துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.10.12

’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’


     சொல்வனம் 4.10.12 இதழில் வெளிவந்திருக்கும் காவேரி லக்ஷ்மி கண்ணனின்,‘ஆத்துக்குப் போகணும்’பற்றிய என் கட்டுரை...           


காவேரி என்னும் புனைபெயர் கொண்ட திருமதி லட்சுமி கண்ணன் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதி வரும் படைப்பாளி. தற்போது புது தில்லியில் வசித்து வரும் இவரது படைப்புக்கள் ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக், இந்தி, மராத்தி ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு எனப்பல துறை ஆக்கங்களிலும் ஈடுபட்டு வரும் இவர் தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலையும் [Wooden Cow], இந்திரா பார்த்தசாரதியின் திரைக்கு அப்பால் நாவலையும் [Through The Veils] ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஓசைகள், வெண்மை போர்த்தியது, எங்கும் வானம் ஆகிய தனது சிறுகதைத் தொகுதிகளிலுள்ள பல கதைகளை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது சிறப்பு.இவரது கதைகளின் முழுத்தொகுப்பை இரு தொகுதிகளாக ‘காவேரி கதைகள்’என்ற பெயரில்’மித்ர’பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
‘ஆத்துக்குப் போகணும் ‘என்னும் இவரது நாவல் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது. Impressions, The Glow and the Grey, Exiled Gods ஆகியவை,இவரது ஆங்கிலக் கவிதை நூல்கள்.
இனி..கட்டுரை
‘80களில் முதல் பதிப்பாக வெளிவந்த ஒரு நாவல் அது வெளிவந்த காலகட்டத்தில் படித்தபோது ஏற்படுத்திய அதே அதிர்வுகளையும், மனப் பதட்டங்களையும், நிலைகொள்ளாமையையும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அது மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இப்போதும் தோற்றுவித்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் வீரியமான அந்த எழுத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றிதானென்றபோதும் அந்தப் படைப்பு முன் வைத்த பெண் சார்ந்த நிலைப்பாட்டில் மேலதிகமான மாற்றங்கள் இன்னும் நேரிட்டு விடவில்லை என்பது வேதனையைக் கிளர்த்துவதாகவும் இருக்கிறது.
மைசூரில் உள்ள தாத்தாவின் பிரம்மாண்டமான வீட்டில் தன் பாலியப்பருவத்தைக் கழித்தவள் காயத்ரி. மழமழப்பான மரவேலைப்பாடுகளும், சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் தோட்டமும், முகப்பு வராந்தாவில் தேக்கு மர ஊஞ்சலும் கொண்ட அந்த வீடு அபாரமான ஆனந்தத்தையும் கட்டற்ற மகிழ்வையும் தரும் ஒரு வெளியாக அவளது ஆழ் மனதில் பதிவாகியிருக்கிறது.
திருமணமாகிக் கணவனுடன் தில்லி சென்று எலிப் பொறி போன்ற அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழ நேரிடுகையிலும், அதே போன்ற இன்னொரு எலிப்பொறி வீடான ’டிடிஏஃப்ளேட்டை’ வாங்க முற்படும்போதும் தாத்தாவின் விசாலமான வீடு குறித்த நினைவுகளே அவளுள் கிளர்ந்து அவளை ஏக்கத்துக்குள்ளாக்குகின்றன. தாத்தாவின் பெண்ணான தன் தாய்க்கு அந்த வீட்டின் மீதான உரிமை மறுக்கப்பட்டு அதன் அருமையை அறியாத தன் தாய் மாமன் கைக்கு அது மாறும் கட்டத்தில் ’’அந்த வீட்டுப் பெண்ணான என் அம்மா மீனாட்சியின் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு கண்ணைச் சிமிட்டிக் கொண்டு யாருக்கோ சொந்தமாக நழுவிப் போன வீடு.கனவு போலத் தேய்ந்த வீடு’’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளிக்கிறாள் அவள். அந்த வீட்டின் மீதான உரிமையை நிலைநாட்டி வழக்குத் தொடுக்குமாறு தன் தாயைத் தூண்டுகிறாள்.காயத்ரியின் விருப்பத்தை அவள் தாய் அப்போதைக்கு ஏற்றாலும் வழக்கில் வெற்றி கிடைக்காதபோது அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு தன் கணவரின் ஊதியத்துக்கேற்ற சிறு வீடு ஒன்றில் மன நிம்மதியுடன் வாழப் பழகி விடுகிறாள்.
athukupoganum
அதற்கு நேர் எதிரான மாற்று மனநிலையில் குமுறிக் கொண்டிருக்கும் காயத்ரிக்கோ அம்மா மீனாட்சியின் பக்குவமான மனநிலை வியப்பையே அளிக்கிறது. காயத்ரியின் தாயைப்போலவே அவளது கணவன் சங்கரும் , இருப்பதில் நிறைவு காண்பவன். குருவிக்கூடு போன்ற தில்லியின் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் கூடத் தன் மனைவியின் அண்மையே அவனுக்குச் சாந்தமும் அமைதியும் தரப் போதுமானதாக இருக்கிறது.அவளது அருகாமையிலான தனது இருப்பைக் ‘’கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சக் கிடைத்த மண். அலைந்து திரிந்த யாத்திரிகன் கண்ட குளுமையான ஆசிரமம்… இதிலேயே வீடு வந்து சேர்ந்து விட்டது போன்ற உணர்வு’’ என்று குறிப்பிட்டு எளிமையாக நிறைவு கண்டு விடுகிறான் அவன்.
காயத்ரியின் வீடு சார்ந்த புறப்போராட்டம் அவள் மகனுக்குத் திருமணமாகி மருமகள் வந்த பின்னும் தொடர்கிறது. பார்த்துப் பார்த்துப் பணம் சேமித்துத் தானும் கணவனுமாய்க் கட்டிய அந்தக் குருவிக்கூட்டிலிருந்தும் கூடத் தங்களை அப்புறப்படுத்தி விட்டு அதை முழுமையாகச் சொந்தம் கொண்டாடத் துடிக்கும் மருமகளின் பேராசை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எனினும் அவ்வாறு எதுவும் சம்பவித்து விடாமல் மகன் அதைத் தடுத்து விடுவதோடு அந்தக் குடும்பத்தின் புது உறுப்பினராக- அந்த எலிவளைக்குள் வாழ நேரும் சிறு எலிக் குஞ்சாக அவள் பேரன் சித்தார்த் வந்த பின் அந்த வீட்டின் சூழல் மாறிப்போக அவளும் ஓரளவு ஆறுதல் அடைவது போலத் தோன்றினாலும் வீடு சார்ந்த அவளது அகத் தேடல்-ஆன்மீகத் தேடல் அதன் மற்றொரு தளத்தில் தொடர்ந்து கொண்டே இருப்பதை உணர்த்தியபடி நாவல் முடிகிறது.
மூலக் கதையில் இடம் பெறும் வீடு பற்றிய சரடு நாவலின் பின்புலத்திலும் பதிவாகிறது. வீடு பற்றிய பலவகையான செய்திகளை நாவல் தொடர்ந்து தந்து கொண்டே செல்கிறது. இந்திரா காந்தி கொலைப்பட்டபோது எரித்துச் சிதைக்கப்பட்ட சீக்கியர்களின் வீடுகள், மிகப் பெரிய வீட்டில் வாழ்ந்தாலும் அதைத் தனித்துச் சொந்தம் கொண்டாட முடியாமல் ஒரு பெரும் பணக்காரரின் [திருமணமற்ற] துணைவியாய் வாழ்ந்து வெறுமையில் காலம் கழிக்கும் ஷோபா என காயத்ரி எதிர்ப்பட நேரும் வீடு சார்ந்த பல தகவல்களும் அதன் அநித்தியத்தை நிலையாமையை அவளுக்குப் புகட்டிக் கொண்டே வருகின்றன.
இவற்றுள் காயத்ரியின் தோழி ரமாவின் வாழ்வு அவளுக்கு மிகப் பெரிய திறப்பு ஒன்றை அளிக்கிறது. கட்டிடவடிவில் - பரு வடிவத்திலிருக்கும் வீடு மட்டுமல்லாமல் குடும்பம்,அதன் உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்று சேர்ந்து அமையும் அகமாகிய ’வீடு’ம் கூடப் பெண்ணுக்குச் சொந்தமாவதில்லை என்பதை காயத்ரியின் தோழியாகிய ரமாவின் வாழ்க்கை காயத்ரிக்கு உணர்த்துகிறது. மூலக் கதைக்கு இணையாக நாவல் நெடுகப் பயணிக்கும் ரமாவின் வாழ்க்கை ஓட்டச் சித்தரிப்பில் அவளது பிறந்தகம்,திருமணம் என்ற பெயரில் அவளைத் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ள உணர்ச்சியுள்ள ஒரு ஜீவனாகப் பார்க்காமல் அவளது புக்ககமும் அவளை நிராகரிப்புச் செய்கிறது. அதையெல்லாம் மீறி- குடும்பம்,குழந்தை வளர்ப்பு,தன் திறமையை அங்கீகரிக்காத கணவன்,கல்லூரிப்பணி எனப் பல நெருக்குதல்களுக்கு இடையிலும் ஓர் எழுத்தாளராக மேலெழுந்து செல்லும் அவளது உத்வேகமும் தாகமும் காயத்ரியை அவளோடு ஆன்மநெருக்கம் கொள்ளச் செய்கிறது.
குழந்தைமை விலகாத சிறுமிப் பருவத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்று பிற குழந்தைகளோடு விளையாடும்போதும் கூட காயத்ரியின் மனம்,’’ஆத்துக்குப் போகணும்’’ என்பதிலேதான் லயித்துக் கிடந்திருக்கிறது. சிறுமி காயத்ரியின் அந்த விழைவுக்கான காரணங்கள் வீடு தரும் இதம் மற்றும் அரவணைப்பு,பாதுகாப்பு இவை சார்ந்தவை. வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்ற பிறகு அந்த வீடு தன் தாயின் கைநழுவிப் போகும்போது அதன் மீது உரிமைப் போராட்டம் நடத்தும் எழுச்சி கொண்டவளாகிறாள் அவள். இவை அனைத்தும் நாவல் முன் வைக்கும் வீடு சார்ந்த புறத் தேடல்கள் மட்டுமே…’’பூர்வீகச் சொத்து அதில் உரிமை என்ற விஷயங்கள் …என் மனதில் இருந்திருக்கலாம்.ஆனால் கதை புனையத் தொடங்கினால் …பொருளாதார வரையறைகளுக்கும் அப்பால்…தன் மட்டில் ஒரு திசையைத்திறந்து விட்டுக் கொண்டு செல்கிறது’’என்று இம் மூன்றாம் பதிப்பின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவது போல ’வீடு’ என்பது பலவகைகளிலும் ஒரு குறியீடாகவே நாவலில் இடம் பெற்றிருப்பதை இனங்காண முடிகிறது.
பெண் சார்ந்த சொத்துரிமை குறித்த இழையில் தொடங்கினாலும் இந்நாவலின் மையம் அதில் மட்டுமே நிலை கொண்டிருக்கவில்லை என்பதே இந்நாவலை வித்தியாசமான தனித் தன்மையுடையதாகவும் காட்டுகிறது.
2164905797b9ffb51980o
வீடு என்பது விடுபடுவது…, விடுபட வைப்பது…எல்லாச் சிறைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகிச் சுதந்திரக் காற்றின் சுவாசத்தை நுகர முடிபவர்களே விடுபட்ட நிலையை அடைகிறார்கள். இந்நாவல் குறியீட்டு நிலையில் முன் வைப்பது அவ்வாறான ஒரு விடுபடலையே. வீடாக இப்படைப்பில் வரும் அனைத்தும் குவிவது அந்த மையப்புள்ளியை நோக்கியே.
தாத்தாவின் பெரிய வீட்டில் அதன் வெளியில் சுதந்திரமாக உணரும் காயத்ரி, தில்லியில் வசிக்கும் சிறிய அடுக்கு மாடி வீட்டை மூச்சடைக்க வைக்கும் எலிப்பொறியாக உணர்வது ஸ்தூலமான இடம் சார்ந்தது மட்டுமல்ல…பரந்த வெளியின் கட்டற்ற விடுதலையை மனம் அவாவும் நுட்பமான தேடலின் குறியீடே அது. அந்தத் தேடலே தன் உடலும் ஒரு சிறையே என இறுதிவரை அவளை உணர வைக்கிறது. ‘’நான் என் உடம்புக்குள் வாடகைக்குக் குடியிருப்பது போல’’என்பது அடிக்கடி அவள் வாயிலிருந்து உதிரும் ஒரு வாசகம்.
சின்னஞ்சிறு பொறிகளைப் போன்ற வீடுகளில் குடியிருக்கும் மனிதர்கள் போல ஆன்மாவும் உடலுக்குள் குடியிருக்கிறது. மூச்சுத் திணற வைக்கும் எலிப் பொறி வீடுகள் போல உடலாகிய அகமும் அவளை மூச்சடைக்கச் செய்யும்போதெல்லாம் ’மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்று அலைமோதித் தவித்த பாரதி போல காயத்ரியும் தத்தளிக்கிறாள்.அதைத் தன் கட்டுக்குள்கொணரவே தான் செய்யும் யோகப் பயிற்சியும் முன்பு கற்ற நடனப் பயிற்சியும் உதவுகின்றன என்பதை அவள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தாலும் அவற்றையும் மீறிக் கட்டற்றுப் பீறிட, விட்டு விடுதலையாகி வேறேதோ ஒரு புகலுக்குள் புகுந்து கொள்ளவே அவள் உள்ளம் இறுதி வரை அவாவுகிறது. ’’மூச்சை முட்டும் இந்த வீட்டைப் பெயர்த்து மூச்சை முட்டும் இந்த உடம்புக் கூட்டைப் பெயர்த்து மண்டை ஓட்டையும் பிளந்து இந்த மையத்திலிருந்து திமிறி ஓடிடணும்… ஓடிடணும்…’’என்ற அவளது அகக் குரலுடனேயே நாவல் நிறைவு பெறுகிறது.
வீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கல்வி அறிவும் அதனால் விளைந்த தனித்த ஆளுமையும் பெற்றுத் தனிப்பட்ட சிந்தனை ஓட்டங்கள் கொண்டவர்களாய் இரட்டைச் சுமைகளை முதுகில் ஏற்றபடி ஓடிக் கொண்டிருக்கும் நவீன உலகத்தின் பெண்களுக்குப் பருவடிலான வீடு,குடும்பம் என்னும் அமைப்பைச் சுட்டும் வீடு ஆகிய இரண்டுமே அவ்வாறான ஓர் இளைப்பாறும் இடமாக அமையாமல் மேன்மேலும் சுமைகளைக் கூட்டித் திணற வைக்கும் இடமாகப் போய் விடும் அவலத்தையே காயத்ரி,ரமா என்னும் பாத்திரங்களின் வழி முன்வைக்கிறார் காவேரி.அதிகம் படிக்காத காயத்ரியின் தாய் கிடைத்ததை ஏற்று அமைவதும் காயத்ரி ரமா ஆகியோரால் அது சாத்தியப்படாது போவதும் இது சார்ந்ததே.
இந்நாவலின் அடிநாதமாகத் தொடக்கம் முதல் இறுதி வரை ஒலிக்கும் உட்குரல், ’ஆத்துக்குப் போகணும்’ என்பதும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அது எந்த அளவு சாத்தியமாகிறது என்பதான விமரிசனமுமே. “அந்த வீட்டின் முகப்பைப் பார்த்தமட்டில் என் மனது அமைதி அடைந்து பரவலாக ஒரு சாந்தம் புகுந்து கொள்ளும்” என்று தன் தாத்தா வீட்டைப் பிரிந்து வெகு காலம் ஆன பின்னும் காயத்ரியின் நெஞ்சு ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே இருக்கிறது. குழந்தைப்பருவத்தில் அவளுக்குக் கிட்டிய எல்லையற்ற அந்த மன அமைதியும் நிறைவும் பின் ஒருபோதும் அவளுக்குச் சாத்தியமின்றிப் போவதால் அந்த நிறைவின்மையின் அலைக்கழிப்பே “ஆத்துக்குப் போகணும்…’’ என்னும் தேடலாக- லௌகீகம்,ஆன்மீகம் எனப் பல தளங்களிலும் வாழ்நாள் முழுவதும் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனி ஒரு பெண்ணின் தேடலாக மட்டுமன்றித் தனித்துவம் கொண்ட பெண்ணினத்தின் பொதுக் குரலாக நாவலில் அது ஒலிப்பதனாலேயே இப் படைப்பு பெண்ணிய நோக்கில் கவனம் பெறும் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகிறது.

16.10.12

இலங்கையை நோக்கி...

நினைவு மலரத் தொடங்கிய குழந்தைப்பருவ நாட்களில் இலங்கையோடு எனக்கு ஏற்பட்ட முதல் பிணைப்பு இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பால் நேர்ந்தது. குடும்பத்தில் ஒற்றைக் குழந்தையாகத் தனிமையில் வளர்ந்த எனக்கு உற்ற துணையும் தோழியும் அதுவாக மட்டுமே இருந்த காலம்...’50களின் பிற்பகுதியும்,’60களும்... !

இலங்கை வானொலியின்  கூட்டுத்தாபன சேவையெல்லாம் தொடங்குவதற்கு முன் அது வெறும் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பாக இருந்த நாளிலிருந்தே நான் அதன் ரசிகையாக இருந்திருக்கிறேன். இன்றும் கூட, இனிமையான பழைய திரைப்பாடல்கள் காதுகளை வருடும்போது முதன்முதலாக இலங்கை வானொலி வழி அவை எனக்கு அறிமுகமான அந்த நாள் நினைவுகளே நெஞ்சில் அலையடிக்கின்றன.பாடல்களை வறட்டுத்தனமாக ஒலிபரப்பாமல் ரசனையோடும் அவை பற்றிய பின்னணியோடும் உற்சாகமான தொனியில் விவரிக்கும் மூத்த அறிவிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்களின் தமிழும்,குரல்வளமும் இன்னமும் கூட என்னுள் ஒலிப்பதை என்னால் உணர முடிகிறது. 
மயில்வாகனன்

தொடர்ந்து பிற அறிவிப்பாளர்களான திருமதி ராஜேஸ்வரி..., அட்டகாசமான ஆக்கத்திறன் கொண்ட கே.எஸ். ராஜா,முன்னோடிகளின் பாதையில் பயணப்பட்டாலும் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்து கொண்ட அப்துல்ஹமீத்,
[படங்கள்;நன்றி,http://yazhsuthahar.blogspot.in/]
மயில்வாகனன் சர்வானந்தா எனப்பலரையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை நான் தொடர்ந்து வந்திருக்கிறேன்.

இலங்கை வானொலி, திரைப்பாடல்ரசனையை மட்டும் எனக்கு அளிக்கவில்லை...’இசையும் கதையும்’ போன்ற நிகழ்ச்சிகளின் வழி என்னுள் இருந்த கதைசொல்லியை வளர்த்தெடுத்ததிலும் அதற்குப்பங்குண்டு.[பள்ளி நாட்களில்..’இசையும் கதையும்’ மீது பெரும் மோகம் கொண்டிருந்த நான்..ஒரு கதையை எழுதி அதற்கேற்ற பாடல்களைப் பொருத்தமாக இயைத்து அந்நிகழ்ச்சிக்கும் கூட அனுப்பி வைத்திருக்கிறேன்.] அவ்வப்போது வானொலி நடத்தும் போட்டிகளில் பங்கு பெற்று ஒரு போஸ்ட் கார்டில் விடை எழுதி அனுப்பி[அப்போதெல்லாம் இந்திய போஸ்ட்கார்ட் இலங்கைக்கும் செல்லும்] அதற்குப் பரிசாக எனக்குப் பிடித்த பாடல் ஒன்று ஒலிபரப்பப்படுவதைக் கேட்டுப்பூரித்திருக்கிறேன்[நான் அவ்வாறு பெற்ற முதல் பரிசு என் விடையின் வெற்றிக்காக,என் பெயரோடு ஒலிபரப்பான’நான் பேச நினைப்பதெல்லாம்..’பாடல்-பாலும் பழமும்]

பணியில் சேர்ந்து...தமிழ் இலக்கியத்தில் தீவிர முனைப்பு கொண்ட பின்பு பேராசிரியர்கள் கலாநிதி கைலாசபதியும்,கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களும் சங்க இலக்கியம்,மற்றும் இக்கால இலக்கியம் சார்ந்த என் அணுகு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை,தாக்கங்களை ஏற்படுத்தி என்னை செழுமைப்படுத்திக் கொள்ள உதவியிருக்கிறார்கள்.
கலாநிதி கைலாசபதி
கார்த்திகேசு சிவத்தம்பி 
ஈழத்தின் போராட்டம் வலுப்பெறத் தொடங்கிய பிறகு அதன் படைப்பாளிகள் - குறிப்பாக சேரன்,வில்வரத்தினம்,காசி ஆனந்தன்,சங்கரி,செல்வி சிவரமணி,சுமதி ரூபன்,றஞ்சி போன்ற கவிஞர்கள் என்னை நெகிழ்த்தி அசைத்து உருக்கியவர்கள்.
யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது எமது மக்கள் பல வன்கொடுமைகளுக்கு ஆளானதைப் பார்க்க படிக்க நேர்ந்தபோதெல்லாம் புலம்பிக் கையற்றுத் தவித்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்த வாழும் படைப்பாளிகள் சிலரோடு நட்புக்கொள்ளும் சூழலும் எனக்கு வாய்த்தது.லண்டனில் வசிக்கும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நான் பணியாற்றிய கல்லூரிக்கே வருகை தந்து சொற்பொழிவாற்றியதோடு,நான் ஓய்வு பெற்றபின் தில்லி வீட்டுக்கும் வந்திருக்கிறார்.

இப்போது இணையம் பல ஈழப்படைப்பாளிகளைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை மிகுதியாகவே ஏற்படுத்தித் தந்திருக்கிறது. 
குற்றமும் தண்டனையும் என்ற என் மொழியாக்கம், ரஞ்சகுமார் சோமபால என்னும் அற்புதமான கதைக்காரரை 
ரஞ்சகுமார் சோமபால 
என் மகனாகவே ஆக்கியிருக்கிறது.

தமிழ் எழுத்தாளர்களுக்கான தளத்தை நடத்தி வரும் அகில் ’கூடுகள் சிதைந்தபோது’என்ற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் எனக்கு அனுப்பி வைத்தபோது நான் பெரிதும் நெகிழ்ந்தேன்.

முத்துலிங்கத்தின் படைப்புக்கள்,பெண்ணிய நோக்கில் நடத்தப்படும் ஊடறு இணைய தளம் இவை அடிக்கடி நான் செல்லும் தளங்கள்.

உலகின் எந்த மூலைக்குப் புலம் பெயர்ந்தாலும் தமிழை மறக்காமல்...இணையத்தில் தமிழ் வலம் வர ஈழத் தமிழர் செய்த பங்களிப்பை நான் ஒவ்வொரு நொடியும் நன்றியோடு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன்.

என்னிடம் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்த ஒரு மாணவி தேர்ந்து கொண்ட தலைப்பு ‘புலம்பெயர் ஈழக்கவிதைகள்’.அதை நெறிப்படுத்தும் காலகட்டத்தில் ஈழத்தின் பன்முகச்சிக்கல்கள்,அவலங்கள் ஆகியவற்றை வரலாற்று ரீதியாகவும்,படைப்புக்களின் வழியாகவும் என்னால் மிக விரிவாக உள் வாங்கிக்கொள்ள முடிந்தது.

இலங்கை மண்ணில் இதற்கு முன் இரு முறை நான் கால் பதித்திருக்கிறேன்.
2008 டிசம்பரில் மலேசியா செல்லும் வழியில் விமானநிலையத்தில் மட்டுமே தங்கி இருந்து அடுத்த விமானத்தில் ஏற வேண்டியதாக இருந்ததால் நிலையத்தின் கண்ணாடி ஜன்னல் வழி மட்டுமே அம்மண்ணைப்பார்க்க முடிந்தது.
மலேசியா செல்லும் வழியில்,இலங்கை விமான நிலையத்தில்...

 பின்பு 2009 ஆகஸ்டில் ஐரோப்பா பயணத்தின்போது 7,8 மணி நேரம் கொழும்பில் மட்டுமே சற்று நேரம் செலவிட முடிந்தது.  
அப்போதுதான் நிகழ்ந்து முடிந்திருந்த இனப்படுகொலையின் ஈரம் காயாத...பச்சையான குருதியின் வாடை உலராத அந்தப் பொழுதில் என்னால் இலங்கையை உள்வாங்க இயலவில்லை
[காண்க;   

தற்போது 6 நாள் பயணமாக[அக்.17 முதல் 22 வரை] இலங்கை செல்கிறேன்.சுற்றுப்பயணக்குழு ஒன்றுடன் செல்வதால் அவர்கள் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்லும் இடங்களுக்கு மட்டுமே சென்றாக வேண்டிய நிலை..
கண்டி,கதிர்காமம்,நுவரேலியா,கலி,கொழும்பு என அங்குள்ள சில இடங்களைச் சுற்றிக்காட்ட குழுவினர் திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
கொழும்பு ஏற்கனவே சென்ற ஊர் என்பதால் 22 காலை கொழும்பு வந்து சேர்ந்ததும், பிற்பகல் விமானம் ஏறுமுன் நண்பர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள முடிந்தால் சந்திக்க எண்ணியிருக்கிறேன்.

நம்மவர்கள் வாழ்ந்து மடிந்த மண்.....
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மண்....
நம் தமிழ் இனத்தின் உழைப்பால் உயர்ந்து நிற்கும் மண்....
சீதை சிறையிருந்த பூமி....
அங்கே செல்கிறேன்...
சிலிர்ப்பாக இருக்கிறது..

இது ஒரு சுற்றுலா அல்ல...
இலங்கை பற்றி என்னுள் பதிந்த நினைவுகளை அசைபோட...
எம் மக்கள் வாழ்ந்த- வாழும் இடத்தில்,அவர்களின் வாழ்க்கை ஓட்டம் குறித்த என் நினைவுகளை உசுப்பி எழுப்பிக்கொள்ள...

மயில் வாகனனின் குரலால் என் காதுகளில் ஒலித்து, பெயரளவில் மட்டுமே அறிமுகமாகியிருக்கும் இலங்கை ஊர்களில் சிலவற்றையாவது காட்சிப்படுத்திக் கொள்ள.... 
அங்கே கால் பதிக்க........

தொடர்புள்ள இணைப்புக்கள்;

14.10.12

கன்னிமை

னம் புரியாத இனிமையான ஓர் உணர்வு அடிவயிற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பி உடல் முழுவதும் வினோதமாக..வித்தியாசமாக வியாபிப்பதை உணர்கிறாள் கல்யாணி.பரவசமா,பயமா,அதிர்ச்சியா ஆனந்தமா என்று பிரித்துப்பார்க்க முடியாதபடி தன்னை ஆட்கொண்டு கிளர்ச்சியூட்டும் அந்த உணர்வுக்கான காரணம்...அதுதானா?அதுவேதானா?அதுதானென்றால் இத்தனை சீக்கிரத்திலா?ஆனாலும் காலண்டர் பொய் சொல்லுமா?ஆண்டுக்கணக்கில் சிலரை ஏங்க விடுகிற இந்த பாக்கியம் தனக்கு அதற்குள்ளாகவா சாத்தியமாகியிருக்கிறது..? மனசுக்குள் ஆயிரம் குடைச்சல்கள் அரித்தாலும் இதைப்போய் வெளிப்படையாக யாரிடம் சொல்லி விடை கேட்பது..

‘நீயே ஒரு குழந்தை...உனக்கு அதுக்குள்ளே ஒரு குழந்தையா..’
-காதருகே அம்மா கேட்பது போன்ற கற்பனையில் அகம் மலர்ந்து போய் முகத்திலும் புன்னகைப்பூவை அரும்ப விட்டு விடுகிறவள் தானாகச் சிரித்துக் கொண்டதை யாரும் பார்த்து விட்டார்களோ என்ற பயத்தில் உதட்டுக்குள்ளேயே அதை மடிய விடுகிறாள்.

இந்த விஷயத்தை யாருடனாவது பகிர்ந்தே தீர வேண்டும் என்கிற தாபமும்,யாருடன் பகிர்வது என்ற தயக்கமும் ஒரே நேரத்தில் அவளுக்குள் ஜனிக்கின்றன.திருமணம் முடிந்த கையோடு உறவினர் வீட்டு விருந்துகள்,சுற்றுப்பயணங்கள் எல்லாம் முடிந்து இந்த வீட்டில் அவள் நிலையாகக் காலூன்றி இருக்கிற இந்தக் கொஞ்ச நாட்களில்...அவளது வேர்கள் இன்னும் அந்த மண்ணில் முழுமையாக ஊன்றப்படாத வேளையில் யாருடனும் சகஜபாவம் இன்னும் ஸ்தாபிக்கப்பட்டிராத இந்த நிலையில் ....தனக்கு ஏன் இந்த அவசரம் என்று ஒருகணம் அவள் தன் மீதே கூடக் கோபப்படுகிறாள்.

அந்த வீட்டின் நிலையான உறுப்பினர்கள் அவள்,கணவன் ரகு,மாமியார்..இவர்கள் மட்டுமே. வாரம் தவறாமல்...சில வேளைகளில் வாரம் இரண்டு மூன்று தடவைகள் கூட வருகை தந்துவிட்டுப்போகும் கௌரவ உறுப்பினர்,உள்ளூரில் தனிக்குடித்தனம் செய்யும் நாத்தனார். இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கலாம்....கணவன் இதுவரை கடுமையோ எரிச்சலோ காட்டியிருக்காவிட்டாலும் கூட மனதளவில் தோழமை உணர்வுடன் இன்னும் நெருங்கியிருக்கவில்லை என்பதை அவள் ஒருகணம் நினைத்துப் பார்க்கிறாள்.மாமியாரோ கல்யாணி அந்த வீட்டுக்கு வந்து விட்டதைத் தன்னுடைய பதவிக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஓய்வாகவே எண்ணிவிட்டவள் போல இருபத்துநாலு மணி நேரமும் விசிறியும் கையுமாக ஊஞ்சலில் வாசம் செய்கிறவள்.அவ்வப்போது வந்து போகிற மகளிடமும் வீட்டிலிருக்கும் மகனிடமும் வண்டி வண்டியாக விஷயங்களைக் கொட்டத் திறக்கிற அவளது திருவாய், மருமகள் விஷயத்தில் மட்டும் கௌரவம் காட்டிப் பாதிநேரத்துக்கு மேல் மௌனித்துக் கிடக்கிற விந்தை கண்டு அவள் வியப்பதுண்டு.நாத்தனார் பாதிநேரம் அங்கே வருவதே தன் பட்டையும் தங்கத்தையும் பரிசோதிக்கத்தானோ என்று கல்யாணிக்கு அடிக்கடி தோன்றும்.சங்கிலியும் வளையும் எத்தனை பவுன் என்று எத்தனை முறை கேட்பாள்...? இவள் ஞாபக சக்தியில் ஏதேனும் கோளாறு இருக்குமோ...? இல்லை..தன்னிடம் பேச ஏதும் விஷயமில்லையோ...? இருக்கிற மூன்றுபேர் மீதும் இன்னும் நம்பிக்கை பிறந்திராத சூழலுடன் ஒருவேளை ‘அது’இல்லையென்றால் அவர்கள் முன்பு பரிகாசமாய்ப்போகுமே என்ற பயமும் ஒருங்கிணையத் தன் பகிர்தல் ஆசையை மேலும் கொஞ்ச நாட்களுக்கு ஒத்திப்போடுகிறாள் கல்யாணி.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ன்று பிற்பகல் ஓய்வாக ஒரு வார இதழைக் கல்யாணி புரட்டிக் கொண்டிருக்கையில் மாமியார் குரல் கொடுக்கிறாள்.
‘’கல்யாணி..ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வா’’
‘’இதோ வரேன் அத்தை’’
‘’தண்ணீரைக்கொடுத்து விட்டு அவள் ஓரமாக நிற்கையில் திடீரென்று நினைத்துக் கொண்டாற்போல அந்தக் கேள்வி அவளிடமிருந்து பிறக்கிறது.

‘’ஆமாம்..இந்த வீட்டுக்கு வந்தப்பறம் நீ ஒதுங்கவே இல்லை இல்லை..’’
மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்த பிரச்சினை, தானாகவே முடிவுக்கு வந்து விட்ட திருப்தியில்,’’ஆமாம் அதுக்கப்பறம் இல்லை’’என்று நாணம் கலந்த தயக்கத்துடன் கல்யாணி திக்கித் திக்கிச் சொல்லி முடித்ததும் டம்ளரைத் திருப்பிக் கொடுத்து விட்டுத் தன் வேலை முடிந்து விட்டதைப்போல ஊஞ்சலில் சாய்ந்து கொள்கிறாள் மாமியார்.அடுத்த கேள்வியை ஆர்வத்தோடு எதிர்நோக்கிய கல்யாணி ‘சரி நீ போகலாம்’என்பது போன்ற அந்த பாவனையில் முகம் சாம்பிப்போனவளாய் அங்கிருந்து நகர்கிறாள்.

மாலையில் வீட்டுக்கு வந்த நாத்தனாருடன் தணிந்த குரலில் அந்த விஷயம் அலசப்படுவதை சமையலறையிலிருந்தபடியே அவளால் ஊகிக்க முடிகிறது.இடையே காப்பி,டிஃபன் கொடுப்பதற்குத் தான் அங்கே சென்றபோது தடைப்பட்ட பேச்சு மீண்டும் கிணற்றடித் தனிமையில் அவர்களிடையே தொடர்கிறபோது கல்யாணி ஆச்சரியப்பட்டுப் போகிறாள்.

‘இந்த சந்தோஷ செய்திக்கு இத்தனை ஒளிவு மறைவு எதற்கு..’அன்று திரும்பிப்போகும்போது நாத்தனார் பட்டையும் தங்கத்தையும் அளவெடுப்பதை விட்டுவிட்டு அவளைப் புதிதாகப் பெண் பார்ப்பது போல்..அளவெடுக்கிற தினுசில் பார்க்கிற பார்வையில் அவள்கூசிப்போகிறாள்.
‘என்ன கல்யாணி....எனக்கு மருமகனா மருமகளா என்ன தரப்போறே..’
-கல்யாணி எதிர்பார்க்கிற இந்த வினாவை மட்டும் உதிர்க்காமலே தன் வீட்டுக்குப் புறப்பட்டுப் போகிறாள் நாத்தனார்.

‘இவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரிஞ்சாச்சா....இனிமே இவர் கிட்டேயும் சொல்லிட வேண்டியதுதான்..’என்ற முடிவுடன் இரவு எல்லா வேலைகளும் முடிந்த பிறகு ரகுவை எதிர்கொள்கிறாள். விஷயத்தை..நாசூக்காய்..நயமாய் அவனிடம் சொல்லி ..அந்த முகம் மலருவதைப்பார்க்க மனசுக்குள் ஆயிரம் ஒத்திகை நடத்திப் பார்த்து அவள் ஆரம்பிப்பதற்குள்..
‘’ஆமாம்..அம்மா என்னவோ சொன்னாங்களே’’என்று அவனே ஆரம்பிக்கிறான்.மகிழ்வோ...பரபரப்புக் கலந்த உற்சாகமோ ஏதுமற்ற சமநிலைக்குரலில் அவன் அப்படிக்கேட்டதும் பொங்கிய பாலில் தெளித்த நீராக அவள் உற்சாகம் வடிந்து போகிறது.இருந்தாலும் அவன் மனநிலை எப்படித்தான் இருக்கிறதென்று பார்க்கும் ஆசையில் வலிய வரவழைத்துக்கொண்ட ஆர்வத்தோடு,
‘’எதுக்கும் டாக்டரைப்பார்த்திட்டாத் தேவலை..நாளைக்கு சாயங்காலம் போகலாமா..’’என்று கேட்க,அவன் ‘ம்..ம்..’என்று அரைகுறையாக முனகியபடி செய்தித் தாளில் முகம் புதைத்துக் கொள்கிறான்.

என்ன மனிதர்கள் இவர்கள்..! குடும்பத்தில் முதன்முதலாக ஒரு புது ஜீவனின் வருகை இவர்களைத் துளிக்கூடவா பதிக்கவில்லை?ஒருவேளை பிறப்பையும்,இறப்பையும் சமமாக பாவிக்கிற திரிகால ஞானிகளோ?கல்யாணிக்கு ஆத்திரம் குமுறிக்கொண்டு வந்தாலும் இதில் ஏதோ நெருடல் இருப்பதாகவும் அடி மனதுக்குப் படுகிறது.இத்தனை சீக்கிரம்’அது’வேண்டாமென்று ஒத்திப்போட நினைத்திருந்தால் அதையாவது வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே?பல்வேறு சிந்தனைகளில் குழம்பியபடியே அவள் உறங்கிப்போகிறாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தற்கு முன்பிருந்த கொஞ்சநஞ்சம் சகஜமான நிலையும் இப்போது அடைபட்டுப் போக...இன்னுமொரு வாரம் இறுக்கமான சூழ்நிலையில் கழியத் தரையிலிட்ட மீனாய்த் தான் தனியாக்கப்பட்டு விட்டதாய் உணர்கிறாள் கல்யாணி.

‘என்னவோ ஊரிலே உலகத்திலே நடக்கக்கூடாத தப்புக்காரியம் நடந்திட்ட மாதிரி இவங்க ஏன் இப்படி ஒதுக்கிறாங்க...இப்பக் கொஞ்ச நாள் அம்மாவோட போய் இருக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?’

அன்று காலை அலுவலகம் கிளம்பு முன் ரகு அவளை அழைக்கிறான்.
‘’இன்னிக்கு சாயங்காலம் உன்னை உங்க வீட்டிலே கொண்டு போய் விடறதா இருக்கேன்....சாமான் எல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோ’’

நெஞ்சுக்குள் சந்தோஷம் படர்ந்தாலும்முகத்தில் வியப்பு விரியக்கல்யாணி கேட்கிறாள்.
‘’திடீர்னு என்ன?’’
‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது...அம்மாதான் நேத்து கூப்பிட்டு சொன்னாங்க...அவ அங்கே போய் ஒரு வாரம் இருந்திட்டு வரட்டுமேடான்னாங்க’’
-என்னதான் பாராமுகமாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனம் பெண்ணுக்குத்தானே தெரியும்...தான் அதற்குள் அவசரப்பட்டு மாமியாரைத் தவறாக எடை போட்டு விட்டதற்கு வெட்கிப்போகிறாள் அவள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ன் வாய்க்கு வேண்டியதைஎல்லாம் கைமணத்தோடு ஆசை ஆசையாச் செய்து தருகிற அம்மா,அக்கறையோடு டாக்டரிடம் அழைத்துக் கொண்டுபோய் அவள் நல்ல பதில் சொல்கிற வரையில் கவலை தோய்ந்த முகத்துடன் நிற்கிற அப்பா, நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தருகிற சகோதரர்கள் என்று களிப்பான சூழ்நிலையில் காலம் போக்குகிற கல்யாணிக்குப் புக்ககத்தாரின் ஒட்டாத போக்கும் கூடத் தற்காலிகமாக மறந்து போகிறது.

‘’ஏண்டிகல்யாணி..நீ வந்து ஒரு வாரம் ஆச்சு...அவங்ககிட்டேயிருந்து ஒரு ஃபோனோ லெட்டரோ எதுவுமே வரலியே...நீ அங்கே எப்ப வரணும்னு மாப்பிளை ஏதாவது சொல்லியிருக்காரா...அவர் வந்து அழைச்சுக்கிட்டுப் போவாரா..இல்லே நாங்க கொண்டு போய் விடணுமா எதுவும் தெரியலியே..’’-என்று அம்மா அங்கலாய்க்கக் கல்யாணி குறும்பாய்க் கேட்கிறாள்.
‘’ஏம்மா..உனக்கு அதுக்குள்ளே நான் அலுத்துப் போயிட்டேனா..’’
‘’போடீ அசடு...நாங்க பாத்துப்பாத்து ஆயிரம் செஞ்சாலும் சீராட்டினாலும் இனிமே அங்கே இருக்கறதுதான் உனக்கு மதிப்பு...சரி சரி...என்னிக்கு அங்கே வரணும்னு கேட்டு உடனே மாப்பிளைக்கு எழுதிப்போடு’’

கல்யாணி எழுதிய கடிதத்திற்குப் பதிலாக ரகுவிடமிருந்து அவள் அப்பா பெயருக்கு வருகிற சுருக்கமான அந்தக்கடிதம்,வீட்டில் விவரிக்க முடியாத திகிலையும்,பரபரப்பையும் விளைவிக்கிறது.
‘கல்யாணியை இப்போது அனுப்ப வேண்டாம்.அவள் அம்மாவுடன் என் தாயார் முக்கியமான சில விஷயங்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டியிருப்பதால் இந்தக்கடிதம் கிடைத்ததும் அவர்களை அனுப்பி வைக்கவும்’
‘’கலந்து பேசறதுக்கு இப்ப என்ன இருக்கு...பணம்,நகை கொடுக்கிறதிலேயோ சீர்வரிசை செஞ்சதிலேயோ நாம எந்தக்குறையும் வைக்கலையே..பேசினதைச் செஞ்சிட்டோமே..’’
-அம்மா அதிசயப்பட்டுப்போக,
‘’நீயா கண்டதையும் எதுக்கு ஊகிக்கணும்..நேரே போய் அவங்க என்ன சொல்றாங்க எதுக்குக் கூப்பிடறாங்கன்னு கேட்டுட்டுத்தான் வாயேன்..’’
என்று அப்பா முற்றுப்புள்ளி வைக்கக் கல்யாணிக்கு மட்டும் உள்ளத்தில் முன்பு பிறந்த  நெருடல் உணர்வு இப்போது மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ருக்குப் போன வேகத்திலேயே திரும்பி வரும் அம்மாவின் முகம் பேயறைந்தாற்போல இருண்டிருக்கிறது. கல்யாணியின் சரமாரியான வினாக்களுக்கெல்லாம் ஒற்றை வார்த்தையில் விடை தந்து விட்டுச் சமையலறை இருட்டுக்குள் அவள் முடங்கிக் கொள்கிறாள்.அம்மா-அப்பாவின் ரகசிய உரையாடல்கள், 
இடையில் தான் வந்தவுடன் அங்கே அவசரமாகத் தொங்க விடப்படுகிற மௌனத் திரை,
தன்னைப்பார்க்கும்போது அவர்கள் விழிகளில் தொக்கி நிற்கும் தன்னிரக்க பாவனை 
இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்பது புரியாவிட்டாலும் ஏதோ ஒரு வலுவான பிரச்ச்சினை அந்த வீட்டை ஆட்டி அலைக்கழிப்பதைக் கல்யாணியால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

‘’இப்படியே இருந்தா எப்படி..அவங்களுக்கு ஏதானும் முடிவாச் சொல்ல வேண்டாமா..’’
-அன்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்த அம்மா ,கோயிலுக்குப் போயிருந்த கல்யாணி வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்ததும் பேச்சின் இழையை அறுக்க முயல்கிறாள்.இனியும் இந்த ஊமை நாடகத்தின் அழுத்தத்தைப்பொறுக்க முடியாத ஆத்திரத்துடன் கல்யாணி ஆவேசமாக வெடிக்கிறாள்.
‘’அம்மா..அங்கே என்னதான் நடந்தது...ஏன் இப்படி மூடி மூடி வைக்கறீங்க எல்லாரும்?நான் இனிமே அவங்க வீட்டைச்சேர்ந்தவன்னு நீதானே சொன்னே...அப்ப அவங்க என்ன சொல்லியிருந்தாலும் அது உங்களை விட என்னைத்தானே அதிகம் பாதிக்கும்....என்னிக்கு இருந்தாலும் எனக்கும் தெரிஞ்சாக வேண்டியதுதானே....எதுவானாலும் வெளிப்படையா சொல்லிடும்மா’’
சூழ்நிலையின் சுமையை இருவருமே சமாளித்துக் கொள்ளட்டும் என்று எண்ணிய அப்பா வெளியே போகிறார்.

‘’நான் என்னத்தன்னு சொல்லுவேன்...நீ...நீ...இத்தனை சீக்கிரம் உண்டாயிருக்கிறதை அவங்க சந்தேகப்படறாங்கடீ....எங்களை ஏமாத்தி ஏற்கனவே கெட்டுப்போன பெண்ணைத் தலையிலே சுமத்திட்டீங்கன்னு உன் நாத்தனாரும் மாமியாரும் நாக்கிலே நரம்பில்லாம பேசறாங்க....என் போதாத காலம்....இதை எல்லாம் அவங்க வாயாலே கேட்டு உன்கிட்டேயும் சொல்லணும்னு விதிச்சிருக்கு பாரு’’--அம்மா புடவைத் தலைப்பைப் பந்தாய் சுருட்டி வாயில் அடக்கியபடி விம்முகிறாள்.
ஆரம்பத்திலிருந்தே தன் அடிமனதுக்குப் புலப்பட்டுக் கொண்டிருந்த சிறு நெருடல்,இத்தனை வீரியம் வாய்ந்ததொரு வெடிகுண்டைத் தன்னுள் அடக்கி இருக்கும் என்று எதிர்பார்த்திராத கல்யாணி அடி வயிற்றிலிருந்து ஓலமிட்டபடி தாய் மடியில் முகம் புதைக்கிறாள்.
வினாடிகளும்,நிமிடங்களும் மட்டுமல்லாது யுகங்களும் அங்கே கண்ணீரில் கரைகின்றன.

சிறிது நேரம் அழுது கலங்கிய பிறகு தெளிவான ஒரு முடிவுக்கு வந்தவளாய் முகத்தை அழுந்தத் துடைத்தபடி அம்மாவிடம் கேட்கிறாள்.
‘’சரி..அப்பறம் என்ன நடந்தது....நீ என்ன சொல்லிட்டு வந்தே அவங்ககிட்டே..’’
‘’நான் என்னடீ சொல்ல முடியும்...என் பொண்ணு உத்தமி,பத்தினினு நானே அவங்ககிட்டே நிரூபிக்க வேண்டிய நிலைமை....ஆனா நான் என்ன சொல்லியும் அவங்க பிடிச்ச பிடியை விடறதா இல்லே..’சரி இந்தக் காலத்திலே இதெல்லாம் சகஜம்தான்.அதுக்காக நாங்க ஒண்ணும் அவ வாழ்க்கையைப் பாழடிசிற மாட்டோம்..ஆனா’அந்த’க் குழந்தை மட்டும் எங்களுக்கு வேண்டாம்..அதைக் கலைச்சிட்டு அவளைக் கொண்டு வந்து விடுங்க நாங்க ஏத்துக்கறோம்’னு ரொம்பப்பெருந்தன்மையா இருக்கிற மாதிரி வேஷம் போடறாங்க’’

'முன்னை விட சக்தி வாந்த அடுத்த குண்டும் வெடிக்கிறது....ஆனால் இம்முறை அதனாலும் தகர்க்க முடியாத உறைநிலைக்குப் போயிருக்கிறாள் கல்யாணி.கண்ணீரை உள்ளுக்குள் ஜீரணித்துக் கல்லாய் இறுகியிருக்கிற மகளின் தோற்றம் அம்மாவை அச்சுறுத்த அவள் வயிறு கலங்குகிறது.

‘’அவங்க சொன்னதுக்கு நீ ஒத்திக்கிட்டு வந்திருக்கியாம்மா..’’
-இப்போது கல்யாணி குரலை உயர்த்தி கம்பீரமாகக் கேட்கிறாள்.
‘’அதெப்பிடிம்மா உன்னைக்கேக்காம ஒத்துக்க முடியும்...இந்த விஷயத்திலே நீ சொல்றதை வச்சுத்தானே முடிவு செய்யணும்..’’

‘’அப்ப.....இந்தக்கொடுமைக்கு நான் ஒத்துப்போய் உடன்பட்டாகணும்னு நீயும் நினைக்கிறே..அப்படித்தானேம்மா....அங்கே அபவாதத்துக்கு ஆளாகிறது உன் பொண்ணோட நடத்தைங்கிறது உனக்குப்படலையாம்மா....அப்படீன்னா நீயுமா என்னைச் சந்தேகப்படறே..’’

‘’அசட்டுத்தனமா உளறாதே கல்யாணி...எனக்கு உன்னைத் தெரியாதா....ஆனா,என்னம்மா பண்றது நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்..’’

‘’அம்மா..நீயே ஒரு தாயா இருந்துக்கிட்டு இதைச் சொல்ல உனக்கு எப்படிம்மா மனசு வருது..’’

’’தாயா இருக்கிறதனாலேதாண்டி இப்படிச் சொல்றேன்.எப்படியாவது,எதையாவது செஞ்சு தன் குழந்தையை வாழ வைக்கணும்னுதாண்டி ஒவ்வொரு தாய் மனசும் நெனைக்கும்’’

அதே மாதிரி நானும் என் குழதையை வாழ வைக்கணும்னுதாம்மா ஆசைப்படறேன்..’’
-தர்க்கபூர்வமான அந்த பதிலின் குரூரமான யதார்த்தத்தில் அடிபட்டுப்போனவளாய்...ஆற்றாமை பொங்கத் தன் மகளை ஏறிட்டுப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து உள்ளே நகர்கிறாள் அம்மா.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ரு மாதத்துக்கு மேலாகியும் கல்யாணி வீட்டாரிடமிருந்து எந்த பதிலும் வராததால் அன்று ரகுவே வீடு தேடி வந்திருக்கிறான்.வீட்டில் உபசாரம் தூள் பறக்க..கல்யாணி மட்டும் தன் அறையை விட்டு வெளியிலேயே  வராமல் முடங்கிக் கிடக்கிறாள்.

‘’கல்யாணி..ஒரு அஞ்சு நிமிஷம் ரகு உன் கிட்டே பேசணுமாம்மா..’’-அப்பா தயங்கியபடி அவளிடம் அனுமதி கேட்க ரகு உள்ளே வருகிறான்.நாற்காலியை விட்டு எழுந்திருக்கக் கூட  மனமில்லாத அவள் எதிரே தானும் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு உட்காருகிறான்.

‘’கல்யாணி..உனக்கு என் மேலே கோபம் இருக்கறது நியாயம்தான்...இந்த விஷயத்தைப்பொறுத்த வரைக்கும் நான் நம்பறதோ நம்பாததோ பிரச்சினையில்லை.சின்ன வயசிலேயிருந்து எங்கம்மா,அக்கா இவங்களோட பேச்சைத் தட்டி நடந்து எனக்குப் பழக்கமில்லை.இதிலேயும் அப்படித்தான்....இப்பவும் நாங்க ஒண்ணும் உனக்குக் கொடுமை செஞ்சிடலை.இதை ஊரறியச் சொல்லி உன் மானத்தை வாங்கறதோ உன்னைத் தள்ளி வைக்கிறதோ எங்க நோக்கமில்லை...இந்தக்குழந்தை மட்டும் வேண்டாம்..அவ்வளவுதான்..’’

தொடர்ந்து அவன் பேசிக்கொண்டு போக வாய்ப்புத் தராமல் வேகமாக நாற்காலியைப்பின்னுக்குத் தள்ளி விருட்டென்று எழுந்திருக்கிறாள் அவள்.
‘’இதோட கொஞ்சம் நிறுத்திக்கிறீங்களா....அக்கினி சாட்சியா..இன்பத்திலேயும் துன்பத்திலேயும் துணையிருப்பேன்னு கைப்பிடிச்ச மனைவி கிட்ட இப்படிப்பேச உங்களுக்கு வெக்கமாயில்லை...? குழந்தை நம்மோடதுதாங்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தா....நான் நரகத்திலே கூட உங்களோட வாழ்க்கை நடத்தத் தயாரா இருக்கேன்...ஆனா அது உங்ககிட்டே இல்லாதப்ப நான் அந்தக் குழந்தையைக் கலைச்சுக்கிறதும் ஒண்ணுதான்.....நான் கெட்டுப்போனவங்கிற உங்க குற்றச்சாட்டைப்பகிரங்கமா ஒத்துக்கிறதும் ஒண்ணுதான்..’’

அவள் குரல் கேட்டு ஓடி வந்த அப்பா ஆதரவாய் அவள் முதுகை நீவி விட்டு அமைதிப்படுத்த 
‘’சும்மா இரு கல்யாணி’’
என்கிறாள் அம்மா.

‘’சும்மா இருந்ததெல்லாம் போதும்மா...இவங்க வீட்டிலே குனிஞ்ச தலை நிமிராம..கர்ப்பமானதைச் சொல்றதுக்குக்கூடக் கூச்சப்பட்டுக்கிட்டு இருந்தவதான் நான்....ஆனா..என்னை இப்ப விஸ்வரூபம் எடுக்க வச்சிருக்கிறதும் இவங்கதான்! ஒரு பொண்ணு கணவன் வீட்டிலே நுழைஞ்சதும் முதல்லே தன்னோட கன்னித் தன்மையை நிரூபிச்சிட்டுஅப்பறம்தான் கருவையே ஏத்துக்கணும் போல இருக்கு..இல்லேன்னா.....நன்னடத்தை சர்டிஃபிகேட் கொடுக்கிற மாதிரி கல்யாணம் ஆகும்போது ’வர்ஜினிடி சர்டிஃபிகேட்’கொடுக்கணும்...அப்பதான் இவங்க எல்லாம் நம்புவாங்க..’’
-தலையைத் தொங்க விட்டபடி வாசலை நோக்கி நடக்கிற ரகுவைக் கணீரென்று ஒலிக்கும் கல்யாணியின் குரல் மீண்டும் கட்டி இழுத்து நிறுத்துகிறது.

‘’கடைசியா இதையும் கொஞ்சம் கேட்டுட்டுப் போயிடுங்க...எங்கம்மா உங்க வீட்டிலே இருந்து திரும்பி வந்து அந்த விஷயத்தை என் கிட்டே சொன்னதுமே அந்த அதிர்ச்சியிலேயே உடனே எனக்கு அபார்ஷன் ஆகி அந்தக் கரு கலைஞ்சு போயிடிச்சு.அதை மறுநாளே உங்க கிட்டே சொல்லியிருந்தால் கூட நீங்க சொன்ன ‘ஸோகால்ட்’ வாழ்க்கை எனக்கு அப்பவே கிடைச்சிருக்கும்.ஆனா...சந்தேக நெருப்பிலே ஒவ்வொரு நிமிஷமும் குடியிருந்து உங்களோட சம்சார வாழ்க்கை நடத்தறதை விட தனிமைத் தவத்திலே என்னையே நெருப்பாக்கிக்கிறதைத்தான் நான் விரும்பறேன்..’’

தீர்க்கமான தன் முடிவைத் திடமாய்ச் சொல்லி முடித்த கல்யாணி, ரகு வெளியேறியபின் கதவை அழுந்தச் சாத்தித் தாளிடுகிறாள்.

(’ஆனந்த விகடன்’ - 24/5/1987  )
ஒரு பின் குறிப்பு;
இதழ்களிலோ புத்தகத் தொகுப்பிலோ கிடைக்காத ஒரு நன்மை இணையத்தில் கிடைக்கிறது. குறிப்பிட்ட கதை சார்ந்த பின்னணியையும் பகிர்ந்து கொள்ள முடிவதே அது...

இந்தக்கதை நான் கேள்விப்பட்ட-என் கவனத்துக்கு வந்த ஓர் உண்மை நிகழ்வு. அதில் ஓரளவு என் கற்பனை கலந்து புனைவாக்கியிருக்கிறேன்.

உண்மைச்சம்பவத்தில் அந்தப்பெண், கருவைக்கலைத்துக் கொண்டு கணவனோடு போய்ச் சேர்ந்து விட்டாள்; 
என் கல்யாணி அதை உறுதியாக நிராகரிக்கிறாள்.
‘’கருப்பை பெண்ணின் வயிற்றில் இருக்கலாம்;ஆனால் அது அவள் வசத்தில் இருப்பதில்லை’’என நான் அடிக்கடி கூறுவதுண்டு.இதுவும் அதை மெய்ப்பிக்கும் ஓர் உண்மை நிகழ்வே....






12.10.12

தில்லிகை-அக்டோபர் நிகழ்வு



                                                  தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

தமிழும் திரையும்
இலக்கியச் சந்திப்பு: 2012/8

பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும்
முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி.

வசனங்களில் உருவான நாயகத்துவம்
முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன் – 30 நி.

11.10.12

எழுத்தாளனின் அறம்

ஒரு சிறிய பகிர்தல்....
இன்று காலை தற்செயலாக ஈரோடு வழக்கறிஞரும் ‘சோளகர் தொட்டி’நாவலின் ஆசிரியருமான ச.பாலமுருகன்,பொதிகை தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்முகத்தைக்காண நேர்ந்தது.

‘சோளகர் தொட்டி’, ஆதிவாசி பழங்குடி மக்களின் உரிமைப் பறிப்பு சார்ந்த அற்புதமான ஒரு நாவல்.அதை எழுதிய அனுபவத்தைச் சொல்லிக்கொண்டு வந்த திரு பாலமுருகன் தன் பேச்சுக்கு நடுவே வங்க எழுத்தாளர் மஹாஸ்வேதாதேவியோடு தொடர்புடைய சுவையான ஒரு சம்பவத்தையும் விவரித்தார்.

 ஆதிவாசிப் பழங்குடி மக்கள் குறித்தும்,மனித உரிமைகள் பற்றியும் மிகுதியாக எழுதியும் பேசியும் வந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் அந்த நிலைப்பாட்டோடு கூடிய தீவிரக்களச் செயல்பாட்டாளராகவும் விளங்கிய ஒரு சமூகப்போராளி [social activist]மஹாஸ்வேதாதேவி.

இந்தியக்குடியரசுத் தலைவரின் கரங்களால்  மஹாஸ்வேதாதேவி ஞானபீட விருது வாங்கவிருந்த மகத்தான ஒரு தருணம் ; அதே நேரத்தில்...ஆந்திரச் சிறையில் மறுநாள் தூக்குதண்டனைக்குக் காத்திருக்கும் மூன்று பேர்.

மரணதண்டனை என்பது மனித உரிமைக்கு எதிரானது என்ற கருத்தைக்கொண்டிருக்கும் முதுபெரும் எழுத்தாளர் மஹாஸ்வேதாதேவி, அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடமிருந்து ஞானபீட விருதைப்பெற்றுக்கொள்வதற்கு முன் ‘’நானும் உங்களுக்கு ஒன்று தர விரும்புகிறேன்’’என்று கூறியபடியே ஒரு கடிதத்தை அவர் கையில் தருகிறார். புகழ்பெற்ற ஒரு படைப்பாளி தனக்குத் தரும் அந்தத் தாளைக் குடியரசுத் தலைவரும் ஆர்வத்தோடு வாங்கிக் கொள்கிறார். அது.... தூக்குக்கயிறை எதிர்நோக்கியிருக்கும் மூன்றுபேருக்காக மஹாஸ்வேதா தேவி அளித்திருக்கும் கருணை மனு. அதை உரிய இடத்தில் சேர்ப்பித்துவிட்ட நிறைவோடு அதன் பிறகே தனக்குரிய விருதைப்பெற்றுக் கொள்கிறார் அவர்,


கருணை மனு தரப்பட்டு விட்டால் அதன் மீது முடிவு அறிவிக்கப்படும்வரை தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்பது சட்டம்; கருணை மனு தரப்பட்டிருக்கும் செய்தி உச்ச நீதிபதியை அடைந்து - குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை தண்டனையை நிறுத்தி வைக்கும் நீதிமன்றஉத்தரவு விடியற்காலை 3 மணிக்கு சிறையை வந்தடைகிறது.காலை 4.30க்கு மரணத்தின் வாயில் திறக்கப்போகிறது என நினைத்துக் கொண்டிருந்த குற்றவாளிகள் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள்.

அதன் பிறகு ஒரு இடைவெளிக்குப் பின் அந்த மனுவைப்பரிசீலித்த
குடியரசுத் தலைவர் அந்தக்குற்றவாளிகள் செய்திருப்பது கொலையே என்றாலும் அதற்கு மரணதண்டனை தேவையில்லை என முடிவெடுத்து அதை ஆயுள் தண்டனையாக மாற்றுகிறார்....

இந்த நிகழ்வை பாலமுருகன் விவரித்தபோது மனம் நெகிழ்ந்து சிலிர்ப்படைந்தேன்...
ஒரு முறை பிரபலமான ஓர் எழுத்தாளரின் சொற்பொழிவைக்கேட்க நேர்ந்தது. ’’எழுதுவது மட்டும்தான் என் வேலை...தெருவில் எவன் எவளை பலவந்தம் செய்தாலும்,ஒருவர் இன்னொருவரைக் கொன்றே போட்டாலும் அது பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என் வேலை அது இல்லை’’என்றார் அவர். எனக்கு அது உடன்பாடானதாக இல்லை. பேனா முனை வாள்முனையை விடக்கூர்மையானதுதான்......ஆனாலும் அந்தப்பேனாவை வாள் போலக்கூரியதாக்குவது , அதற்குப் பின்புலமாக நின்று அதைப்பட்டை தீட்டி மெருகேற்ற வேண்டியது அந்த எழுத்தாளனிடம் சுரந்தாக வேண்டிய அலகிலாக் கருணையும்,அளவிட முடியாத மனித நேயமுமேயல்லவா?அவற்றைத் துறந்த வறட்டு எழுத்துக்கும் கடலில் பெய்யும் மழைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

அனுமனுக்குத் தன் பலம் தெரியாது என்று சொல்வதைப்போல எழுத்தாளனுக்கு இருக்கும் வலிமை அவனுக்கே தெரிவதில்லை என்றும், அப்படியே தெரிந்திருந்தாலும் அதைச் செயல்படுத்தும் முனைப்பு சிலருக்கு விளைவதில்லை என்றுமே தோன்றுகிறது...

எழுதுவது மட்டும்தான் என் வேலை...என்று எண்ணியபடி...ஞானபீடப்பரிசை மட்டும் வாங்கிக்கொண்டு அன்று மேடையை விட்டு மஹாஸ்வேதாதேவி இறங்கிப்போயிருந்தால்....தூக்குக்கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த மூன்று பேரின் உயிரைக்காத்த மகத்தான செயலை அவரால் சாதித்திருக்க முடியுமா....?

ஞான பீடம் பெறுவது உயர்வானதுதான்...! ஆனால்...எத்தனையோ ஞான பீடங்களையும் விட உன்னதமான மனித அறத்தையும் மனித மாண்பையுமல்லவா சிறியதொரு செயலின் வழியாக அவர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்?


பி.கு;
அதற்காக,எழுத்தாளன் என்பவன் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வீதியில் இறங்கிப்போராட வேண்டும் என்றோ...களப்பணியில் இறங்கவேண்டும் என்றோ நான்  சொல்லவில்லை. 
அது எல்லாச் சூழல்களிலும் அசாத்தியமானது ,பொருந்தி வராதது  என்பதை நானும் அறிவேன்...
ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்ததைப்போலத் தன்னால் முடியும் சந்தர்ப்பங்களில் முக்கியமான ஒரு பிரச்சினையை உரிய இடங்களில்,உரிய தருணங்களில் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களின்போது கவனப்படுத்தவாவது செய்யலாம்தானே..?
அதைத்தான்  அவரும் செய்திருக்கிறார்..?
அதைக் கூடச் செய்யாமல் எழுத்தை ஒரு திமிராக மட்டுமே கொண்டு சிலர் இருக்கிறார்களல்லவா...
அதைச் சுட்டிக் காட்டுவதே இப்பதிவின் நோக்கம்.



9.10.12

என் கதைகள் ஆங்கிலத்தில்..

நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு இன்னொரு மொழியில் உரு மாறி வருகையில் -அதிலும் அப்படைப்பின் ஜீவனும் வீரியமும் குறையாத சொற்களில் அது முன் வைக்கப்படுகையில் ஏற்படும் பரவசக்கிளர்ச்சி சொல்லில் அடங்காதது. அதிலும் அவ்வாறு அதை மொழிபெயர்க்கும் நபர்  நம் மனதின் அலைவரிசையை மிகத் துல்லியமாக உள்வாங்கிக் கொள்ளக்கூடியவராக அமைந்து விட்டால் நாம் கற்பனை செய்திருக்கும் மூலப்பொருளை அவர்களால் இன்னொரு மொழியில் மிக எளிதாகக் காட்சிப்படுத்தி விட முடியும்.

’’யாம் துஞ்சலமே..’’

''உண்மையான காதலின் பரிதவிப்போடு..சின்னச்சின்ன ஓலிகளைக் கூடக் கேட்டபடி தூக்கம் தொலைத்தபடி உழன்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தரிசனம்தான் அது....''

பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-8

பூப் பூக்கும் ஓசையைக் கேட்கவும்,பூக்கள் பூக்கும் தருணத்தைக் காணவும் நம்நெஞ்சங்கள் விரும்புவதன் வெளிப்பாடே குறிப்பிட்ட வரி கொண்ட அந்தப்பாடல்களின் மீது நமக்குள்ள ஈடுபாடாகவும் மலர்ந்திருக்கிறது.அது இயற்கையானதும் கூடத்தான்...அதே போலப் பூக்கள் மடிந்து விழும் சத்தத்தை..மென்மையான கிளைகளிலிருந்து அவை  கீழே உதிரும் ஓசையைக் கேட்டிருக்கும் தலைவி ஒருத்தியின் சோகம் கலந்த தவிப்பான உணர்வுகளை நமக்குக் காட்சிப்படுத்தி அளிக்கிறது கொல்லன் அழிசியின் குறுந்தொகைப்பாடல் ஒன்று.

5.10.12

’’சாத்திரம் அன்று சதி..!’’

                 ’’சூத்திரனுக்கொரு நீதி-தண்டச்
                          சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
                    சாத்திரம் சொல்லிடுமாயின் -அது
                           சாத்திரம் அன்று சதியெனக் கண்டோம்’’
                                                -பாரதி 
                                           ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’’
முதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த ஒரு மௌனத் தவத்தில் ஆழ்ந்தவனாய் அரண்மனை மேல் மாடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இராமன்.

1.10.12

ஈழத்தமிழ் இந்தியில்....


ஓய்வுக்கே ஓய்வைத் தருவர்களாய் -ஊக்கமான மன எழுச்சியோடு ஆக்க பூர்வமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களைக் காணும்போது மனம் சொல்ல இயலாத மகிழ்ச்சியில் மிதக்கும்; நாமும் அதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் பெருகும்.
அண்மையில் அந்த மகிழ்ச்சியையும் பிரமிப்பையும் அளித்தவர்...80 வயதுக்கு மேலாகியும் தொடர்ந்து பல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் புதுதில்லியைச் சேர்ந்த [ஓய்வு பெற்ற என்று அவரை எப்படிச் சொல்வது?] இந்திப்பேராசிரியர் டாக்டர் எச்.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....