துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
தேவந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.5.24

தேவந்தி- தமிழ் இந்து திசை ‘தொன்மம் தொட்ட கதைகள்’வரிசையில்...

 ‘தொன்மம் தொட்ட கதைகள்’ என்ற வரிசையில் தமிழ் இந்து திசை நாளிதழில் ஆய்வாளர் திரு சுப்பிரமணி ரமேஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரை வரிசையில் இன்று -12.05.24- இடம் பெற்றிருக்கும் சிறுகதை நான் எழுதி தில்லி வடக்கு வாசல் இதழில் (2007)வெளியான ‘ தேவந்தி’ - சிலப்பதிகார தேவந்தி கதையின் மறு உருவாக்கம்.விமரிசனத்தோடு கதையையும் வாசிக்க விரும்புவோருக்கான இணைப்பு.




11.9.23

ஒலி வடிவில் என் சிறுகதைகள் சில

நிழல் சொரியும் இனிய மரத்தடிகள் கதை சொல்லவும் கேட்கவும் உகந்த இடமாக நம் மரபில் காலம் காலமாக விளங்கி வருகின்றன. இன்றைய நவீன தொழில் நுட்ப யுகத்துக்கேற்ப 

Under The Tree  

என்பதையே தலைப்பாக்கி அரிய பல தமிழ்ச்சிறுகதைகளையும் ஆன்மீக புராணக்கதைகளையும் அரிய பல தகவல்களையும் பல சமூக ஊடகங்கள் வழியே [வாட்ஸ்அப், பாட்காஸ்ட் போன்ற டிஜிட்டல் தளங்களில் ] வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்து வருபவர் திருமதி ரம்யா வாசுதேவன். ஏதோ சில காரணங்களால் அச்சு ஊடகத்தில் வாசிக்க முடியாதவர்களுக்கும், வாசிக்கும்போதே சிலவற்றைத் தவற விட்டவர்களுக்கும் அவர் செய்யும் இந்த அரும் பணி மிகவும் பயனளித்து வருகிறது. 


’’கற்றலில் கேட்டலே நன்று..’’என்பது பழமொழி நானூறில் இடம் பெறும் வாசகம். ’’கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதே சொல்’’ என்று குறள் கூறுவதைப் போல  ரம்யா சொல்லும் கதைகள், இது வரை கேளாதோரைக் கேட்கத் தூண்டுபவை மட்டுமல்ல, அந்தக் கதைகளை இதுவரை வாசிக்காமல் இருப்பவர்களை வாசிக்கவும் தூண்டி விடுகிறது அவரது குரல். அதில் ததும்பும் உணர்ச்சி பாவங்களும் தகுந்தபடி அமையும் ஏற்ற இறக்கங்களும்...கதைகளை வெறுமே வாசித்து விட்டுப்போகாமல் அவற்றில் ஒன்றிக்கலந்து குறிப்பிட்ட படைப்பின்  சுருக்கத்தை..அதன் சாரத்தைத் தன் மொழியில் தன் நடையில் சுவாரசியமாகச் சொல்வதும் அவரது தனித்துவம்.

’’இப்போது மூன்று வருடங்களாக தொடர்ந்து தினமும் காலை 8.30 மணிக்கு ஒரு கதை வெளியாகிவிடும். இன்றுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் என் கதையைக் கேட்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் 11 குழுக்கள் அமைத்து அதில் தினமும் இலவசமாக எல்லோருக்கும் கதை சொல்லி வருகிறேன்” என்று பெருமை பொங்கச் சொல்லும் ரம்யாவுக்கு, கடந்த ஆண்டு சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில் நாடன் விருதுகளில், ‘ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதைசொல்லி’ எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதைசொல்லி ரம்யா வாசுதேவன்!



திருமதி ரம்யா வாசுதேவனின்  குரலில் பதிவாகி வெளிவந்திருக்கும் என் சிறுகதைகளும் அவற்றுக்கான இணைப்புக்களும் கீழே;

ஊர்மிளை

https://open.spotify.com/episode/6hDZlJqMueFrxlvBtBmeR8

தேவந்தி

https://open.spotify.com/episode/6LIEsl2txwD1s1fq5zpP6A

பொம்பள வண்டி

https://open.spotify.com/episode/3cVUEeG02Du0TOQYEn2d1M

28.7.15

காலனுடன் கை குலுக்கியபடி .....

எத்தனை இனிய மரணம் இது….?
வாழ்நாளெல்லாம் ஒரு பெரு வேள்வியாகத் தான் மேற்கொண்டு வந்த தன் மனதுக்கு நெருக்கமான ஒரு செயலில்,இளைஞர்களோடான ஊடாட்டத்திலும் அவர்கள் நெஞ்சில் கனவு விதைகளைத் தூவிக்கொண்டிருப்பதுமான தருணத்தில் ….அதில் தன்வயமிழந்து கரைந்து கலந்து போயிருக்கும் விநாடியில் காலனுடன் கை குலுக்கியபடி வாழ்விலிருந்து அநாயாசமாக விடை பெறும் பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்?
மேதகு அப்துல் கலாம் போன்ற தூய ஆத்மாக்களுக்கு மட்டுமே அது சாத்தியமானது…
ஓர் அறிவியலாளர்,அணு விஞ்ஞானி,முன்னாள் குடியரசுத்தலைவர் ஆகிய அடையாளங்களை விட ஓர் ஆசிரியராக இளம் உள்ளங்களுடன் அளவளாவுவதையே தன் நெஞ்சுக்கு நெருக்கமானதாகக்கொண்டு அதில் அலாதி இன்பம் கண்டுவந்த மேதகு கலாமின் முடிவு அப்படிப்பட்ட ஒரு கணத்திலேயே நோவும் பிணியும் இன்றி நொடிப்பொழுதில் முடிந்து போக வேண்டுமென்றால் இறையருள்தான் எத்தனை கருணை மிக்கது…
தன் கொடுங்கரங்களால் எந்தச்சித்திரவதையும் செய்யாமல் ஒரு பூவை  உதிர்ப்பது போன்ற லாவகத்துடன் இயற்கை அவரது உயிரை எல்லையற்ற பிரபஞ்சத்தோடு ஐக்கியமாக்கி இருக்கிறது…
வாழ்வு மட்டும் சரித்திரமாவதில்லை,மரணமும் சரித்திரமாக வேண்டும் எனச்சொல்லி வந்த கலாம் மரணமில்லாப்பெருவாழ்வென்ற மாபெரும் சரித்திரத்தைப்படைத்துச் சென்றிருக்கிறார்.

தில்லியில் நான் கழித்த ஏழாண்டுக்காலத்தில் மேதகு அப்துல் கலாம் அவர்களைப் பல முறை அருகிலும் தொலைவிலுமாகக் கண்டிருந்த போதிலும் அவற்றில் மறக்க இயலாத இரண்டு சந்திப்புக்கள்  என்னுள் என்றும் உறைந்திருக்கின்றன,

எதிர்பாராத இனிய அதிர்ச்சியாய் முதல் சந்திப்பு 2007 மார்ச்சில் குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள முகலாயர் தோட்டத்தை என் பேரக்குழந்தைகளோடு சுற்றிப்பார்த்து வரும்போது நேர்ந்தது.
பூக்களின் அழகில் லயித்திருக்கும் வேளையில் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த மக்கள் நடுவே ஒரு சிறிய பரபரப்பு…
அப்போது குடியரசுத்தலைவராய் இருந்த கலாம் திடீரென்று எவரும் எதிர்பாராத மின்வெட்டுப்போன்ற ஒரு விநாடியில் தன் குடியிருப்பிலிருந்து வெளியே வந்து தோட்டத்தைக்காண வந்த பொது மக்களோடு ஒரு குழந்தையைப்போலக் கை குலுக்கி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.
வந்திருந்த மக்களெல்லாம் பூக்களை விட்டு விட்டு அவரை நோக்கிப் பாய்ந்தோடத் தொடங்கியிருந்தனர்.
நம்புவதற்கு அரிதான அந்தக்காட்சியைக்கண்டதும் எங்கோ தொலைவில் இருந்த நானும் என்னோடு துணை வந்த பெண்ணும் குழந்தைகளோடு அவரை நோக்கி விரைந்தோம்.காவலர்கள் எல்லோரையும் வரிசைப்படுத்தி அவரோடு பேசும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர, என் முறை வந்தபோது தமிழில் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்;அவரும் ஆர்வத்தோடு தமிழ்நாடா என்று கேட்டபடி தமிழிலேயே பேசிப் பேரக்குழந்தைகளைக் கையால் தொட்டு ஆசீர்வதித்தார். நான்கு வயதான என் பேத்தியிடம் எந்தப்பாடத்தில் ஆர்வம் என்று கேட்கவும் அவர் தவறவில்லை.
[இன்று 13 வயதை எட்டியிருக்கும் அவள், பின்னொரு சந்திப்பின்போது அவரிடம் பெற்ற கையெழுத்துடன் கூடிய தனது பொக்கிஷமான WINGS OF FIRE ஆங்கில நூலிலேயே அவரது மரணச்செய்தி கேட்டது முதல் மூழ்கிக்கிடக்கிறாள்.பள்ளி விடுமுறை விட்டால் அஞ்சலி செலுத்தி விடுவார்களா என்ற என் ஐயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டு அதைப் படிப்பதன் வழி அவருக்கு உரிய அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறாள் அவள்]

திரு கலாமோடு மிகச்சிறப்பான சந்திப்பு நேர வாய்ப்பமைத்துத் தந்த நண்பர் வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன். வடக்கு வாசல் வெளியீடாக வந்த என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பை வேறு சில நூல்களுடன் சேர்த்து அப்துல் கலாம் அவர்களின் கையால் தில்லி தமிழ்ச்சங்கத்தில் வெளியிட அவர் ஏற்பாடு செய்திருந்தார். நூலை வெறுமே வெளியிட்டதோடு மட்டுமன்றி அதை ஆழ்ந்து படித்து உரையில் குறிப்பிட்டதோடு நூலை வெளியிட்ட தருணத்தில் என்னை அருகே அழைத்து ஓரிரு வார்த்தைகளும் பேசி என்னோடு உரையாடினார் திரு அப்துல் கலாம் அவர்கள்.
என் வாழ்வின் அபூர்வக்கணங்களில் ஒன்றான அது குறித்து முன்பு நான் எழுதிய பதிவிலிருந்து சில பகுதிகளை மீண்டும்  இங்கே பகிர்ந்து அந்தப்பெருமகனார்க்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

தேவந்தியின் கணம்

//வாழ்வின் சில கணங்கள் ..என்றென்றும் நினைவுகூரத்தக்க அபூர்வமான வினாடிகளாக வாய்த்து மனதுக்குள் நிலைத்து விடுகின்றன.
அவ்வாறான ஒரு தருணம்...வெள்ளி( 29/7/11) மாலை மேதகு அப்துல் கலாம் அவர்கள் ‘தேவந்தி’ நூலை வெளியிட்ட கணம்...!

சுப்புடு நினைவாய் வடக்கு வாசல் நிகழ்த்திய இசை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விமரிசகர் சுப்புடு பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட திரு அப்துல் கலாம் அவர்கள்,அதே அரங்கில் வடக்கு வாசல் பதிப்பக நூல்களை வெளியிட்டதோடு ஒவ்வொரு நூல் குறித்தும் சில குறிப்புக்களைத் தன் உரையில் சேர்த்துப் பேசியது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்துக் குறிப்பிட்ட நபர்களைக் கௌரவிக்க வேண்டும் என எண்ணும் அந்த அந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்றாக அமைந்தது.

எனது ‘தேவந்தி’தொகுப்பை வெளியிட்ட அவரிடம் அருகில் சென்று பிரதியைப் பெற்றபோது...
‘சாத்திரம் அன்று சதி’ கதையைக்குறிப்பிட்டு
‘இராமனைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா...’
என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்..//


தேவந்தி நூல் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் திரு அப்துல் கலாம் .

நூலின் முதல் பிரதியைப் பெறும் என் மகள் மீனு பிரமோத்


நூலின் பிரதியைப் பெறும் என் அன்பு வாசகரும் இளம் படைப்பாளியுமான
திரு தேவராஜ் விட்டலன்



2.11.14

விட்டலனின் வாசிப்பில் அசடன்

திரு தேவராஜ் விட்டலன் -

இளம் தலைமுறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு கவிஞர்;கதைஞர்.கட்டுரையாளர். அயராத தொடர்ச்சியான வாசிப்பை மட்டுமன்றி தொடர் எழுத்துமுயற்சியையும் ஒரு வேள்வியாகக் கொண்டிருப்பவர். வடக்கு வாசல்,கணையாழி,பயணம் முதலிய இதழ்களில் இவரது கவிதைகள்,கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.மாற்று சினிமா மற்றும் உலகத் திரைப்படங்கள் மீது தணியாத ஆர்வம் கொண்டிருப்பவர்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றும் எங்கள் ஊருக்குப்பக்கத்து ஊர்க்காரரான [மதுரை-திருமங்கலம்]விட்டலனின் அறிமுகம் தில்லியில் இருக்கும்போதுதான் எனக்கு நேர்ந்தது. பழகத் தொடங்கிய நாள் முதல் ஒரு மகனைப்போன்ற பாச உணர்வுடன் என்னுடனும் எங்கள் குடும்பத்துடன் பிணைந்து விட்ட விட்டலன் என் எழுத்து மற்றும் மொழியாக்க முயற்சிகளிலும் ஆர்வம் கொண்டு அவற்றின் மீதான தன் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து என்னைத் தொடர்ந்து உற்சாகமாக இயங்க வைத்துக்கொண்டிருப்பவர்.குற்றமும் தண்டனையும்மொழிபெயர்ப்பை ஒரேமூச்சில் முடித்து விட்டு அசடன் எப்போது வரும் என்று என்னைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தவர்.  விருதுநகர்-மல்லாங்கிணறு பகுதியிலிருந்து வெளிவரும் பயணம் இதழில் ‘சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்’என்னும் தொடரை நான் தொடர்ந்து எழுதி வருவதற்கு அடிப்படைக்காரணமே தேவராஜ் விட்டலன்தான்.

அவரது படைப்பிலக்கிய ஆர்வத்தையும் என் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தையும் உணர்ந்திருந்த வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா பென்னேஸ்வரன் ,என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பை வடக்கு வாசல் வெளியீடாக - 2011இல் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைக்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தில் நடத்தியபோது முதல்பிரதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை விட்டலனுக்கு வழங்கி சிறப்பித்தார்.

தேவந்தியைப் பெறும் விட்டலன்

விட்டலனின் வாசிப்பில் அசடன் மொழிபெயர்ப்பு குறித்த அவரது கருத்துக்களை அவரது தளத்திலிருந்து இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

படித்ததை பகிர்வோம் – அசடன்

’’தமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.’’
அசடன் நூலை ( நாவலை ) கடந்த ஒரு வருடமாக தூக்கிக் கொண்டு திரிந்த எனக்கு அந்நாவலை முழுமையாக உணர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பல நாட்களாக இருந்து வந்தது. பனி விழுந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் ஜனவரி மாத இறுதியில் அசடன் நவலை படிக்கத் துவங்கினேன்.
அனைவரையும் நேசிக்கவும், தனக்கு துன்பம் தருபவர்களை மன்னிக்கவும், எளிமையான சாந்தமான குணத்தோடும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட மிஷ்கின் தனது அதீதமான உணர்ச்சிகளின் அலைக்கழிப்பால் சராசரி மனிதனாக வாழ இயலாமல் துன்புறுகிறான். சராசரி மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவன் முட்டாளாக உள்ளான்.
இளவரசன் மிஷ்கின் பரம்பரையில் வந்த ‘ லேவ் நிகலெயவிச் மிஷ்கின் ’ ஸ்விட்சர்லாந்திலிருந்து பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு வருகிறான். பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் இருக்கும் ‘ லிசாவெதா ப்ரகோஃபியன்னா ’ வை சந்திக்க வேண்டியும், அவர் தனக்கு ஆறுதல் அளிப்பார் என்ற நம்பிக்கையுடனும் இரயிலில் பயணித்து
வருகிறான்.
இரயில் பயணத்தில் ரோகோஸின்னையும், லெபதேவையும் சந்திக்கிறான். ரோகோஸின் தான் திருமணம் செய்யப் போகும் நஸ்டாஸியா பற்றி நிறையப் பேசுகிறான். பார்க்க மிகவும் பரிதாபமான தோற்றத்தோடு இருக்கும் மிஷ்கினை, தன்னை இளவரசன் எனக் கூறிக் கொண்டிருக்கும் மிஷ்கினை பரிகாசத்தோடு அனைவரும் பார்க்கிறார்கள். அவனை கேலி செய்கிறார்கள். இருப்பினும் மிஷ்கின் அப்பொழுதும்
அவர்களுக்கு தனக்கான பதிலை மிகவும் சாந்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறான்.
பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்ததும், தளபதி இவான் ஃபியோதரவிச் இபான் சினை சந்திக்கிறான். தளபதி இபான்சின் இராணுவத்தில் மிக முக்கியமான பதவியில் இருப்பவர். மிஷ்கின் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தான் மிஷ்கின் பரம்பரையில் வந்தவன் எனவும், லிசாவெதா ப்ரகோஃபியன்னாவை சந்திக்க ஆவலோடு இருப்பதாகவும் கூறுகிறான். அவனை சந்தேகத்தோடு முதலில் பார்த்த இபான்சின், மிஷ்கினின் அறிவார்ந்த பேச்சைக் கேட்ட பின்னர், அவனை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கிறார்.
இபான்சினை சந்திக்கும் பொழுது அங்கே இருந்த கன்யாவையும் சந்திக்கிறான் மிஷ்கின். அவர்கள் நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி பேசுகிறார்கள். அவளது புகைப்படம் அங்கு தொங்கிக் கொண்டிருந்தது. அழகிய முகம், ஆனால் பரிதாபமானவள் என அவளைப் பற்றி மிஷ்கின் கூறுகிறான். உனக்கு எப்படி நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவை தெரியும் என இபான்சினும் , கன்யாவும் கேட்கின்றனர். அதற்கு இரயிலில் வரும்போது ரோகோஸின் மூலம் நஸ்டாஸியா வைப் பற்றி அறிந்து கொண்டதாகக் கூறுகிறான். அவளது அழகிலும், அந்த முகத்தில் மறைந்திருக்கும் ஏக்கத்தையும் பார்த்து அதனால் கவரப்பட்டு அவளைக்
காதலிக்கத் துவங்குகிறான் மிஷ்கின்.இங்கே நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி கொஞ்சம் கூறியாக வேண்டும். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம். டாட்ஸ்கி என்ற பெரும் செல்வந்தனின் அலுவலகத்தில் பணிபுரிந்து இறந்து போன அலுவலரின் மகள் நஸ்டாஸியா. அழகி. முதலில் நஸ்டாஸியாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டாட்ஸ்கி, பின் அவளது அழகில் மயங்கி அவளது
வாழ்வை நாசமாக்குகிறார். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவிற்கு விபரம் தெரிந்த பின் தன் வாழ்க்கை மிகவும் அர்த்தமற்ற ஒன்று எனவும், யாருக்கும் தன்னால் எந்தப் பயனும் இல்லை என எண்ணிக் கொண்டு, தன்னை இந்த நிலைமைக்கு ஆக்கிய டாட்ஸ்கியை துன்பப்படுத்துகிறாள். பின்னால் மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து கொண்டு தன்னை மிகவும் நேசிக்கும் மிஷ்கினையும், ரோகோஸின்னையும்
அலைக்கழிக்கிறாள்.
இபான்சின் குடும்பத்தில் மூன்று அழகிய பெண்கள் உள்ளார்கள். மூவரும் இபான்சின் குழந்தைகள். அவர்கள் அலெக்ஸாண்ட்ரா இவானோவா, அடிலெய்டா இவானாவோ, அக்லேயா இவானாவோ. இவர்களில் அக்லேயா மிகவும் அழகியாகவும், குறும்புத்தனம் நிறைந்த பெண்ணாகவும் உள்ளாள். முதலில் மிஷ்கினைப் பார்த்து எப்போதும் கேலி செய்து கொண்டு இருந்தாலும், பின்னாளில் மிஷ்கினை காதலிக்கத் தொடங்குகிறாள். காதல் திருமணம் வரை செல்கிறது. மிஷ்கினின் உடல் நலக் குறைவால் திருமணம் தடைபடுகிறது. இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் நாவலில் நிறைந்துள்ளன.
மலைகளையும், இயற்கையையும் ரசிக்கிறான். மனித மனத்தில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை சுட்டிக் காட்டுகிறான். செ­னிடரின் மருந்துவமனையில் மன நோயாளியாக இருந்த பொழுது அந்த கிராமத்தில் இருந்த காச நோயால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்ணான மேரியின் கதையை கூறும் பொழுது மனம் நெகிழ்வுறுகிறது.
ஊரே வெறுத்து ஒதுக்கிய அந்த பெண்ணை மிஷ்கின் தன் அன்பின் வழியாக நேசித்து அவளுக்கு உதவி புரிகிறான். மிஷ்கின் வழியாய் தங்கள் தவறினை உணர்ந்த ஊர் மக்கள் பின்னால் மேரிக்கு உதவி செய்கின்றனர். குழந்தைகளை அவளோடு பேச அனுமதிக்கின்றனர். நாவலில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உள்ளன. நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவின் விருந்தில் ஒரு விளையாட்டு விளையாடப்படுகிறது. அது, வாழ்வில் தான் இதுவரை செய்த மோசமான செயலைப் பற்றி அனைவரின்
முன்பும் எந்த ஒரு ஒளிவுமின்றி சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு. ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தான் செய்த மோசமான செயல்களை, வருந்தத் தக்க செயல்களை கூறுகின்றனர்.
கதையின் நாயகனான மிஷ்கின் உண்மையின் வடிவமாகவும், மன்னிக்கும் மனப்பான்மையோடும் வாழ்கிறான். தஸ்தயேவ்ஸ்கி இயேசுவை மனதில் நிறுத்திக் கொண்டுதான் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார் என கூறப்படுவதும் உண்டு.நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு ரோகோஸின்னோடு ஓடிவிட்டாலும் அவளுக்காக வருத்தப்படுகிறான். அவள் நல்ல மனம் படைத்தவள் எனவும் கூறுகிறான். அக்லேயாவுடன் ஆன மிஷ்கினின் திருமண நிச்சயதார்த நிகழ்வைப் படிக்கும் போது மனம் முழுவதும் ஒரு பதட்டம் நிரம்பி விடுகிறது. தன்னை முழுமையான மனதோடு காதலிக்கும் அக்லேயா வை மிஷ்கின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நாவலைப் படிக்கும் வாசகர்கள் மனதில் எண்ணத் தோன்றுகிறது,ஆனால் நாவலில் அவ்வாறு நிகழவில்லை.
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாவ்லிஷ்ட்டேவ் ( மிஷ்கினை வளர்த்தவர். மிஷ்கினை மருத்துவரின் கண்காணிப்பில் விடும் வரை அவனுக்கு பாதுகாப்பாய் இருந்தவர் ) பற்றிய அவதூறான பேச்சை கேட்க இயலாமல், மிஷ்கின் மனதினுள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்த்தான். மிஷ்கினின் பேச்சு ஆவேசம் மிக்கதாய் இருந்தது. அவன் நடுங்கிக் கொண்டும், வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இயலாமல் மூச்சு வாங்கிக் கொண்டும் தொடர்ந்து பேசுகிறான். அவனது இந்த திடீர் ஆவேசத்தை தொலை தூரத்தில் இருந்து கொண்டு நடுங்கிக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறாள் அக்லேயா. விருந்தினர்கள் பார்வையில் அவன் முட்டாளாகத் தெரிந்தாலும், அவனது பேச்சில் உன்னதமான கருத்துக்கள் வந்து கொண்டிருந்தன. பேச்சுத் திறமையை விடவும், நேர்மையாக பேசும் குணம்தானே வேண்டும் எனவும், தலைவர்களாக வேண்டுமென்றால், நாம் வேலைக்காரர்களாக இருப்போம் எனவும் குறிப்பிடுகிறான்.
இவ்வாறு தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும் போதே தள்ளாடி கீழே விழுகிறான். தஸ்தயேவ்ஸ்கி அந்தக் காட்சியை இவ்வாறு விவரிக்கிறார்.அக்லேயா மிக விரைவாக அவனிடம் ஓடினாள். சரியான சமயத்தில் அவனை தன் கைகளில் தாங்கிக் கொண்டாள். அவள் முகமெல்லாம் பயத்தால் உருக்குழைந்து, சிதைந்து போனபடி நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் துரதிருஷ்டசாலியான அந்த மனிதனின் ஆத்மா வீழ்த்தப்படும் ஓலத்தை கேட்டாள். நாவலின் இறுதியில் மிஷ்கின் மீண்டும் மன நோயாளியாக ய­னிடரிடமே
வந்து சேர்கிறான்.நாவலை முழுமையாகப் படிக்கும் பொழுது பல உணர்வுகள் மனதில் வந்து குடியேறுகின்றன. பரந்து விரிந்த விவரணைகள், ஒவ்வொரு காட்சியையும், மனிதர்களையும் தஸ்தயேவ்ஸ்கி விவரித்திருக்கும் முறைகள் மனதைக் கவர்கினறன. தன்னை ஒரு மகா கலைஞன் என்று நூற்றாண்டுகள் கடந்தும் நிரூபித்துக் கொண்டுள்ளார் தஸ்தயேவ்ஸ்கி. நாவலின் முதல் நூறு பக்கங்களை படித்துக் கடந்துவிட்டால், உலகெங்கும் உள்ள மனிதர்களின் உணர்வுகள் ஒன்று போல்தான் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தஸ்தயேவ்ஸ்கியை புரிந்து படிப்பதே சிரமமான காரியம். ஏனெனில் மனிதனின் மன ஆழத்தை துளைத்து, அவற்றுள் உள்ள எண்ணங்களை எழுதியவர். அத்தகைய எழுத்துகளை மொழிபெயர்ப்பது எளிமையான செயல் அல்ல. தமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.
*****
நூல் வெளியீடு : பாரதி புக் ஹவுஸ், E – 59 / 3 -4, மாநகராட்சி வளாகம்
பெரியார் பேருந்து நிலையம், மதுரை ‡ 625 001
அலைபேசி : 97893 36277
*****

தொடர்புள்ள பதிவுகள்;
அசடன் - விருதுகள்
இரண்டு பயணங்கள்


19.1.12

தேவந்தியே ஆருஷியாய்....

தேவந்தி....ஆருஷியாக...நேற்று  கேரளாவில் பாலியல் தொழிலுக்குத் தந்தையாலேயே இழுத்து வரப்பட்ட பறவூர்க்காரப் பெண்ணாகக் காவல் நிலையங்களில் பாலியல் வன்முறையில் கதறிய கிராமத்துப் பெண்களாக  இன்று எங்கேயோ கள்ளிப்பால் ருசித்து துடித்து உறங்கும் "தேவந்தியாக "  ...... சிந்திக்காமலேயே ...அவள்...

13.1.12

மூன்றாம் கோணத்தில்.....

இணைய நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
‘’ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய 
மாரி அளவாய்ப் பொழிக..மக்கள் வளமாய் வாழ்க’
-வேதாத்திரி மகரிஷி

மூன்றாம் கோணம் இணைய இதழின் பொங்கல் மலரில் என் நேர்காணல் வெளிவந்திருக்கிறது. நேர்காணலுக்குரிய வினாக்களை சிறப்பாக அமைத்து அதைத் தொகுத்தளித்திருக்கும் சகோதரி ஷஹி அவர்களுக்கு என் நன்றி..
நேர்காணலிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்......


9.1.12

’தேவந்தி’-ஒரு விமரிசனம்

 வல்லினம் கலை இலக்கிய இணைய இதழில் - ’கதவைத் தட்டும் கதைகள்’என்னும் தொடர்ப் பதிவு வரிசையில், க.ராஜம் ரஞ்சனி அவர்கள் என் ‘தேவந்தி’சிறுகதை குறித்து எழுதியுள்ள விமரிசனக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...


9.12.11

’தேவந்தி’-மற்றுமொரு எதிர்வினை...


எனது தேவந்தி சிறுக்தைத் தொகுப்பு பற்றி சி.சு.என்பவர் அனுப்பிய மின் அஞ்சலைப் பிரதி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.மிகவும் தேர்ந்த ஒரு வாசக எதிர்வினை அது

2.12.11

தேவந்தி மதிப்புரை- பதிவுகள்...


புது தில்லியிலுள்ள வடக்கு வாசல் பதிப்பக வெளியீடாக,ஜூலை 29 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்ட என் சிறுகதைத் தொகுப்பாகிய தேவந்தி பற்றிய இரு வலைப்பதிவுகள்....
சும்மா வலைப்பூவை எழுதி வரும் என் அன்பு மாணவியும் அருமை மகளுமான தேனம்மையின் பதிவு
http://honeylaksh.blogspot.com/2011/10/blog-post_19.html

மூன்றாம் கோணம் இணைய இதழில்-வாசிக்கலாம் வாங்க பகுதியில் மதிப்புரை வழங்கியுள்ள இணையத் தோழி திரு ஷஹிதாவின் கட்டுரைக்கான இணைப்பு..
எம். ஏ. சுசீலாவின் தேவந்தி - வாசிக்கலாம் வாங்க

மதிப்புரை வழங்கிய தேனம்மைக்கும், ஷஹிதாவுக்கும் என் நன்றி....

பின் குறிப்பு
தேவந்தி நூல் கிடைக்குமிடங்கள் பற்றி மதுரைநண்பர்கள் கேட்டிருந்தார்கள்.மதுரை தானப்ப முதலி தெரு மயூரா வளாகத்தில் உள்ள
மீனாட்சி புத்தக நிலையத்தில் தேவந்தி நூல் கிடைக்கும்.
இணைய வழி பெற உடுமலை.காமில் தொடர்பு கொள்ளலாம்.
உடுமலை.காம்
வடக்கு வாசல் பதிப்பகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.அதன் முகவரி வலையின் முகப்புப் பக்கத்திலேயே உள்ளது.


7.7.09

தேவந்தி - 3

தேவந்தி -2 இன் தொடர்ச்சி
தேவந்தியை நெருங்கி வந்து அவளை ஆரத் தழுவிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கண்ணகி. ஆயிரம் அர்த்தச் செறிவுகளை அடக்கியிருந்த அந்தக் கண்ணீர் ...தனக்கானதா அல்லது தேவந்திக்கானதா என்பதை அவளே அறிந்திருக்கவில்லை. தேவந்தி அவளை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

''உன் உள்ளம் புரிகிறது கண்ணகி ! நீயும் உன் கணவரைப்பார்த்து வினாக் குறியாகக்கூட ஒரு பார்வையைப் படர விட்டிருக்காதவள்தானே...?என்ன செய்வது ? இது இந்த யுகத்தின் சாபம். சரி. மீதியையும் கேட்டுவிடு.''

''நாங்கள் அப்படித்தான் வாழ்ந்தோம் . ஒருவர் நிழல் கூட அடுத்தவர் மேல் படாமல் எட்டாண்டுக் காலம் உலகத்தின் பார்வைக்கு நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்....அவர் உற்றார் , உறவினருக்கு உறுதுணையாக உதவினார்... ; கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றுச் சான்றோனென்று பெயரெடுத்தார் ; குலத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து ...கோலோச்சி உயர்ந்தார் ;...இப்படி...என்னைத் தவிரத் தன்னைச் சுற்றிக்கூடியிருந்தோரையெல்லாம் பலமுகம் காட்டிப் பதமாகக் குளிர்வித்தார் ; பெற்றோரின் காலம் முடிந்தது ; மாலதியும் மரணமடைந்தாள் ; அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களையெல்லாம் முறைப்படி கழித்த பிறகு ..., மெதுவாக என்னை நாடி வந்தார்...என்னிடம் முதலும், கடைசியுமாக அவர் பேசிய சந்தர்ப்பம் அது ஒன்றுதான் !

''நான் யார் என்பதை நீ அறிய மாட்டாய் தேவந்தி !என் மூவா இள நலத்தை உள்ளபடி நான் காட்டினால் ...அதைப் பொறுக்கும் சக்தி உன் கண்களுக்கு இல்லை . நான் தான் பாசண்டச் சாத்தன். மாலதியின் பழி துடைக்கவே, மறைந்த குழந்தையின் உருவில் நான் குடி புகுந்தேன். அவளுக்காகவே மனிதப் பிறப்பெடுத்த நான் , மனித வாழ்வின் கடமைகள் அனைத்தையும் செய்து முடித்தேன்....இனிமேல் நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது ! கடவுளையே கரம் பற்றும் அரியதொரு வாய்ப்பைப் பெற்றவள் நீ !அந்த மகிழ்ச்சியோடு எஞ்சிய உன் வாழ்நாளைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்.''

- இந்த வாசகத்தோடு என் வாழ்க்கையிலிருந்தே விடைபெற்று அவர் அகன்று போனார். வேரற்ற மரமாக நான் விழுந்து கிடந்த நாட்கள்...நீண்டு கொண்டே போன அந்தக் காலகட்டத்தில்தான் என் அறிவில் படிந்திருந்த மாயத் திரைகளெல்லாம் ...படிப்படியாக விலகிக் கொண்டே வந்தன....அது வரையில் புலப்பட்டிருக்காத புதிர்களின் முடிச்சுக்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்து கொண்டே வந்தன.நான் ...தெளிந்தேன்..! என் கணவர் கடவுளில்லை ! மனித மனத்தின் கண நேரத் தடுமாற்றத்தால் அவ்வாறு ஆக்கப்பட்டவர் ! அவர் புனிதரில்லை. தாயின் மூளைச் சலவையால் இக வாழ்விலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்ட ஒரு மனிதர்தான் அவர்..!''

''இந்த அளவு யோசித்து வைத்திருக்கும் நீ ...உன் கணவர் திரும்பி வர வேண்டும் என்பதற்காக நோன்பு நோற்பதாக ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்பதுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை தேவந்தி !''

''நான் தான் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டேனே கண்ணகி ! ஊராரின் கண் முன்னால் நான் போடும் வேடம் அது ! கண்ணகி ! நீ அருக (சமண) சமயத்தைச் சேர்ந்தவள்.இப்படிச் செய்வதையெல்லாம் ஒரே வார்த்தையில் 'மடமை' என்று சொல்லி விலக்கி வைத்து விட உன்னால் முடியும் ! ஆனால் .. என் பிறப்புப் பின்னணி அவ்வளவு எளிதாக என்னை விட்டு விடாது .தீர்த்த யாத்திரை சென்றிருக்கும் கணவன் நலமுடன் திரும்ப வேண்டும் என்று வழிபடாமல் நான் சும்மா இருப்பதை அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. அந்த வகையான நிந்தனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் நான் இப்படி நெஞ்சறிந்து பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ! இந்த உலகத்தவர்களின் நாக்கு இருக்கிறதே ...அது ...பிளவுபட்டுக் கிடக்கும் அந்த ஆதிசேஷப் பாம்பின் நாக்கை விடவும் கூடுதலான நச்சுத் தன்மையைக் கொண்டிருப்பது. கண்ணகி ! கோவலன் , மாதவியை நாடிச் சென்றிருப்பது , கலை மீது கொண்டிருக்கும் காதலால்தான் என்பது எல்லோருக்குமே வெளிப்படையாகத் தெரியும் ! ஆனால் உன்னிடம்தான் ஏதோ குறை இருப்பதைப் போல நரம்பற்ற நாவினராய் இந்த ஊரார் பேசவில்லையா? ''

- கண்ணகி ,தாளாத துயரத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவள் முகத்தைச் சற்றே உயர்த்திய தேவந்தி...அங்கே அரும்பியிருந்த கண்ணீர் முத்துக்களைத் தன் விரலால் சுண்டி விட்டாள்.

''இப்படி நாமெல்லம் கண்ணீருக்குள்ளேயே கரைந்துபோய் விடுவதனாலேதான் சில கேள்விகளைக் கேட்காமலே விட்டு விடுகிறோம் ! அப்படி நான் கேட்கத் தவறிய ஒரு கேள்வி ...என் உள்ளத்துக்குள் உட்கார்ந்து கொண்டு அல்லும் பகலும் என்னைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது .''

-அது என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன் விழிகளை அகல விரித்தாள் கண்ணகி.

''மனிதக் கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பதும் உட்பட்டிருக்கிறதா...இல்லயா ? அப்படி அதுவும் உட்பட்டதுதான் என்றால் மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் என் கணவர் முழுமையாகச் செய்து முடித்து விட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும் ?...மனைவி என்ற மனித உயிருக்குள்ளும் தனியாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை ? இதையெல்லாம் அவரிடம் கேட்காமல் நான் மௌனமாக இருந்து விட்டேன் கண்ணகி ! இந்தக் கேள்விகளைக் கேட்பதற்காகவாவது அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும் !''

-அத்தனை நேரமும் , வேறு யாருடைய கதையையோ சொல்வதைப் போல் நிதானமாகச் சொல்லிக் கொண்டுவந்த தேவந்தியின் குரல் ...அந்தக் குறிப்பிட்ட கணத்தில் உடைந்து சிதறத் தொடங்கியது. உடனேயே அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டுவிட்ட அவள் ..ஆவேசமான குரலில் சூளுரைப்பதைப் போல் ஒரு பிரகடனம் செய்தாள் !

''ஆனால் இந்தக் கதை ..இந்தத் தேவந்தி ஒருத்தியின் வாழ்க்கையோடு முடிந்து விடப்போவதில்லை ! இனி வரும் காலங்களிலும் வேறு ஏதோ ஒரு வடிவத்தில் இது தொடரத்தான் போகிறது . அப்போது ..இன்றில்லை என்றாலும் ..என்றோ ஒரு நாள் ..ஏதாவது ஒரு யுகத்தில் நான் அந்தக் கேள்விகளைக் கேட்காமல் நான் விட்டுவிட மாட்டேன் ! இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும் தருணத்தை ...நிச்சயம் நான் நிகழ்த்திக் காட்டத் தவற மாட்டேன் கண்ணகி !''

காலம் , தன் மீது உழுது விட்டுப் போயிருக்கும் பதிவுகளைச் சுமந்தபடி ...யுகங்களின் இருள் படர்ந்த கணங்களின் ஊடே ...மெள்ள ஊர்ந்து பயணிக்கத் தொடங்கினாள் தேவந்தி.

4.7.09

தேவந்தி -2

தேவந்தி - 1 இன் தொடர்ச்சி

'குறுகுறு நடந்து ...சிறுகை நீட்டி ..இட்டும் தொட்டும் , கவ்வியும் ..துழந்துமாய் ..அந்தப் பிஞ்சுக் குழந்தை தரும் பிள்ளை இன்பத்தில் தன்னை மறந்து லயித்துக் கிடந்தாள் மாலதி.மயங்க வைக்கும் அந்த மழலைச் செல்வத்திற்கு முன்னால் தன் கணவர் மறுமணம் செய்து கொண்ட துயரம் கூட அவளைப்பெரிதாகப் பாதிக்கவில்லை.

அவள் மடியில் கிடந்த அந்த மகவு சிணுங்கியது; கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதது ;துணி விரிப்பில் அதைக் கிடத்தி விட்டுச் செம்பில் பாலும் , வெள்ளிச் சங்கும் எடுத்து வந்த மாலதி குழந்தையை மடியில் கிடத்திச் சங்கில் பால்புகட்டத் தொடங்கினாள். அதன் தாயும் , அவளதுகணவரும் பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டிருந்தனர்.

'இந்தப் பாவியைக்குடல் விளக்கம் செய்ய ஒரு மகள் ஜனிக்காமல் போனால்தான் என்ன ?நான் தான் பத்துத் திங்கள் சுமக்காமல்...பிள்ளைவலி என்னவென்றே தெரியாமல் இந்தக் குழந்தைக்குத் தாயாகி விட்டேனே..? நல்ல வேளையாக ...இவ்வாறு நான் குழந்தையைப் பார்த்துக் கொள்வதை அவள் தவறாக எண்ணவில்லை. ஒருக்கால் கணவரோடு கூடச் சேர்ந்து , நினைத்த நேரத்தில் , நினைத்த இடங்களுக்குச் சென்றுவர இது வசதியாக இருப்பதாகக் கூட அவள் எண்ணிக் கொண்டிருக்கலாம்...சரி! அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே ! அதைப் பற்றி எனக்கென்ன வந்தது ?மடியை நிறைத்துக் கிடக்கும் இந்த மழலையைப் பார்த்தபடியே என் பொழுதை ஓட்டி விடலாமே..?''

ஏதேதோ எண்ணங்களில் மிதந்தபடியே அவள் பாலைப் புகட்டிக் கொண்டிருந்தாள். திடீரென்று , சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் குழந்தையிடமிருந்து ஒரு செருமல் ! புரையேறி மூச்சு அடைத்துக் கொண்டுவிட்டதைப் போல ஒரு திணறல்..! செய்வதறியாமல் அவள் திகைத்து நின்ற அந்த ஒரு நொடிக்குள் குழந்தையின் தலை துவண்டு சரிய , அது இறந்து விட்டதாகவே முடிவு கட்டிக் கொண்ட மாலதி....,பிரபஞ்ச சோகம் முழுவதையும் ஒன்றாக உள்ளடக்கி ஓலமிட்டாள்.

குழந்தையை இழந்து விட்ட அவலம் ஒரு புறமும் , மாற்றாளின் மகவைச் சாகடித்துவிட்ட பழிச் சொல் மறுபுறமுமாய்ப் பதை பதைத்து நடுங்கியது அவள் உள்ளம் ! அண்டை அயலாரிடம் ஆலோசனை கேட்கப் போய்..அந்தச் செய்தி அனைவருக்கும் அஞ்சலாக்கப்படுவதிலும் அவளுக்குச் சம்மதமில்லை.

சேலைக்கிழிசல் ஒன்றில் குழந்தையைப்பொதிந்து தோளில் கிடத்தியபடி...பூம்புகார் நகரத்திலுள்ள இந்திரக் கோட்டம் தொடங்கி , வேற்கோட்டம், நாகர் கோட்டம் என அங்குள்ள கோயில்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் வலம் வரத் தொடங்கினாள் மாலதி. அங்கிருந்த தெய்வ சன்னிதிகளின் முன்னிலையில் குழந்தையக் கிடத்தி மனதுக்குள் கதறினாள். குழந்தை இன்னும் கூடப் பேச்சு மூச்சு இல்லாமல்தான் கிடந்தது.

மாலதியின் உள்ளுணர்வில் ..அவளது குலதெய்வமான பாசண்டச் சாத்தனின் உருவம் திடீரென்று மின்னலடிக்க ...அங்கே சென்று பாடு கிடக்கலாம் ...அந்தக் கடவுள் முன்பு பழியாய்க் கிடக்கலாம் என்று எண்ணியவளாய் , அலறிப் புடைத்தபடி... அங்கமெல்லாம் அலுங்கிக் குலுங்கக் கோயிலை நோக்கி ஓட்டமும் , நடையுமாய் அவள் செல்லத் தொடங்கினாள். நகரத்திற்கு வெளியே ..எங்கோ தொலைதூரக் காட்டுப் பகுதியில் இருந்த அந்தக் கோட்டத்திற்குப் போய்ச் சேர்ந்த அவள் ,அதன் முற்றத்திலேயே குழந்தையோடு மயங்கிச் சரிந்தாள்.

தன் நினைவு தவறிக் கிடந்த மாலதியின் ஆழ்மனதிற்குள் ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தான் பாசண்டச் சாத்தன். ஒரு நேரம் அவளுக்குள் விசுவ ரூபம் எடுத்து விண் முட்ட வளரும் அவன் , அடுத்த கணத்திலேயே அழகுக் குழந்தையாகித் தவழ்ந்து தளர் நடையிட்டபடி ..அவள் மடி தேடி ஓடி வந்து விடுவான்.ஒரு நிமிடம் தெய்வமாக ஆசி வழங்கும் அவன் , அடுத்த நிமிடத்திலேயே மண்ணளைந்த கையோடு ...மிரண்டு போன பாலகனாக அஞ்சி வந்து அவள் முன்பு நின்று விடுவான். அவன் தெய்வமா...? இல்லை தெய்வக் குழந்தையா..?

மயக்கம் முழுதுமாய்த் தெளிந்திராத மாலதி ..சாத்தனின் திரு உருவச் சிலைக்குமுன்னால் அரைகுறையாகக் கண் விழித்தாள்....

'என்ன இது...சிலை வடிவத்தில் சாத்தனின் முகம் என் கண்ணுக்குத் தெரியவில்லையே ..?அங்கே எனக்குத் தட்டுப்படுவது ...என் குழந்தையின் முகமல்லவா..?'

எங்கிருந்தோ ஒரு குழந்தையின் முனகல் ஓசை ...மெதுவாய்...மிக மெதுவாய்க் கேட்கச் சாத்தனின் முகத்திலிருந்து மெள்ளத் தன் பார்வையை மீட்டுக் கொண்டாள் மாலதி. கோயில் முற்றத்தில் அவள் கிடத்தியிருந்த குழந்தை...கை, கால்களை உதைத்தபடி , சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.அதை அள்ளி எடுத்துக்கொண்ட அவள் அதன் காதுகளில் ஓதினாள் 'நீ....குழந்தை இல்லை..கண்ணே ..நீ என் தெய்வம்..'
.............................................

''அந்தக் குழந்தைதான் என் கணவர்''என்றபடி கதைக்குச் சற்று இடைவெளி விட்டாள் தேவந்தி.

''அப்படியென்றால் உன் கணவர் உருவில் உருவில் பாசண்டச் சாத்தனா...?''

''அப்படி யார் சொன்னது..?அது என் மாமியார் அவளாகவே ஏற்படுத்திக் கொண்ட மனப்பிரமை! அது அவள் கொண்ட மன மயக்கம்! குழந்தையைச் சாகடித்துவிட்ட பழி , தன் மீது விழுந்து விடுமோ என்ற பதட்டமான உணர்ச்சியின் பிடியில் அவள் சிக்கியிருந்த நேரத்தில் , பால் விக்கியதால் பாலகன் சோர்ந்திருக்கிறானா ...அல்லது உண்மையிலேயே அவன் மாண்டு விட்டானா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கூட அவளுக்குத் தோன்றாமல் போயிருக்க வேண்டும் ! குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் ஓடிய ஓட்டத்திலும் , அதைப் போட்டுக் குலுக்கி எடுத்ததிலும் அதற்கு ஏற்பட்ட விக்கலும் மூச்சுத் திணறலும் இயல்பாகவே சீராகி விட்டிருக்கிறது ! அப்படித்தான் அது நடந்திருக்க வேண்டும் ! ஆனால் இறுதி வரை அவள் அப்படி நினைக்கவே இல்லை .தான் உறுதியாக நம்பிய கடவுளின் அருளால்தான் மகன் பிழைத்தான் என்று பொதுவாக எல்லோரும் எண்ணுவது போல எண்ணக் கூட அவள் தயாராக இல்லை. குழந்தை முதலிலேயே இறந்து போய் விட்டது என்றும் , பிறகு அதற்குள் உயிராக வந்து உலவியது தன் இஷ்ட தெய்வம்தான் என்றும் அவள் திட்ட வட்டமாக முடிவு கட்டிக் கொண்டு விட்டாள். ஆனால் கணவரிடமும், மாற்றாளிடமும் அதைச் சொல்லித் தன்னையே காட்டிக் கொடுத்துக்கொள்ளும் துணிச்சலும் அவளிடம் இல்லை ! அதற்கு மாறாகக் குழந்தையோடு தனித்திருக்கும் தருணங்களிலும் ...வாய்ப்பு நேரும்போதெல்லாம் அதன் அசாதாரணத் தன்மையை அந்தப்பிஞ்சு மூளைக்க்குள் அவள் செலுத்திக் கொண்டே இருந்தாள்.....

'இதனால் பாதிக்கப்பட்டவர் என் கணவர்தான் ! மானுடத்திற்கும் , அமானுஷ்யத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்திலேயே வளர்ந்து வாலிபரானார் அவர். சராசரி மகனாகத் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய யதார்த்தக் கடமைகள் ஒரு புறம் ! தெய்வீகமான தன் புனிதம் கறைப்பட்டு விடாமல் காத்துக் கொண்டு விட வேண்டுமென்ற இடைவிடாத போதனை மற்றொரு புறம் ! அவரது லௌகீக வாழ்வின் தவிர்க்க முடியாத திருமணக்கட்டத்தில் நான் அவரோடு இணைந்தேன். மணமேடையைத் தீவலம் வரும்போது என்னைப் பற்றிய அவரது கரங்கள் ...தொடர்ந்து நாங்கள் மண வாழ்க்கை நடத்திய எட்டாண்டுக் காலத்தில் என்னைத் தீண்டியதே இல்லை. அது ஏன் என்பது ...அப்போது எனக்கு விளங்கியிருக்கவில்லை.அப்படிப்பட்ட கேள்விகளை அவரிடம்கேட்க நான் வளர்ந்த சூழல் என்னை அனுமதிக்கவும் இல்லை.''

(தேவந்தி -2 இன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...)

27.6.09

தேவந்தி


தேவந்தியின் கதையை மீட்டுருவாக்கம் செய்துள்ள இச் சிறுகதையைத் தொடங்குமுன் சிலப்பதிகாரத்தை அடியொற்றி அவள் குறித்த ஒரு முன் குறிப்பு

சிலப்பதிகாரக் காப்பியத்தில் , தலைவி கண்ணகியின் உற்ற தோழி தேவந்தி. மதுரையில் கண்ணகிக்கு நிகழப் போகும் தீமை பற்றித் தனக்கு முன்னறிவிப்பாக ஏற்பட்ட கனவைக் கண்ணகி பகிர்ந்து கொள்வது தேவந்தியோடுதான்.
தேவந்தியும் கண்ணகியைப் போலவே கணவனைப்பிரிந்திருப்பவள்தான்.
பூம்புகார் நகரிலுள்ள சோமகுண்டம் , சூரிய குண்டம் ஆகிய நீர்த் துறைகளில் மூழ்கிக் காம வேள் கோட்டத்தைக் கை தொழுதால் பிரிந்த கணவன் திரும்பி வருவான் என்று தேவந்தி கூறக் கண்ணகி அதை மறுத்து விடுகிறாள்.
தேவந்தி இடம்பெறும் 'கனாத் திறம் உரைத்த காதை' என்ற இந்தக் காட்சியில் , தேவந்தியின் கிளைக் கதையைச் சற்று விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோ .

அந்தணக் குலத்தில் பிறந்த தேவந்தியின் மாமனாருக்கு இரு மனைவிகள்.அவர்களில் மாலதி என்பவளுக்கு மட்டும் குழந்தைகள் இல்லை.மற்றவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றிருக்கும் சமயத்தில் மாலதி , மாற்றாளின் குழந்தைக்குப் பாலூட்டப் பால் விக்கி அது இறந்து விடுகிறது. அஞ்சி நடுங்கிய மாலதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு புகார் நகரிலுள்ள கோவில்களுக்கெல்லாம் ஓடுகிறாள்.அங்கேயே 'பாடு' (தவம்)கிடக்கிறாள்.
ஒரு கட்டத்தில் பிணங்களைத் தின்னும் இடாகினி என்னும் பேய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறைந்து விடுகிறது.
செய்வதறியாமல் மயங்கும் மாலதியின் மனதிற்குள் பாசண்டச் சாத்தன் என்ற தெய்வ உருவம் தோன்றி ஆறுதல் அளிக்கிறது. தானே குழந்தையாக வந்து அவளது துயரைத் தீர்ப்பதாகக் கூறும் அது ..அவ்வாறே அவள் முன் ஒரு குழந்தை வடிவில் கிடக்கிறது.அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் செல்லும் மாலதி அவனைத் தங்கள் மகனாக எண்ணியே வளர்க்கிறாள்.

பாசண்டச் சாத்தனும் மனித உருவில் வளர்ந்து ஆளாகித் தன் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் - நீர்க்கடன் கழிப்பது வரை செம்மையாகச் செய்து முடிக்கிறான்.
தனது உலகியல் கடமைகளில் ஒரு பகுதியாகத் தேவந்தியை மணந்து எட்டு ஆண்டுக் காலம் அவளோடு வாழ்கிறான்.
(சாத்தன் தீவலம் செய்து தேவந்தியை மணமுடித்து அவளோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் அவர்கள் கணவன் மனைவி உறவுடன் வாழவில்லை - தேவந்தியும் சாத்தனும் உடல் உறு கூட்டம் இல்லாத் தெய்வக் கற்புக் காதலர் என அறிஞர் தெ. பொ.மீஅவர்கள் குறிப்பிடுவார்)

எட்டு ஆண்டுகள் முடிந்தபின் ,(தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகள் முடிந்ததும்) தான் கடவுள் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு அவளோடு இணைந்து வாழாமல்- தன் கோட்டத்திற்குள்(கோயில்)சென்று - அவள் தன்னைக் காண வேண்டுமென்றால் இனிமேல் அங்கேதான் வந்தாக வேண்டுமெனக் கூறிவிட்டு மறைந்து போகிறான்.
உண்மையை ஊராரிடம் உள்ளபடி கூற முடியாத தேவந்தி , தன் கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும் ,அவன் விரைவில் வர வேண்டுமென்பதற்காகவே தான் கோயில் குளங்களைச் சுற்றி வருவதாகவும் கூறி நாட்களை நகர்த்துகிறாள்.
இறுதியாகக் காப்பியம் முடியும்போது , சேரன் கண்ணகிக்காக எடுத்த கோயிலுக்கு வந்து தன் தோழியை எண்ணிப் புலம்புகிறாள்.அவள் மீது ஆவேசிக்கும் (தெய்வம் ஏறிய நிலை) சாத்தன் வழியாகவே கோவலனின் தாய் , கண்ணகியின் தாய் , மாதரி முதலியோரின் பழம் பிறப்புக்கள் உணர்த்தப்படுகின்றன. கண்ணகி கோயில் பூசனைக்கும் தேவந்தியையே பொறுப்பாக்குகிறான் சேரன் செங்குட்டுவன்.
தேவந்தி கதையின் இந்த அடிப்படை , கீழ்க் காணும் என் சிறுகதைப் படைப்பில் பெண்ணிய நோக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.


இனி......சிறுகதை...
(நன்றி: இக் கதையைப்பிரசுரம் செய்த 'வடக்கு வாசல்' இதழுக்கு -நவ.'07)

அந்தப்புர மேன் மாடத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்த சிலைகளோடு
தானும் ஒருசிலையாய்ச்சமைந்து போய் அசைவற்று நின்று கொண்டிருந்தாள் கண்ணகி.
இரு நிதிக் கிழவனான அவள் தந்தை மாநாய்கன் , தன் செல்வப் புதல்விக்குச் சீதனமாய்த் தந்திருந்த எழுநிலை மாடங்கள் கொண்ட பிரம்மாண்டமான அந்த மாளிகையின் தனிமை ...அவள் முகத்தில் அறைந்தது.அதிலும் கோவனோடு பல நாட்கள் ஒன்றாகக் கூடியிருந்து நிலவின் பயனை இருவருமாய்த் துய்த்திருந்த அந்த முத்து மாடம் ....அவளது அந்தரங்கக் கதைகளை ஒவ்வொன்றாகக் காதுக்குள் ஓதியபடி , அந்த வெறுமையின் அவலத்தை மேலும் விசிறி விட்டுக் கொண்டிருந்தது. நினைவு நதி கிளர்த்திவிட்ட எண்ண அலைகளின் ஓங்காரச் சுழலுக்குள் சிக்கிச் சுழன்றபடி அவள் போராடிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் ....அருகே நிழல் தட்டியது.

''கண்ணகி ! நீ இப்போது துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்த கோலம் எப்படி இருந்தது தெரியுமா ? கோவலரை நீ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்ததுபோலத்தான் எனக்குத் தோன்றியது.''

''என் நிலைமை ...நீ கூடப் பழிக்கும்படி ஆகிவிட்டதல்லவா தேவந்தி ? ஆனால் ஒரு வகையில் பார்த்தால் நீ சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஒரு வேளை ...இன்று காலை நான் கண்ட கனவு மெய்ப்பட்டால் ...அவர் விரைவில் என்னை நாடி வருவது உறுதி ! அவர் வருவதில் மகிழ்ச்சிதானென்றாலும் , அந்தக் கனவின் கோரமான மற்றொருபக்கம்தான் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது...''

முகம் தெரியாதஒரு பட்டினத்தில்...இனம் தெரியாத ஏதோ ஒருவகை ஆபத்து தங்களை எதிர்கொள்ளக் காத்திருப்பதாக அன்று அதிகாலையில் தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் கொட்டித் தீர்த்தாள் கண்ணகி.

''இப்படி அந்தப்புரச் சிறையிலேயே அடைந்து கிடந்தால் ...உனக்கு வேறு எந்த மாதிரியான கனவுகள்தான் வரக் கூடும் கண்ணகி ...? உன்சீறடியை அலங்கரித்த சிலம்பைக் கழற்றி விட்டாய் ! நெற்றியில் திலகம் அணிவதையும் நிறுத்தி விட்டாய் ! மங்கலத் தாலி ஒன்றைத் தவிரப் பிற எல்லா அணிகலன்களையும் துறந்து விட்டாய் ! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி அவரது வருகையை எதிர்நோக்கி இங்கேயே தவமிருக்கப் போகிறாய் ? ..நானும் உன்னைப் போலக் கணவரைப் பிரிந்திருப்பவள்தான் ! ஆனாலும் கோயில்...வழிபாடு ....நோன்பு என்று ஏதேதோ செய்து என் மனதை ஆற்றிக் கொள்ளவில்லையா ?..நீயும் வெளியே வா கண்ணகி ! வெளிக் காற்றைச் சற்றே சுவாசி !''

''தேவந்தி ! போதும் நிறுத்திக் கொள் ! உன்னை இன்னும் கொஞ்சம் பேச விட்டால் ..சோமகுண்டம் , சூரிய குண்டம் என்று புகார் நரத்திலுள்ள புனிதக் குளங்களையெல்லாம் பட்டியலிடத் தொடங்கி விடுவாய் ! காமவேள் கோட்டத்தைத் தொழுவதற்குக் கூட என்னை அழைக்க ஆரம்பித்து விடுவாய் !''

''அதில் தவறென்ன கண்ணகி ?''

''அது எனக்குப் பெருமையில்லை தேவந்தி ! அது...பீடில்லாத செயல் என்று நினைப்பவள் நான் . என் கணவர் என்னிடம் திரும்பி வருகிறார் என்றால் ...அது என் அன்பின் வலிமையால்தான் சாத்தியப்பட வேண்டும் ! அது எப்போது முடியவில்லையோ ...அப்போது பிற புறக் காரணிகளுக்கு அங்கே வேலையில்லை.''

தேவந்தி அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தாள்.

''உன் அன்புக்கோ ...அல்லது நான் செய்து கொண்டிருக்கிற நோன்புக்கோ அந்த வலிமை நிச்சயம் இல்லையடி பயித்தியக்காரி !''

அந்த வார்த்தைகள் கண்ணகியைச் சற்றே வியப்பில் ஆழ்த்தின.

''பிறகு நீ ஏன் இப்படிக்....''

''கோயில் கோயிலாக வலம் வருகிறேன் என்றுதானே கேட்கப் போகிறாய் ? ..தெரிந்துதான் செய்கிறேன் கண்ணகி ! இதனாலெல்லாம் என் கணவர் நிச்சயம் வரப்போவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் இப்படியெல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன்''

''அப்ப்டியெல்லாம் பேசாதே தேவந்தி ! மாதவியின் கலை மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் கோவலர் கூடக் கட்டாயம் திரும்பி வந்து விடுவார் என்று நான் நம்பிக்கையோடு இருக்கும்போது உனக்கு ஏன் இந்த விரக்தி ?''

''இது விரக்தியில்லை கண்ணகி ! நிஜம் ! சுட்டெரிக்கும் நிஜம் !''

''உன் கணவர் தீர்ர்த்தத் துறைகளில் படிந்து வரத்தானே போயிருக்கிறார் ?''

''அது ...இந்த உலகின் கண் முன்னே அரங்கேறும் நாடகம் ! ஆனால் உண்மை வேறெங்கோ பாதாளத்தில் பதுங்கிக் கொண்டு கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.''

''என்னிடம் அதைப் பகிர்ந்து கொள்வதால் உனக்கு ஆறுதல் கிடைக்குமென்று நீ நினைத்தால்...''

கண்ணகி வார்த்தையை முடிப்பதற்கு முன் தேவந்தி வெடித்தாள்.

''என்றாவது ஒரு நாள் உன்னிடம் மட்டுமே அதைச் சொல்லியாக வேண்டும் என்ற
தாகத்துடன் ...என் நெஞ்சக் கூட்டுக்குள் அடைகாத்து வருகிறேன் கண்ணகி !என் கதையின் மூல வேரை ..அதன் சரியான அர்த்தத்தில் உள் வாங்கிக் கொள்ள உன் ஒருத்தியால்தான் முடியும் !''

கண நேரம் அமைதி காத்த தேவந்தி ...தன் கதையைத் தொடங்கினாள்.

''என் கணவரின் தந்தைக்கு இரண்டு மனைவியர். மூத்தவளான மாலதிக்குக் குழந்தை இல்லாமல் போய் விட்டதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை அவர் மணந்து கொண்டார் . அவளுக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தையைப் பொறுப்போடும் , கரிசனத்தோடும் சீராட்டி வளர்த்ததெல்லாம் மூத்த மனைவி மாலதிதான்''

(சிறுகதையின் தொடர்ச்சி அடுத்த பதிவில்)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....