம் அதிகமான முயற்சி,உழைப்பு,நேரம் ஆகியன இந்நூலின் மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்கத் தேவையாகி விட்டன.

மூல நூல்களை அச்சிடுவதும்,சந்தைப்படுத்துவதுமே சிறு வெளியீட்டாளர்களுக்குச் சிக்கலாக இருக்கும் சூழலில் - சாதாரணமான நூலைப் போன்ற இரு மடங்கு வடிவமுள்ள( டபிள் கிரவுன் சைஸ்) - கிட்டத்தட்ட 800 பக்கங்கள் வரை நீளும் உலகப் பேரிலக்கிய மொழியாக்க நூல் ஒன்றை வெளிக் கொணர்வற்கான முதலீட்டைத் திரட்டுவதும்,பிறகு அதை விற்பனை செய்வதும் தமிழ்ச் சூழலில் எத்தனை கடினமான ஒன்று என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதனாலேயே பதிப்பாளர் இந்நூல் வெளியீட்டுக்கான முன் வெளியீட்டுத் திட்டம் ஒன்றையும் சென்ற டிசம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்தார்.


                          அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்


எழுத்தாளர்கள் திரு ஜெயமோகனும்,திரு எஸ்.ராமகிருஷ்ணனும் கூடத் தங்கள் வலைத் தளங்களில் அது குறித்த செய்தியை வெளியிட்டு முன்வெளியீட்டுத்திட்டத்தில் பங்கேற்ற்று நூல் விரைவில் வெளிவர உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஜெயமோகன்:
இத்தகைய பெரிய நூல்களுக்கான முதலீட்டை சிறிய வெளியீட்டாளர்கள் எளிதில் திரட்டிவிட முடியாதென்பதனால் இந்த முன்வெளியீட்டுத்திட்டம் முக்கியமானதாக ஆகிறது. தமிழில் பேரிலக்கியங்கள் வெளிவருவதற்கு இம்மாதிரி உதவிகள் அவசியமானவை


எஸ்.ராமகிருஷ்ணன்
 தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர், இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்

இடியட் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு, இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல்

தமிழில் இந்த நாவல் வெளிவர இருப்பது ஒரு மிக முக்கிய நிகழ்வு
நாம் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும்
http://www.sramakrishnan.com/?p=2066

முன் பதிவை ஆன்லைன் வழி மேற்கொள்ள உடுமலை டாட் காம் திரு சிதம்பரம் அவர்களும் உதவி செய்தார்.

குறிப்பிட்ட நாள் முடிந்த பிறகும் கூட முன் பதிவுக்கான அவகாசம் சற்று நீட்டித் தரப்பட்டது.
[அது குறித்த அறிவிப்பும் வலைத் தளத்தில் வெளியாயிற்று]

இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...


ஆர்வமுள்ள பல நண்பர்கள் முன் பதிவு செய்து கொண்டாலும்,நினைத்த அளவுக்கு முன் பதிவு எண்ணிக்கை இல்லையென்பதால்,நான் முதல் படியை எழுதி முடித்த்து ஓராண்டுக்கு மேலான பிறகும்,நூல் பதிப்பிக்கப்படுவதில் நேரிட்ட சிக்கல்களால் அச்சிடுவது தாமதமாகி, இப்போது சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு..
அச்சுப்படிகளின் திருத்தம்,முகப்பட்டை,பின்னிணைப்பு,மற்றும் அசடன் ரஷிய திரைப்படக்காட்சிகளை நூலின் இடையிடையே சேர்த்தல்( ‘குற்றமும் தண்டனையும்’. நூலிலும் அதே போல பட ஸ்டில்கள் பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டிருந்தன) என நூல்பதிப்பு தன் இறுதிக்கட்டத்தை எட்டியபடி,தன் புழுக்கத்திலிருந்து விடுபட்டு வெளியுலகக் காற்றை சுவாசிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

’அசடனும் ஞானியும்’என்ற தலைப்பில் இம் மொழியாக்கத்துக்கு அருமையான முன்னுரை ஒன்றை அளித்திருக்கிறார் எழுத்தாளர் திரு ஜெயமோகன்.

இடியட்/அசடன் வெளியீட்டுக்கான முன் பதிவு செய்தோர்,மற்றும் நேரிலும் மின் அஞ்சலிலும் தொடர்பு கொண்டு நூல் வெளியாவது பற்றி ஆர்வமுடன் விசாரித்துக் கொண்டிருந்த நண்பர்கள்,இலக்கிய ஆர்வலர்கள் ஆகிய எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவிப்பதோடு - நூல் வெளியீட்டில் ஏற்பட்ட கால தாமதத்துக்காக மன்னிப்பையும் கோருகிறேன்.
கட்டாயம் அக்டோபர் மாதம் முடிவதற்குள் நூல் வெளி வந்து விடும் என்று நம்பிக்கையோடு உறுதியும் கூறுகிறேன்.

நூலுக்குள் நுழையு முன் அது குறித்த முன்னோட்டமான சில செய்திகளை-
அதிலுள்ள பாத்திர வார்ப்புக்கள்..
வித்தியாசமான உரையாடல்கள்...
சில வருணனைகள்,தத்துவங்கள்..
மற்றும் சிறியதாக ஒரு கதைச் சுருக்கம் 
ஆகியவற்றைத் தொடர்ந்து பல பதிவுகளில் அடுத்தடுத்து இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ஒரு காலத்தில் நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது - உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு அசடு போலத்தான் இருந்தேன்.ஆனால் அதன்பின் வந்த கொஞ்ச நாட்களிலேயே அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்து விட்டேன்.அதனால் என் முகத்துக்கு நேராக என்னை அசடன் என்று எவராவது சொன்னால் அதை நான் விரும்புவதில்லை’’
என்று அசடன் நாவலின் கதைத் தலைவன் இளவரசன் மிஷ்கின் தன்னைப் பற்றி வெளிப்படையாகவே பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகும் கூட அவன் அசடனாகவே கருதப்பட்டு ஏன் பரிகசிக்கப்பட வேண்டும்..?


மிஷ்கின் ..உண்மையில் அசடனா..ஞானியா..? அல்லது இரண்டுமேயா...?

[அடுத்த பதிவில்...மேலும்...]



11.9.11

’’படியாய்க் கிடந்து ..’’

’’வைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.’’


குலசேகர ஆழ்வார் சேர மன்னராக இருந்தவர்.

அரச போகங்களிலும்,செல்வக் குவிப்பிலும் நாட்டம் செலுத்தாமல் 
திரு வேங்கட மலையில் (திருப்பதி)

செண்பக மரமாய்..
தம்பகமாய்...
காட்டாறாய்..
மலையேறும் படியாய்.
இப்படிப் பலவாக..
பலவற்றில் ஏதேனும் ஒன்றாகத் தான் இருக்க விரும்புவதாகச் சொல்லும் அவரது ‘ஊனேறு செல்வத்து ’என்னும் 
பெருமாள் திருமொழிப்பாசுரம் மிகவும் புகழ் பெற்றது;உருக்கமானது.

கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து   
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம் பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே’’
என்னும் பாடலும் அந்த வரிசையில் இடம் பெற்றிருப்பதே.


மதம் கொண்டதும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுமான யானையின் மேல் அமர்ந்து (கம்பம்; நடுக்கம்-இதற்குக் கட்டுத்தறி எனப் பொருள் கொள்வோரும் உண்டு)இன்ப நுகர்ச்சி தரும் செல்வத்தைத் துய்க்கும் பேறும்,இந்த மண்ணை ஆளும் அரசாட்சியும் எனக்கு வேண்டியதில்லை..
எம்பெருமானாகிய ஈசன் குடி கொண்டிருக்கும் எழிலார்ந்த திரு வேங்கட மலையில் கோயிலின் கொடிக்கம்பமாக -ஸ்தம்பித்து அசையாமல் நிற்பதால் தம்பகம்- நின்றால் போதும் என்கிறார் ஆழ்வார்...
(தம்பகம இந்தச் சொல்லைக் கொடிக்கம்பம் எனக் கொள்ளாமல் புதர் எனக் கொள்ளும் உரைகளும் உண்டு.)

குறிப்பிட்ட இந்தப் பாசுரப் பகுதியிலுள்ள 10 பாடல்களுக்கும் ஒரு தொடர்ச்சியை உரைகாரர்கள் சொல்வதுண்டு.
முதல் பாடலில் வேங்கட மலைத் தீர்த்தமாகிய கோனேரியில் வாழும் குருகாகப் பிறக்க வேண்டும் என்று கூறும் ஆழ்வார்,
அடுத்த பாடலிலேயே திருவேங்கடச் சுனையின் மீனாய்ப் பிறக்க வேண்டுகிறார்..காரணம்,பறவையாக இருந்தால் அங்கிருந்து பறந்து சென்றுவிட நேரலாம் என்பதால்.


அடுத்து ஏரி வற்றினால் மீன் இருக்க இடமில்லாது போகும் என்பதால், 
இறைவன் திருஉலா வந்து சொர்க்கவாசல் புகும்போது பொன் வட்டில் ஏந்துபவனாக இருந்தால் இன்னும் அண்மையில் அவனைப் பார்க்க முடியுமே என்கிறார்.


தொடர்ந்து,அம் மலையிலுள்ள செண்பகமாக இருந்தால் மலர் வடிவில் தினமும் அவன் பாதங்களில் அர்ச்சிக்கப்படலாமே என்கிறார்.
அதற்கும் பிறகு மேற்சொன்ன தம்பகமாய்-கொடிக் கம்பமாய் நின்றால் எப்போதும் இடையீடின்றி அவனது தரிசனத்தைக் கண்டுகொண்டே இருக்கலாமே என்கிறார்.


பிறகு அந்த மலையின் சிகரமாகவும்,
அதில் பாயும் காட்டாறாகவும் ஆகும் விழைவைப் புலப்படுத்துகிறார்.
காட்டாறும் வற்றிப்போகலாம்..
மலைச் சிகரம் தகர்க்கப்படலாம்..
எனவே மலைக்கு வரும் மக்கள் சஞ்சரிக்கும் பாதையாக-நெறியாக ஆக வேண்டுமென்கிறார்.
அதனினும் நெருக்கமாக-முற்றிலும் பணிவாக வேங்கடவன் கோயிலின்படியாகக் கிடந்து திருமாலின் பவள வாய் காண வேண்டும் என்கிறார்.
(இன்றும் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இறைவன் திரு முன் உள்ள படி- குலசேகரர் படி என்றே சொல்லப்படுகிறது.)

இறுதி முத்தாய்ப்பாக..
இவ்வாறு தேர்ந்தெடுக்கக் கூடத் தனக்கு உரிமையில்லை,அதை நிர்ணயம் செய்ய வேண்டியவனும் அவனே என நினைத்தவராய்..
’’எம் பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே’’
என்று சொல்லி முடிக்கிறார்.

தவற விடக் கூடாத ஆழ்வார் பாடல்களில் குலசேகரரின் இந்தப் பத்துப் பாடல்களுக்கும் தனி இடம் உண்டு.
வைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.


சுவைப்பதற்காக..ஒரு சில மட்டும் கீழே
’’ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
  ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
  கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்
  கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’’
(உடம்பை வளர்க்கும் செல்வமும் அதைத் துய்க்கும் மனிதப் பிறவியும் எனக்கு வேண்டாதவை;நப்பின்னையை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்றவனும்,கூன் போல வளைந்த சங்கை இடப்புறம் ஏந்தியவனுமான திருமால் வாழும் வேங்கட மலையிலுள்ள கோனேரி என்னும் தீர்த்தத்தில் குருகாக நான் பிறக்க வேண்டும்)

‘’ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
  வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
  தேனார் பூஞ்சோலைத் திரு வேங்கடச் சுனையில்
  மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே’’
(ஆனாத செல்வம்-வற்றாத-குறையாத செல்வம்)

‘’செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
  படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே’’
சரணாகதியின் மகா உச்சத்தைத் தொடுவது இப் பாடல்..


முழுவதும் படித்துப் பாருங்கள்.
சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் உருக்கமான குழைவுடன் இப் பாசுரத்தின் 4,5 பாடகள் மட்டும் குறுந்தகட்டிலும் கேசட்டிலும் உண்டு(திருமால் கீதங்கள் -ஆல்பம்)
முடிந்தவர்கள் இணையத்தில் யூ ட்யூபில் தேடித் தந்தால் மிக்க நன்றி...





6.9.11

இலக்கிய,சூழியல் ஆர்வலர்களின் பார்வைக்கு....




சம காலத்தில் வாழ்ந்து மறைந்த வன உயிர் மருத்துவரும், 
தனக்குக் கிடைக்கும் பணம்,புகழ்,விருது என எதிலும் நாட்டம் செலுத்தாமல் கானுயிர்களின் நலனையும், விலங்குகளின் பாதுகாப்பையுமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த உன்னத மனிதருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதை யானை டாக்டர்.

அவரது வலைத் தளத்தில் வெளி வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்த அற்புதமான அந்தச் சிறுகதை,சூழலியல் குறித்த விழிப்புணர்வை அழுத்தமாகத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், அது பலரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்போது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டநண்பர்களால் ஒரு சிறு பிரசுரமாக- இலவச வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 


(தனிச் சிறுகதை ஒன்று இவ்வாறு சிறு பிரசுரமாகும் நிகழ்வு தமிழ்ச் சூழலில் அரிதான சில கணங்களில் நிகழ்வதுண்டு.
எழுத்தாளரும்,பள்ளி ஆசிரியருமான இரா.நடராசன் எழுதிய ‘ஆயிஷா’ என்னும் சிறுகதை முன்பு இவ்வாறு சிறு பிரசுரமாக்கப்பட்டுப் பல்லாயிரம் பேரைச் சென்றடைந்திருக்கிறது.ஆசிரிய-மாணவ உறவின் கோளாறு ஒரு ஏழை மாணவியின் எதிர்காலத்தைப் பலியாக்கியதைக் கூறிய நெகிழ்வான கதை அது.குறும்படமாகவும் வந்திருக்கும் ‘ஆயிஷா’குறித்த பதிவை இந்த வலைத் தளத்திலுள்ள கசங்கும் ரோஜாக்கள் என்னும் இணைப்பில் காணலாம்)


கல்லூரிகள் , நிறுவனங்கள் , வனக்காப்பகங்கள் எனப் பல தரப்பினருக்கும் யானை டாக்டர் கதையின் பிரதி அளிக்கப்படவேண்டுமென்பது நண்பர்களின் விழைவு என்பதால் அத்தகைய இடங்களுக்கு நூலைக் கொண்டு சேர்க்கக் கூடிய முனைப்புக் கொண்ட எவரும் கீழ்க்காணும் தொலைபேசியிலோ மின் அஞ்சலிலோ தொடர்பு கொண்டால் அவர்களுக்குத் தேவையான பிரதிகளை இலவசமாக அனுப்பி வைக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஆர்வமாக உள்ளது.
94421 10123 (தொலைபேசி), 
vishnupuram.vattam@gmail.com 
http://vishnupuram.wordpress.com/2011/07/06/123/

புது தில்லியில் இருப்பவர்கள் எனது மின் அஞ்சலில் 
தொடர்பு கொண்டு நூலைப் பெற்றுக் கொள்ளலாம்;
தில்லி சார்ந்த - தமிழறிந்த இலக்கிய,சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும்,களப் பணியாளர்களுக்கும் நூலை அளிக்கலாம். 
susila27@gmail.com

பி.கு;
ஒரு மின்னஞ்சலில் தகவல் தெரிவித்துவிட்டு  யார் வேண்டுமானாலும் இந்தக் கதையை சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் என்னும் திறந்த காப்புரிமையும்-open copy right-இந்நூலைப் பொறுத்தவரை வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


இணைப்புக்கள்;

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய விக்கி பீடியா குறிப்பு..



டாக்டர் கே

இணையத்தில் யானை டாக்டர் தமிழ்ச் சிறுகதை மூலம்;
Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433
Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439


யானை டாக்டர் சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம்;
http://www.albanytamilsangam.org/vishvesh/ED_1.htm


1.9.11

பாரதியின் விநாயகர்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்-குடைவரைச் சிற்பம்

உலகின் தலையாய எழுத்தர்களில் ஒருவர் விநாயகர்.
வியாசபாரதத்தை வியாசர் சொல்லிக் கொண்டே போகத் தன் கொம்பின் முனை முறித்து அதை விநாயகர் எழுதியதான ஒரு தொன்மம் நம்மிடை வழங்கி வருகிறது.

விநாயகக் கடவுள் என்னும் உருவகத்துக்குள்
‘’விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா!யெஹோவா!எனத் தொழுதன்புறும் தேவருந்தானாய் 

திருமகள் பாரதி உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்’’என அனைத்து சமயங்களின் அனைத்துக் கடவுளரையும் தரிசிக்கும் திறம் பெற்று விளங்கியவன் ஆன்மிக ஞானியாகிய பாரதி.

புதுவை மணக்குள விநாயகரை வழிபடும் வழக்கம் கொண்டிருந்த பாரதிக்கு விநாயக உருவம்...
வாய் திறவா மோன நிலைக்குள் செல்ல வைக்கும் ஓங்காரத்தின் உருவகம்;
அது அகக் கண்ணை விழிக்க வைத்து உள்ளொளியை , ஆக்க சக்தியை மேம்படுத்துவது;                                                                                                                             புறக் கவலைகளிலிருந்து விடுவித்து அச்சமற்ற நிலைக்குக் கொண்டு செல்வது;
சலனமில்லா மனநிலையை வசப்படுத்தித் தருவது.

’கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்
   குணமதில் பலவாம்......
   உட்செவி திறக்கும்
   அகக்கண் ஒளி தரும்
   அக்கினி தோன்றும்
   ஆண்மை வலியுறும்
   திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்
   கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்
   விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
   துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
   நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்
   அச்சம் தீரும்
   அமுதம் விளையும்
   வித்தை வளரும் 
   வேள்வி ஓங்கும்
   அமரத் தன்மை எய்தவும் 
   இங்கு நாம் பெறலாம்’’
என்கிறது பாரதியின் பாடல்..


‘’பக்தி உடையார் காரியத்தில்
   பதறார் மிகுந்த பொறுமையுடன்
   வித்து முளைக்கும் தன்மை போல்
   மெல்லச் செய்து பயன் அடைவார்
    சக்தி தொழிலே அனைத்துமெனில்
    சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்
    வித்தைக்கு இறைவா கணநாதா
    மேன்மைத் தொழிலில் பணி எனையே’’
என்னும் பாரதியின் பொருள் பொதிந்த வேண்டுதலே நமது வேண்டுதலுமாகிறது...
’ஆழ்க உள்ளம் சலனமிலாது
   அகண்டவெளிக்கண் அன்பினையே
சூழ்க ! துயர்கள் தொலைந்திடுக!
   தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெலாம்!
   கிருத யுகம்தான் மேவுகவே’’
இணைப்பு;
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....